World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Defend Sri Lankan free trade zone workers

இலங்கை சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களை பாதுகாத்திடு

By the Socialist Equality Party
1 June 2011

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி, கடந்த திங்கட் கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்கவில் உள்ள சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் மீது அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான பொலிஸ் பாய்ச்சலை கண்டனம் செய்கின்றது. பொலிசார் கண்ணீர் புகை, நீர் வீச்சு இயந்திரம், பொல்லுகளால் தொழிலாளர்களை தாக்கியதோடு துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர்.

தமது நிலைமைகளை காத்துக்கொள்வதற்கான போராட்டத்தில் பெரும் துணிச்சலைக் காட்டிய இந்த தொழிலாளர்களை பாதுகாக்க முன்வருமாறு நாடு பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. தமது சம்பளம் மற்றும் அடிப்படை உரிமைகளைக் காக்க தொழிலாளர்கள் முன்வைக்கும் எத்தகைய கோரிக்கைகளையும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பொறுத்துக்கொள்ள மாட்டார் என்ற எச்சரிக்கையே இந்தத் தாக்குதலாகும்.

குறிப்பாக சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள நன்மைகளுக்கு மோசமாக குழிபறிக்கவுள்ள அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக மே 23 முதல் தொடர்ச்சியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. திங்களன்று, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் மீது பொலிசார் வன்முறைத் தாக்குதலை நடத்தியதை அடுத்து முழு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தையும் சேர்ந்த 40,000 தொழிலாளர்களும் வெளியேறினர். இழிபுகழ்பெற்ற அதிரடிப் படை உட்பட 2,000 பொலிசார் மற்றும் நூற்றுக்கணக்கான சிப்பாய்களுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காயமடைந்தனர் அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளனர். (பார்க்க: “இலங்கை பொலிஸ் ஆர்ப்பாட்டம் செய்த சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது)

தொழிலாளர்களின் உறுதியான எதிர்ப்பால் தெளிவாக அதிர்ச்சியடைந்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர கூட்டமொன்றை கூட்டினார். கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர் அரசியல் கட்சிகளுடனும் உடன்பாட்டை எட்டவும் ஓய்வூதிய மசோதா இடை நிறுத்தப்படுகின்றது என அது அறிவித்தது.

தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க் கட்சிகளின் பக்கம் திரும்புவதானது சுதந்திர வர்த்தக வய தொழிலாளர்களை விற்றுத்தள்ளுவதற்கான தயாரிப்பே ஆகும் என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது. ஒரு தொகை சிக்கன நடவடிக்கைகளின் பாகமாக ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் கொடுக்கும் எண்ணிலடங்கா அழுத்தங்களை அர்சாங்கம் எதிர்கொள்கின்றது. சுதந்திர வர்த்தக வ ஆர்ப்பாட்டங்கள் ஏனைய பகுதி தொழிலாளர்களையும் நடவடிக்கையில் ஈடுபட ஊக்குவிக்கும் என அது பீதியடைந்துள்ளது.

திங்களன்று நடந்த மோதல்கள் பற்றி விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பொறுப்பானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது போர்க்குணம் கொண்ட தொழிலாளர்களை வேட்டையாடுவதற்காகவே அன்றி வேறொன்றுக்கும அல்ல. 

சர்வதேச நாணய நிதியத்தின் சந்தை-சார்பு சீர்திருத்தங்களை எதிர்க்காத மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக பிரச்சாரங்களை ஏற்பாடு செய்யாத தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க் கட்சிகளில் நம்பிக்கை வைக்கக் கூடாது.

சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவைகள் தொழிற்சங்கம் (FTZGSTU) முதலில் மே 23 ஆர்ப்பாட்டமொன்றை நடத்த அழைப்பு விடுத்திருந்தாலும் பின்னர் அதை இரத்துச் செய்தது. ஆயினும், தொழிலாளர்கள் வெளியேறிய போது, தொழிற்சங்கத் தலைவர் அன்டனி மாக்கஸ், உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வருந்தினார். கட்டுநாயக்கவில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் என அவர் பியகமவில் உள்ள சுதந்திர வர்த்தக வ தொழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த அனைத்து நிறுவன தொழிலாளர் சங்கம் (ஐ.சி.இ.யூ), இப்போது இந்த இயக்கத்தை காட்டிக்கொடுப்பதன் பேரில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தலைமை வகிப்பது போல் பாசாங்கு செய்கின்றது.

