World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The implications of the Shanghai truckers’ strike

ஷங்காய் டிரக் ஓட்டுனர்களின் வேலைநிறுத்தத்தின் தாக்கங்கள்

John Chan
30 April 2011
Back to screen version

எண்ணெய் விலையுயர்வுகள் மற்றும் கட்டண உயர்வுகளுக்காக ஆயிரக்கணக்கான ஷாங்காய் லாரி ஓட்டுனர்களால் கடந்த வாரம் நடத்தப்பட்ட மூன்று நாட்கள் வேலைநிறுத்தம், சீனாவின் ஆளும் வட்டாரங்களிலும், சர்வதேச அளவிலும் நாட்டின் பாரிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த எதிரெழுச்சி குறித்து மீண்டுமொருமுறை அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸ் அச்சுறுத்தல்கள் மற்றும் கைது நடவடிக்கைகளும் கூட போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரத் தவறியது. ஏனைய தொழிலாளர்கள் மத்தியிலும் வேலைநிறுத்தம் பரவும் அபாயத்தை தடுக்க ஷங்காய் முனிசிப்பல் அதிகாரிகள் ஒரு கட்டண குறைப்பை அறிவித்தனர். அந்த போராட்டங்கள் கடந்த வாரயிறுதியில் அதிருப்தியுடன் முடிவுக்கு வந்தன. ஆனால் அதன் அடித்தளத்திலிருந்த எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.

உலகளாவிய உற்பத்தியும், இலாபங்களும் சீன மலிவுக்கூலி தொழிலாளர்களை சுரண்டுவதைப் பெரிதும் சார்ந்துள்ளது என்பதையும், செய்துமுடிக்கப்பட்ட பொருட்களின் மற்றும் பாகங்களின் போக்குவரத்தில் ஏற்படும் எவ்வித இடையூறும் பேரழிவுமிக்க பொருளாதார தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்பதை உலகின் பிரதான பெருநிறுவனங்கள் மிக துல்லியமாக தெரிந்து வைத்துள்ளன. வியாழனன்று நியூ யோர்க் டைம்ஸ் எச்சரித்தது, சீனாவின் "ஏற்றுமதி ஸ்தம்பிப்பதால் முக்கியமான பெரிய தொழிற்சாலைகள், மலிவுக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பல சரக்குபெட்டக கப்பல்களும் ஸ்தம்பிக்கும்,” ஆனால் தொழிற்சாலைகளை துறைமுகங்களோடு இணைக்கும் டிரக் போக்குவரத்து அமைப்புமுறை ஒரு பலவீனமான தொடர்பாக உள்ளது.

உள்கட்டமைப்பில் அரசின் பெரும் முதலீடு இருந்த போதினும், சீனாவின் இரண்டு முக்கிய ஏற்றுமதி மண்டலங்களான ஷங்காய்க்கு அருகிலுள்ள யாங்ட்ஜி ஆற்றுப்படுகை மற்றும் ஹாங்காங் அருகிலுள்ள பியர்ல் ஆற்றுப்படுகை ஆகியவற்றின் டிரக் போக்குவரத்திற்கான செலவு, சீன டிரக் ஓட்டுனர்கள் மிக குறைந்த அளவாக ஒரு மணிநேரத்திற்கு 25 சென்ட் மட்டுமே சம்பாதிக்கின்ற போதினும், அமெரிக்காவை விட அங்கே மிகவும் அதிகமாகும்.

இதன் விளைவாக, சுயாதீனமான டிரக் ஓட்டுனர்கள் பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். சர்வதேச விலையுயர்வுகள் மற்றும் அரசாங்க மானியங்களின் வெட்டுக்களால் உந்தப்பட்டு எண்ணெய் விலையுயர்வு ஏற்பட்டிருப்பதற்கு இடையில், தொழிற்சாலை உரிமையாளர்கள் டிரக் ஓட்டுனர்களுக்கு கூடுதல் தொகை அளிக்க மறுக்கின்றனர்.

டிரக் ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம் சீன சமூகம் முழுவதிலும் ஏற்பட்டிருக்கும் தீவிர சமூக பதட்டங்களின் அறிகுறியாகும். உலகம் முழுவதும் உள்ளதைப் போன்றே, உணவுப்பொருட்கள் மற்றும் எண்ணெய் விலையுயர்வு சீனா முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களின் மீது தாக்கத்தைக் கொண்டுள்ளது. சர்க்கரையின் 85.9 சதவீத உயர்வு, தானியங்களின் 67.9 சதவீத உயர்வு, சமையல் எண்ணெய்யின் 65.7 சதவீத உயர்வு ஆகியவற்றுடன், ஜூன் 2010இல் இருந்து பெப்ரவரி 2011 வரையில் 40.4 சதவீதம் உயர்ந்திருந்த உலகளாவிய உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருந்ததாக ஆசிய மேம்பாட்டு வங்கியின் ஓர் அறிக்கை அறிவித்தது.

உணவுப்பொருட்களின் விலைகள் இந்த ஆண்டு 10 சதவீதம் உயர்ந்தால், ஆசியாவில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் கூடுதலாக 64 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டிற்குகீழ், அதாவது நாளொன்றுக்கு 1.25 டாலருக்கு கீழ் வீழ்வார்கள் என்று ADB அறிக்கை குறிப்பிட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவில் இருப்பர். அங்கே மார்ச்சில் ஆண்டு பணவீக்க விகிதம் 11.7 சதவீதமாக பதிவு செய்யப்பட்டது. கட்டுக்கடங்காத சொத்து ஊகவியாபாரத்தின் விளைவாக உயர்ந்து வரும் வீட்டுவாடகையாலும் சீன தொழிலாளர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

ஸ்தம்பித்து போயிருக்கும் மற்றும் ஸ்திரமற்று இருக்கும் நாட்டின் முதலாளித்துவ அபிவிருத்திக்கு தலைமை தாங்கி வரும் பொருத்தமற்ற பெயரைக் கொண்டிருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP), தொழிலாள வர்க்கத்தின் எந்த சுயாதீனமான இயக்கத்தையும் நடுக்கத்தோடு கையாண்டு வருகிறது. விலையுயர்வுகள் மற்றும் உத்தியோகபூர்வ ஊழல்களின் மீது கோபமடைந்ததன் காரணமாக 1989இல் பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களோடு மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இணைந்தனர்.

சீனாவில் அனைத்துமே மிகப் பெரியதாகும். இராணுவமும், பாதுகாப்பு இயந்திரங்களும் தியானன்மென் சதுக்கத்தில் தொழிலாளர்களையும், மாணவர்களையும் கொடூரமாக ஒடுக்கியவிதம் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் மக்கள்தொகை உயர்ந்ததற்கு நேர்விகிதத்தில் உயர்ந்திருந்த சீன தொழிலாள வர்க்கத்திடையே அது மங்கி போய்விட்டது. சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, நகர்புற மக்கள்தொகையை 665 மில்லியனாக அல்லது மொத்த மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கு நெருக்கமாக, 1990இல் இருந்ததைவிட 298 மில்லியன் அல்லது 26 சதவீதம் உயர்ந்திருப்பதாக குறிப்பிடுகிறது.

பெய்ஜிங்கிலுள்ள ஸ்ராலினிச ஆட்சி வடக்கு ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் கட்டவிழ்ந்த "ஜாஸ்மின் புரட்சியைக்" நடுக்கத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறது. அது எகிப்து மற்றும் துனிசியாவில் எழுந்துள்ள எழுச்சிகளைப் போன்ற எழுச்சிகளைத் தோற்றுவிக்க உழைக்கும் மக்களுக்கு ஆன்லைனில் அழைப்புவிடுத்துள்ள இணைய காரியதாரிகளை அது சுற்றி வளைத்துள்ளது. ஏற்கனவே ஷாங்காய் டிரக் ஓட்டுனர்களைப் பல்வேறு வலைத் தளங்களும், வலைப் பதிவர்களும் வரவேற்றுள்ளன. அவர்களில் ஒருவர், “ஷாங்காய் தொழிலாளர்களின் உறுமல் சீனாவை நடுங்க செய்துள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருந்த போதினும், திடீரென எழும் போராட்டங்களும், வேலைநிறுத்தங்களும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் எவ்வித அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்துவிடாது என்பதே எகிப்து மற்றும் துனிசிய படிப்பினைகளாக உள்ளன. எகிப்திய தலைவர் ஹோஸ்னி முபாரக் வேண்டுமானால் இராஜினாமா செய்ய தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் எகிப்தில் முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்ற ஒடுக்குமுறையை பயன்படுத்த தயங்காத இராணுவ துருப்புகளின் கைகளில் தான் அதிகாரம் தங்கியுள்ளது.

சீனத் தொழிலாளர்கள் 1989 போராட்டங்களின் விளைவுகளை கவனத்தில் எடுக்க வேண்டும். மில்லியன் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் இணைந்தனர். ஆனால் போராட்டத்தின் தலைமை "ஜனநாயகவாதிகளின்" கரங்களிலும், பெய்ஜிங் தொழிலாளர்களின் சுயாட்சி அமைப்பின் தலைவர் ஹன் டோங்போங் போன்ற பிரமுகர்களின் கரங்களில் தங்கியிருந்தது. அவர்கள் அனைவரும் CCP ஆட்சியைத் தூக்கியெறிவதற்கு மாறாக, அதனுடன் ஓர் உடன்பாட்டிற்கு வர விரும்பினர். சீன முதலாளித்துவத்தை கலைப்பதற்கு மாறாக, அதை விரிவாக்குவதே அவர்களின் முன்னோக்காகும். அவர்களின் உத்திகள் அரசாங்கம் புத்துணர்வுடன் அணிதிரள்வதற்கும், துருப்புகளையும், பீரங்கிகளையும் அனுப்புவதற்கும் போதிய கால அவகாசத்தை அளித்தது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில், போஷனில் உள்ள ஹோண்டா டிரான்ஸ்மிஷன் ஆலையிலிருந்து தொடங்கி, பல ஆலைகளின் இளம் தொழிலாளர்கள் சுயாதீனமான தொழிற்சங்கங்களை தோற்றுவிக்கும் உரிமை மற்றும் சம்பள உயர்வு ஆகியவற்றிற்காக போராடினர். அந்த போராட்டம் பரவிவிடாமல் தடுக்க, பெய்ஜிங்கின் ஆசிர்வாதத்தோடு நிறுவனங்கள் மிகக் குறைந்த சம்பள உயர்வுகளை அளித்தன. ஆனால் சுயாதீனமான அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. அந்த குறைந்த சம்பள உயர்வுகளையும் பணவீக்க விகிதம் விரைவிலே அரித்துத் தின்றுவிட்டது. தொழிலாளர்கள் சுயாதீனமாக அரசியல்ரீதியில் ஒன்றுதிரள்வதற்கு ஓர் அடித்தளமாக ஆகக்கூடிய எதையுமேஅதாவது சங்கங்கள், மன்றங்கள், இணைய தளங்கள், மத அமைப்புகளையும் கூடபெய்ஜிங் அச்சுறுத்துகிறது.

டிரக் ஓட்டுனர்களின் வேலைநிறுத்தத்தில் உள்ளடங்கி இருக்கும் எச்சரிக்கை அறிகுறிகளை CCP புரிந்து கொண்டுள்ளது. அதற்கேற்ப அது அதன் அரசு இயந்திரங்களை ஆயத்தப்படுத்தி வருகிறது. அத்துடன் பொலிஸ்-அரசு முறைமைகளையும் ஆயத்தப்படுத்தி வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் ஓர் எதிரெழுச்சியை சீர்குலைக்கவும், ஒடுக்கவும் அந்த ஆட்சிக்கு மூர்க்கத்தனமான அரசியல் இயந்திரத்தனம் அவசியப்படுகிறது. அரசு சார்ந்த தொழிற்சங்கங்களுக்கான அனைத்து சீன கூட்டமைப்பின் ஒரு மூத்த அதிகாரத்துவவாதி கோங் சியாங்ஹாங் சமீபத்தில் வாஷிங்டன் போஸ்டிற்குக் கூறியது, “எங்களுடடைய சங்கம் மக்களின் செல்வாக்கை இழந்துவிடும் அபாயத்தை நாங்கள் உணர்கிறோம்,” என்றார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹோண்டா தொழிலாளர்களின் மற்றொரு வேலைநிறுத்தத்தில் ஒரு 30 சதவீத சம்பள உயர்வை பேரம்பேச தலைமையேற்க அவசரஅவசரமாக ஓடினார்.

முக்கியமாக, அதிருப்திகளால் அரசாங்கத்தின் தற்போதைய பிளவிற்கு இடையில், உத்தியோகப்பூர்வ People's Daily பத்திரிகை, பல்வேறு கண்ணோட்டங்களில் பெரும் ஏற்புத்திறனை வலியுறுத்தி இந்தவாரம் ஓர் அசாதாரண விமர்சனத்தை வெளியிட்டது. "ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டுகளில் மாட்டிக் அதிகாரிகளை மற்றும் அவர்களுக்கு எதிராக அதிருப்தி குரல்களை ஒடுக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியவர்களையும்" விமர்சித்தது. 1989இல் செய்ததைப் போலவே, தொழிலாள வர்க்கத்தின் ஓர் எதிரெழுச்சிக்கு ஒரு முக்கிய பாதுகாப்பு வால்வை அளிக்கக்கூடிய பல்வேறு "ஜனநாயகவாதிகளுக்கு" ஏற்புத்திறன் குறித்த இந்த முறையீடு ஓர் எச்சரிக்கை குரலாக உள்ளது.

தொழிலாளர்கள் அவர்களின் சொந்த தீர்மானங்களை வரைய வேண்டும். அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் நாகரீகமான வாழ்க்கை தரங்களுக்கான போராட்டம் என்பது தவிர்க்கமுடியாமல் CCP ஆட்சிக்கும், அது தங்கியிருக்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிரான ஓர் அரசியல் போராட்டத்தைக் குறிக்கிறது. அத்தகையவொரு போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களைஎல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச போராட்டத்தால் நடத்தப்பட்ட அரசியல் போராட்ட படிப்பினைகளை அடித்தளமாக கொண்ட ஓர் அரசியல் கட்சியைக் கட்டியெழுப்புவதை அவசியப்படுத்துகிறது. அது சீனாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு பிரிவைக் கட்டியமைப்பதை குறிக்கிறது.