World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Murdoch scandal

மேர்டோக் ஊழல்

Chris Marsden and Julie Hyland
22 July 2011

Back to screen version

கடந்த சில நாட்களாக பாராளுமன்றம் ரூபர்ட் மேர்டோக்கின் செய்தி ஊடகத்தின் மீது அதிகாரத்தை மீண்டும் உறுதிபடுத்திவிட்டது, இறுதியாக கோடீஸ்வரனை ஒழுங்கிற்குக் கொண்டுவந்துவிட்டது என்று பிரிட்டிஷ் பொதுமக்களுக்கு  கூறப்படுகின்றது. செவ்வாயன்று தன்னுடைய மகன் ஜேம்ஸுடன் ஒரு பாராளுமன்றச் சிறப்புக்குழுவில் மேர்டோக் சாட்சியம் கொடுத்தது ஒருபிரிட்டிஷ் வசந்தத்தைப்பிரதிபலிக்கிறது என்றும் கூறும் அளவிற்கும் சிலர் சென்றுள்ளனர்.

மேற்கத்தைய ஆதரவு சர்வாதிகாரிகளை துனிசியா மற்றும் எகிப்தில் இருந்து இக்குளிர்காலத்தில் பதவியில் இருந்து விலகக் கட்டாயப்படுத்திய அரபு வசந்தம் என அழைக்கப்படுவதை தொடர்புபடுத்தி மறைமுகமாக குறிப்பிடுவது அபத்தமும், தவறுமாகும். கூலி கொடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மேர்டோக்கை மரியாதையுடன் கேள்விகள் கேட்கும் காட்சி மக்களைக் குழப்பவும், பெருநிறுவனத் தன்னலக்குழுவுடன் ஒரு அரசியல் கணக்குதீர்ப்பதை தடுக்கும் நோக்கமாகக் கொண்டது.

பிரிட்டிஷ் அரசியல் அமைப்புமுறையின் பலத்தினை நிரூபிப்பதற்கு முற்றிலும் மாறாக, மேர்டோக்கை கேள்வி கேட்டவர்களின் அடிபணிந்து நிற்கும் குணமும் மற்றும் அழுகிய தன்மையையும் நன்கு வெளிப்படுத்திக்காட்டியது. மேர்டோக்கின் பிரிட்டிஷ் செய்தி ஊடகக் குழுவின் நியூஸ் இன்டர்நேஷனலின் உயர் அதிகாரிகளுடன் சமரசத்திற்குட்பட்ட உறவுகள் பற்றி நிறைய சான்றுகள் இருந்தும்கூட, பிரதம மந்திரி புதன் கிழமை நடைபெற்ற அவசரக்காலப் பாராளுமன்ற கூட்டத்தில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக்கூட எதிர் கொள்ளவில்லை. பிரிட்டிஷ் ஆளும்வர்க்கத்திடம் ஜனநாயகம் பற்றிய உறுதிப்பாடு ஏதேனும் சிறிதளவு இருந்திருந்தாலும், இவ்வாறு நடைபெற்றிருக்காது.

நியூஸ் இன்டர்நேஷனலின் பிரதிநிதிகள் 12,000 பேரின் தொலைபேசிகளை ஒற்றுக்கேட்டதில், பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததில் மற்றும் குற்றம்சார்ந்த பாதாளஉலகுடன் கொண்ட உறவினால் முக்கிய அரசியல் பிரமுகர்களை மிரட்டுவதில் தொடர்பு கொண்டனர் என்பதற்கு  சான்றுகள் உள்ளன. மேலும், திங்கள் அன்று குழப்பம்மிக்க, விளக்கப்படாத வகையில் முக்கிய தகவல் வழங்கிய சீன் ஹோர் இறந்துபோனதும் உடனடியாகசந்தேகத்திற்கு உரியது அல்ல என்று அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு முக்கிய அமைப்பும், முக்கிய அரசியல்வாதியும் மேர்டோக் ஊழலில் தொடர்பைக் கொண்டுள்ளனர். மேர்டோக்கின் செய்தி ஊடகக் குழுவில் தங்கள் இழிந்த உறவுகளைத் தவிர, மெட்ரோபொலிடன் பொலிஸின் உயர்மட்ட அதிகாரிகள், அரசாங்கக் குற்றவியில்துறைப் பிரிவு மற்றும் தொடர்ச்சியான அரசாங்கங்கள் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளாகவேனும் நியூஸ் இன்டர்நேஷனலின் குற்ற நடத்தை பற்றிய விசாரணைகளைத் தடுப்பிற்கு உட்படுத்திவிட்டன.

