World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Ninety years since the founding of the Chinese Communist Party

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து தொண்ணூறு ஆண்டுகள்

John Chan
5 July 2011

Back to screen version

கடந்த வெள்ளியன்று, திரைப்படங்கள், கண்காட்சிகள் மற்றும் இன்னும் எண்ணிலடங்கா ஏனைய நிகழ்ச்சிகள் உட்பட நாடுமுழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் ஆரவாரங்களுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அதன் 90வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. ஆனால் அந்த கொண்டாட்டங்களின் நிஜமான தன்மையானது, தற்போதைய கட்சிக்கு கம்யூனிசத்தோடு, தொழிலாள வர்க்கத்தோடு, அல்லது உண்மையில் 1921இல் ஸ்தாபிக்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனே கூட எந்த தொடர்பும் இல்லை என்பதையே எடுத்துக்காட்டியது.

சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் போராடும் அமைப்பாக காட்டிக்கொண்டு, கட்சியின் மூலங்களைப் புதைக்கும் விதத்தில், சீன தேசியவாதம் மற்றும் தேசாபிமானத்தின் ஓர் உணர்ச்சிபூர்வ கொண்டாட்டமே அவற்றின் மையக்கருவாக இருந்தது. தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் சீன முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்கு தலைமை கொடுத்து வரும் தற்போதைய சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, நிச்சயமாக அக்கட்சியின் முந்தைய வரலாற்றிலிருந்து தொழிலாளர்கள் எந்த படிப்பினைகளையும் பெறுவதை விரும்பவில்லை.

1930களில் மாவோ சேதுங்கின் விவசாயிகள் படை தலைமையிடமாக கொண்டிருந்த அந்த யானன் நகரை, “செஞ்சுற்றுலா" என்ற பெயரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி வளர்த்தெடுத்தது. ஆனால் அதேவேளை 1920களில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகளைக் கண்ட இடங்களை புறக்கணித்தது. 1921இல் அதன் ஸ்தாபக காங்கிரஸை சீன கம்யூனிஸ்ட் கட்சி எங்கே நடத்தியதோ அந்த ஷாங்காய் தொழிற்பேட்டையில் உள்ள சாம்பல்நிற வீட்டின் கதியே அதை எடுத்துக்கூறுவதற்கு போதுமானதாகும். செல்வாக்குபெற்ற சீன மத்தியதட்டு வர்க்கங்களுக்காக ஹாங்காங் செல்வந்தர்களால் அபிவிருத்தி செய்யப்பட்ட உயர்தர உணவகங்களும், பொழுதுபோக்குகளும் நிறைந்த மாவட்டத்தில், இப்போது அந்நகரம் அமைந்துள்ளது.

அந்த ஸ்தாபக மாநாட்டில் வெறும் 13 பேர் கலந்து கொண்டனர். 60க்கும் குறைவானவர்களே உறுப்பினர்களாக இருந்தனர். கம்யூனிச அகிலத்தின் சார்பாக மேரிங் (ஹென்ரிக் ஸ்னீவ்லெட்) கலந்து கொண்டார். பெக்கிங் பல்கலைக்கழகத்தின் தலைமை பேராசிரியரும், New Youth இதழின் ஆசிரியருமான சென் டூஷியு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1917 ரஷ்ய புரட்சியினால் ஏற்பட்ட பலத்த சர்வதேச பிரதிபலிப்பின் பாகமாக ஸ்தாபிக்கப்பட்ட அக்கட்சி, தொடக்கத்தில் சிறியதாக இருந்தாலும் கூட, அது விரைவிலேயே புரட்சிகர சூழலுக்குள் தூக்கிவீசபட்டு, அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டிய சவாலை முகங்கொடுத்தது.

துன்பகரமாக, சர்வதேசரீதியில் தனிமைப்பட்டிருந்தமை மற்றும் உள்நாட்டில் இருந்த பின்தங்கியநிலைமைகளோடு, ஜோசப் ஸ்ராலினின் கீழ் சோவியத் ஒன்றிய அமைப்புமுறையின் அதிகாரத்துவ சீரழிவுகளும், அதற்குபின்னர் 1925-27இல் எழுந்த சீன புரட்சிக்கு முக்கிய தடையாக ஆனது. ரஷ்ய புரட்சியின் படிப்பினைகளை ஒதுக்கிவிட்டு, ஸ்ராலின் மென்ஷ்விக் "இரண்டு-அடுக்கு" கோட்பாட்டை உயிர்பித்ததோடு, பின்தங்கிய சீனாவில் தொழிலாளர் வர்க்கத்தின் எவ்வித சோசலிச புரட்சியையும் நீண்ட எதிர்காலத்திற்குத் தள்ளிவைத்துவிட்டு, முதலாளித்துவ வர்க்கம் முதலில் அங்கே பூர்ஷ்வா புரட்சியை நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு (Kuomintang - KMT) சீன கம்யூனிஸ்ட் கட்சியை  அடிபணிய செய்தார்.

