World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Terrorist attack in Mumbai kills 21

பயங்கரவாதிகள் தாக்குதல் மும்பையில் 21 பேரைக் கொன்றது

By Keith Jones
14 July 2011

Back to screen version

இந்தியாவின் மிகப் பெரிய நகரமும் நிதிய மையமுமான மும்பையில் 3 வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலில் நேற்று 21 பேர் கொலையுண்டதுடன், 140 பேருக்கும் மேல் காயமுற்றனர்.

மிகக்கூடிய இழப்புக்கள் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன எனத் தோன்றுகிறது. நகர மையத்தில் அதிகம் மக்கள் புழக்கமுள்ள மூன்று பகுதிகளை அவை இலக்காக கொண்டிருந்ததுடன், மாலை நெரிசல்மிக்க நேரத்தில் 12 நிமிட இடைவெளிக்குள் வெடித்தன.

முதலாவதும் மிகப்பயங்கரமான குண்டுத்தாக்குதல் ஒரு நகைக்கடை  சந்தையான ஜவேரி பஜாரில் மாலை 7 மணிக்கு முன்னால் அதிர்வை ஏற்படுத்தியது. ஒரு நிமிடம் கழிந்தபின், மும்பையின் வைர ஏற்றுமதி வணிக மையமான ஓபரா ஹௌஸ் பகுதியில் இரண்டாம் குண்டு வெடித்தது. மூன்றாம் குண்டு மத்திய மும்பையின் குடியிருப்பு பகுதியான தாதரில் ஒரு டாக்சியில் வைக்கப்பட்டிருந்தது எனத் தெரிகிறது. இங்குள்ள இரயில் நிலையம் ஒரு முக்கியமான பயணிகள் நிறைந்து கூடும் இடம் ஆகும்.

நேற்றைய ஒருங்கிணைந்த தாக்குதல் உடனடியாக 2008 நவம்பர் கடைசியில் இரு உயர்மட்ட விடுதிகள், ஒரு இரயில் நிலையம் மற்றும் தென்புலத்தில் உள்ள யூதர் சமூக மையம் என மும்பையில்  நடத்தப்பட்ட கமாண்டோ மாதிரியிலான தாக்குதலுடன் ஒப்புமைக்கு உட்பட்டது. 60 மணி நேரப் பெரும் பரபரப்பான போராட்டத்திற்குப் பின்னரே அமைதியாக்கப்பட்ட அத்தாக்குதலில் 160 இறப்புக்கள் நேர்ந்தன மற்றும் எப்பொழுதும் பூசலுக்கு உட்பட்ட இந்திய, பாக்கிஸ்தான் உறவுகளில் பெரும் நெருக்கடி ஒன்றிற்கும் வழிவகுத்தது. தாக்கியவர்கள் பாக்கிஸ்தானில் இருந்து மும்பைக்குப் பயணித்தனர் என்று காட்டிய சான்றுகளை சுட்டிக்காட்டி, புது டெல்லி பாக்கிஸ்தானில் இந்திய எதிர்ப்பு இஸ்லாமிய போராளிகளை அடக்குவதில் பாக்கிஸ்தான் தோற்றுள்ளதை சுட்டிக்காட்டி பாக்கிஸ்தானிய அரசாங்கம்தான் இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும் எனவும் கூறியது.

இந்தியாவின் உள்நாட்டு மந்திரி பி.சிதம்பரம் மற்றும் பிற இந்திய அதிகாரிகள் இதேபோன்ற பாக்கிஸ்தான் தளமுடைய பயங்கரவாதத் தாக்குதல் மீண்டும் ஏற்பட்டால், இந்தியா பாக்கிஸ்தானுக்குள்பயங்கரவாதத் தளங்களுக்குள் எல்லை கடந்த தாக்குதல்களை நடத்தத் தயாராக உள்ளது என்ற அச்சுறுத்தல்களைப் பலமுறையும் கொடுத்ததும் இதில் அடங்கும்.

நேற்றைய ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புக்கள் நவம்பர் 2008 தாக்குதலை விட மிகவும் நவீனத்தன்மை குறைந்ததாகத் தோன்றுகின்றன.

குண்டுத் தாக்குதல்களுக்கு பிரதிபலிப்பாக, இந்திய அரசாங்கம் நாடெங்கிலும் முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் படையினரை பெரும் எச்சரிக்கை நிலையில் இருத்தியது. பிரதம மந்திரி மன்மோகன் சிங் அமைதியாக அனைவரும் இருக்க வேண்டும் என்று அழைப்புவிட்டார்.  கடந்தகாலங்களில் மும்பை பரந்த அளவில் வகுப்புவாத வன்முறையின் களமாக இருந்துள்ளது. இதில் மிக முக்கியமாக சிவ சேனை மற்றும் பிற இந்து வகுப்புவாதிகள் டிசம்பர் 1992 ல் இந்துமத வலதுசாரியினர் அயோத்தியாவிலுள்ள பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டபின் மும்பையின் முஸ்லிம்களை இலக்கு கொண்டிருந்தனர்.

