World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Portugal and the collapse of European social democracy

போர்த்துக்கலும், ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தின் பொறிவும்

Chris Marsden
10 June 2011
Back to screen version

ஜூன் 5 பொது தேர்தலில் போர்த்துக்கலின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் தோல்வியானது, வலதுசாரியின் கரங்களில் ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகளின் தோல்வியின் இந்த சமீபத்திய உதாரணம் பற்றிய பல கட்டுரைகளை வெளிக்கொண்டுவந்துள்ளது.

இந்த அரசியல் தோல்வியின் அளவை The Economist இதழ் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஜேர்மன், பிரிட்டன், இத்தாலி உட்பட தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 27 நாடுகளில் ஏறத்தாழ அரைவாசி நாடுகள் இடதுசாரி அரசாங்கங்களால் ஆளப்பட்டன. இன்று ஸ்பெயின், கிரீஸ், ஆஸ்திரியா, ஸ்லோவேனியா மற்றும் சைப்ரஸ் ஆகிய வெறும் ஐந்து நாடுகளில் தான் இடதுகள் ஆட்சியில் உள்ளன.”

கடந்த ஆண்டு பழமைவாத-தாராளவாத ஜனநாயக கூட்டணியால் தோற்கடிக்கப்பட்ட பிரிட்டனின் தொழிற்கட்சி (Labour Party) உட்பட சமூக ஜனநாயகவாதிகளுக்கான ஆதரவு பொறிந்துள்ளமை, உலகளாவிய 2008 பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப விளைவாக முன்வைக்கப்படுகிறது. “இடதை" அல்லது "மத்திய-இடதை" நெருக்கடி காலக்கட்டங்களில்  பொருளாதாரரீதியாக திறமையற்றவர்கள் என்பதே உத்தியோகபூர்வ உச்சாடனமாக உள்ளது. அவை சீர்கெட்ட செலவினர்களாகவும், தேவையற்ற கடன்களுடன் வரிசெலுத்துவோர் மீது  சுமையேற்றுவோராகவும் இருந்துள்ளனர், மற்றும் இவற்றை வெட்டுக்கள், சிக்கன நடவடிக்கைகள் போன்ற தேவைப்படும் கசப்பான மருந்துகளைக் கொண்டு வலதுசாரியால் தான் நிர்வகிக்க முடியும் என்றே கருதப்படுகின்றது.

Guardian இதழின் "இப்போது மீண்டும் ஏன் வலதுகள் வெற்றி பெற்றனர்"(Why the right won yet again”) எனும் கட்டுரை சமூக ஜனநாயக கட்சியின் (PSD) வெற்றிபெற்ற [பழமைவாத] தலைவர் பெட்ரோ பாசோஸ் கோல்ஹோ குறித்து குறிப்பிடுகிறது. அதாவது போர்த்துக்கலின் ஆழ்ந்த நெருக்கடியை அறிந்துகொள்வதிலும், அதன் விளைவான ஒரு சிக்கன நடவடிக்கையை நடைமுறைப்படுத்த [சோசலிஸ்ட் கட்சி தலைவர் ஜோஸ்] சோக்ரட்டீஸிற்கு இருந்த தயக்கமுமே கோல்ஹோவிற்கு உதவியிருந்தது.”

இத்தகைய ஊடக பிரச்சாரத்தின் நோக்கம், ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தின் பொறிவின் உண்மையான காரணங்களை ஆராய்வதல்ல, மாறாக வாக்காளர்கள் வலிமிகுந்த ஆனால் சரியான தீர்மானத்தை அதாவது மூர்க்கத்தனமான சிக்கன நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்பதை வலியுறுத்துவதே அவற்றின் நோக்கமாகும்.

போர்த்துக்கலின் உண்மையான படிப்பினைகள் முன்னிறுத்தப்படும் இப்பிரச்சாரங்களுக்கு முற்றிலும் எதிராக உள்ளன.

எதார்த்தத்தில், சமூக ஜனநாயக கட்சிகளுக்கு இருந்த ஆதரவின் பொறிவானது, கடந்தகால சீர்திருத்தங்களோடு அவர்களுக்கு இருந்த அனைத்து தொடர்புகளையும் அவர்கள் கைவிட்டதாலும், பட்டவர்த்தனமாக அக்கட்சிகள் முதலாளித்துவத்தின் கட்சிகளாக மாறியதாலும் பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டிருந்தது. ஊகவாணிப எழுச்சியின் முடிவும், 2008 பொறிவும் எதைக் எடுத்துக்காட்டியதென்றால், இந்த அரசியல் எந்தளவிற்கு அழுகிபோயுள்ளது என்பதையும் மற்றும் உழைக்கும் மக்களுக்கு அதன் தாக்கங்களையுமேயாகும்.  