அதன் விளைவுகள் நாசகரமாக இருந்தன. சியாங் கேய்-சேக் கீழ் கோமிண்டாங் சீன கம்யூனிஸ்ட கட்சியின் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பாரம்பரியத்தை பயன்படுத்திக் கொண்டதோடு, ஏப்ரல் 1927இல் கட்சிக்கு எதிராக திரும்பி ஷாங்காயில் ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களையும் தொழிலாளர்களையும் படுகொலை செய்தது.  மூன்று மாதங்களுக்குப் பின்னர், ஸ்ராலின் இடது" கோமிண்டாங்கிற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியை அடிபணிய செய்த போது, மீண்டும் வீழ்ச்சி தொடர்ந்தது. இத்தகைய நாசகரமான கொள்கையை எதிர்த்து விமர்சிக்க, 1923ல் லியோன் டிரொட்ஸ்கியால் இடது எதிர்ப்பு உருவாக்கபட்டபோது, 1927இன் இறுதியில் கன்டோனில் ஒரு கிளர்ச்சியை நடத்த, நொருங்கி போய்கிடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஸ்ராலின் உத்தரவிட்டார். அது ஒரு பேரழிவில் போய் முடிந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு முன்னால் இரண்டு மாற்றீடுகள் திடமாக இருந்தன. ஒன்று, ஸ்ராலினின் காட்டிக்கொடுப்புகளில் இருந்து தேவையான படிப்பினைகளை பெறவும், சீன இடது எதிர்ப்பை உருவாக்கவும் சென் டூக்சியால் (Chen Duxiu) முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவது, தொழிலாள வர்க்கத்தால் ஒரு புரட்சியை தலைமையேற்று நடத்த முடியாது, விவசாயிகளின் பக்கம் தான் திரும்ப வேண்டும் என்று தீர்மானித்திருந்த மாவோ சேதுங்கால் பின்தொடரப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு விவசாயிகளின் கொரில்லா இயக்கத்தோடு இணைத்ததன் மூலம் மாவோ அக்கட்சியை அதன் பாட்டாளி வர்க்க அச்சிலிருந்து முறித்து, அதையொரு கிராமப்புற குட்டி-முதலாளித்துவ தீவிரவாத இயக்கத்திற்குள் கொண்டு வந்தார். அந்தவொரு மாற்றம் ஆழமான தாக்கங்களைப் பெற வேண்டியதாக அமைந்தது.

1932இல் சீன ஆதரவாளர்களுக்கு எழுதிய ஒரு தொலைநோக்கான கடிதத்தில், மாவோவின் விவசாயிகள் இராணுவத்திடமிருந்து தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அபாயங்கள் குறித்து டிரொட்ஸ்கி எச்சரித்தார். “பெரிய நிலச்சுவான்தார்கள், இராணுவவாதிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் செல்வசீமான்களுக்கு எதிராக திரும்பியிருக்கும்வரை விவசாயிகள் இயக்கமானது ஒரு பலம்வாய்ந்த புரட்சிகர காரணியாக இருக்கும். ஆனால் அந்த விவசாயிகள் இயக்கத்திற்குள்ளாகவே மிகவும் சக்திவாய்ந்த செல்வசீமான்களும், பிற்போக்குத்தனமான போக்குகளும் இருக்கின்றன. மேலும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமாக அது மாறக்கூடும் என்பதோடு ஏற்கனவே ஆயுதந்தாங்கி இருக்கும் அவர்களின் குரோதம் நீடித்து நிலைத்துவிடும்,” என்று அவர் விளக்கினார்.

அத்தகைய எச்சரிக்கைகள் 1949இல் நிரூபணமாகின. முதலில் கோமிண்டாங் உடன் ஒரு கூட்டணியை உருவாக்க முயன்ற பின்னர், சாங் காய்-ஷெக் சீன கம்யூனிஸ்ட் கட்சியை  இராணுவரீதியில் நசுக்க முயன்றபோது, மாவோ அதற்கு பதிலளிக்க  நிர்பந்திக்கப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றியானது, ஒருபோதும் மாவோவின் பிரமாண்ட இராணுவ மேதைமையின் விளைவாக நடந்துவிடவில்லை, மாறாக அது கோமிண்டாங் ஆட்சி ஊழலினால் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார உள்வெடிப்பினால் ஏற்பட்டதாகும். ஆட்சியைக் கைப்பற்றியதும், சீன கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தின் எவ்வித சுயாதீனமான நடவடிக்கையையும் ஒடுக்கி சீன டிரொட்ஸ்கியவாதிகளை சிறையிலடைத்தது. இரண்டு-கட்ட கோட்பாட்டின் மாவோவின்  பதிப்பை நடைமுறைப்படுத்தியது. அதாவது, தாய்வான் மற்றும் ஹாங்காங்கிற்கு பறந்துவிடாத பெரிய வியாபாரங்களுடனும், 1927இல் கம்யூனிஸ்ட்களை படுகொலை செய்த சில கோமின்டாங் தளபதிகள் உட்பட ஒரு கூட்டணியை ஏற்படுத்துதல் ஆகும்.

