World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German chancellor does about-face on nuclear policy

ஜேர்மன் சான்ஸ்லர் அணுசக்திக் கொள்கையில் நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றுகிறார்

By Peter Schwarz
16 March 2011
Back to screen version

ஜப்பானில் அணுசக்திப் பேரழிவை எதிர்கொள்ளும் வகையில் ஜேர்மனிய அரசாங்கம் தன் அணுசக்திக் கொள்கை நிலைப்பாட்டை முற்றிலும் பீதியுடன் மாற்றியுள்ளது. ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் முக்கிய கவலை அடுத்த இருவார இறுதிகளில் நடக்க உள்ள முக்கிய மாநிலத் தேர்தல்களில் தன் பிரச்சனைக்குள்ளான கட்சிக்கு ஆதரவைத் தேடுவது என்பதாக உள்ளது.

திங்களன்று கிறிஸ்துவ ஜனநாய ஒன்றியத்தின் (CDU) சான்ஸ்லர் மேர்க்கெலும் அவருடைய உதவியாளர் தாராளவாத ஜனநாயக கட்சியின் (FDP) கீடோ வெஸ்டர்வெல்லேயும் செய்தி ஊடகத்திடம் ஜேர்மனியில் உள்ள அணுசக்தி ஆலைகளின் ஆயுட்கால விரிவாக்கத்திற்கு மூன்று மாத கால தடைக்கு உட்படுத்தியிருப்பதாக அறிவித்தனர். இதன்பின், செவ்வாயன்று மாநிலப் பிரதம மந்திரிகளுடன் நடத்திய கூட்டத்திற்குப் பின்னர், மேர்க்கெல் 1980க்கு முன் கட்டமைக்கப்பட்ட ஏழு ஜேர்மனிய அணுசக்தி ஆலைகள் உடனடியான மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டுவிடும் என்று அறிவித்தார்.

அரசாங்கத்தின் முந்தைய மின்விசைக் கொள்கை பற்றி அறிந்த எவரையும் இத்தந்திரோபாயம் முட்டாளாக்காது. ஜப்பானைப் போன்ற வகையில், ஜேர்மனிய அரசாங்கமும் மக்களின் நலன்கள், பாதுகாப்பு ஆகியவற்றை திட்டமிட்டபடி சக்திவாய்ந்த அணுசக்தி செல்வாக்குத் திரட்டும் பெரிய மின்விசை நிறுவனங்களின் நலன்களுக்கு தாழ்த்தியுள்ளது.

கடந்த இலையுதிர்காலத்தில், CDU தலைமையிலான கூட்டணி அரசாங்கம் இப்பொழுது மூன்று மாத காலத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் புதிய எரிசக்தி திட்டத்தை இயற்றியது. இத்திட்டத்தில் இருக்கும் அணுசக்தி விசை ஆலைகளின் ஆயுட்காலத்தை 8 முதல் 14 ஆண்டுகளுக்கு விரிவாக்குவது இருந்தது. இதனால் மின்விசை நிறுவனங்களுக்கு கூடுதலான பில்லியன் கணக்கான யூரோக்கள் இலாபங்கள் உத்தரவாதம் ஆயின. மேர்க்கெல் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை 2000ம் ஆண்டில் மின்விசை நிறுவனங்களுடன் முன்னாள் சமூக ஜனநாயக-பசுமைவாதிகள் கூட்டணி ஒப்புக் கொண்டிருந்த அணுசக்தி விசை படிப்படியாக அகற்றப்படுவதில் கருத்தொருமைப்பாடு என்று அழைக்கப்பட்ட கருத்தை மாற்றுவது என்ற பொருளைத் தருகிறது.