பிரிட்டனின் தொழிற்கட்சிக்கும், பெரும்பாலும் இதேபோன்று போர்ச்சுகலின் மிகப்பெரிய அண்டைநாடான ஸ்பெயினிலும் சோசலிஸ்ட் கட்சியின் தோல்வியானது மிக விரைவிலேயே நடக்கக்கூடும். இத்தோல்வி ஒரு சர்வரோக நிவாரணியாக முன்னெடுக்கப்பட்டு இக்கட்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட பெரும் சிக்கன நடவடிக்கைகளுக்கான விரோதத்தால் தூண்டிவிடப்பட்ட, நன்கு-முதிர்வடைந்த அந்நியப்படுதலும் இணைந்த அரித்துச்செல்லும் கலவையால் அமைந்தது. சோக்ரட்டீஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சி இவர்கள் தான் 78 பில்லியன் யூரோ கடனுக்கு பேரம்பேசி, அதற்கு கைமாறாக ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியால் கோரப்பட்ட மூர்க்கமான வெட்டுகளுக்கு ஒப்புக்கொண்டனர். சாதனையளவு வேலைவாய்ப்பின்மையை தோற்றுவித்திருக்கும் மற்றும் மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் தள்ளியிருக்கும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பான நிதியியல் ஊகவணிகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்காலத்தை அடமானம் வைத்தவர்களும் இவர்கள் தான்.

தொழிலாள வர்க்கம் மீண்டும் மீண்டும் எதிர்த்து போராட முயன்றுள்ளது. நூறு ஆயிரக்கணக்கானவர்கள் பங்கெடுத்த பரந்த வேலைநிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்துள்ளன. இவை துனிசியா, எகிப்து மற்றும் மத்தியகிழக்கு முழுவதிலும் புரட்சிகர போராட்டங்களால் தூண்டப்பட்டு ஒரேகாலத்தில் நிகழ்ந்தன.

சோசலிஸ்ட் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான சமீபத்திய சிக்கன நடவடிக்கைகளுக்கான ஆதரவை சமூக ஜனநாயக கட்சி திரும்பபெற்றதன் மூலம் தேர்தல்கள் தலைகீழாக ஆக்கப்பட்டன. தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் அபிவிருத்தியை கருச்சிதைவு செய்வதே இந்த அரசியல் சூழ்ச்சியின் திட்டமிட்ட நோக்கமாகும்.

முக்கூட்டினரான ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி வெட்டுக்களை நிறைவேற்றுவது என்ற போட்டாபோட்டிக்கு இடையில் தேர்தல் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. ஒரு 9.5 சதவீத உயர்வுடன், சுமார் அரைமில்லியன் சனங்கள் (இவர்களில் பெரும்பாலானவர்கள் பழமைவாத சமூக அடுக்குளைச் சேர்ந்தவர்கள்) சோலிஸ்ட் கட்சியின் கூட்டணியிலிருந்து சமூக ஜனநாயகக் கட்சி விலகியதால் சமாதானமடைந்தனர். ஆனால் பரந்த மற்றும் பிரதிநிதித்துவம்மிக்க அந்த அரசியலமைப்பில் முன்னில்லாதளவிற்கு 41.1 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதோடு நான்கு சதவீத செல்லாத மற்றும் வெற்று ஓட்டுக்களும் பதிவாயின.

இவற்றில் பெரும்பான்மை தொழிலாள வர்க்க வாக்குகளாகும். பாரிய வேலைவாய்ப்பின்மை, பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக அவலம் போன்ற தங்களின் கவலைகளை வெளிப்படுத்த அவர்கள் வேறெந்த பிரதியீட்டையும் காணவில்லை. சமூக ஜனநாயக கட்சியும் சோசலிஸ்ட் கட்சியும் சேர்ந்து கிடைத்த வாக்குகளைவிட இவை அதிக எண்ணிக்கையில் உள்ளன.

இந்த காட்சிதான் ஐரோப்பா முழுவதிலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ திரும்பதிரும்ப முன்வருகின்றது. பெருந்திரளான தொழிலாளர்கள், மிகச் சரியாகவே, முதலாளித்துவத்தின் பாரம்பரிய வலதுசாரி கட்சிகளிலிருந்து சாரத்தில் எந்த வேறுபாட்டையும் காணவில்லை என்பதால் சமூக ஜனநாயக கட்சிகளுடனான அவர்களின் கடந்தகால அரசியல் தொடர்பை புறக்கணித்துள்ளனர். ஆளும் வர்க்கத்திற்கு இது நன்றாக தெரியும்.

சோசலிஸ்ட் கட்சியால் ஒப்புக்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கைகளையும் "தாண்டி செல்ல" கோல்ஹோ உறுதியளித்துள்ளதால் சமூக ஜனநாயக கட்சியின் வெற்றியால் அது மகிழ்ச்சி அடைகிறது என்பதுடன், "சோசலிஸ்ட் கட்சியினரால் போதியளவிற்கு வெகுதூரம் செல்ல முடியாது என்பதால்" அவர்களுக்கு எதிராக வாக்களித்தது.

