World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The killing of Bin Laden and the threat of a wider war

பின்லேடனின் படுகொலையும், ஒரு பரந்த யுத்தத்தின் அச்சுறுத்தலும்

Bill Van Auken
11 May 2011
Back to screen version

ஒசாமா பின்லேடனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேட்டையில் பாகிஸ்தானிய படைகளுடன் ஓர் இராணுவ மோதலில் ஈடுபடுவதற்கான திட்டங்களும் பின்புலத்தில் சேர்ந்திருந்தன என்ற செய்திகள், அந்த ஒட்டுமொத்த நடவடிக்கையின் எதையும் பொருட்படுத்தாத குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது

செவ்வாயன்று நியூ யோர்க் டைம்ஸின் முதல்-பக்க செய்தியின்படி, அபோதாபாத் வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தும் போதோ அல்லது தாக்குதல் நடத்திய பிறகோ சிறப்பு அதிரடிப்படைகள் பாகிஸ்தானிய படைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தால், “அதை துரத்தியடிக்கும் மோதலுக்குத்" தேவையான அனுமதிகளை வழங்கிய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பிற உத்தரவுகளையும் பின்லேடனைக் கொல்ல மே 1ஆம் திகதி பாகிஸ்தானுக்குள் அனுப்பப்பட்ட சிறப்பு அதிரடிப்படை குறிப்பிடத்தக்க விதத்தில் கொண்டிருந்தது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 35 மைல்களுக்கு அப்பால் இருக்கும் அந்நகரம், இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பதுடன், அங்கே அந்நாட்டின் முக்கிய இராணுவ பயிற்சி பயிலகமும் அமைந்துள்ளது.

எதிர்தாக்குதல் நடத்த வேண்டாமென்ற உத்தரவு அளிக்கப்படவில்லை,” என்று ஓர் அமெரிக்க அதிகாரி CNN செய்தி தொலைக்காட்சி வலையமைப்பிடம் தெரிவித்தார். “அதிரடிப்படையால் சமாளிக்க முடியாத எதிர்தாக்குதலின்கீழ் வந்தால், தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவுகள் அளிக்கப்பட்டிருந்த சுழலா இறக்கை போர்விமானங்கள்" (fixed wing fighter jets) உட்பட, அந்த வேட்டைக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவம் பல யுத்த விமானங்களை "பாதுகாப்பு நடவடிக்கைக்காக" பறக்கவிட்டிருந்ததாகவும் CNN செய்தி குறிப்பிட்டது.          

பாகிஸ்தானிய அரசாங்கத்தின், இராணுவத்தின் அல்லது உளவுத்துறையின் ஒத்துழைப்பின்றி அந்த வேட்டையை நடத்துவதற்காக இந்த எதிர்தாக்குதல் அதிகாரம் அவசியப்பட்டிருந்தது. முழுப்புகழும் வெள்ளை மாளிகையை வந்து சேர்வதற்காக, பின்லேடன் கொலையை ஓர் ஒருதரப்பு நடவடிக்கையாக செய்ய ஒபாமா தீர்மானித்திருந்தார்.

அமெரிக்க இராணுவமும், அமெரிக்க உளவுப்பிரிவும் அவர்களின் முகமைகளும் இதுவரை இந்தளவிற்கு ஆபத்தான நடவடிக்கையில் ஒருபோதும் இறங்கியதில்லையென்று அந்த திட்டத்தை பற்றி குணாதிசயப்படுத்தின. ஒபாமாவும் கூட, ஞாயிறன்று "60 நிமிடங்கள்" என்ற CBS செய்தி நிகழ்ச்சியில் அளித்த ஒரு நேர்காணலில், பின்லேடனை அந்த வளாகத்திற்குள் உளவுப்பிரிவு "55/45” நிமிடங்கள் தான் வைத்திருந்ததாக விவரித்தார். அந்த வளாகத்திற்குள் ஒரு "துபாய் இளவரசர்" கூட இருந்திருக்கலாம், ஒருவேளை உளவுத்துறை தவறாக போயிருந்தால், “அங்கே குறிப்பிடத்தக்க விளைவுகள் நிகழ்ந்திருக்கும்என்று ஒபாமா ஒப்புக்கொண்டார்.  

