World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Greek austerity package: Social counterrevolution in Europe

கிரேக்க சிக்கனப் பொதி:ஐரோப்பாவில் சமூக எதிர்ப்புரட்சி

Peter Schwarz
30 June 2011 

Back to screen version

சமூக ஜனநாயகக் கட்சியான PASOK இன் வாக்குகளுடன் கிரேக்க பாராளுமன்றம் புதன் கிழமையன்று ஒரு புதிய சிக்கன நடவடிக்கைகள் பொதிக்கு ஒப்புதலைக் கொடுத்தது. இந்த வாக்களிப்பு ஐரோப்பா முழுவதிற்கும் ஒரு புதிய அரசியல் திருப்புமுனையை குறிக்கின்றது.

சிக்கன நடவடிக்கைகள் பல தசாப்தங்களாக சமூகத்தின் பரந்த தட்டுக்களில் நிலவி வரும் வாழ்க்கைத் தரங்களை பின்தள்ளிவிடும் என்று எந்த தீவிர பொருளாதார நிபுணரும் சந்தேகப்படவில்லை. கடந்த ஆண்டு ஏற்கப்பட்ட முதல் சிக்கனப் பொதி ஏற்கனவே பொதுத்துறை ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் பிற நலன்களில் பெரும் வெட்டுக்களை ஏற்படுத்திவிட்டது. அதே நேரத்தில் இது நுகர்வு வரிகளை அதிகரித்துள்ளது: இதையொட்டி ஆழ்ந்த மந்த நிலை தூண்டப்பட்டுள்ளதுடன், வேலையின்மையில் ஒரு தீவிர அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பொழுது இன்னும் கூடுதலான 28 பில்லியன் யூரோக்கள் 2015க்குள் சேமிக்கப்பட வேண்டும். இது 11 மில்லியன் மக்கள் உள்ள இந்நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% ஐக் குறிக்கிறது. ஜேர்மனியில் இதற்கு ஒப்பான வெட்டுக்கள் என்பது 300 பில்லியன் யூரோக்கள் என ஆகும். அமெரிக்காவில் இது 1.7 டிரில்லியனுக்கு ஒப்பாகும். இதைத்தவிர அரசாங்க நிறுவனங்களைத் தனியார்மயம் ஆக்குவதின்மூலம் 50 பில்லியன் யூரோக்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

இப்புதிய திட்டம் பொதுத்துறைப் பணிகளில் 150,000 வேலைகள் குறைப்பிற்கு வழிவகுப்பதுடன், சமூகநலச் செலவுகள் மற்றும் சுகாதாரப்பாதுகாப்புக்களில் குறைப்புக்களை ஏற்படுத்தும். மேலும் நடத்தர வருமானம்பெறுவோரின் மீது பெரும் வரிவிதிப்பு அதிகரிப்புக்களை ஏற்படுத்தும். மதுபான சாலைகள், உணவு விடுதிகளில் மதிப்புக் கூட்டு விரிகள் 13ல் இருந்து 23% என உயர்த்தப்படும். பொருளாதாரம் இது போன்ற சிறு வணிகங்களை பெரிதும் நம்பியுள்ள கிரேக்கத்தில் இது ஆயிரக்கணக்கானவர்கள் அழிவிற்கு உட்படுத்தப்படுவர், மந்த நிலை அதிகரிக்கும் என்ற பொருளைத்தான் தரும்.

பைனான்ஸியல் டைம்ஸில்  ஒரு முக்கிய கட்டுரையாளரும் இதுவரை சிக்கன நடவடிக்கைக்காக வாதிட்டவருமான வொல்ப்காங் முன்சௌ கூட இத்தகைய சிக்கன நடவடிக்கைகள்நிதியியல்ரீதியாக பின்விளைவுகளை பற்றி கவனமற்றதும், அரசியல்ரீதியாகவும் பொறுப்பற்ற செயல்கள்என்ற முடிவிற்கு வந்துள்ளார். “இப்பொழுதுள்ளபடி இத்திட்டம் அரசியல்ரீதியாகவும், அறநெறிரீதியாகவும் மற்றும் பொருளாதாரரீதியாகவும் நியாயப்படுத்தப்படுவது கடினமாகும்என்று எழுதியுள்ளார்.