போர்த்துக்கீசிய அரசாங்க கடனை நிர்வகிக்க உதவும் Optimize Investment Partners இன் தலைமை நிர்வாக அதிகாரி டியோகோ டெய்ஜெய்ரியா தேர்தலுக்கு சிறிது முன்னர் குறிப்பிடுகையில், “சோசலிஸ்ட் கட்சி அல்லது சமூக ஜனநாயக கட்சியை முன்னிறுத்துவதல்லாமல் சந்தைக்கு வேறொரு நிலைப்பாடு கிடையாது. ஒரேயொரு முன்னுரிமை ஒரு தெளிவான பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதே என்றார்.

சோசலிஸ்ட் கட்சி வென்றிருந்தால், சமூக ஜனநாயகக் கட்சியின் இடத்திற்கு மாறாக தற்போது தொழிலாள வர்க்கம் வெட்டுக்களை திணிக்கும் சோசலிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு போராட்டத்தை முகங்கொடுத்திருக்கும். கிரீஸில் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (IMF-ECB-EU) ஆணைகளை நடைமுறைப்படுத்துவதில் PASOK அரசாங்கமும்; பழமைவாத Fine Gael உடன் கூட்டணி வைத்துள்ள தொழிற்கட்சி இருக்கும் அயர்லாந்திலும், ஸ்பெயினில் அடுத்துவொரு "மீட்பு பொதிக்கு" முறையீடு செய்யவிருக்கும் PIIGS ஆகியவை ஏற்கனவே இதுபோன்ற தீவிர எதிர்ப்பு போராட்டத்தை முகங்கொடுத்து வருகின்றன.

போர்த்துக்கல் தொழிலாள வர்க்கமும் ஸ்ராலினிச மற்றும் போலி-இடது கட்சிகளின் பக்கத்திலிருந்து சமூக ஜனநாயக கட்சிகளின் சிதைவுக்கு ஒரு பிரதியீட்டை காணமுடியாத நிலையை எதிர்கொள்கின்றனர்.  2009 தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சியும் இடது கூட்டும் (Left Bloc)  18 சதவீதத்திற்கு அண்ணளவான வாக்குகளை வென்றன. அத்துடன் குறிப்பாக அரசுத்துறை தொழிலாளர்கள் மத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவை பெற்றுக் கொண்டனர்.

சமீபத்திய தேர்தலில், முற்றிலுமாக இடதுகூட்டின் ஆதரவு அரைவாசியானதால் அவர்களின் வாக்குகள் 13 சதவீதத்திற்கும் கீழாக வீழ்ச்சி அடைந்தது. இது சோசலிஸ்ட் கட்சிக்கும், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் அவர்கள் அளித்த பலமான ஆதரவிற்கு திருப்பிக்கிடைத்த அடியாகும். கடந்த ஆண்டு, இடது கூட்டின் ஒரு முக்கிய உட்கூறான பப்லோவாத, புரட்சிகர சோசலிஸ்ட் அரசியல் அமைப்பு (Revolutionary Socialist Political Association) பின்வருமாறு அறிவித்தது, “நம்முடைய போராட்டக்களம் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட மிகவும் சுருங்கியுள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் இடது கூட்டு அரசாங்கத்துடன் மோதுவதற்கு ஏற்ற அதன் சொந்த காலத்தை தானே தீர்மானிக்கும்.”

அந்த காலம் ஒருபோதும் வரவில்லை. தொழிலாள வர்க்கம் சோசலிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் கட்டுப்பாட்டின்கீழ் விடப்பட்டதுடன், அரசியல் முனைவுகள் முதலாளித்துவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

போர்ச்சுக்கலிலும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம், சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் ஒருகாலத்தில் "தொழிலாளர் இயக்கம்" என்று மதிக்கப்பட்ட தொழிற்சங்க அதிகாரத்தின் சீரழிந்த எச்சசொச்சங்களோடு ஒரு தீர்க்கமான அரசியல் மற்றும் அமைப்புரீதியிலான உடைவை எடுக்க வேண்டிய தேவையை முகங்கொடுத்துள்ளது. உண்மையான சோசலிச மற்றும் சர்வதேச அடித்தளங்களின் அடிப்படையில் ஒரு புதிய தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

பெரிய நிறுவனங்களினதும் மற்றும் வங்கிகளின் கடுந்தாக்குதலை தோற்கடிக்க வேண்டுமானால், தமது பழமைவாத எதிராளிகளைப்போலவே நிதியியல் மேற்தட்டிற்கு நிச்சயமாக அதேயளவிற்கு சேவை செய்கின்ற கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஓர் கிளர்ச்சி அவசியமாகும். சோசலிசத்திற்கான ஒரு கண்டந்தழுவிய புரட்சிகர போராட்டத்திற்கு, ஒரு புதிய தலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும். இதற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும், உலக சோசலிச வலைத் தளமும் தம்மை அர்ப்பணித்துள்ளன.