இந்த விளைவுகள் எந்தளவிற்கு இருக்குமென்பது இப்போது மிகவும் தெளிவாகிறது. அந்த வேட்டை, அமெரிக்க மற்றும் பாகிஸ்தானிய துருப்புகளுக்கு இடையில் பாகிஸ்தானின் ஆழ்ந்த பிரதேசத்திற்குள்ளேயும், பாகிஸ்தானிய இராணுவ தளத்திற்கு அருகாமையிலும் ஓர் இராணுவ மோதல் ஏற்படுவதற்கான அச்சுறுத்தலை முன்னிறுத்தி இருந்தது. இத்தகையவொரு மோதல், வெடிமருந்து பீப்பாயுள் தீக்குச்சியைப் பற்ற வைத்து போடுவதற்கு இணையான ஒரு சந்தர்ப்பமாக இருந்திருக்கும். அமெரிக்க மற்றும் பாகிஸ்தானிய துருப்புகளுக்கு இடையில் நேரடியான மோதல் இல்லையென்றாலும் கூட, அமெரிக்கா மற்றும் அதன் சொந்த அரசாங்கம் இரண்டிற்கும் எதிராக நேரடியாகவே, அந்த வேட்டை பாகிஸ்தானில் பரவலாக மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டுள்ளது.

அதற்கேற்ப பாகிஸ்தான் அரசாங்கம் பிரதிபலிப்பை காட்ட நிர்பந்திக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மையை மீறும் எவ்வித எதிர்கால நடவடிக்கைக்கும் அது "முழு பலத்துடன் பதிலடி கொடுக்கும்" என்று பாராளுமன்ற உரையில் பிரதம மந்திரி யூசுப் கிலானியின் எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்த கருத்து வெறுமனே வாஷிங்டனை நோக்கியதல்ல, மாறாக இந்தியாவிற்கும் தான். அமெரிக்க வேட்டை அதேமாதிரியான எல்லை-தாண்டிய நடவடிக்கைகளைத் தொடங்க அங்கே புதுடெல்லிக்கு பரவலாக அழைப்புகளை தூண்டிவிட்டிருந்தது. அத்தகைய தாக்குதல்கள் இரண்டு அணு-ஆயுதமேந்திய பிராந்திய எதிரிகளை யுத்தத்தின் விளிம்பிற்கு கொண்டு வரக்கூடும்.   

அமெரிக்கா மற்றும் நேட்டோ உடனான பாகிஸ்தான் இராணுவத்தின் அனைத்து தொலைதொடர்புகளும் மீளமைக்கப்பட்டுள்ளன என்றாலும் கூட, பின்லேடனுக்கு எதிரான அமெரிக்க கொலை நடவடிக்கைக்குப் பின்னர் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு தொலைதொடர்புகளை பாகிஸ்தான் இராணுவம் துண்டித்து இருந்ததாக கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் மூத்த தளபதியான அமெரிக்க இராணுவ மேஜர் ஜெனரல் ஜோன் காம்ப்பெல் செவ்வாயன்று வெளியிட்டார். ஆப்கானிஸ்தானில் உள்ள பலம்வாய்ந்த 14,000 அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகளுக்குக் கட்டாயம் எடுத்துச்செல்ல தேவைப்படும் உணவு, எரிபொருட்கள், தோட்டாக்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளில் மூன்று பங்கு பொருட்கள் எடுத்துச்செல்லப்படும் கராச்சி முதல் கைபர் கணவாய் வரையிலான துறைமுக வினியோக பாதையை பாகிஸ்தான் மீண்டுமொருமுறை துண்டிக்கக்கூடுமென்று பென்டகனுக்குள் கவலைகள் அதிகரித்து வருகின்றன.   

