World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The killing of bin Laden and the “war on terror”

பின்லேடனின் கொலையும், “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமும்"

Bill Van Auken
3 May 2011
Back to screen version

வாஷிங்டனும், பெருநிறுவன ஊடகங்களும் ஒசாமா பின்லேடனின் கொலையை அமெரிக்க இராணுவவாதத்தை கரவொலியுடன் கொண்டாடுவதற்குப் பயன்படுத்தியுள்ளன. எவ்வாறிருந்த போதினும், உத்தியோகபூர்வ உரைகளிலும் ஊடக வர்ணனைகளிலும் தசாப்தம் பழமையான "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தம்" குறித்து எவ்வித மதிப்பீடும் செய்யப்படவில்லை. பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பின்லேடனின் கூட்டு படுகொலை அவற்றால் ஒரு பாரிய வெற்றியாக வலியுறுத்தப்படுகின்றது.

ஆனால் ஞாயிறன்று அவரின் மரணத்தின் போது, ஒசாமா பின்லேடன் பெரிதும் உபயோகமற்று, அனைத்து ஆதாரங்களும் காட்டுவதைப் போல பாகிஸ்தானிய இராணுவ உளவுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஓர் இடத்தில் வீட்டுக்காவலில் வாழ்ந்து வந்த ஒரு நோயுற்ற வயதுமுதிர்ந்த மனிதராகியிருந்தார். அவர் மரணத்தின் மூலோபாய முக்கியத்துவம் பொதுவாக ஒன்றுமில்லை என்று ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கேள்விக்கிடமின்றி, ஒரு தீவிர பிற்போக்குவாதியான அவரின் கண்ணோட்டம், கம்யூனிச எதிர்ப்பிலும், மதவாத வெறித்தனத்திலும் வேரூன்றி இருந்தது. இந்த சித்தாந்தம் தான், 1979இன் ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத் ஆதரவிலான அரசாங்கத்திற்கு எதிராக வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்ட நாசகரமான யுத்தத்தில் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறையின் ஒரு மதிப்பார்ந்த உடைமையாக பின்லேடனை ஆக்கியிருந்தது

பின்லேடனின் மரணத்தை அறிவிக்கையில், ஜனாதிபதி பராக் ஒபாமா "நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக" வலியுறுத்தினார். இதேபோன்று வெளிவிவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், “நீதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக" அறிவித்தார்

ஒரு கடற்படை அதிரடி குழுவால் நடத்தப்பட்ட அவரின் படுகொலை, துளியும் கூட நீதியோடு சம்பந்தப்பட்டதல்ல. செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதலோடு தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக பிடிபடக்கூடிய சூழ்நிலைமைகளின்கீழும் மற்றும் சட்டத்தின் முன் நீதிமன்றத்தில் நிறுத்தப்படக்கூடிய நிலையில் அவர் கொல்லப்பட வேண்டுமென்பது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்க அரசாங்க முகாமைகளுடன் பின்லேடனுக்கு இருந்த தொடர்புகளின் நீண்ட வரலாறு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படாமல் தடுக்கும் ஒரு தீர்மானம் இந்த முடிவிற்குப் பின்னால் இருந்தது. ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புக்களுக்கு எதிராக போராடிய இஸ்லாமிய கொரில்லா படையான முஜ்ஹதீன் அழைக்கப்பட்டதற்கு அமெரிக்க உளவுத்துறை (CIA) ஆயுதங்கள் வழங்கியிருந்ததும், நிதியுதவி வழங்கியதிலிருந்தும் இந்த உறவு தொடங்கியது. இந்த முஜ்ஹதீனியர்களை ஜனாதிபதி ரோனால்ட் ரீகன், “நம்முடைய ஸ்தாபக தந்தைகளுக்கு இணையாக நீதிநெறிகளைக் கொண்டவர்கள்" என்று வர்ணித்தார்.

சவூதி அரேபியாவில் ஒரு செல்வவளமிக்க வியாபாரியின் மகனான ஒசாமா, அமெரிக்க உளவுத்துறை (CIA) ஆதரவிலான முஜாஹிதீனிற்காக (இதுதான் இறுதியாக தாலிபானுக்கு எழுச்சியை அளித்தது) அரேபிய சுய-தொண்டர்களை நியமிப்பதிலும், பயிற்றுவிப்பதிலும் ஒரு முக்கிய பங்காற்றினார். அரபிய மொழியில் "தளம்" எனப்படும் அல்கொய்தா, அமெரிக்க உளவுத்துறையின் நிதியுதவி மற்றும் ஆயுத உதவியுடன் அந்த காலக்கட்டத்தில் தான் ஸ்தாபிக்கப்பட்டது

இந்த கூட்டுழைப்பு  ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் பின்வாங்கியதோடு அல்லது சோவியத் ஒன்றியத்தின் உடைவு மற்றும் பனிப்போரின் முடிவோடு முடிந்துவிடவில்லை. யூகோஸ்லோவியாவிற்கு அப்பாற்பட்டு, முதலில் பொஸ்னியாவிலும் பின்னர் 1990களின் இறுதியில் கொசோவாவிலும் நிகழ்ந்த யுத்தங்களில் அமெரிக்க இராணுவ உளவுப்பிரிவின் உடைமைகளாக மீண்டுமொருமுறை பின்லேடனும், அல்கொய்தாவும் உதவினர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையில் அடிக்கடி நிகழும், இன்றைய கூட்டாளி நாளைய எதிரியாகிறான் என்பதைப் போலவே நிகழ்ந்தது. சோவியத் ஒன்றியத்திற்கு குழிபறிக்க ஒரு கருவியாக வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்ட இஸ்லாமிய கிளர்ச்சி, இறுதியில் மத்தியகிழக்கிலும் குறிப்பாக சவூதி அரேபியாவிலும் அதிகரித்துவரும் அமெரிக்காவின் இருப்பிற்கு விரோதமாக மாறியது.

கொல்லப்பட வேண்டிய அமெரிக்காவின் எதிரியாக சித்தரிக்கப்பட்ட ஒரு தனிநபருக்கும் அமெரிக்க உளவுப்பிரிவுக்கும் இருந்த இந்த நீண்டகால நெருக்கமான உறவின் வரலாறு, ஒழுங்குமுறையாக ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டது.  

இன்று வரையில் தீவிரமாக விசாரணைசெய்யப்படாத, மற்றும் விளக்கப்படாத 9/11 சம்பவங்கள், “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தத்தைத்" தொடங்க ஒரு போலிக்காரணத்தை அளித்தது.

செப்டம்பர் 11, 2001இல் நிகழ்ந்த பரிதாபகரமான சம்பவங்களுக்கு வாஷிங்டனின் பிரதிபலிப்பு குறித்து திகைப்பூட்டுவதென்னவென்றால், அவர்களாலேயே ஒருபோதும் அந்த சம்பவங்களைத் தர்க்கரீதியாக ஊகித்து உணரமுடியவில்லை என்பது தான். குற்றஞ்சாட்டப்பட்ட 9/11 விமானக்கடத்தல்காரர்களில் 15 பேர்கள் (இவர்களுக்கு மூளையாக ஒசாமா பின்லேடன் இருந்திருக்கலாம் என்று கருதப்பட்டது) சவூதி அரேபிய குடிமக்களாவர். இது எந்த தண்டனையிலும் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதாக உள்ளது. அவர்களில் யாருமே ஆப்கானிஸ்தானில் இருந்தோ அல்லது ஈராக்கில் இருந்தோ வரவில்லை. ஆனால் இந்த இரண்டு பகுதிகளுமே விரைவிலேயே வன்முறை மற்றும் மரணங்களால் சுற்றி வளைக்கப்பட்டன

பின்லேடன் ஆப்கானிஸ்தானில் இருந்தபோதும் கூட, அல்கொய்தாவிற்கும் தாலிபான் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் ஒருபோதும் சிறப்பாக இருக்கவில்லை. அக்டோபர் 2001இல், 9/11 தாக்குதல்களில் பின்லேடன் சம்பந்தப்பட்டிருந்ததற்கான ஆதாரங்களை வாஷிங்டன் அளித்தால், அவரை சரணடையச் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக தாலிபான் பிரதிநிதிகள் முதலில் குறிப்பிட்டார்கள். அந்த முறையீடு மறுக்கப்பட்டது. பின்னர் ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீசுவதை அமெரிக்கா நிறுத்திக் கொண்டால், பின்லேடனை ஒரு நடுநிலையான நாட்டிற்கு அனுப்புவது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக தாலிபான் கூறியது. மீண்டும், அதற்கு தயாராக இல்லையென்று புஷ் நிர்வாகம் கூறியது. அது ஆட்சி மாற்றத்தை விரும்பியது.

பின்லேடனைப் பிடிப்பதற்காக என்ற போர்வையில் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த பின்னர், அந்த அல்கொய்தா தலைவர் பாகிஸ்தானிற்குள் எல்லை தாண்டி அவருடைய வழியில் செல்லும் வகையில் அமெரிக்க இராணுவம் கைக்கட்டி நிற்க உத்திரவிடப்பட்டிருந்த நிலையில், 2001 டோரா போரா யுத்தகளத்தில் அவர் தப்பிக்க புஷ் நிர்வாகம் அனுமதித்தது.

பின்லேடனை பிடிப்பதில் தமக்கு எந்த ஆர்வமும் இல்லையென்று புஷ் விரைவிலேயே குறிப்பிட்டார். மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான எதிர்பைப் பொறுத்த வரையில் அல்கொய்தா தலைவர் எவ்வித குறிப்பிட்ட முக்கிய பாத்திரமும் வகிக்கவில்லை என்று அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் உண்மையில், பொதுவாகபயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு" ஓர் பயனுள்ள அடையாளமாகவும், குறிப்பாக 2004 தேர்தல் போன்ற சூழ்நிலைகளில், அரசியல்ரீதியிலான சந்தர்ப்பவாத நிகழ்வுகள் குறித்த ஒளிப்படங்களை வெளியிடுவேன் என்ற அச்சுறுத்தல்களுக்காகவும் அவர் உயிரோடு மிகவும் பயனுள்ளவராக இருந்தார்.

ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்த வரையில், பின்லேடன் பதுங்கியிருந்த அந்த வளாகத்தை 2010 ஆகஸ்ட் மாதத்திலேயே அமெரிக்க உளவுப்பிரிவு கண்டுபிடித்துவிட்டது. ஒரு வேட்டையை நடத்த ஏன் அதற்கு ஒன்பது மாதங்கள் எடுத்தது என்பதை வெறுமனே தொழிற்நுட்ப தயாரிப்பு காரணங்களைக் காட்டி விளக்க முடியாது. பின்லேடனின் தொடர்புகள் பாகிஸ்தான் உளவுத்துறையோடு மட்டுமின்றி, மாறாக அமெரிக்க உளவுப்பிரிவின் இயந்திரங்களுக்குள்ளேயே இருக்கும் பிரிவுகளோடும் இருந்ததில் தெளிவாக அரசியல் பிரச்சினைகள் உள்ளடங்கியிருந்தன.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" தொடங்கி ஒரு தசாப்தத்தை அண்மித்துள்ள நிலையில், அமெரிக்க காலனித்துவ யுத்தத்தில் நூறு ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை கொன்றும், காயப்படுத்தியும் இருக்கும் பாரிய நடவடிக்கையால் தூண்டிவிடப்பட்டு, அதனால் அதிகரித்துவரும் ஆயுதமேந்திய எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக 100,000 அமெரிக்க துருப்புகள் சண்டையிட்டு வருகின்றன.

அதேவேளையில், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தம் என்றழைக்கப்படுவது 9/11 சம்பவம் நடந்த ஒன்றரை ஆண்டுக்குப் பின்னர் ஈராக் மீதான "அதிர்ச்சியூட்டும், அச்சமூட்டும்" தாக்குதல் தொடங்கப்பட்டத்தோடு ஒரு கூர்மையான திருப்பத்தை எடுத்தது. பின்லேடன் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஒரு பகிரங்கமான எதிரியாக இருந்த சதாம் ஹுசேன் தான் இலக்காக இருந்தபோதினும், ஆட்சி மாற்றம் தான் மீண்டும் நோக்கமாக இருந்தது. “பெரும் அழிவிற்குரிய ஆயுதங்களை அழிப்பதற்காக" என்ற பொய்களோடு அது நியாயப்படுத்தப்பட்டது. ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தத்தின் விளைவாக சுமார் ஒரு மில்லியனுக்கும் மேலான ஈராக்கியர்கள் வாழ்க்கை இழந்தனர் என்பதோடு 47,000 அமெரிக்க படையினர் அந்த நாட்டை தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளனர்

இப்போது ஒபாமா நிர்வாகம் மற்றொரு இராணுவ தலையீட்டில் இணைந்துள்ளது. இது அல்கொய்தாவிற்கு எதிரான போராட்டத்தில் முந்தைய ஒரு கூட்டாளியான லிபியாவின் மௌம்மர் கடாபியைத் தூக்கியெறிவதையும், வாஷிங்டனுக்கும் எரிசக்தி விஷயத்தில் கூட்டாளிகளாக உள்ள மேற்கத்திய கூட்டாளிகளுக்கும் சேவைசெய்யும் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவும் நோக்கம் கொண்டது. இந்த மோதலில், ஆப்கானிஸ்தானில் பின்லேடனின் முகாம்களில் பயிற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய பிரிவுகளை உள்ளடக்கியுள்ள ஓர் "எதிர்ப்பு" படைக்கு அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் நிறைய விமானப்படை உதவிகளையும், ஆயுதங்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன.

மத்திய மற்றும் தெற்காசியாவிலும், பாரசீக வளைகுடாவிலும் ஒரு "நீண்டகால யுத்தம்" என்று அமெரிக்க இராணுவம் எதைக் குறிப்பிடுகிறதோ அதை சந்தைப்படுத்த, “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தம்" என்பதை ஒரு பயனுள்ள போலிக்காரணமாகவும், ஒசாமா பின்லேடனை அதற்கு வசதியான பூச்சாண்டியாகவும் காட்டியதை  தவிர வாஷிங்டன் வேறொன்றுமாக பார்க்கவில்லை என்பதை இந்த மேற்கூறிய குறிப்புகள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த யுத்தத்தின் மெய்யான நோக்கங்கள் என்ன? 1980களில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுப்பிரிவின் தலையீட்டிற்குத் திட்டம்தீட்டிய கார்டர் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜிபெக்னெவ் ப்ரெஜ்ஜின்ஸ்கி (Zbigniew Brzezinski) அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய கவனங்கள் குறித்து தெளிவான நோக்கத்தை வழங்கியுள்ளார்

1997இல் அவர் எழுதிய The Grand Chessboard (பிரமாண்ட சதுரங்கபலகை) எனும் புத்தகத்தில், யூரேஷியாவை "சதுரங்கப் பலகையாகவும்", உலகளாவிய முதன்மையிடத்திற்கான போராட்டம் அதன்மீது விளையாடப்படுவதாகவும்,” ப்ரெஜ்ஜின்ஸ்கி விவரித்தார். அப்பிராந்தியத்தில் சோவியத் அதிகாரத்தின் முடிவோடு, "ஒரு செல்வாக்குமிக்க யூரேஷிய சக்தியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் எழுவது" தடுக்கப்படுவதில் அது முகங்கொடுத்து வந்த சவால்களும் முடிந்துவிட்டதாக அவர் வலியுறுத்தினார்.

நடுமையத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பது, காஸ்பியன் பள்ளத்தாக்கில் உள்ள எரிசக்தி வளங்களாகும். இரண்டாவது அவர்களின் உலகளாவிய முக்கியத்துவத்திற்காக மட்டும் இருப்பது, பாரசீக வளைகுடாவாகும். இந்த மூலோபாய ஆதாரவளங்களை மேற்கில் கொண்டு செல்வதற்கு முக்கிய குழாய்வழி பாதையை ஆப்கானிஸ்தான் கொடுத்தது என்பதுடன் அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு விரோதமாக இருக்கக்கூடிய சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய மூன்று சக்திகளோடும் அது மிக அண்மித்து இருப்பதாகவும் பார்க்கப்பட்டது.

அவருடைய புத்தகத்தில் ப்ரெஜ்ஜின்ஸ்கி, வாஷிங்டன் அதன் இலக்குகளை அடைய "இராணுவ அச்சுறுத்தலை" பயன்படுத்துவதை பொதுமக்கள் உணர்வுகள் கட்டுப்படுத்தும் நிலையில், அமெரிக்கா "வெளிநாடுகளில் எதேச்சதிகாரமாக இருப்பதற்கு உள்நாட்டில் மிகவும் ஜனநாயக தன்மையோடு," இருந்ததாக புலம்பி இருந்தார். இது "ஜனநாயகரீதியில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்ற பொதுமக்களின் உணர்விற்கு ஒரு திடீர் அச்சுறுத்தலையோ அல்லது சவாலையோ கொண்டுவரும் நிலைமைகளின்கீழ்" மட்டும் தான் மாற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்

9/11 தாக்குதல் சம்பவங்கள் அத்தகையவொரு "திடீர் அச்சுறுத்தலைத்" தான் அளித்தன. ஆகவே உடனடியாக மத்திய ஆசியாவிலும், பாரசீக வளைகுடாவிலும் அமெரிக்க இராணுவம் தலையீடு செய்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த திட்டங்களை புஷ் நிர்வாகம் நடைமுறைப்படுத்த தொடங்கியது. பெரும் எரிசக்தி ஆதாரவளங்களின் மையங்களாக விளங்கும் அந்த இரண்டு பிராந்தியங்களிலும் மூலோபாய நிலைப்பாடுகளை இராணுவம் கைப்பற்றுவதன் மூலமாக அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியை அமெரிக்க ஆளும் மேற்தட்டு எதிர்கொள்ள விரும்பியது. அமெரிக்க அரசிற்குள்ளும், அதன் உளவுப்பிரிவு அமைப்புகளுக்குள்ளும் இருந்த பிரிவுகள் அத்தகைய அண்மித்துள்ள ஒரு "திடீர் அச்சுறுத்தல்" பற்றி எந்தளவிற்கு அறிந்திருந்தனவோ அதேயளவிற்கு அதுபற்றி தீவிர விசாரணைக்கான ஒரு விஷயமாக அதை கட்டவிழ்த்து விட்டிருந்தது.     

கடந்த தசாப்த ஆக்கிரமிப்பு யுத்தங்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான மூர்க்கத்தனமான குற்றங்களுடன் ஒன்றிணைந்துள்ளது. படுகொலை, சித்திரவதை, காலவரையற்று சிறையில் அடைப்பது மற்றும் பயங்கரவாத சந்தேகத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக அசாதாரண தடுத்துவைப்பு என அனைத்தும் அமெரிக்காவின் ஒரு பொலிஸ் அரசுக்கான சாரக்கட்டைக் கட்டியமைப்பதோடு சேர்ந்துள்ளது.

பின்லேடனின் மரணம் அமெரிக்க இராணுவவாதத்தின் உலகளாவிய எழுச்சியை தடுத்து நிறுத்தப் போவதில்லையென்று ஒபாமாவும், கிளிண்டனும் அவர்களின் உரைகளில் தெளிவுபடுத்தி இருந்தனர். “நம்முடைய நாட்டை பாதுகாப்பது இன்னும் முழுமை அடையவில்லை,” என்று ஒபாமா குறிப்பிட்டார். அதேவேளையில் கிளிண்டன், “இந்த போராட்டம் தொடரும், நாம் இதை ஒருபோதும் கைவிடப்போவதில்லை,” என்றார்.

பின்லேடனைத் தேடுதல் என்ற பெயரில் நடத்தப்பட்ட வேட்டை ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு போலிக்காரணமாக உதவியதைப் போலவே, அவரின் மரணமும் அந்த நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் மீது ஆழமடைந்துவரும் விவாதத்தில் குறிப்பிட்ட தந்திரோபாய மாற்றங்களைச் செய்ய பயன்படுத்தப்படக்கூடும். தாலிபானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்படும் என்று கிளிண்டன் அவருடைய குறிப்புகளில் குறிப்பிட்டார்.  

அமெரிக்க ஏகாதிபத்தியம், மத்திய கிழக்கிலும், வட ஆபிரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும்அல்கொய்தா மற்றும் பின்லேடனை விட மிகவும் சக்திவாய்ந்த எதிரியை எதிர்கொள்கிறது. துனிசியா, எகிப்து, யேமன், பஹ்ரெயின் மற்றும் வேறிடங்களிலும் எழும் எழுச்சிகள் உலக முதலாளித்துவம் மற்றும் தேசிய ஆளும் மேற்தட்டுக்களால் திணிக்கப்பட்ட பாரிய வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமூக சமத்துவமின்மைக்கு எதிராக போராடும் நிலைக்கு தொழிலாள வர்க்கத்தைத் தள்ளியுள்ளது.

அமெரிக்காவிலேயே கூட, “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்" ஒரு தசாப்த காலத்திற்குள் அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடி இன்னும் ஆழமாக வளர்ந்துள்ளது. அதேவேளை அமெரிக்க தொழிலாள வர்க்கம் அதன் வாழ்க்கை தரங்கள் மற்றும் சமூக நிலைமைகளில் ஓர் ஆழமான சீரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இரண்டு பிரதான கட்சிகளின் அரசியல்வாதிகளும் பெரும் புதிய வெட்டுக்களைக் கோரி வருகின்றனர்.

தற்காலிகமாக ஒசாமா பின்லேடனின் படுகொலையை ஊடகங்களின்  உதவியுடன் பெரும்வெற்றி உணர்வாக உருவாக்கி காட்டிவரும் நிலைமையானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் தவிர்க்கமுடியாமல் அதிகரித்துவரும் வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சிகர எதிர்ப்புகளால் விரைவில் மழுங்கடிக்கப்பட்டுவிடும்.