உள்துறை மந்திரி சிதம்பரம் நாட்டின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளை புதன் கிழமை மாலை கூட்டினார். இதில் சிறிது நேரம் பிரதம மந்திரி சிங்கும் கலந்து கொண்டார். பின்னர் சிதம்பரம் குண்டுத்தாக்குதலுக்கு உட்பட்ட பகுதிகளைப் பார்வையிட மும்பைக்குப் பறந்து சென்றார்.

எதிர்பார்த்தபடி இந்திய பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான ஹிந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பேச்சாளர்கள் நேற்றைய பெரும் சோகத்தைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சி வழிநடத்தும் மத்திய அரசாங்கம் இந்தியாவை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்ற இயலாது என்பதற்கு இது நிரூபணம் என்று கூறியது. சிறிதளவு ஆதாரமும் இல்லாமல், 2002 முஸ்லிம்-எதிர்ப்புப் படுகொலைகளை தூண்டிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி, நேற்றைய குண்டுகள் இன்னும் பெரிய தாக்குதல் ஒன்றிற்குஒரு ஒத்திகையாகஇருந்திருக்கலாம் என்றார்.

சமீபத்தில்தான் நிலப்பகுதி, இராணுவ, நீர் மேலாண்மை மேலும் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பலபூசல்கள் பற்றி முழு அளவு கலந்துரையாடலுக்கு இந்தியாவை வலியுறுத்திய பாக்கிஸ்தான் அரசாங்கம் மும்பையில் சமீபத்தில் நடந்துள்ள பயங்கரவாத நிகழ்வைக் கண்டித்து விரைவாக ஒரு அறிக்கையை வெளியிட்டது.

நேற்றைய ஒருங்கிணைந்த குண்டுத் தாக்குதல்களுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதைச் செய்தவர்களின் கூறப்படும் நோக்கம் எதுவாயினும் சாதாரண மக்களை வேண்டுமென்றே படுகொலை செய்வது பிற்போக்குவாதத்திற்குத்தான் வலுச்சேர்க்கும். மேலும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அமைப்புகளைக் கட்டியெழுப்புவதற்குப் புதிய போலிக் காரணங்களை கொடுத்து, இந்தியாவிலுள்ள இந்து, முஸ்லிம் மக்களுக்கிடையேயும் மற்றும் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் உள்ள இடையே உறவுகளை நச்சுப்படுத்தவும் உதவும்.

புதன் இரவு அதன் வலைத் தளத்தில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இந்து நாளேடு, “உளவுத் துறைப்பிரிவில் உள்ள ஆதாரங்கள் வெடிப்பதற்கு IEDக்கள் எனப்படும் [எரியூட்டக்கூடிய  வெடிக்கும் கருவிகள்] இந்திய முஜாஹிதீன் [இந்தியத் தளம் கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதக்குழு] பாக்கிஸ்தானைத் தளம் கொண்ட லஷ்கர்--தொய்பா பயங்கரவாதக் குழுவுடன் நெருக்கமாக இணைந்து நடத்திய செயல் போல் உள்ளதுஎன்று கூறியுள்ளது. ஆனால் பிற ஊடகங்களின் தகவல்கள் இதுவரை எவர் செய்திருக்கக்கூடும் என்பது பற்றிய குறிப்பு ஏதும் இல்லை என்றும் இது மும்பையின் குற்றக்குழுக்களின் தலைவர்களில் ஒருவரால்கூட செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன.

இந்திய அரசாங்கம் நவம்பர் 2008 மும்பையில் நடந்த பயங்கரவாதக் கொடுமைக்கு லஷ்கர் இ தொய்பா எனும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவின் மீது காரணத்தை சுமத்தியது. இக்குழு நீண்டகாலமாக பாக்கிஸ்தானின் உளவுத்துறை பாதுகாப்புக் கருவியின் பிரிவுகளுடைய ஆதரவைப் பெற்றுள்ளது. உண்மையில் அத்தாக்குதலில் லஷ்கர் இ தொய்பாவை தொடர்பு படுத்தச் சான்றுகள் உள்ளன.

ஆனால் 1947ம் ஆண்டில் வகுப்புவாதப் பிரிவினைக்கு துணைக்கண்டம் உட்பட்டதில் இருந்து பாக்கிஸ்தானுடன் ஒரு பிற்போக்குத்தன பூகோள-அரசியல் மோதலில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் ஆளும் உயரடுக்கு அதன் பாக்கிஸ்தானிய உயரடுக்கைப் போன்றே தெற்கு ஆசியா முழுவதும் அணுவாயுத அச்சம் என்ற அச்சுறுத்தலைக் கொடுக்கும் வெடிப்புத் தன்மை உடைய இந்நாடுகளுக்கு இடையேயான போட்டிக்கு அரசியல் பொறுப்பைக் கொண்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் புது டெல்லி அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாயக் கூட்டுறவைத் தொடர்கிறது, ஆப்கானிய போரில் வாஷிங்டனுக்குச் சிறந்த நட்பு நாடு எது என்னும் போட்டியில் பாக்கிஸ்தானுடன் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளது. மேலும் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து ஒரு பொதுத்தேவைக்கான அணுசக்தி உடன்பாட்டைப் பெற்றுள்ளது. அது இந்தியாவை ஆயுத வளர்ச்சிக்கு அதன் உள்நாட்டு அணுசக்தித்திட்டத்தை உறுதிப்படுத்தவும் அனுமதித்துள்ளது.

மேலும் இந்திய ஆளும் வர்க்கம் 208 மும்பைத் தாக்குதலை ஆர்வத்துடன் பற்றிக்கொண்டு அதன் சொந்தக் கொள்ளைமுறை நலன்களை ஆக்கிரோஷத்துடன் முன்னெடுக்கக்க முயல்கிறது.

பதவிக்குவரவிருக்கும் ஒபாமா நிர்வாகம் ஆப்கானியப் போரில் பாக்கிஸ்தான் அதன் இராணுவ ஆதரவை வலுப்படுத்தத் தீவிரமான முயற்சிகளை மேற்கோள்ளும், புது டெல்லிக்கு காஷ்மீர் பற்றி கூடுதல் சலுகைகளை இஸ்லாமாபாத் கொடுக்கும் வகையில் நிலைப்பாட்டை எடுக்கும் என்று வந்த கருத்துக்களை உதறித்தள்ள உறுதி கொண்டிருந்த இந்திய அரசாங்கத்திற்கு மும்பைத்தாக்குதல் ஒரு எதிர்பாரா பெரும் நலனாகும். பாக்கிஸ்தான் ஒருபயங்கரவாத நாடுஎன்று இந்திய அரசாங்கம் அறிவித்தது; மேலும்உலகப் பயங்கரவாதத்தின் மையத்தானமாக உள்ளதுஎன்று கூறி இஸ்லாமாபாத்துடன் நடந்தி வந்தகூட்டுச் சமாதான கலந்துயாடல்களைநிறுத்திவைத்தது. அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் வாஷிங்டனுடன் காஷ்மீர் முரண்பாட்டில் அமெரிக்க தலையீடு இந்திய அமெரிக்க உறவுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் கூறியது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் மற்றும் இந்தியாவின் பெருநிறுவனச் செய்தி ஊடகத்தின் உடந்தையுடன், பாரதிய ஜனதா கட்சியும் மற்றும் ஹிந்து வலதுசாரிகளும் நவம்பர் 2008 மும்பைத் தாக்குதலை, ஒரு இந்து பயங்கரவாத வலைப்பின்னல் பி.ஜே.பி. மற்றும் சகோதர அமைப்புக்களுடனும் மற்றும் இந்திய இராணுவத்துடன் கொண்ட தொடர்பு பற்றிய உண்மை அண்மையில் அம்பலமானதில் இருந்து திசைதிருப்ப வெற்றிகரமாகப் பயன்படுத்தினர். இந்த வலைப்பின்னல்தான் நீண்ட காலம் முஸ்லீம் தீவிரவாதிகள் மீது இந்திய அரசாங்கமும் பொலிசும் குற்றம் சாட்டிய தொடர்ச்சியான குண்டுவெடிப்புக்களுக்குப் பொறுப்பு ஆகும்.

நேற்றைய குண்டுத்தாக்குதல்கள் பாக்கிஸ்தான் மற்றும் இந்திய அரசாங்கங்கள் பல நெருக்கடிகளில் ஆழ்ந்துள்ள நிலையில் வந்துள்ளதுஅவற்றின் தனித்தனி உயரடுக்குகள் இந்த நெருக்கடிகளைப் பயன்படுத்தி தம் பாரம்பரிய எதிராளிகளுக்கு எதிரான தேசியவெறியைத் தூண்டப் பயன்படும்.

இரு நாடுகளும் பெருகிய பொருளாதாரப் பிரச்சினைகளையும், சமூக அமைதியன்மையையும், குறிப்பாக உணவுப் பொருட்கள் விலை உயர்வினையும் எதிர்கொள்கின்றன. பாக்கிஸ்தானை பொறுத்தவரை, அமெரிக்காவுடன் அதன் மூலோபாய பங்காளித்தனத்தால் இந்நெருக்கடி சூழ்ந்துள்ளது. கடந்த வாரம் வாஷிங்டன் பாக்கிஸ்தானுக்குக் கொடுக்கும் இராணுவ நிதியில் இருந்து $800 மில்லியனை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. ஏனெனில் ஒசாமா பில் லேடனை கொல்லுவதற்கு அபோத்தாபாத்தில் நடந்த சட்டவிரோத, ஒருதலைப்பட்ச தாக்குதலைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் நாட்டில் அமெரிக்க உளவுத்துறை மற்றும் இராணுவ பிரசன்னத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.