ஒபாமா பதவியேற்று, அவருடைய "படையதிகரிப்பை" தொடங்கியதிலிருந்து பாகிஸ்தானிற்குள் அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைகள் ஒரு அளவுரீதியான அதிகரிப்பையே பின்லேடனைக் கொல்ல நடத்தப்பட்ட எல்லை-தாண்டிய வேட்டை குறிக்கிறது. விமானிகள் இல்லாத விமானங்களைக் கொண்டு வான்வழி தாக்குதல்களின் எண்ணிக்கையை அமெரிக்க நிர்வாகம் 2010இல் இரட்டிப்பாக்கியது. பாகிஸ்தானிய மனித உரிமை குழுக்களின் மதிப்பீட்டின்படி இதில் சுமார் 2,500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானிய அரசாங்கமும், அதன் உளவுத்துறை சேவைகளும் இந்த தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு அளித்த போதினும், இஸ்லாமாபாத்தில் உள்ள அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கி வரும் அதிகரித்துவரும் மக்கள் கோபத்தின் காரணமாக அவற்றை நிறுத்துமாறு கடந்த இரண்டு மாதங்களாக அவை பகிரங்கமாகவும், பிரத்யேகமாகவும் முறையிட்டுள்ளன. இருந்தபோதினும் அவர்கள் தொடர்ந்தனர். பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பின்னரும் கூட அத்தகைய இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சமீபத்தில் செவ்வாயன்று தெற்கு வஜிரிஸ்தானில் நடந்த தாக்குதலில் குறைந்தபட்சம் ஐந்து பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான தீவிர அமெரிக்க இராணுவவாதம் அப்பிராந்தியம் முழுவதும் பற்றியெறிய அச்சுறுத்துகிறது. பாகிஸ்தான் பிரதம மந்திரி கிலானி அடுத்த வாரம் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்கிறார். அமெரிக்க இராணுவ வேட்டையைத் துளைத்தெடுத்த அதே உரையில் கிலானி, சீனாவை "எல்லா காலத்திற்குமான நண்பர்" என்றும், “உட்கிளர்ச்சி அளிக்கும் ஓர் ஆதாரம்" என்றும் குறிப்பிட்டார். பின்லேடன் கொலை விவகாரத்தில் பெய்ஜிங் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அதன் குரல் எழுப்பி இருந்தது. அப்பிராந்தியத்தில் சீனா அதன் சொந்த மூலோபாய நலன்களை முன்னெடுக்க வாஷிங்டனுக்கும், இஸ்லாமாபாத்திற்கும் இடையில் அதிகரித்துவரும் உராய்வை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பார்க்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.   

அமெரிக்க ஊடக செய்திகளின்படி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அதன் இராணுவ பிரசன்னத்தை தொடர்வதற்கு ஹமீத் கர்ஜாயின் அரசாங்கம் மறுக்க வேண்டுமென்றும், அதற்கு பதிலாக அது பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பக்கம் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கடந்த மாதம் பாகிஸ்தானிய அரசாங்கம் வலியுறுத்தி இருந்தது

ரஷ்யாவையும், மூன்று முன்னாள் சோவியத் மத்திய ஆசிய குடியரசுகளையும் உள்ளடக்கிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் (SCO) சீனா பாகிஸ்தானையும் ஒரு பார்வையாளராக கொண்டு வந்தது. எரிசக்தி வினியோக கட்டுப்பாட்டின் மையமாக திகழும் அப்பிராந்தியத்தில் பெய்ஜிங் அதன் நலன்களை முன்னெடுக்க அது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பினை உருவாக்கியுள்ளது. இதே மூலோபாய ஆதாரவளங்கள் தான் ஆப்கானிஸ்தானைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர யுத்தத்திற்கு செல்ல அமெரிக்காவைத் தூண்டியது

இதற்கிடையில், ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி இன்றிலிருந்து மூன்று நாள் விஜயமாக மாஸ்கோ புறப்படுகிறார். அங்கே அவர் பிராந்திய பாதுகாப்பு உட்பட பரஸ்பர விவகாரங்கள் குறித்து ரஷ்ய அரசாங்கத்துடன் விவாதிக்க உள்ளார். ஆப்கானிஸ்தானில் ஒரு நிரந்தரமான அமெரிக்க இராணுவ தளங்கள் இருப்பதை ரஷ்யாவும் எதிர்க்கிறது. அது காஸ்பியன் வளைகுடா மற்றும் அதன் எரிசக்தி வளங்களின்மீது அமெரிக்கா அதன் கட்டுப்பாட்டைக் கொண்டு வரும் முயற்சியில், அவற்றை ஒரு நுழைவாயிலாக அது காண்கிறது

இந்த பதட்டமான சர்வதேச சூழலில் தான் ஒபாமா நிர்வாகம் பாகிஸ்தானில் பின்லேடனை கொல்ல அதன் ஒருதலைபட்சமான வேட்டையை நடத்தியது.

இந்த வேட்டையால் முன்னிறுத்தப்படும் பல கேள்விகளில் ஒன்று, “இப்போது ஏன் நடத்தப்பட்டது?” என்பதாகும். பின்லேடன் கொல்லப்பட்டதற்கு முன்னரும் சரி, அதற்குப் பின்னரும் சரி அங்கே எவ்வித பயங்கரவாத எச்சரிக்கைகளும் இருக்கவில்லை. பெரும்பாலான விஷயங்களில், அவருடைய [பின்லேடனின்] அல்கொய்தா அமைப்பு ஒரு நீர்த்துப்போன படையாக ஆகியிருந்தது என்பதுடன் தொடர்ந்துவரும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு போலிக்காரணமாக இருந்து உதவியது என்பதைத் தவிர பெரிதாக வேறொன்றுக்கும் அது இருக்கவில்லை.