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நெருங்கிய காலத்தில், 5,000 ரூபா (45.50 அமெ. டொலர்) சம்பள அதிகரிப்புக்காக ஐ.சி.இ.யூ. முன்னெடுத்த பிரச்சாரத்தை தொழிலாளர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். தேர்தலின் பின்னர், கோரிக்கையை கைவிட்ட ஜே.வி.பீ. மற்றும் ஐ.சி.இ.யூ. 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு செய்வதாக இராஜபக்ஷ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரின. அரசாங்கம் வாக்குறுதியை கைவிட்ட போது, ஐ.சி.இ.யூ. உட்பட தொழிற்சங்கங்கள் எதனையும் செய்யவில்லை.

செவ்வாய் கிழமை அவசரமாக பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை கூட்டிய ஜே.வி.பீ. பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க, ஓய்வூதியம் இடை நிறுத்தப்பட்டமை தொழிலாளர்களுக்கு ஒரு வெற்றி என பிரகடனம் செய்ததோடு அந்தச் சட்டம் அகற்றப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். அத்தகைய கருத்துக்கள் போலி நம்பிக்கைகளை உருவாக்குவதற்கே ஆகும்.

வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் இதே போன்ற சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்திக்கொண்டிருக்கும் கிரேக்கம், அயர்லாந்து மற்றும் ஸ்பெயினில் உள்ள தனது சமதரப்பினரைப் போலவே, இலங்கை அரசாங்கத்தாலும் அதற்கும் மேல் பின் வாங்க முடியாது என்பதை ஜே.வி.பி.யும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் நன்கு அறிந்துள்ளன.

பொருளாதார மீட்சி பற்றிய இராஜபக்ஷவின் சகல மிகைப்படுத்தல்களும் ஒரு புறம் இருக்க, அரசாங்கம் கடும் கடன் சுமையில் இருப்பதோடு எல்லா கட்டணங்களையும் தொழிலாளர்கள் மீது சுமத்துகிறது. விலைகள் அதிகரித்துள்ள போதிலும், சம்பள அதிகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பொதுக் கல்வி, சுகாதார பராமரிப்பு மற்றும் நலன்புரி சேவைகளுக்கான செலவுகள் வெட்டிக் குறைக்கப்படுவதோடு தனியார்மயமாக்கம் அமுல்படுத்தப்படுகிறது.

ஓய்வூதிய சட்டத்தில் சோடனை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பிரதியுபகாரமாக, ஜே.வி.பீ.யும் யூ.என்.பீ.யும் திட்டத்தின் மீதான எதிர்ப்பை தணிப்பதற்காக இப்போது தமது சேவையை வழங்குகின்றன. பிரேரிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளின் நோக்கம் இதுவே.

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களதும் எதிர்க் கட்சிகளதும் வெற்று தோரணைகளை நிராகரிப்பதோடு இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏனைய தொழிலாள வர்க்கப் பகுதியினரின் ஆதரவைப் பெற முயற்சிக்க வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களைப் போலவே சுதந்திர வர்த்தக வ தொழிலாளர்களும் அதே படகில் இருக்கின்றனர். பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் வறிய மட்ட சம்பளத்தை பேணுவதற்காக முதலாளிமார் மற்றும் அரசாங்கத்துடன் கூட்டுச் சதி செய்துகொண்டிருக்கின்றன. பொருத்தமான சம்பளத்தை கோரியமைக்காக பல்கலைக்கழக ஆசிரியர்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். கொழும்பில் பத்தாயிரக்கணக்கான குடிசை வாசிகள், கட்டுமான அபிவிருத்தி கம்பனிகளுக்கு வசதியளிப்பதற்காக பலாத்காரமாக வெளியேற்றப்படுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது அரசாங்கத்தின் இனவாத யுத்தத்துக்காக தொழிலாளர்கள் அர்ப்பணிக்க வேண்டும் என இராஜபக்ஷ வலியுறுத்தினார். இப்போது அவர் கூட்டுத்தாபனங்களின் இலாபத்தை உயர்த்தவும் நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் மேலும் சுமைகளை ஏற்றுக்கொள்ளுமாறு தொழிலாள வர்க்கத்திடம் கோருகிறார். உழைக்கும் மக்களுக்கு எதிரான தனது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, அவர் தமிழ் பொது மக்களுக்கு எதிராக பயன்படுத்திய அதே பொலிஸ் அரச வழிமுறைகளையே தங்கியிருக்கின்றார்.