ஆயினும்கூட ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கப் பாராளுமன்றம் இத்திட்டத்தை ஏற்பதற்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. பொருளாதார விவகாரங்கள் ஆணையர் ஒலி ரெஹ்ன் சிக்கனப் பொது நிராகரிக்கப்பட்டால் கிரேக்கம் திவாலில் தள்ளப்படும் என்று அச்சுறுத்தினார். “உடனடியான செலுத்துமதியின்மை ஏற்படுவதைத் தவிர்க்க ஒரே வழி பாராளுமன்றம் திருத்தப்பட்ட பொருளாதாரத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுப்பதுதான்என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். “அடுத்த கட்ட நிதிய உதவி கொடுக்கப்படவேண்டும் என்றால் அவர்கள் அதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும். மற்ற விருப்புரிமைகளைப் பற்றி ஊகிப்பவர்களுக்கு இதை நான் தெளிவாகக் கூறுவேன்: செலுத்துமதியின்மையை தவிர்ப்பதற்கு மாற்றுத்திட்டம் எதுவும் இல்லைஎன்றார்.

தன்னுடைய பங்கிற்குப் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ பல நாட்களாக அரசியல் உத்திகள் மற்றும் தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல்களை கையாண்டு எதிர்ப்புத் தெரிவிக்கும் தன் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு கொடுக்கச்செய்ய முயன்று வந்துள்ளார். கிரேக்க மக்களில் பெரும்பான்மையானவர்கள் சிக்கனப் பொதியை நிராகரிக்கையில் நாட்டை ஒரு இரு-நாள் பொது வேலைநிறுத்தம் முடக்கியது, பல்லாயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்தின் முன் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் PASOK இன் பிரதிநிதிகளில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்; எதிர்த்தரப்பு புதிய ஜனநாயகக் கட்சியில் உள்ள பிரதிநிதி ஒருவரும் ஆதரவாக வாக்களித்தார்.

இந்த முழு வழிவகையும் சர்வாதிகார தன்மைகளைத்தான் கொண்டிருக்கிறது. பழைமைவாத கிரேக்க நாளேடான Kathimerini  முடிவாகக் கூறியது: “நாம் இனி ஜனநாயகம் பற்றிப் பேசிப் பயன் இல்லை…. நாடுமுழுவதும் அரசியல் பேரரசின்கீழ் என்பதை விட ஒரு பொருளாதாரப் பேரரசின்கீழ் உள்ள மாநிலமாக மாற்றப்பட்டுவிட்டது; இதை பல முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தரம் மதிப்பிடும் நிறுவனங்கள் என்று பெரும் சக்தி கொண்டவற்றிற்கும், பேராசை விழைவுகொண்டுள்ளவற்றிற்கும் பிணைப் பொருளாகிவிட்டது.”

நிதிய மற்றும் பங்குச் சந்தைகள் இந்த வாக்கெடுப்பை சாதகமாக எதிர்கொண்டன. கிரேக்கப் பாராளுமன்றத்தின் ஒப்புதலை மற்ற ஐரோப்பிய நாடுகளிலுள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இதேபோன்ற மிருகத்தன முறையில் தாக்குதலை நடத்தலாம் என்பதற்கு இது அடையாளம் என்று அவை விளக்கம் காண்கின்றன. சிக்கனத் திட்டங்கள் ஏற்கனவே போர்த்துக்கல், அயர்லாந்து, ஸ்பெயின், பிரித்தானியா ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன.. அடுத்து இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இறுதியின் இன்னும் வசதியான நாடான ஜேர்மனி போன்ற நாடுகளும் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.

