World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Egyptians protest state defense of police violence

பொலிஸ் வன்முறைக்கு அரசு ஆதரவு கொடுப்பதை எகிப்தியர்கள் எதிர்க்கிறார்கள்

By Patrick Martin 
6 July 2011

Back to screen version

நீண்டகால சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை பதவியில் இருந்து அகற்றிய புரட்சிகர இயக்கத்தின்போது எதிர்ப்பாளர்களை கொன்ற பொலிசார், நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று முக்கிய எகிப்திய நகரங்களில் ஆயிரக்கணக்காவர்கள் அணிவகுத்து ஆர்ப்பரித்தனர். ஜனவரி 25 முதல் பெப்ருவரி 11 வரை பொலிசார் 1,000க்கும் மேற்பட்டவர்களை கொன்றனர். ஆனால் ஒரு பொலிஸ்காரரோ அல்லது அரச அதிகாரியோ கூட நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

திங்களன்று கெய்ரோவில் தொழிற்துறை சூயஸ் நகரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்ற 7 பொலிசாரை ஒரு நீதிபதியின் தீர்ப்பு விடுவித்ததை அடுத்து புதிய எதிர்ப்பு அலை தூண்டப்பட்டது.

சூயஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் கொலை, மற்றும் கொலை செய்ய முயற்சி என ஜனாதிபதி முபாரக் பெப்ருவரி 11 இராஜிநாமா செய்ததில் முடிவடைந்த 18 நாட்கள் அரசியல் அமைதியின்மைக் காலத்தில் 14 பொலிசார் குற்றவழக்கில் விசாரிக்கப்படுகின்றனர். கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்துடன், சூயசும் முபாரக் சர்வாதிகார ஆட்சியின் இரத்தக்களரி அடக்குமுறையின் இடமாக இருந்து 29 பேர் கொல்லப்பட்டனர், 1,000 பேருக்கும் மேல் காயமுற்றனர். விசாரணைக்குட்பட்டுள்ள பொலிசார் மீது 17 பேரைக் கொன்றது மற்றும் 350 பேரைக் காயப்படுத்தியதற்கு குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

எகிப்திச் செய்தி நிறுவனமான MENA கொடுத்துள்ள தகவல்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிபதி ஒரு கடினப்போக்கை மேற்கொண்டு, “கொன்றவர்களுடைய இரத்தம் வீணாகக் கொட்டப்படவில்லைஎன்று அறிவித்தார். அதன்பின் அவர் அவர்களை பிணை எடுப்பில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்; வழக்கு செப்டம்பர் 15 அன்று தொடங்கவுள்ளது. பின்னர் அவர்கள் ஆளும் இராணுவக்குழுவின் பாதுகாப்பில் இருத்தப்பட்டனர்.

நீதிமன்றத்தில் கூடியிருந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சீற்றத்தில் வெடித்து, பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கி, நீதிபதியின் அறைக்குள்ளும் நுழைய முற்பட்டனர். ஆனால் படையினரால் தடுத்துத் திருப்பி அனுப்பப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் முக்கிய கெய்ரோ-சூயஸ் நெடுஞ்சாலைக்கு அணிவகுத்துச் சென்று அச்சாலையை பல மணி நேரம் தடைக்கு உட்படுத்தினர். இதில் வாகன சாரதிகள் மற்றும் சூயஸ் வாழ் மக்களும் சேர்ந்து கொண்டனர்.

இறுதியில் கூட்டம் சூயஸிற்குச் சென்றது. அங்கு அவர்கள் நகரத்தின் முக்கிய பகுதியான அர்பீன் சதுக்கத்தை ஆக்கிரமித்து, போக்குவரத்தை தடுத்து, “இராணுவக் குழு வீழ்கஎன்று SCAF எனப்படும் முபாரக்கிற்கு பின் ஆட்சி நடத்தும் ஆளும் ஆயுதப்படைகளின் தலைமைக்குழுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதேபோன்ற எதிர்ப்பு எகிப்தின் இரண்டாம் மிகப் பெரிய நகரமான அலெக்சாந்திரியாவிலும் நடைபெற்றது. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோர்னிஷ் வழியே அணுவகுத்து ஒரு பெரிய மசூதியையும் ஆக்கிரமித்தனர்.

பொது அரசாங்க வக்கீல் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் புதன் கிழமை அன்று நீதிமன்றத்தை அதன் முடிவை மாற்றிக்கொள்ளும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு பொலிசாரைச் சிறைக்கு மீண்டும் அனுப்ப முயலப்படும் என்று கூறினார். ஆனால் சூயஸில் இருந்த எதிர்ப்பாளர்கள் சமாதானம் அடையாமல் வாரம் முழுவதும் அர்பீன் சதுக்கத்தைத் தாங்கள் ஆக்கிரமித்திருக்கப் போவதாக உறுதி பூண்டனர். செவ்வாய் காலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆட்சிக்கு ஆதரவு தரும் குண்டர்களால் கத்திகள், தடிகள் ஆகியவற்றினால் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை எதிர்த்துப் போராடினர்.

ஆத்திரமூட்டும்வகையில் சூயஸ் பொலிசார் விடுவிக்கப்பட்டுள்ளது அதுவும் தஹ்ரிர் சதுக்கத்தில் வெள்ளியன்று திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை முன்னதாக நாடு முழுவதும் மக்கள் சீற்றத்திற்கு எரியுட்டத்தான் செய்யும். இது முபாரக் அகற்றப்பட்டபின் மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 8 எதிர்ப்பிற்கு முந்தைய நாட்களில் கெய்ரோவில் அழுத்தங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. ஜூன் 28ம் திகதியில் இருந்தே தஹ்ரிர் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது முபாரக் எதிர்ப்பு இயக்கத்தின்போது கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் பொலிசாருக்கும் இடைய ஒரு மோதல் பெரும் பொலிஸ் அடக்குமுறையைத்தூண்டி, அதில் 1,000 பேருக்கும் மேல் காயமுற்றனர்.

ஏப்ரல் 6 இயக்கம் என்னும் ஜனவரி எழுச்சிக்கு வழிநடத்திய இளைஞர் குழுக்களின் கூட்டணி ஒன்று பொலிஸ் வன்முறையை முகங்கொடுக்கும் வகையில் ஜூலை 8 அன்று மில்லியன் மக்கள் பேரணி என்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இளைஞர் குழுக்கள் பொலிசுக்கும், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்ற குண்டர்களுக்கும், இரத்தக் களரிக்கு உத்தரவிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கும், முபாரக் உட்பட பலருக்கும், எடுத்துக்காட்டான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றன.

தஹ்ரிர் சதுக்கத்தை ஆக்கிரமித்துள்ளவர்களில் ஒருவர் எகிப்திய வெளியீடான Bikya Masr இடம்: “நாங்கள் இங்கு கூடியிருப்பதற்குக் காரணம் அனைத்தும் மாற்றப்பட வேண்டும், பொதுமக்களுக்கு சிறந்தவை தேவை, விரைவில் தேவை.” என்று கூறினார்.

இராணுவ ஆட்சி புதுப்பிக்கப்பட்ட எதிர்ப்புக்களை கூடுதல் வன்முறை என்னும் அச்சுறுத்தல்கள் மூலம் எதிர்கொள்கிறது. உள்துறை அமைச்சரகம்நாடுதழுவிய பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் பற்றி எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு, இளைஞர் குழுக்கள், “பட்டினிப்புரட்சிஎன்ற பெயரில் பொலிசார் மீது தாக்குதல்களை தூண்டிவிடுகின்றன எனக் கூறியுள்ளது. அமைச்சகம் குறிப்பாக அரசாங்க கட்டிடங்களை பாதுகாக்கும்படி பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்குமாறு பொலிஸிற்கும் இராணுவத்திற்கும் அறிவுறுத்தல்கள் விடுத்துள்ளது.

ஆட்சிச் சார்பு குண்டர்கள் எதிர்ப்பாளர்களை தாக்குவர் என்ற எதிர்பார்ப்பில் ஏப்ரல் 6 இயக்கம் ஜூலை 8ம் தேதி இரவும் நடத்தப்படும் உள்ளிருப்புப் போராட்டம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றும், பெண் ஆர்ப்பாட்டக்காரர்கள் இருட்டியவுடன் வீட்டிற்கு சென்றுவிடுவர் என்று கூறியுள்ளது.