2000ம் ஆண்டின் கருத்தொருமைப்பாடு அணுசக்தி விசை நிறுவனங்களுக்குக் கணிசமான சலுகைகளை அளித்தது. சராசரியாக 32 ஆண்டுகள் இருக்கும் என்பதற்குப் பதிலாக, எதிர்பாராமல் கூடுதலான பணிக்காலத்தை அது இருக்கும் ஆலைகளுக்குக் கொடுத்தது. அப்பொழுது முதல் முன்பு அணுசக்தியை எதிர்த்திருந்த பசுமைவாதிகள் மின்விசை  நிறுவனங்கள் தங்கள் அணு உலைகள் தொந்திரவிற்கு உட்படாமல் செயல்படும் திறனை உறுதிப்படுத்த உழைத்தது. கோர்லேபனில் அணுசக்தி கழிவுப்பொருட்களை கொண்டு சென்றுவைத்திருப்பதற்கான போக்குவரத்திற்கு எதிரான போராளித்தனமான எதிர்ப்புகளை நசுக்குவதிலும் பசுமைக் கட்சி முன்னின்றது.

மேர்க்கெல் அணு ஆலைகளின் ஆயுட்காலத்தை ஒப்புக்கொள்ளப்பட்ட அணுசக்தி பற்றிய கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையாலான காலத்திற்கும் அப்பால் விரிவாக்குவது என்பது அணுசக்திச் செல்வாக்குக்குழுவிற்கு (nuclear lobby) மற்றொரு முக்கிய சலுகையை பிரதிபலித்தது. இந்த முடிவிற்கு வருவதில் அவருடைய அரசாங்கம் பழைமையாகிக் கொண்டிருக்கும் உலைகள் உடைந்து போகக்கூடும் என்ற அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்தது.

இப்பொழுது அவர் நேற்றைய வாதங்கள் அனைத்தையும் தூக்கி எறிகிறார். கீழ்க்கண்ட வகையில் இடைக்காலத் தடையை மேர்க்கெல் நியாயப்படுத்துகிறார்: “ஜப்பானிய நிகழ்வுகள் சிறிதும் வருவதற்கு வாய்ப்பில்லை என்று நாம் கருதிய அபாயங்கள் ஒருவேளை நேரக்கூடும் என்று கற்பித்துள்ளன.” அனைத்துமே சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், மூன்று மாதகாலம் அனைத்து அணுசக்தி விசை ஆலைகளின் பாதுகாப்பை சோதிக்கப் பயன்படுத்தப்படும் என்று அவர் தொடர்ந்து கூறினார்.

உண்மையில் வல்லுனர்கள் நீண்டகாலமாகவே அத்தகைய ஆபத்துக்கள் பற்றி எச்சரித்து வந்துள்ளனர்; கணக்கிலெடுக்கப்படாத ஆபத்து எனக் கூறப்படுபவை புறக்கணிக்கக்கூடிய புள்ளி விவரம் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்; ஒரு பேரழிவு நடந்தால் மில்லியன்கணக்கான உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறினர்.

முன்னோடிகளுக்குப் பஞ்சம் ஏதும் இல்லை. உதாரணமாக, 2006 கோடையில், ஸ்வீடனில் உள்ள போஸ்மார்க் அணுசக்தி ஆலையின் குளிர்ச்சி முறைகள் திறனை இழந்தன. ஜேர்மனியிலும் பல அணுசக்தி ஆலைகளைச் செயல்படுத்தும் மின்விசை நிறுவனமான Vattenfall, இந்நிகழ்ச்சியை மறைக்கும் வகையில் நடந்தது பற்றிக் குறைவாகவே கூறியது. ஆனால் அதில் அதிக வெற்றி பெறவில்லை. அந்த நிகழ்வு நெருக்கடிக்கால உற்பத்தி இயந்திரங்கள் செயல்படாவிட்டாலே பேரழிவுகுள் ஏற்படக்கூடும், ஜப்பானில் நடந்துள்ள தனியான சிறப்பு இயற்கை நிகழ்வு ஒன்றும் அதற்குத் தேவையில்லை என்பதைக் காட்டியது.