அதிர்ச்சி, சீற்றம் அடைந்தததாக ஆளும்தட்டினர் கூறுவது இப்பொழுதெல்லாம் முற்றிலும் பாசாங்குத்தனச் செயல் ஆகும். அரசியல் வர்க்கத்தில் ஒவ்வொருவருக்கும் மேர்டோக்கின் செயற்பாடுகளின் அடிப்படைத் தன்மை பற்றி நன்கு தெரியும் என்பது மட்டுமின்றி, அவற்றிற்கு உடன்பட்டுள்ளனர், அல்லது அவற்றில் தீவிரப் பங்கு கொண்டுள்ளனர். மூன்று தசாப்தங்களுக்கு மேர்டோக் பிரிட்டனில் மட்டும் இல்லாமல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா இன்னும் அப்பாலும் அரசியலை நிர்ணயிப்பவராக இருந்தார். பெயரளவிற்குகன்சர்வேடிவ்”, “தொழிற்கட்சிஎன்று அரசியல்வாதிகள் எப்படி இருந்தாலும், அவருக்கு விசுவாசமாக நடப்பதில் உறுதியாக இருந்தனர்.

எனவேதான் நியூஸ் இன்டர்நேஷனல் ஊழலில் அரசியலில் பொறுப்பேற்பது ஒருபுறம் இருக்க, ஒரு தனிநபர்கூட குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

அரசியல் ஆளும்தட்டினரின் நீண்டகால மேர்டோக்குடனான பிணைப்புக்கள் தனிப்பட்ட விசுவாசத்தை மட்டும் தளமாகக் கொண்டவை அல்ல. அவர் தனியார்மயமாக்கப்படல், கட்டுப்பாடுகள் அகற்றப்படல், இன்றைய நிதிய தன்னலக்குழுவின் ஒட்டுண்ணித்தனத்தில் பரந்துள்ள, பெரிதாக இருக்கும் ஊகம் ஆகியவை அனைத்துடனும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டவர். அவருடைய செய்தி ஊடகப் பேரரசு செய்தி தகவல் தருவதில் வெற்றுத்தனப் பரபரப்பைக் காட்டியது. 1980களில் இருந்து தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எந்த வெற்றிகரமான எதிர்ப்பும் இன்றி, இத்தன்னலக்குழு கடுமையான தாக்குதல்களை அதன்மீது நடத்துவதற்கான அரசியல், அறிவார்ந்த சூழலை ஏற்படுத்துவதில் பெரும் பங்கைக் கொண்டிருந்தது.

மேர்டோக் விரோதிகளையும் மற்றும் வணிகப் போட்டியாளர்களையும் ஆளும் வர்க்கத்திற்குள்ளேயே கொண்டிருந்தார் என்பது உண்மைதான். மேர்டோக்கின் செல்வாக்கு, செய்தி ஊடகத்தின்மீதான ஏகபோக உரிமை மற்றும் அரசாங்கத்தின் செயற்பட்டிலை ஆணையிடும் திறன் மற்றும் அரசாங்கத்தையே அமைக்கும் தன்மை ஆகியவை பற்றிச் செய்தி ஊடகம் மற்றும் அரசியல் வட்டங்களில் சர்வதேச அளவில்கூட நீண்டகால கவலைகள் இருந்து வருகின்றன.

தற்போதைய மோதலுக்கு தீயூட்டும் வகையில் இப்போட்டிகளும், 2009 ல் டேவிட் காமரோனின் கன்சர்வேடிவ்களுக்கு ஆதரவாக கோர்டன் பிரௌன் கைவிடப்பட்டது போன்ற மேர்டோக்கின் அரசியல் தந்திரோபாயங்களின் விளைவுகள் இருந்தன.