ஞாயிறு மாலை அத்தகைய வன்முறைக்கான ஒத்திகை நடத்தப்பட்டது. அப்பொழுது குண்டர்கள் தெரு வியாபாரிகளைப் போல் வேடமணிந்து திடீரென ஆத்திரமூட்டப்படாத ஒரு தாக்குதலை தஹ்ரிர் சதுக்கத்தை ஆக்கிரமித்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடக்கினர். கத்திகள், உலோகக் கட்டைகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளிருப்பின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படும் கூடாரங்கள் பலவற்றையும் எரித்தனர்.

எகிப்திய மனித உரிமைகள் அமைப்புக்கள் சமீபத்திய நாட்களில் வெளியிட்டுள்ள அறிக்கைகள் இராணுவத்தின் அரசியல் அடக்குமுறை மற்றும் அதற்குத் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு இரண்டின் அளவையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

மனித உரிமைகள் தகவல் பற்றிய அரேபிய இணையம் திங்களன்று முபாரக் அகற்றப்பட்டதில் இருந்து குறைந்தது 10,000 குடிமக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தண்டனை இராணுவக் குழுக்களால் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. பல ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் தண்டனையை சிறையில் அனுபவித்து வருகின்றனர் என்று குழு கூறியுள்ளது.

ஜனவரி 25 புரட்சிக்குப் பின்னர் எந்த மாறுதலையும் காணாத ஒரு துறை நீதித்துறைதான் என்று நாங்கள் கூறினால் அது மிகையான கூற்று அல்லஎன்று குழு கூறியுள்ளது.

மனித உரிமைகளுக்கான தேசியக் குழுவின் உண்மை கண்டறியும் குழு செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கை, ஜூன் 28-29 ல் தஹ்ரிர் சதுக்கத்தில் நடைபெற்ற மோதல்கள் முன்கூட்டித் திட்டமிடப்பட்டவை என்று கூறுகிறது. ஜனவரி புரட்சித் தியாகிகளின் குடும்பங்கள் தன்னியல்பாக ஆத்திரமூட்டலை எதிர்கொள்ளுகையில், அவர்களுக்கு எதிரான பொலிஸ் தலையீடு வன்முறையைத் தூண்ட வேண்டும் என வேண்டுமென்றே எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். இதில் ஆயுதமில்லாத மக்கள் மீது உண்மையான தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதும் அடங்கும்.

இறுதியாக அவ்லத் அல்-அர்ட் மனித உரிமைகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று 2011 ன் முதல் அரைப்பகுதியில் 338 உள்ளிருப்புப் போராட்டங்கள், 158 வேலைநிறுத்தங்கள், 2159 ஆர்ப்பாட்டங்கள் மற்றும் 161 தொழிலாளர் எதிர்ப்புக்கள் ஆகியவை இருந்தன என்று கண்டறிந்துள்ளது; இவை அனைத்துமே இன்னும் சிறப்பான வேலைநிலைமைகள் தேவை எனக் கோரியவை ஆகும். வேலைநிறுத்த இயக்க காலத்தில் 11,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். தங்கள் மோசமான பணிநிலமையை ஒட்டி 12 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

வேலைநிறுத்த இயக்கம் முபராக் அகற்றப்படுவதில் உறுதியான பங்கைக் கொண்டிருந்தது; தொழிலாள வர்க்கத்திற்கும் இராணுவ ஆட்சிக்கும் இடையே மோதல்கள் நடைபெறுகின்றன. திங்களன்று இராணுவ பொலிசார் சூயஸ் கால்வாய் அதிகாரத்திற்கு எதிரான வேலை நிறுத்தத்தில் தீவிரமாக இருந்த 5 தொழிலாளிகளைக் கைது செய்தனர். எகிப்திய செய்தி ஊடகத்தில் பெயரிடப்பட்டிந்த ஐவர், Nasser El Berdessy, Nadia Youssef, Metawei Harb, Mohamed Haggag, and Mahmoud Shaaban ஆகியோராவர்.

ஜூன் 14ம் திகதி அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 7 நிறுவனங்களில் வேலைநிறுத்தம் தொடங்கியது. அதன் தலைமை நிர்வாகி ஜெனரல் அஹ்மத் படெல் பதவியை விட்டு அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவர் ஏப்ரல் 19 உடன்பாட்டை செயல்படுத்த மறுத்துள்ளார். அதில் ஜூன் முதல் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் 40% ஊதிய உயர்வு கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சூயஸ் கால்வாய் அதிகாரம் மிகப் பெரிய வருவாய் ஈட்டும் ஆதாரம் ஆகும். ஆனால் இப்பணத்தில் பெரும்பகுதி இராணுவத்தின் கைகளுக்குத்தான் செல்லுகிறது.