அமெரிக்க வங்கி லெஹ்மன் பிரதர்ஸ் 1930களுக்குப் பின் மிகப் பெரிய சர்வதேச நிதிய நெருக்கடி என்பதைக் கட்டவிழ்த்து இரண்டரை ஆண்டுகளுக்குப்பின், சர்வதேச நிதிய மூலதனம் தீவிரமாக தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் வங்கிகளை மீட்பதற்கு செலவழிக்கப்பட்ட டிரில்லயன்களை எடுக்க முயல்கிறது. இதையொட்டி அது ஒரு சமூக எதிர்ப்புரட்சியை நடைமுறைப்படுத்துகிறது. இதன் நோக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொழிலாள வர்க்கம் பெற்றிருந்த சமூக நலன்கள் அனைத்தையும் பறித்துவிடுவதுதான்.

அமெரிக்காவில் 50 சதவிகித ஊதிய வெட்டுக்களும், கடன்பட்டுள்ள மாநிலங்களான கலிபோர்னியா மற்றும் விஸ்கோன்ஸின் போன்றவற்றின் பொதுச்செலவுகளில் பெரும் வெட்டுக்களும் நீண்டகாலமாக நிகழ்ச்சி நிரலில் உள்ளன. ஐரோப்பா அத்தகைய செயற்பாடுகளினால் பாதிப்படையாது , ஏனெனில் அங்கு பொதுநல அரசு மரபுகள் உள்ளன என்று கருதியவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உட்பட்டுள்ளனர். இரு தசாப்தங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட யூரோ, வருங்கால வளமைக்கு உத்தரவாதம் அளிக்கும் என வரவேற்கப்பட்டது, இப்பொழுது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை அழிப்பதற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது. “யூரோவை மீட்கவும்என்பது சிக்கன நடவடிக்கை, சமூச்சரிவுகள் இவற்றில் இருந்து மாறுபடவில்லை என்ற பொருளாகிவிட்டது.

ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, கிரேக்க நிகழ்வுகள் ஒரு எச்சரிக்கையாக விளங்கிக்கொள்ள வேண்டும். இதில் இருந்து அரசியல் படிப்பினைகளை பற்றுவது முக்கியமாகும். தொழிற்சங்கங்கள் மற்றும்இடதுஎன அழைக்கப்படும் கட்சிகளின் ஆதரவு இல்லாமல், பாப்பாண்ட்ரூ மற்றும் அவருடைய சர்வதேச ஆதரவாளர்கள் விரும்பியதைச் செய்து இருக்க முடியாது.

ஐரோப்பிய மட்டத்தில், இந்த அமைப்புக்கள் கிரேக்கத் தொழிலாளர்களுடன் எவ்வித ஐக்கியமும் கூடாது என்று உறுதிப்படுத்த உழைத்துள்ளன. சமூக ஜனநாயகக் கட்சிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு முழு ஆதரவு கொடுத்து, “சோம்பேறிக் கிரேக்கர்கள்என வர்ணிக்கும் இழிந்த பிரச்சாரத்திற்கும் ஆதரவு கொடுத்துள்ளன. இதேதான் ஐரோப்பிய தொழிற்சங்கத் தலைமை அலுவலகங்களுக்கும் பொருந்தும். அவை ஒற்றுமை உணர்வு பற்றி ஒரு சொல்கூட வெளியிடவில்லை.

கிரேக்கத்திலேயே தொழிற்சங்கங்கள் மிக நெருக்கமான PASOK உடன் இணைந்துள்ளன. சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பாரிய எதிர்ப்பை அடக்குவதற்கு அவை உழைத்துள்ளதுடன், எதிர்ப்புக்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும் முயன்றுள்ளன. அவை 15 எதிர்ப்பு வேலைநிறுத்தங்களை நடத்தின; ஆனால் இவை முற்றிலும் சீற்றத்தை குறைத்துவிடும் நோக்கத்தையே கொண்டிருந்தன. அனைத்து பொது வேலைநிறுத்தங்களும் ஒருநாள்தான் என்று குறைக்கப்பட்டிருந்தன. ஏனெனில் ஒரு சில நாட்களுக்கு மேல் ஒரு காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்தை அரசாங்கத்தால் எதிர்த்து நிற்க முடியாது என்பதை அவை அறிந்திருந்தன.