அதே சமயம், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்துவதற்காக அரசாங்கம் அதன் முடிவில்லா வெற்றி பிரச்சாரத்தின் ஊடாக தமிழர்-விரோத பேரினவாதத்தை முன்னிலைப்படுத்துகிறது. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே, அவர்களால் தமது வர்க்க நலன்களையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.

ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கமும், கூட்டுத்தாபன தட்டுக்களதும் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தினதும் முகவாண்மையான இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்துக்கு முகங்கொடுக்கின்றது.

சுதந்திர வர்த்தக வ தொழிலாளர்களுக்கு அவர்களுக்கே சொந்தமான சுயாதீன அமைப்பு ஒன்று, அதாவது அவர்களே தேர்வு செய்த பிரதிநிதிகளின் தலைமையிலான நடவடிக்கை குழுக்கள் தேவை. மற்றும் அவர்கள் ஏனைய தொழிலாளர் தட்டினரின் பக்கம் திரும்ப வேண்டும். இவர்களில் பங்களாதேஷ், கம்போடியா மற்றும் ஏனைய நாடுகளிலும் உள்ள சுதந்திர வர்த்தக வ தொழிலாளர்களும் அடங்குவர். அவர்களும் பொருத்தமான சம்பள உயர்வுக்காக வேலை நிறுத்தம் செய்தமைக்காக பொலிஸ் வன்முறையை எதிர்கொண்டவர்களாவர். பூகோள கூட்டுத்தாபனங்கள், சகலரதும் சம்பளம் மற்றும் நிலைமைகளை வெட்டிக் குறைப்பதற்காக ஒரு நாட்டில் உள்ள தொழிலாளர்களை ஏனைய நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராக இருத்துகின்றன.

சகல இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளை காக்கவும் மற்றும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யவும் கோருவதற்கும் முன்வர வேண்டும். ஓய்வூதிய திட்டத்துக்கும் ஏனைய சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக ஒரு பொதுப் போராட்டம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதில் சுதந்திர வர்த்தக வ தொழிலாளர்களுக்கு முழு ஆதரவும் கொடுப்பதாக சோசலிச சமத்துவக் கட்சி வாக்குறுதியளிக்கின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு தெளிவான அரசியல் முன்நோக்கும் வேலைத் திட்டமும் அவசியமாகும். பொருத்தமான சம்பளமும் தக்க ஓய்வூதியத் திட்டமும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளாகும். ஆனால் முதலாளித்துவத்தின் கீழ், உழைக்கும் மக்களின் மிகவும் இன்றியமையாத தேவைகள், சில செல்வந்தர்களின் இலாபத் தேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தை சோசலிச கொள்கையின் அடிப்படையில் மறு ஒழுங்கு செய்வதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் தமது வாழ்க்கை நிலைமைகளை பாதுகாத்து மேம்படுத்த முடியும். இதற்கு சர்வதேச ரீதியில் சோசலிசத்துக்காக முன்னெடுக்கும் போராட்டத்தின் பாகமாக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காக போராடுவது அவசியமாகும். எமது வேலைத் திட்டத்தை கற்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து சோசலிசத்துக்காக போராடுவதற்கு தேவையான வெகுஜனக் கட்சியாக அதை கட்டியெழுப்புமாறும் சோசலிச சமத்துவக் கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது.