World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

World economy slides deeper into slump

உலக பொருளாதாரம் ஆழ்ந்த வீழ்ச்சியுள் சரிகிறது
Barry Grey
18 June 2011

Back to screen version

செப்டம்பர் 2008 நிதியியல் நெருக்கடியின் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னரும், அமெரிக்க மந்தநிலை உத்தியோகபூர்வமாக முடிந்த இரண்டு ஆண்டுகள் பின்னரும் கூட, 1930களுக்குப் பின்னர் உலக பொருளாதாரத்தை ஆழ்ந்த வீழ்ச்சிக்குள் மூழ்கடித்ததன் அடித்தளத்திலுள்ள எந்த பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அதற்கு எதிர்மாறாக, உயிர்ப்பற்ற பொருளாதார மீட்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது; உலகின் பெரும்பான்மை இடங்களில் வளர்ச்சி விகிதங்கள் குறைந்து வருகின்றன; நிதியியல் அமைப்புமுறை மீண்டுமொருமுறை படுபாதாளத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது.     

அமெரிக்க வேலைவாய்ப்பின்மையில் ஏற்பட்டிருக்கும் புதிய அதிகரிப்பும், அத்தோடு வீட்டு விலைகள் மற்றும் விற்பனைகளில் இன்னும் கூடுதலாக ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும், உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் சுருக்கமும், ஓர் உலகளாவிய போக்கின் கூர்மையான வெளிப்பாடாகும். சமீபத்தில் ஜூன் 7இல் உலக வங்கியால் வெளியிடப்பட்ட உலக பொருளாதார வாய்ப்புகள் (Global Economic Prospects) அறிக்கை, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் துணை-சஹாரா ஆபிரிக்கா தவிர உலகின் ஏனைய ஒவ்வொரு பிராந்தியத்திலும் பொருளாதார வளர்ச்சி குறையுமென்று கணிக்கிறது. உலக பொருளாதாரம் இந்த ஆண்டு வெறுமனே 3.2 சதவீதம் மட்டுமே விரிவடையும், அதாவது 2010இல் மிகக் குறைந்திருந்த 3.8 சதவீதத்தையும் விட அதிகப்படியாக குறைந்திருக்கும் என்று அவ்வங்கி மதிப்பிடுகிறது.     

அமெரிக்க பொருளாதாரம் இவ்வாண்டு ஏமாற்றமளிக்கும் விதத்தில் 2.6 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, 2013 வரையில் குறைந்தபட்சம் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உத்தியோகபூர்வ அமெரிக்க வேலைவாய்ப்பின்மை விகிதம் இரட்டை-இலக்கத்திற்கு அருகில் வர அது குறைந்தபட்சம் 3 சதவீத நீடித்த அதிகரிப்பு விகிதத்தை எடுக்கிறது.   

இன்னும் அதிகமாக அச்சுறுத்தும் வகையில், சீனா, இந்தியா, பிரேசில், இன்னும் இதர அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் வளர்ச்சிவிகிதமும் 2013வாக்கில் 6.3 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடையும் என்று அவ்வங்கி நம்புகிறது. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் நிதியியல் நிலைகுலைவு ஏற்பட்டதிலிருந்து, உலகளாவிய வளர்ச்சிக்கு இந்த நாடுகளே பெரிதும் காரணமாக இருக்கின்றன.

இத்தகைய கொடூரமான முன்வரைவுகள், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா மற்றும் இந்தியாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை கொண்டிருக்கும் மே மாதத்திலிருந்து புள்ளிவிபரங்களைக் கணக்கில் எடுக்கவில்லை.   

சமீபத்திய நாட்கள், “இரட்டை இறக்க மந்தநிலை" (“Double dip recession”) என்றழைக்கப்படும் எதிர்மறை வளர்ச்சிக்கு திரும்பும் அபாயம் குறித்து பூர்ஷ்வா பொருளியல்வாதிகளிடமிருந்து புதிய எச்சரிக்கைகளை கண்டுள்ளது. 2010 இறுதிவரையில் ஒபாமாவின் தேசியப் பொருளாதார ஆணையத்தின் இயக்குனராக இருந்த லோரன்ஸ் சம்மர்ஸ், Washington Post மற்றும் Financial Timesஇல் ஜூன் 13இல் எழுதிய ஒரு தலையங்கத்தில், அமெரிக்கா "தற்போது ஒரு பொருளாதார வீழ்ச்சி தசாப்தத்தின் பாதி வழியில் உள்ளது" என்று எச்சரித்தார். 2006 மற்றும் 2011க்கு இடையில், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி ஜப்பானின் குமிழி வெடிப்பு காலக்கட்டத்தில் அங்கே ஏற்பட்டதைப் போல, ஏறத்தாழ ஆண்டுக்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.   

அமெரிக்காவில் நிதியியல் பற்றாக்குறையின் ஒரு "பெரும்புயல்" வாரமாகவும், சீனாவில் மந்தநிலையும், ஐரோப்பிய கடன் திருப்பிசெலுத்துமதியின்மையும், ஜப்பானில் தேக்கநிலையும் ஏற்படுமென்று நியூயோர்க் பல்கலைக்கழக பேராசிரியர் நௌரியல் ரூபினி எச்சரித்தார். 2013க்கு பின்னர், அளவுக்கதிகமான நிலையான முதலீடு மற்றும் வங்கிகளின் தோல்வியால், சீனா "கடுமையான சரிவை" முகங்கொடுக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

நிதியியல் ஓட்டங்களுக்கும் பரிவர்த்தனைகளுக்கும் இடையிலுள்ள எல்லைக்கோடுகளும், ஒட்டுமொத்த குற்றதனமும் பெருமளவிற்கு காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருக்கும் ஊகவியாபார விரயத்தால் உலகப் பொருளாதார நெருக்கடி தலைகீழாக வீழ்ந்துள்ளது. இதற்கிடையில் எடுத்தஎடுப்பில் இருந்தே அரசாங்க கொள்கையின் ஒருமுனைப்பட்ட கவனம் நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வசெழிப்பைப் பாதுகாப்பதாக இருந்து வருகின்றன. இதுவரையில், அரசு கருவூலங்கள் வங்கியாளர்களின் சூதாட்ட கடன்களை மூடிமறைக்கவே கொள்ளையடிக்கப்பட்டன.   

பல ட்ரில்லியன் டாலர் வங்கி பிணையெடுப்புகள் மனித வரலாற்றில் செல்வத்தை அடிமட்டத்திலிருந்து மேற்மட்டத்திற்கு பாரியளவில் பரிமாற்றமடைவதை ஆரம்பித்துவைத்தன. இது சமூக பதட்டங்களைப் பாரியளவில் கூர்மையாக்கியதோடு, புரட்சிகர எழுச்சிகளின் ஒரு புதிய காலக்கட்டத்திற்கும் வழிகோலியது.   

அந்த ஆரம்ப தூண்டுதல்களை ஏற்கனவே இந்த ஆண்டில் துனிசியா மற்றும் எகிப்தின் புரட்சிகர எழுச்சிகளிலும், கிரீஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் தீவிர எதிர்ப்புகளிலும், விஸ்கான்சினில் தொழிலாளர்களின் பரந்த போராட்டங்களிலும் காண முடிந்தது. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு குழிபறிப்பதிலும், மட்டுப்படுத்துவதிலும் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-சோசலிச "இடதில்" உள்ள அவற்றின் கூட்டாளிகளும் வகித்த நாசகரமான பாத்திரத்தினால் தான், முதலாளித்துவத்தால் பொதுக்கருவூலத்தைக் கொள்ளையடிக்க முடிந்தது.   

பிணையெடுப்புகளின் விளைவாக அரசின் கடன்களைத் திருப்பிசெலுத்த முடியாமை அதிகரித்திருப்பதானது, வங்கிகளின் நீண்டகால கடன்தீர்க்கும் திறனை இல்லாதொழித்ததை மட்டுமே இன்னும் அதிகமாக அடிக்கோடிடுகிறது. அதேவேளையில் இந்த வங்கிகள் மதிப்புகள் எதுவுமே அற்ற அரசின் பாதுகாப்பு பத்திரங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை தேக்கி வைத்திருக்கின்றன.

முதலாளித்துவத்தினதும் மற்றும் எந்த நிறத்தை கொண்ட அதன் அரசாங்கங்களின், அது பழமைவாத கட்சியாக, தாராளவாத அல்லது "சோசலிஸ்ட்" கட்சியாக இருந்தாலும் சரி அவற்றின், உலகளாவிய விடையிறுப்பு, நெருக்கடியின் மொத்த விலையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதாகவே உள்ளது. இதன் நோக்கம் சமூக எதிர்புரட்சி என்பதற்கு குறைந்து, அதாவது கடந்த நூற்றாண்டில் வென்றெடுக்கப்பட்ட அனைத்து சமூக வெற்றிகளையும் துடைத்துவிட்டு, ஏழ்மை மற்றும் விரக்தி நிறைந்த ஓர் நிலைக்கு தொழிலாள வர்க்கத்தை தாழச்செய்வதை தவிர வேறொன்றுமில்லை. 

ஆனால் நிதியியல் நெருக்கடியைத் தீர்ப்பதிலிருந்து வெகுதூரத்திற்கு விலகி நின்று, அவை அனைத்தின் முயற்சிகளும் அதை ஆழப்படுத்தவே செய்துள்ளன. மூர்க்கத்தனமான சிக்கன முறைமைகளோடு பிணைந்திருந்த 110 பில்லியன் யூரோ கடனைப் பெற்ற ஓர் ஆண்டிற்குப் பின்னர், கிரீஸ் ஓர் ஆழ்ந்த பின்னடைவுள் மூழ்கியது. அது அரசு வருவாய்களுக்கு குழிபறித்ததுடன், கடன் நெருக்கடியையும் தீவிரப்படுத்தியது. தற்போது, ஒரு புதிய கடனுக்கு பிரதி உபகாரமாக, சமூக ஜனநாயக அரசாங்கம் இன்னும் ஆழமான வெட்டுக்களையும், அத்துடன் அரசு சொத்துக்களின் மலிந்த-விற்பனையையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 

இந்த கேடான சுழற்சி, அயர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் இதர பெரும் கடன்பட்ட நாடுகளிலும் சுழலத்தொடங்குவதோடு, தவிர்க்கமுடியாமல் கடன்களைத் திருப்பிசெலுத்த முடியாமைக்கும், ஒரு புதிய நிதியியல் நெருக்கடிக்கும் அரசை இட்டுச் செல்கிறது.

நாசகரமான வீட்டு அடமானக்கடன் மற்றும் ஏனைய மோசடி சொத்துக்களின் அடிப்படையில் எழுந்த பாரிய பொன்சி திட்டத்தோடு  (Ponzi scheme) தொடர்புபட்ட ஒரேயொரு முன்னணி வங்கியாளர் கூட தண்டிக்கப்படவில்லை. பெரிய வங்கிகள் உடைக்கப்படவோ அல்லது தேசியமயமாக்கப்படவோ இல்லை மட்டுமல்ல, அவை அவற்றின் ஏகபோக அதிகாரத்தை அதிகரித்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் அவற்றின் இரக்கமற்ற ஊகவணிகத்தையும், சாதனையளவு இலாபங்களை எடுப்பதையும் தடுக்கும் வகையில், எவ்வித தீவிர சீர்திருத்தங்களும் கொண்டு வரப்படவில்லை. ஆனால் அதேவேளை அவற்றின் நிர்வாகிகளுக்கு முன்னில்லாத அளவிற்கு உயரிய கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.  

நிதியியல் நிலைகுலைவில் ஒரு மையப் பாத்திரம் வகித்த நெறிமுறையற்ற பங்குகளின் சந்தை, கட்டுப்பாடின்றி தொடர்கின்றன. நாடுகளின் கடன் செலுத்தமுடியாமைக்கான சாத்தியம்பற்றி பந்தயம்கட்டுவதன் மூலமாக  கடன் செலுத்துமதியின்மை காப்புறுதிகள் (Credit default swaps), ஓர் பெருக்கமடையும் சந்தையிலிருந்து வெளியில் தெரியாத மில்லியன் கணக்கான இலாபங்கள் குவிக்கப்படுகின்றன.  

கிரேக்க கடனின் எந்தவித மறுகட்டமைப்பிற்கு எதிராகவும் வாதிட்டு, பேங்க் ஆப் இத்தாலியின் முன்னாள் ஆளுநர் மரியோ திராஹி (இவர் ஐரோப்பிய மத்திய வங்கியின் அடுத்த தலைவராக பொறுப்பேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது) ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் கூறுகையில், “ கடன் செலுத்துமதியின்மை காப்புறுதிகளின் சொந்தக்காரர்கள் யார்? ஒரு நாட்டின் கடன் செலுத்துமதியின்மைக்கு எதிராக ஏனையவர்களை காப்புறுதி செய்துவைத்திருப்பவர்கள் யார்? நம்மிடம் சங்கிலி போல் ஒரு தொடர்ச்சியான பரிமாற்றம் இருக்கக்கூடும்,” என்றார்.  

தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும், மேலடுக்கில் செல்வவளம் இன்னும்இன்னும் திரள்வதும் அமெரிக்க தொழிலாளர் துறையால் வெளியிடப்பட்ட ஓர் அதிர்ச்சியூட்டும் விளக்கப்படத்தில் தொகுக்கப்பட்டிருந்தது. அது தொழிலாளர்களுக்கு போகும் அமெரிக்க தேசிய வருவாயின் பங்கு முன்னில்லாத அளவிற்கு குறைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

அந்த வீழ்ச்சி (பொதுவான போக்கு 1980களில் இருந்தே தொடங்குகிறது) படிப்படியாக 2000இல் அதிகப்பட்டிருப்பதை அந்த வரைபடம் எடுத்துக்காட்டுகிறது. மிகவும் குறிப்பிடத்தக்க உண்மை என்னவென்றால், தேசிய வருவாயில் தொழிலாளர்களின் பங்கு, உத்தியோகபூர்வ பின்னடைவின் போது வீழ்ச்சி அடைந்ததையும் விட ஜூன் 2009இல் தொடங்கிய "மீட்பு" என்று கருதப்பட்ட காலத்தின் போது இன்னும் வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

இது எதை எடுத்துக்காட்டுகிறது? இது தொழிலாள வர்க்க நிலைமைகளில் ஒரு வரலாற்றுரீதியான மற்றும் நிரந்தரமான நிலைமாற்றத்தை நடத்த அமெரிக்க முதலாளித்துவமும், ஒபாமா நிர்வாகமும் திட்டமிட்டு, வேண்டுமென்றே இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளேயே இந்த நெருக்கடிக்கான ஒரு நம்பகமான தீர்வு சாத்தியம் என்ற அரசாங்கங்களின், அரசியல்வாதிகளின், ஊடக மேதாவிகளின், தொழில்சங்க நிர்வாகிகளின் மற்றும் கல்வியாளர்களின் அனைத்து வாதங்களையும் கடந்த 33 மாத சம்பவங்கள் ஒதுக்கித் தள்ளியுள்ளது. தொடக்கத்தில் இருந்தே சோசலிச சமத்துவ கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும் விளங்கப்படுத்தியதைப் போல, இந்த தற்போதைய நெருக்கடி ஏதோ சந்தர்ப்பசூழலால் ஏற்பட்டதல்ல. அதற்கு மாறாக இது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு அமைப்புரீதியான நெருக்கடியாகும். அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலைப்பாட்டில் ஏற்படும் ஒரு நீண்டகால மற்றும் ஆழமான வீழ்ச்சியே இந்த நெருக்கடியின் மையத்தில் உள்ளது. 