அதன் பின்னர் முதலாளித்துவத்தின் பெரும் அடிமை உழைப்பு கூடத்திற்குள் வந்த சீனாவின் பரிணாமம், அக்டோபர் 1949இல் இடப்பட்டிருந்த அந்த ஆட்சியின் அஸ்திவாரங்களில் வேரூன்றி இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் ஸ்தாபக அரசியலமைப்பின் மூன்றாவது தீர்மானம், முதலாளித்துவ சொத்துறவுகளைப் பாதுகாப்பதை வெளிப்படையாகவே கொண்டிருந்தது. இதுநாள் வரையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் கொண்டு வரப்பட்ட தேசியமயமாக்கல்களின் நோக்கம் சோசலிசம் அல்ல, மாறாக இந்தியாவைப் போன்ற காலனித்துவத்திற்கு பிந்தைய முதலாளித்துவ நாடுகளில் பகிரங்கமாகவே நடைமுறைப்படுத்தப்பட்ட முறைமைகளை போலில்லாமல், சீனாவை தேசியளவில் ஒழுங்கமைக்கப்பட்ட பொருளாதாரமாக ஆக்குவதே ஆகும். நிலத்தை தேசியமயமாக்கியது, லெனின் விளக்கியதைப் போன்றதல்ல, அதுவொரு சோசலிச நடவடிக்கையல்ல, மாறாக அது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு தீவிர முதலாளித்துவ கொள்கையாகும். இந்த கொள்கை இறுதியில் முதலாளித்துவம் முழுமையாக செழிப்படைய அடித்தளத்தை உருவாக்கி கொடுத்தது.

பல்வேறு உள்ளார்ந்த பிளவுகளுக்கு மத்தியிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற பிற்போக்குத்தனமான ஸ்ராலினிச கற்பனையின் அடித்தளத்தில் அமைந்திருந்தது. உலக பொருளாதாரத்தில் இருந்து ஒதுங்கியிருந்த சீனா, ஒன்று-மாற்றி-ஒன்று என மாறிமாறி நெருக்கடியால் நசுங்கியது. கிராமப்புற சோசலிசம் என்ற மாவோவின் பரிசோதனைகள் பொருளாதார பேரழிவை உருவாக்கியதோடு, 1950களின் பிற்பகுதியில் கொடூரமான பஞ்சத்தையும் உருவாக்கியது. அதில் இலட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

அவருடைய எதிர்ப்பு கன்னையை நசுக்க, 1966இல் "மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி" என்ற பொருத்தமற்ற பெயரோடு அறிமுகப்படுத்தப்பட்ட மாவோவின் முயற்சி, அவர் தூண்டிவிட்ட விவசாயிகள் தீவிரமயமாக்கலின் இறுதி மூச்சினை விட்டது. அந்த கோஷ்டி மோதல் எதிர்பாராவிதமாக தொழிலாள வர்க்கத்தின் போர்குணமிக்க போராட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டது. அப்போராட்டத்தை ஒடுக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் இராணுவத்தை அனுப்பி, போராட்டத்தை நிறுத்த அழைப்புவிடுக்கும் நிலைக்கு கொண்டு வந்தது. ஒரு பொருளாதார முட்டுச்சந்தை எட்டிய நிலையில், 1972இல் அமெரிக்காவோடு இணக்கத்தை ஏற்படுத்தி கொண்டதன் மூலமாக மாவோ ஏகாதிபத்தியத்திற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரவேற்பை காட்டினார். அதன்பின்னர் அவர் வெளிநாட்டு பெருநிறுவனங்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள கதவுகளைத் திறந்துவிடத் தொடங்கினார்.