பிரிட்டனின் நியூஸ் இன்டர்நேஷனலின் குற்றத்தன்மை பற்றி திடீரென வெடித்துள்ள அரசியல் நெருக்கடியை ஒட்டி ஆளும் உயரடுக்கிற்குள் இருக்கும் ஆழ்ந்த மோதல்கள் வெளிப்பட்டுள்ளன. நியூஸ் ஆப் த வேர்ல்டில் தொலைபேசி ஒற்றுக் கேட்டல் பற்றி சீற்றம் வெடிப்பதற்கு சற்று முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் கைதுசெய்யப்பட்டு அவருடைய பதவியில் இருந்து சந்தேகத்திற்குரிய பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அகற்றப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது. அத்தகைய ஊழல்களில் பொதுவாகத் தவிர்க்கமுடியாமல் காணப்படுவதுபோல், போட்டியிடும் நலன்கள் பரந்த அரசியல் விடயங்களுக்காக செயல்படத் தொடங்குகின்றன.

டெலிகிராப் ஆசிரியர் பெனடிக்ட் ப்ரோகன் குற்றம்சாட்டுவதுபோல், “வெஸ்ட்மின்ஸ்டர் ஒற்றுக்கேட்டல் சகாப்தம், அதன் பெருகி விந்தையான திருப்பங்களில் திகைத்து நிற்கையில், உலகப்பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்பிற்கு அருகே நெருக்கமாகச் சென்றுவிட்டது. யூரோப்பகுதி சிதைவுடன் விளையாடுகிறது, அமெரிக்க அதன் கடனைத் திரும்பக் கொடுக்கமால் இருந்துவிடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது, வங்கி முறை ஒரு அமைப்புமுறையின் தோல்வியை மறுபடியும் அடையும் என்பதற்கு நெருக்கமாக  உள்ளதுஎன்று குறைகூறியுள்ளார்.

மேர்டோக்சகாப்தம்ஒரு திசைதிருப்பம் என்று ப்ரோகன் உட்குறிப்பாக கூறினாலும், அவர் அடையாளம் கண்டிருக்கும் அதே நெருக்கடியில்தான் அது வேர்களைக் கொண்டுள்ளது. 2008 நிதியச் சரிவு உலகப் பொருளாதாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி முதலாளித்துவ சந்தையின் அரசியல் கௌரவத்தைச் சிதைத்துள்ளது. காமரோனின் 100 பில்லியன் பவுண்டுகள்  மதிப்பு வெட்டுக்கள், அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகம் தயாரித்துவரும் பல டிரில்லியன் டாலர்கள் சமூகநலச் செலவுகளில் வெட்டு போன்ற தொழிலாளர்கள் மீதான ஆழ்ந்த தாக்குதல்களை அரசாங்கங்கள் கோருகையில் அவை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து சவாலை எதிர்கொள்ளுகின்றன.

கடந்த மாதங்கள் மத்திய கிழக்கில் சர்வாதிகாரிகள் சரிவை மட்டும் காணவில்லை; பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியக் கண்டத்தில் சமூகநலச் செலவு வெட்டுக்களுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களையும் கண்டுள்ளன. ஆளும் வர்க்கம் எவ்வளவு சிறந்த முறையில் இதைக் கட்டுப்படுத்தி, சிதைத்து, நசுக்கலாம் என்பது பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருக்கிறது. ஆளும் வட்டங்களில் சிலர் தொலைபேசி ஒற்றுக்கேட்டல் ஊழல் கண்ணுக்கெட்டா தூரத்தில் இன்னும் அதிகப் பொருளாதார  போட்டிகளுக்கான ஒரு பயனுடைய பரிசோதனைஎனக் காண்கின்றனர். டௌனிங் தெரு அமைப்பில் சில தவறுகளை அவர்கள் உணர்ந்து, அவற்றைத் திருத்த சில மாற்றங்களை விரும்புகின்றனர். ஏனெனில் 10ம் எண் இவ்வளவு மோசமாக ஒரு நிலைமையில் தடுமாறினால், உண்மையிலேயே விடயங்கள் மோசமாகும்போது என்ன நடக்கும்?. ஆளும் வர்க்கத்தின் இத்தகைய பிரிவுகள் மேர்டோக்கை ஒரு சுமை எனக் கருதுகின்றன; குறைந்தப்பட்சம் மிக அதிகம் செல்வாக்கை கொண்டுவிட்ட ஒரு நபராகக் காண்கின்றன.