பின்லேடனிடமிருந்து ஓர் உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தல் கூட இல்லாமல் இருந்த நிலையானது, பெரும்பாலும் வெள்ளை மாளிகையின் உள்நாட்டு அவசியத்திற்காக ஒபாமாவால் அந்த வேட்டை உத்தரவிடப்பட்டிருந்தது என்ற உண்மையை அடிக்கோடிடுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஸ்கான்சினில் நிகழ்ந்த சம்பவங்களால் நிர்வாகம் அதிர்ந்து போயிருந்தது. அங்கே எகிப்தில் கட்டவிழ்ந்த புரட்சிகர சம்பவங்களால் ஓரளவிற்குத் தூண்டப்பட்டு பத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆளுநராலும் மாநில அரசாலும் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிரான சட்டமசோதாக்களை முடிவுக்குக் கொண்டு வர அவற்றை எதிர்த்து போராட வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளின்கீழ், வேலைவாய்ப்பின்மை கணிசமான அளவிற்கு குறைய எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில், எரிபொருளும் உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருவதுடன், மாநிலங்களும் உள்ளாட்சிகளும் வேலைகளிலும், கூலிகளிலும், சமூக திட்டங்களிலும் பாரிய வக்கிரமான மக்கள் வெறுக்கும் வெட்டுக்களைக் கொண்டு வருகின்றன. [இவ்விதத்தில்] ஒபாமா நிர்வாகம் சமூக எதிர்ப்பின் அதிகரிப்பை மட்டும் தான் எதிர்பார்க்க முடியும்.    

அல்கொய்தா தலைவரைத் "தூக்குவதற்கான" ஒரு வெற்றிகரமான நடவடிக்கையை, அதிகரித்துவரும் மக்களின் கோபத்தை திசைதிருப்பும் மற்றும் அவர்களை மிரட்டும் நோக்கில், ஓர் இராணுவ மற்றும் குறுகிய தேசியவாத பிரச்சார வெள்ளத்தைக் கட்டவிழ்த்துவிட பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே யோசனையாக இருந்தது.  

அதேநேரத்தில், ஒபாமாவை ஒரு "யுத்தகால ஜனாதிபதியாக" நிலைநாட்டிக் கொள்ளவும், அவருடைய 2008 தேர்தல் பிரச்சாரத்தில் அளிக்கப்பட்ட "மாற்றத்திற்கான" வாக்குறுதியிலிருந்து அவரை தூர நிறுத்தி கொள்ளவும், அவருடைய நிர்வாகத்தை இராணுவத்துடனும், உளவுத்துறை முகமைகளுடனும், மற்றும் ஆளும் வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவுகளுடனும் இன்னும் நெருக்கமாக சேர்த்து கொள்ளவும், அதன்மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களைத் தொடுக்க ஒரு புதிய சமூக-அரசியல் அடித்தளத்தை வெள்ளைமாளிகைக்கு அளிக்கவும் அது அனுமதிக்கும்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க யுத்த கட்டமைப்பினுள் அந்த வேட்டை மற்றொரு நோக்கத்திற்கும் உதவி இருந்தது: அதாவது, அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கு அதிகரித்துவரும் எதிர்ப்பை ஒடுக்கும் உதறலான முயற்சியில் பாகிஸ்தானிய அரசாங்கத்தையும், இராணுவத்தையும் மிகவும் நேரடியாகவும், முழுமையாகவும் ஒத்துழைக்கச் செய்ய அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கத்திற்கும் உதவி இருந்தது.

இத்தகைய அனைத்து பொறுப்பற்ற சாகசங்களிலும், பெரும்பாலும் விரும்பாத பின்விளைவுகளே மிக முக்கிய விளைவுகளாக உள்ளன. இந்த விஷயத்தில், அதிகாரம் மற்றும் செல்வாக்கிற்காக போட்டியிடும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என ஐந்து அணு-ஆயுத நாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு பிராந்தியத்தில் பதட்டங்களை அவர்கள் எரியூட்டி உள்ளனர்.  

ஊடகங்களால் உருவாக்கப்பட்ட தேசாபிமான வெற்றியின் பிரமை கட்டவிழ்த்துவிடப்பட்டு இருக்கும் நிலையில், ஒரு நீண்ட இரத்தந்தோய்ந்த கலகத்திற்கு களம் அமைக்கும் அப்பிராந்தியத்தின் பல அமெரிக்க நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நடவடிக்கையையும் நன்றாக பார்க்கலாம்.