தற்போதைய ஆண்டுவிழா கொண்டாட்டங்களுக்கு இடையில், உத்தியோகபூர்வ Xinhua செய்தி நிறுவனம் குறிப்பிட்டதாவது: “சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் மட்டும் தான் சீனாவைக் காப்பாற்ற முடியும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது" என்றது. 1978இல் டெங் ஜியாவோ பிங் உத்தியோகபூர்வமாக சந்தை-சார் சீர்திருத்தங்களை கட்டவிழ்த்துவிட்டதிலிருந்து மூன்று தசாப்தங்களாக முதலாளித்துவத்தின் சுரண்டல் மீது இருந்த தடைகளை முடிவுக்குக் கொண்டு வந்தமை, நிச்சயமாக வளர்ந்துவரும் சீன முதலாளித்துவத்திற்கும், அத்தோடு புதியதாக மலிவுக்கூலி தொழிலாளர்களை தொடர்ந்தும் தேடித்திருந்த சர்வதேச மூலதனத்திற்கும் ஒரு வரமாக அமைந்தன.

1949இல் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி பொலிஸ்-அரசானது, கோமிண்டாங் ஆல் முற்றிலும் எட்ட முடியாததாக நிரூபிக்கப்பட்டிருந்த முதலாளித்துவ முறைமைகளை, அதாவது நாட்டை ஒருங்கிணைப்பது, நிலத்தை தேசியமயமாக்குவது, கல்வியை பரவலாக்குவது, உள்கட்டமைப்பைக் கட்டமைப்பது போன்றவற்றை நடைமுறைப்படுத்தி உள்ளது. தொழிலாள வர்க்கத்திடம் அதற்கிருக்கும் அதன் ஆழ்ந்த அவநம்பிக்கையும், குரோதமும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் ஒரு சிகப்பு இழையாக ஓடுகின்றது. இது, 1989இல் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த வர்க்க கோரிக்கைகளை தியானென்மென் சதுக்க போராட்டங்களில் ஒலிக்கத் தொடங்கிய உடனே, நடத்தப்பட்ட அதன் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையில் மிகவும் வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டது.

எவ்வாறிருந்த போதினும், ஆட்சியானால் தற்போது தூண்டிவிடப்பட்டுக்கொண்டிருக்கும் தேசபக்தியால் சீன முதலாளித்துவத்தின் ஆழமான முரண்பாடுகளை மறைத்துவிட முடியாது. சீன கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை ஒரு பொருளாதார மற்றும் சமூக வெடிகுண்டின் மீது உட்கார்ந்திருப்பதைஎல்லாவற்றிற்கும் மேலாக, பணக்காரர்களுக்கும் ஏழைக்கும் இடையில் நிலவும் பெரும் இடைவெளி இருப்பதைவெகு நன்றாக அறிந்துள்ளது. சில சீன பில்லியனர்கள் உட்பட தற்போது 80 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஹூ ஜின்டா, பாதுகாப்பின்மை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதை வெளியிட்டார். பல இடங்களில் பரவியிருக்கும் கட்சியின் ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவது தான் "பொதுமக்களின் ஆதரவை வெல்வது அல்லது இழப்பதன், மற்றும் கட்சியின் வாழ்வா சாவா என்பதன்" முக்கிய விஷயமாக உள்ளது என்று அவர் சமீபத்தில் எச்சரித்தார்.

இந்த ஆண்டுவிழா நிகழ்ச்சிகளே அக்கட்சியின் இறுதி கூக்குரலாக  இருக்கக்கூடும். அவர்களின் ஊதாரித்தனத்திற்கு இடையில், அந்த கட்சி தானே தயாரித்த சவக்குழியை ஒரு 90 வயது கிழவன் அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதைப் போல பார்த்துக் கொண்டிருக்கிறது. 1949இல் 8 மில்லியனாக இருந்த பாட்டாளி வர்க்கத்தை இன்று 500 மில்லியனாக பரந்தளவில் அதுவே தான் விரிவாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரத்திற்கு இட்டுச் செல்வதிலும், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொடங்குவதிலும் தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பாத்திரத்தை வலியுறுத்தும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவம் மட்டும் தான் பெய்ஜிங்கில் உள்ள பொலிஸ்-அரசை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஒரே அடித்தளமாக உள்ளது.

இதற்கான தயாரிப்பாக, சீனாவிலுள்ள தொழிலாளர்களும் புத்திஜீவிகளும் சீனாவிலும், சர்வதேச அளவிலும் இருபதாம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களிலிருந்து கிடைத்த துன்பியலான படிப்பினைகளில் இருந்துகுறிப்பாக ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்தால் நடத்தப்பட்ட காட்டிக்கொடுப்புகளில் இருந்துபாடங்களைப் பெற வேண்டும். ஸ்ராலினிசத்திற்கு எதிராக நீண்டகாலமாக அரசியல்ரீதியாக போராடிய ட்ரொட்ஸ்கிச போராட்டங்களின் படிப்பினைகளின் அடிப்படையில் அமைந்த உண்மையான ஒரு புதிய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி அவசியப்படுகிறது. அதாவது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு சீன பிரிவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையே இது குறிக்கும்.