மேர்க்கெல் திடீரெனபாதுகாப்புதான் முதன்மையானதுஎன்ற கொள்கையை உயர்த்தும்போது, இது வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் முக்கியத்துவத்தைத்தான் கொண்டுள்ளது. இந்த ஞாயிறன்று சாக்சனி-அல்ஹாட் மாநிலத்திலும் ஒருவாரம் கழித்து ரைன்லாந்து-பாலடிநாட், பாடன்-வூட்டம்பேர்க்கிலும் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

கடந்த இலையுதிர்காலத்தில் முடிவெடுக்கப்பட்ட அணுசக்தி ஆலைகளின் விரிவாக்கம், இப்பொழுது ஆளும் கூட்டணியின் கழுத்தைச்சுற்றிப் பெரும் பாறாங்கல் போல் தொங்குகிறது. ஜப்பானிய நிகழ்வுகள் அதிக மக்கள் வாழும் பகுதிகளில் பரந்த அடுக்குகளுக்கு ஒரு அணுசக்திப் பேரழிவு ஏற்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைப் பற்றித்  தெளிவு படுத்தியுள்ளது.

1953ல் இருந்து CDU ஆட்சி நடத்திவரும் பாடன்-வூட்டம்பேர்க் மாநிலத்தில், பிரதம மந்திரி ஸ்ரெபான் மாப்பஸ் அடுத்த வாரத் தேர்தலில் வெல்வதற்கான அதிக வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை என்று நம்பப்படுகிறது. கடந்த சனிக்கிழமை 60,000க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் ஸ்ருட்கார்ட்டில் அணு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நீண்ட காலம் முன்னரே முடிவெடுக்கப்பட்டிருந்தது; ஆனால் ஜப்பானியப் பேரழிவிற்குப் பின் வந்திருந்த கூட்டம் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக இருந்தது. பாடன் வூட்டம்பேர்க்கில் ஸ்ருட்கர்ட் மிகப் பெரிய  நகரமாகும்; கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தில் அணுசக்தி மின்விசைபற்றி ஆக்கிரோஷமாக ஆதரவு கொடுப்பவர்களில் மாப்பஸும் ஒருவராவார்.

ஜப்பானிய நிகழ்வுகள் ஜேர்மனியில் பொதுமக்களின் கருத்தில் பெரும் தாக்கத்தை கொண்டுள்ளன. மில்லியன்கணக்கான மக்கள் நேரடிச் செய்தி ஊடகத் தகவல்களைக் கவனித்து புகுஷிமா அணு ஆலையில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பேரழிவைப் பற்றி அறிந்துள்ளனர். ஆலையின் உரிமையாளர்கள் கிட்டத்தட்ட நான்கு உலைக்கூடங்களின்மீது கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர்; பல வல்லுனர்களும் ஒரு மைய அணுக்கரைப்பு (core meltdown) என்பது இவற்றுள் மூன்றில் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று சந்தேகப்படுகின்றனர்.

களத்தில் இருக்கும் பொறியியல் வல்லுனர்கள் ஏற்கனவே பேரழிவைக் கட்டுப்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் உள்ள அவநம்பிக்கையின் ஒரு வெளிப்பாடுதான். அவர்கள் இப்பொழுது கடல்நீரின்மூலம் உலைக்கூடங்களை குளிர்விக்க முயல்கின்றனர்-இது ஒரு முன்னோடியில்லாத வகையில் சமயத்திற்கேற்ப திடீரென எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கை ஆகும்.

அணுசக்தி எரிபொருள் போதுமான குளிர்விக்கும் முறை இல்லாதபோது சூடேறும்போது கரைப்பு என்பது நடைபெறுகிறது. 900° செல்சியசில், யுரேனியத்தைச் சூழ்ந்துள்ள உலோகக் குழாய்கள் உதிரத் தலைப்படுகின்றன. 2,850° செல்சியசில் யுரேனியமே கரையத் தொடங்குகிறது. இந்த இரு கட்டங்களுக்கும் இடையே நடக்கும் இரசாயன வழிவகைகள் மிகப் பெரிய அளவில் வெடிக்கும் தன்மை உடைய ஹைட்ரஜன் வெளிப்பட வழிவகுக்கின்றன.