ஒரு நபர் ஆளும் உயரடுக்கின்மீது கொண்டுள்ள செல்வாக்கு பற்றிய தற்கால வரலாற்றில் மிகப் புகழ்பெற்ற அரசியல் ஊழலில் ஒரு வரலாற்று சமாந்திரம் உள்ளது. ரஷ்ய புதிராளியான கிரிகோரி ரஸ்புடின் சார் மற்றும் அவருடைய குடும்பத்தின்மீது கொண்டிருந்த செல்வாக்கு ரஷ்ய உயரடுக்கிற்குள் போட்டியில் இருந்து பிரிவுகளிடையே அரசியல் சூழ்ச்சிகளுக்கு வகை செய்தது. ஜேர்மனியில் பிறந்த சாரினா மீது வெளிநாட்டு முகவரின் செல்வாக்கை செலுத்தியவர் என்று குற்றம்சாட்டப்பட்ட அவர் டிசம்பர் 1916 ல் வலதுசாரிப் பிரபுக்களால் கொல்லப்பட்டார். ஒரு சில மாதங்களுக்குப்பின், பெப்ருவரி 1917 புரட்சியில் சார் பதவியில் இருந்து அகற்றப்பட்டு ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது. இது புரட்சிகர எழுச்சியை நசுக்க முயன்று தோல்வி அடைந்தது. புரட்சி, தொழிலாள வர்க்கம் போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் ரஷ்ய முதலாளித்துவத்தை அக்டோபர் 1917ல் அகற்றியதில் முடிந்தது.

ப்ரோகனுடைய கருத்துக்கள் அரசியல் ஆளும்தட்டினர் ஜனநாயகத்திற்கு ஒரு புதிய உதயத்தைக் கொண்டுவர போராடுகின்ற என்ற கருத்திலுள்ள பொய்யை அம்பலமாக்குகின்றன. உண்மையில் தொலைபேசி ஒற்றுக் கேட்டல் ஊழல்மிக்க குறுகிய சமூகத்தளத்தை முதலாளித்துவ ஆட்சி கொண்டிருப்பதையும், முழு பெருநிறுவன, அரசியல் உயரடுக்கின் குற்றத்தன்மையையும்தான் அம்பலப்படுத்தியுள்ளது. “பகிர்ந்துகொள்ளப்படும் தியாகம்”, “நாம் அனைவரும் இதில் ஒன்றாக உள்ளோம்என்ற தளத்தைக் கொண்டுள்ள சமூகக் குறைப்புக்களாக்கான கோரிக்கைகளை தொழிலாளர்கள் சீற்றத்துடன் நிராகரிப்பர் என்று முதலாளித்துவம் உணர்கிறது. ஏனெனில் அரசியல்வாதிகள் News Corp இனால் விற்கப்படுகின்றனர், வாங்கப்படுகின்றனர் என்ற முறையில்தான் காணப்படுகின்றனர். எனவே சில திருத்தங்கள் தேவைப்படுகிறது.

எனவே, ஆளும் வர்க்கம் ஒற்றுக் கேட்டல் ஊழலில் குறுக்கீடு செய்வது என்பது எல்லாவற்றிற்கும் மேலாக அரசாங்கத்தை தொழிலாள வர்க்கம்உண்மையிலேயே மோசமாக நடந்து கொள்ளும்என முடிவெடுத்தால் அதைத் தடுப்பதற்கு சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது. மேர்டோக் ஒற்றுக்கேட்டல் விவகாரம் ஒன்றும் முதலாளித்துவ ஜனநாயக மறுமலர்ச்சிக்கு ஒரு முன்னோடி அல்ல; ஆனால் வர்க்கப் போராட்டத்தின் மேலதிக வெடிப்புக்களை இன்னும் அதிகமாக்கும்.