எகிப்திலுள்ள இராணுவ ஆட்சிக்கு முக்கிய ஆதரவு கொடுப்பது ஒபாமா நிர்வாகம் ஆகும். மக்கள் இயக்கத்தை நசுக்குவதற்கு இது முழு உணர்வுடன் வேண்டுமென்றே செயல்படுகிறது. அதேபோல் எகிப்திய மற்றும் சர்வதேச மூலதனம் அரைக்காலனித்துவ நாட்டில் மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளப்படுவதற்கும் பாடுபடுகிறது.

ஜூன் 30 அன்று வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் அமெரிக்க அரசாங்கம் முன்பு முபாரக்கால் சட்டவிரோதமாக்கப்பட்ட முக்கிய இஸ்லாமியக் குழுவான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் (Muslim Brotherhood ) தொடர்பை நிறுவ முற்படுவதாக அறிவித்தார்.

முன்னாள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி, மற்றும் முன்னாள் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் ஆகிய இரு அமெரிக்க செனட்டர்கள் தலைமையில் ExxonMobil, CocaCola, Citigroup ஆகியவற்றின் நிர்வாகிகள் அடங்கிய ஒரு உயர்மட்ட வணிகக்குழுவின் எகிப்து வருகைக்குப் பின் கிளின்டனின் அறிக்கை வந்தது. இந்த இரு செனட்டர்களும் இப்பொழுது எகிப்தின் மேற்குப்புற அண்டைநாடான லிபியா மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதலுக்கான ஒப்புதல் பற்றிய கூட்டுத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இராணுவக் குழுவின் நட்பு அமைப்பாக இருக்கும் சாத்தியப்பாட்டை முஸ்லிம் சகோதரத்துவம் கொண்டுள்ளது என்று வாஷிங்டன் அடையாளம் கண்டுள்ளது. இச்சமாதான நடவடிக்கை முஸ்லிம் சகோதரத்துவம் சிக்கன நடவடிக்கைகளை பகிரங்கமாக ஏற்றுள்ளதை அடுத்து எளிதாகியுள்ளது.

சுதந்திரம், நீதிக் கட்சி என்னும் வரவிருக்கும் செப்டம்பர் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவத்திற்காக நிறுவப்பட்டுள்ள தேர்தல் பிரிவு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் ஒரு பொருளாதாரத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைபெரும் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைஇருப்பது பற்றிப் புலம்புவதுடன், சமூகநலச் செலவுகளைக் குறைக்கும் இராணுவத்தின் முயற்சிகளுக்கும் ஆதரவைக் கொடுக்கிறது.

அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ள, இராணுவக்குழுவின் தலைவரான பீல்ட் மார்ஷல் மஹ்மத் ஹுசைன் தந்தவி இசைவு கொடுத்துள்ள நிதி அமைச்சரகம் வெளியிட்டுள்ள வரவுசெலவுத்திட்ட திருத்தத்தின்படி, முபாரக் அகன்றபின், எகிப்திய மக்களுக்குக் கொடுக்கப்படும் முக்கிய சேவைகளின் மீதான செலவுகள் அதிகரிக்கப்படாமல் குறைக்கப்பட்டுவிடும். கல்விக்கான மொத்தச் செலவு 55 பில்லியன் எகிப்திய பவுண்டுகளில் இருந்து 52 பில்லியன் எனக் குறையும், வீட்டுத்திட்டங்களுக்கு 21 பில்லியனில் இருந்து 16.7 பில்லியன் எனக் குறையும் மற்றும் சுகாதாரத்துறைக்கு 24 பில்லியன் பவுண்டுகளில் இருந்து 23 பில்லியன் எனக் குறையும்.

இந்த வெட்டுக்கள் எகிப்திய மக்களில் 40 சதவிகிதத்தினரான 32 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக்கோடு அல்லது அதற்குக் குறைந்த அளவில் $2 ற்குள் வாழும் கட்டாயத்தில் உள்ள நிலையில் வந்துள்ளன. இவர்களில் 12.5 மில்லியன் மக்கள் கெய்ரோ, அலெக்சாந்திரியா இன்னும் பிற நகரங்களில் சேரிகளில் வாழ்கின்றனர்.