நாட்டிலுள்ள SYRIZA, ANTARSYA போன்ற பல கணக்கிலடங்கா போலி இடது அமைப்புக்கள் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு கொடுத்துஅரசியல் தன்மையற்ற”, சின்டக்மா சதுக்கத்தில் நடைபெறும்சீற்றமுற்றோர்இயக்கம் என்பதின் பின் வரிசையாக நின்றன. இதற்குக் காரணம் ஒரு புரட்சிகர முன்னோக்கு பற்றிய எந்த விவாதத்தையும் நசுக்க வேண்டும் என்பதுதான். கடன் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான அழைப்பை முற்றுமுயுதாக நிராகரித்ததுபோல் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான கோரிக்கையும் இவர்களுக்கு ஒரு தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். மாறாக இவை பாப்பாண்ட்ரூவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு மாற்றிட்டுக் கொள்கையை ஏற்க அழுத்தம் கொடுக்கப்படலாம் என்ற போலித் தோற்றத்தை வளர்த்தன.

கிரேக்கத்தில் ததொடங்கிய சமூக எதிர்ப்புரட்சி தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் எதிர்ப்பு மூலம்தான் நிறுத்தப்பட முடியும். இது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கவனமாக நடத்தப்படும் பொது வேலைநிறுத்தங்கள் மூலமாகவோ அல்லது அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சிகள் மூலமோ நிறுத்தப்பட முடியாது.

முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு ஏதும் கிடையாது. கிரேக்க முதலாளித்துவம் சர்வதேச நிதிய மூலதனத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. புதிய ஜனநாயகக் கட்சி சிக்கனத் திட்டத்தை நிராகரித்துள்ளது முற்றிலும் இழிந்த தன்மை உடையது. அது அரசியல் அதிகாரத்தில் இருந்தாலும் PASOK மாதிரித்தான் செயல்பட்டிருக்கும். இதேதான்இடதுமுதலாளித்துவ அமைப்புக்களுக்கும் பொருந்தும். அவற்றின் சர்வதேச கூட்டுக்களான இத்தாலியில் Refounded Communism, ஜேர்மனியில் இடது கட்சி, பிரான்சில் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை அரசாங்கத்தில் இருந்தபோது இதேபோன்ற சிக்கன நடவடிக்கைகளுக்குத்தான் ஆதரவைக் கொடுத்துள்ளன.

தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கான போராட்டம் ஒன்றை எதிர்கொள்கிறது. இது அனைத்துக் கடன்கள் திருப்பக் கொடுப்பதையும் எதிர்த்து பெரிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவற்றை இழப்பீட்டுத் தொகை இல்லாமல் பறிமுதல் செய்து தொழிலாள வர்க்க அரசாங்கத்தை நிறுவி அவற்றைச் சமூகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவேண்டும். இந்த அடிப்படையில்தான் சமூக எதிர்ப்புரட்சியை நிறுத்த அதனால் முடிவதோடு மற்றும் இருக்கும் வளங்களை அனைவருடைய நலனுக்குப் பயன்படுத்தி ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டமைக்க முடியும்.

இத்தகைய முன்னோக்கு ஒரு சர்வதேச உள்ளடக்கத்தில்தான் அடையப்பட முடியும். கிரேக்கத் தொழிலாளர்கள் அனைத்து தேசியப் போக்குகளையும் நிராகரித்து இதேபோன்ற தாக்குதல்களைத்தான் எதிர்கொள்கின்ற முழு ஐரோப்பிய, சர்வதேச தொழிலாள வர்க்கத்துடனும் வலுவான பிணைப்புக்களை நிறுவ வேண்டும். அதன் நோக்கம் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும்தான் இத்தகைய முன்னோக்கிற்கு போராடுகின்றன. கிரேக்கத்திலும் ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொண்டு ஐரோப்பாவில் சர்வதேசக் குழுவின் பிரிவுகளைக் கட்டமைக்க உதவுமாறு அழைப்பு விடுக்கிறோம்.