World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

On Democratic Centralism and the Regime

From a US Internal Bulletin in December 1937, prior to the formation the the SWP (US).

ஜனநாயக மத்தியத்துவமும் உள்முக ஆட்சிமுறையும்

Leon Trotsky
1937

Back to screen version

சோசலிஸ்ட் அப்பீல் ஆசிரியர்களுக்கு (அமெரிக்கா)

ஒரு புரட்சிகரக் கட்சியின் உள்முக ஆட்சிமுறை தொடர்பாக கடந்த மாதங்களில் நான் அறிந்திராத, இளம் தோழர்கள் என்று அறியத்தக்கதாய் இருக்கின்ற தோழர்களிடம் இருந்து எனக்குக் கடிதங்கள் வந்திருக்கின்றன. இந்தக் கடிதங்களில் சில உங்களது அமைப்பில் ஜனநாயகப் பற்றாக்குறைநிலவுவது குறித்தும், “தலைவர்கள் மற்றும் அவர்களைப் போன்ற சிலர் ஆதிக்கம் செலுத்துவது குறித்தும் புகார்களை முன்வைக்கின்றன.

போலியான பொருள்விளக்கங்களுக்கு இடம்தராத வகையில் ஜனநாயக மத்தியத்துவம் குறித்த தெளிவான சரியான சூத்திரத்தை வழங்குமாறு தனித்தனியான தோழர்களும் என்னைக் கேட்கிறார்கள். ஜனநாயக மீறல் எங்கிருக்கிறது என்பதை உண்மையான உதாரணங்களுடன் தெளிவாகவும் ஸ்தூலமாகவும் எடுத்துக் காட்டி விளங்கச் செய்வதற்கு  என்னைத் தொடர்பு கொண்ட ஒருவரும் முயலவில்லை.

மறுபக்கத்தில், ஒரு பார்வையாளனாக நான் உங்களது செய்தித்தாள் மற்றும் உங்களது செய்திவெளியீடுகளின் அடிப்படையில் தான் சீர்தூக்கிப் பார்க்க முடியும் என்கின்ற மட்டத்தில் பார்த்ததில் உங்களது அமைப்பில் விவாதங்கள் முழுமையான சுதந்திரத்துடன் தான் நடத்தப்படுகின்றன. செய்தி வெளியீடுகள் பிரதானமாக ஒரு சிறிய  எண்ணிக்கையிலானோரின் பிரதிநிதிகளால் தான் நிரப்பப்படுகின்றன. உங்களது விவாதக் கூட்டங்களிலும் இதுவே உண்மையாய் இருப்பதாய் நான் கூறக் கேட்கிறேன். அந்த முடிவுகள் அதன்பின் உடன் நடைமுறைப்படுத்தப்பட்டு விடுவதில்லை. ஒரு சுதந்திரமாய் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாட்டின் வழியாகத் தான் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்பது  தெளிவு. அப்படியானால் ஜனநாயக அத்துமீறல்கள் எதில் வெளிப்பட்டிருக்க முடியும்? என்பதைப் புரிந்துகொள்வது கடினமாகவே இருக்கிறது.

சில சமயங்களில், கடிதங்களின் தொனியின் மூலம் பார்த்தால், அதாவது முக்கியமாக மனக்குறைகளின் வடிவமில்லாத தன்மையைக் கொண்டு பார்த்தால், ஜனநாயகம் நிலவும் போதிலும் கூட தாங்கள் ஒரு மிகச்சிறு எண்ணிக்கையில் சிறுபான்மையினராய் இருக்கிறோம் என்கின்ற உண்மை புகாரளிப்பவர்களை அதிருப்தியடையச் செய்கிறது  என்பதாய் தோன்றுகிறது. இது ஒரு அசவுகரியமான நிலையே என்பதை என்னுடைய சொந்த அனுபவத்தின் மூலமாகவே நான் அறிவேன். ஆனால் இதில் ஜனநாயக மீறல் எங்கே இருக்கிறது?

அதேபோல் தவறான புரிதல்களையும் மோசடியான பொருள்விளக்கங்களையும் ஒரே அடியில் மொத்தமாக இல்லாமல் செய்து விடக் கூடிய வகையில் ஜனநாயக மத்தியத்துவத்தின் ஒரு சூத்திரத்தை என்னால் கொடுக்க முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. ஒரு கட்சி என்பது உயிருள்ள ஜீவனாகும். வெளிப்புற முட்டுக்கட்டைகள் மற்றும் உள்ளக முரண்பாடுகளுடனான போராட்டத்தில் தான் அது அபிவிருத்தியுறுகிறது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலங்களின் தீமைதரக் கூடிய சிதைவு, ஏகாதிபத்திய சகாப்தத்தின் கடுமையான நிலைமைகளின் கீழ், நான்காம் அகிலத்திற்கு வரலாற்றில் முன்கண்டிராத சிரமங்களை உருவாக்குகிறது. அவற்றை ஏதோ ஒருவகை மந்திர சூத்திரத்தை வைத்தெல்லாம் எவரும் வென்றுவிட முடியாது. ஒரு கட்சியின் உள்முக ஆட்சிமுறை என்பது வானத்தில் இருந்து ஆயத்தமாய் தயாராகி விழுவதல்ல, மாறாக கொஞ்சம் கொஞ்சமாய் போராட்டத்தில் உருவாவது. ஒரு அரசியல் நிலைப்பாடு தான் அந்த ஆட்சிமுறை மீது செல்வாக்கு செலுத்துகிறது. முதலாவதாக, மூலோபாயப் பிரச்சினைகளையும் தந்திரோபாய வழிமுறைகளையும் தீர்க்க வேண்டும் என்றால் அவற்றைச் சரியாக வரையறை செய்வது அவசியம். அந்த மூலோபாயம் மற்றும் தந்திரோபாயத்துடனும்  அமைப்பின் வடிவங்கள் பொருந்தியமைய வேண்டும்.

ஒரு சரியான கொள்கை மட்டுமே ஒரு ஆரோக்கியமான கட்சி ஆட்சிமுறையை உத்தரவாதமளிக்க முடியும். அதற்காக கட்சியின் உருவாக்கம் இதுபோன்ற அமைப்புரீதியான பிரச்சினைகளை உணர்ந்துகொள்வதில்லை என்று அர்த்தமல்ல என்பது புரிந்த விடயமாகும். மாறாக வெவ்வேறு நாடுகளின் கட்சிகளிலும் மற்றும் ஒரே கட்சியின் வெவ்வேறு அபிவிருத்திக் கட்டங்களிலும் ஜனநாயக மத்தியத்துவத்தின் சூத்திரம் தவிர்க்கவியலாமல் வெவ்வேறு வெளிப்பாட்டினை கண்டாக வேண்டியிருக்கும் என்பதே அதன் அர்த்தமாகும்.

ஜனநாயகமும் மத்தியத்துவமும் தங்களை ஒன்றுடன் ஒன்று மாறாத விகிதத்தில் காண்பதில்லை. எல்லாமே ஸ்தூலமான சூழல்களையும், நாட்டின் அரசியல் சூழலையும், கட்சியின் வலிமை மற்றும் அதன் அனுபவத்தையும், அதன் உறுப்பினர்களின் பொதுவான மட்டத்தையும், தலைமை தனது அதிகாரத்தை வென்றெடுப்பதில் எத்தனை வெற்றி  பெற்றுள்ளது என்பதையும் சார்ந்திருக்கிறது. ஒரு மாநாட்டிற்கு முன்னதாக, அடுத்த காலகட்டத்திற்கான ஒரு அரசியல் பாதையை வகுக்கும் ஒன்று தான் பிரச்சினை எனும்போது, ஜனநாயகம் மத்தியத்துவத்தை வெல்கிறது.

அரசியல் நடவடிக்கை தான் பிரச்சினை எனும்போது, மத்தியத்துவம் ஜனநாயகத்தை தனக்கு கீழ்ப்படியச் செய்கிறது. கட்சி தனது சொந்த நடவடிக்கைகளை விமர்சனரீதியாக ஆய்வுசெய்ய வேண்டிய அவசியத்தை உணருகையில் ஜனநாயகம் மீண்டும் தனது உரிமைகளை உறுதிசெய்கிறது. ஜனநாயகத்திற்கும் மத்தியத்துவத்திற்கும் இடையிலான  சமநிலை தன்னை உண்மையான போராட்டத்தில் தான் நிலைநிறுத்திக் கொள்கிறது, சிற்சில சமயங்களில் அது மீறப்படுகிறது பின் மீண்டும் மறுநிறுவல் செய்யப்படுகிறது. கட்சியின் உள்முக ஆட்சிமுறையில் இருந்து அது கொடுக்க இயன்றதற்கும் அதிகமாகக் கோராமல் இருப்பதில் தான் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரின் முதிர்ச்சி நிலை தன்னைக் குறிப்பாக வெளிப்படுத்திக் கொள்கிறது. தன்னைத் தனியாக தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவதை பொறுத்துத் தான் கட்சியை நோக்கிய தனது மனோபாவம் இருக்கும் என்று ஒருவர் தனது மனோபாவத்தை வரையறை செய்வாரானால் அவர் ஒரு வறுமையுற்ற புரட்சிகரவாதி.