2009 ஜனவரியில் சோசலிச சமத்துவக் கட்சி எழுதியது: "உலகப் பொருளாதாரத்தின் ஒரு 'மறு-சமநிலையாக்கம்', அதாவது முதலாளித்துவ அடிப்படையில் ஒரு புதிய உலக பொருளாதார சமநிலையை உருவாக்குவதென்பது தற்போதிருக்கும் உற்பத்தி சக்திகளை பாரியளவில் பேரழிவுக்கு உள்ளாக்கியும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களை கொடூரமாக கீழ்நிலைக்கு கொண்டு வந்தும் மட்டும் தான் எட்ட முடியும். இதை எட்ட வேண்டுமானால், உலக மக்கள் தொகையில் ஒரு கணிசமான பிரிவுகள் நிர்மூலமாகும். ஆகவே முதலாளித்துவ உடைவிற்கு உண்மையான மாற்றாக இருப்பது, ஒரு சோசலிச அடித்தளத்தில் உலகளாவிய பொருளாதாரத்தை பகுத்தறிவார்ந்தரீதியாக மறுகட்டமைப்பதாக உள்ளது.

இந்த முன்னோக்கும்எச்சரிக்கையும்சம்பவங்களால் நிரூபிக்கப்படுகின்றன. ஆகவே அதே ஆவணத்தில் உள்ள பத்தி, முதலாளித்துவ நெருக்கடிக்கும், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் போர்குணமிக்க அபிவிருத்திக்கும், புரட்சிகர நனவின் புதிய வடிவங்களுக்கும் இடையில் ஒன்றோடொன்று தொடர்புடைய நிகழ்முறைகளைக் குறித்து குறிப்பிடுகிறது. “இந்த நிகழ்ச்சிப்போக்கில் எது கையோங்கியிருக்கும் என்பதே தீர்க்கமான பிரச்சினையாக உள்ளது ” என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.   

வட ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வர்க்க போராட்டத்தின் புதிய கட்டங்களின் ஆரம்ப வெளிப்பாடுகள், இத்தகைய எதிர்புரட்சி சக்திகளோடு தொழிலாள வர்க்கத்தை கட்டிவைக்க வேலை செய்த தொழிற்சங்கங்களின், உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளின் மற்றும் பல்வேறு மத்தியதர வர்க்க அமைப்புகளின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை அடிக்கோடிட்டுள்ளது.

தொழிலாள வர்க்கம் புரட்சிகர போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைகையில், தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் சிக்கலான அரசியல் பிரச்சினைகளை அவை வெளிச்சமிட்டு காட்டியுள்ளதுடன், முக்கிய பிரச்சினையாக இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்குள் தலைமை மற்றும் முன்னோக்கிற்கான நெருக்கடியை முன்னோக்கி கொண்டுவந்துள்ளது. உலக பொருளாதார சீரழிவானது தவிர்க்கவியலாமல் புதிய மற்றும் பரந்த சமூகப் போராட்டங்களுக்கு எண்ணெய் ஊற்றும் என்பதோடு, அது இத்தகைய போராட்டங்களின் தலைமைக்காக போராடவும், அவர்களை ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கவும் புரட்சிகர போராட்டத்திற்கு போதியளவிற்கு சந்தர்ப்பங்களையும் அளிக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் மட்டும் தான் இந்த தலைமையை அளிக்க முடியும் என்பதோடு, அதற்காக அவை அர்பணித்தும் உள்ளன. ஏழ்மை, சர்வாதிகாரம் மற்றும் யுத்தத்திற்கு ஒரு சோசலிச மாற்றீடு தேவையென காணும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டிலும் எமது இயக்கத்தில் இணையவும், அதை கட்டியெழுப்பவும் தீர்மானிக்க வேண்டும்.