எந்த உலைக்கூடக் கட்டுப்படுத்தும் கொள்கலனும் ஒரு முழுக் கரைப்பின் சூட்டினைத் தாங்கிக் கொள்ளும் திறனைக் கொண்டிருக்கவில்லை. இதற்கு மாற்றீடுகள் ஒன்று செர்னோபிலில் ஏற்பட்டதுபோல் பெரிய வெடிப்பு  அல்லது நீர்த்த பொருட்கள் மெதுவாக கரைந்து மண்ணிற்குள் செல்லும். ஒரு கட்டுப்பாடற்ற அணுசக்தி வெடிப்பும்கூட ஏற்படாது என்று கூறவதற்கில்லை.

கரைப்பு அல்லது வெடிப்பு என்று எப்படி இருந்தாலும், அது பாரியளவுகளில் உயர் கதிரியக்கப் பொருளை வெளிவிடம். அது வானிலையை ஒத்து அமையும். நீண்டதூரங்களுக்குப் பரவக்கூடும், பல பகுதிகளையும் தசாப்தங்களுக்கு மாசுபடுத்திவிடவும் கூடும். அணுஉலைக்கூட எண் 3ல் ஏற்பட்டுள்ள கரைப்பு மோசமான நிலைப்பாட்டிற்கு உதாரணமாகலாம்; இது மிகஅதிக நச்சு மிகுந்த புளூட்டோனியத்தைப் பயன்படுத்துகிறது. அது ஜப்பானில் மட்டும் பல மில்லியன் மக்கள் உயிர்கள், சுகாதாரத்தைப் அச்சுறுத்துவதுடன் (பெரிய டோக்கியோ நகரில் மட்டும் 35 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்) கொரியா, சீனா மற்றும் ரஷியாவிலும் பாதிப்பை அச்சுறுத்தும்.

சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கருத்துப்படி, கதிர்வீச்சு அளவுகள் விசை ஆலையில் 400mSv ஒரு மணிக்கு என்ற வகையில், அதாவது ஒரு ஆண்டிற்கு அனுமதிக்கப்படும் வரம்பை விட 400 மடங்கு அதிகம் அடைந்துவிட்டது எனத் தெரிகிறது. இந்த அளவுகள் மட்டுமே கதிர்வீச்சு இயக்க நோய்களை மிக்குறைந்த காலத்தில் தோற்றுவிக்கப் போதுமானவை.

இத்தகைய வியத்தகு நிகழ்வுகளை ஒட்டி, மேர்க்கெலின் அரசியல் தந்திரோபாயத்தினால் பலரும் நம்பிக்கை பெறுவது சாத்தியம் இல்லை. CDUக்கு வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் சங்கடம் ஏற்பட்டால், அதனால் நலன் பெறக்கூடியவை சமூக ஜனநாயகவாதிகளும், பசுமைவாதிகளும்தான். ஆனால் இந்த இரு கட்சிகளுமே அணுசக்திச் செல்வாக்குக்குழுவின் பிடியில் இறுக்கமாக உள்ளன.

SPD ஐச் சேர்ந்த ஹெகார்ட் ஷ்ரோடரும் பசுமைவாத ஜொஸ்கா பிஷ்ஷரும், முன்பு SPD-பசுமைவாதக் கூட்டணியில் முறையே சான்ஸ்லர், துணைச் சான்ஸ்லர் என்று இருந்தவர்கள். இப்பொழுது மின்விசைத் தொழிற்துறைக்கு செல்வாக்கு இயகுனர்களாகப் பணிபுரிகின்றனர். Nord Stream pipeline என்னும் நிறுவனத்திற்கு ஷ்ரோடர் தலைமை வகிக்கிறார்; பிஷ்ஷரோ Nabucco குழாய்த்திட்டத்தின் முக்கிய ஆலோசகர் ஆவார்.