தலைமையின் ஒவ்வொரு தனிநபர் தவறுக்கு எதிராகவும், ஒவ்வொரு அநீதிக்கு எதிராகவும், இதுபோன்ற மற்றவற்றுக்கு எதிராகவும் போராடுவது அவசியம் என்பது உண்மைதான். ஆனால் இந்த அநீதிகளையும் தவறுகளையும் அவற்றை மட்டுமே கொண்டு மதிப்பிடாமல் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கட்சியின் பொதுவான அபிவிருத்தியுடன் தொடர்புபடுத்தி மதிப்பிடுவது அவசியமானதாகும்.

சரியான தீர்ப்பும் அரசியலில் மதிப்புகளை கணித்துக்கொள்வதற்கான  ஒரு உணர்வும் கொண்டிருப்பது மிக முக்கியமானதாகும். மடுவை மலையாக்கும் குணம்படைத்த ஒரு மனிதர் தனக்கும் கட்சிக்கும் அதிகமாய் கேடிழைக்க முடியும். ஓய்லர், ஃபீல்ட், வீஸ்போர்ட் மற்றும் இவர்களைப் போன்றவர்களது துரதிர்ஷ்டம் என்பது அவர்களது ஒன்றிற்கு மதிப்புகளை கணித்துக்கொள்வதற்கான உணர்வு  பற்றாக்குறையில் தான் அடங்கியிருக்கிறது.

தோல்விகளால் தளர்ந்து விட்ட, சிரமங்களைப் பார்த்து அச்சப்படுகின்ற, போராடுவதற்கான விருப்பத்தை விடவும் சந்தேகங்களையும் சாக்குப்போக்குகளையும் அதிகமாய்க் கொண்டிருக்கின்ற வயதாகிப் போன இளைஞர்களாக, இந்தத் தருணத்தில் அரைகுறைப் புரட்சிகரவாதிகளுக்கு எண்ணிக்கையில் குறைச்சலில்லை. சாரத்தில் இருக்கும் அரசியல் கேள்விகளைத் தீவிரமாக பகுப்பாய்வு செய்வதற்கு பதிலாக, இத்தகைய நபர்கள் சர்வரோக நிவாரணிகளை தேடுகிறார்கள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உள்முக ஆட்சிமுறையைக் குறைகூறுகிறார்கள், தலைமையை அற்புதங்கள் நிகழ்த்தக் கோருகிறார்கள், இல்லையென்றால் தங்கள் மனதிலுள்ள ஐயுறவுவாதத்தை தீவிர-இடது மழலைப் பேச்சுகளை கொண்டு மறைக்க முயலுகிறார்கள்.

அவர்களே அவர்களை பொறுப்பேற்காத வரையில் இத்தகைய கூறுகளில் இருந்து புரட்சிகரவாதிகள் உருவாக மாட்டார்கள் என்று நான் அஞ்சுகிறேன். இன்னொரு பக்கத்தில், தொழிலாளர்களின் இளைய தலைமுறை நான்காம் அகிலத்தின் வேலைத்திட்ட மற்றும் மூலோபாய உள்ளடக்கத்தை தகுதி அடிப்படையில் மதிப்பீடு செய்யும்  திறனுடையதாய் இருக்கும் என்பதிலும் அதன் பதாகையின் கீழ் எப்போதையும் விட அதிகமான எண்ணிக்கையில் அணிதிரளும் என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

கட்சியின் உள்முக ஆட்சிமுறையின் தவறுகளைப் பட்டியலிடும் ஒவ்வொரு உண்மையான புரட்சிகரவாதியும் முதலில் தனக்குத் தானே சொல்லிக் கொள்ள வேண்டியது இதுதான்: கட்சிக்குள் பத்துப் பனிரெண்டு புதிய தொழிலாளர்களை நாம் கொண்டுவர வேண்டும்!சந்தேகப் பேர்வழி கண்ணியவான்கள், சதா துயரப் பேர்வழிகள், மற்றும் அவநம்பிக்கைவாதிகளை எல்லாம் அந்த இளம் தொழிலாளர்கள் ஒழுங்கிற்குக் கொண்டுவருவார்கள். அத்தகையதொரு பாதையின் வழியாக மட்டுமே நான்காம் அகிலத்தின் பிரிவுகளில் ஒரு வலிமையான கட்சி உள்முக ஆட்சிமுறையானது ஸ்தாபிக்கப்படும்.