World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Canada on the brink of mass social struggles

கனடா பாரிய சமூகப் போராட்டங்களின் விளிம்பில் நிற்கிறது

Keith Jones
5 May 2011
Back to screen version

மே 2 தேர்தலில் ஸ்டீபன் ஹார்ப்பரையும் அவரது கன்சர்வேடிவ் கட்சியையும் ஒரு பெரும்பான்மை அரசாங்கம் அமைக்கத் தள்ளியிருக்கும் கனடா நாட்டின் ஆளும் மேற்தட்டு அதன் நோக்கம் தொழிலாளர்களை இருபதாம் நூற்றாண்டின் அநேக காலத்திற்குக் கண்டிராத வர்க்க ஒடுக்குமுறை நிலைமைகளுக்குத் திரும்பத் தள்ளுவது தான் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் மற்ற முக்கிய தொழிற்துறைமயமான நாடுகளைப் போலவே கனடாவும் வெடிப்புமிகுந்த வர்க்கப் போராட்டங்களின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் காட்டுவதைப் போல முதலாளித்துவத்தின் சமூகப் பிற்போக்குத்தனமான வேலைத்திட்டம் வாக்காளர்களில் பெரும்பான்மையோரின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது. கன்சர்வேடிவ் கட்சியினர் கனடா மக்களவையில் 54 சதவீத இடங்களை கொண்டிருக்கின்ற அதே சமயத்தில், அவர்கள் உண்மையில் வாக்காளர்களில் கால்வாசிக்கும் குறைவான வாக்குகளையே ஆதரவாகப் பெற்றிருந்தனர்.

ஹார்ப்பர் வென்ற வாக்குகள், ’முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியினர்’ மற்றும் தீவிர வலது சீர்திருத்த/கனேடிய கூட்டணி ஆகியோரின் எச்சசொச்சங்கள் இணைந்து உருவான கன்சர்வேடிவ் கட்சி மிதவாதிகள் என்று கூறிக் கொள்கின்ற ஒரு அரசியல் மோசடியை, அடிப்படையாகக் கொண்டு பெற்றதாகும். ஹார்ப்பரின் கொள்கைகளின் தன்மை குறித்த எச்சரிக்கைகள் எல்லாம் ஒரு “மறைமுகத் திட்டம்” குறித்த சதித் தத்துவங்களாக நிராகரிக்கப்பட்டன.

எப்படியிருந்தபோதிலும் கனடாவின் ஆளும் வர்க்கம் ஹார்பரின் பிற்போக்குத்தனமான திட்டத்தை மறைக்கவில்லை, மாறாக அதனைப் பகட்டாகப் தற்பெருமையுடன் காட்டிக் கொண்டிருக்கிறது.

திட்டமிட்ட வகையில் “தாக்குப் பிடிக்க முடியாது” இருக்கும் ஒட்டுமொத்த மக்கள் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான மெடிக்கேர் திட்டத்தை இல்லாதொழிக்க கனடாவின் பெரு வணிகங்கள் உரக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றன. கனடா வங்கியின் முன்னாள் ஆளுநர் இணைந்து தயாரித்து, பெருநிறுவன ஊடகங்கள் வேகமாய் வழிமொழிந்த அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியானது. மெடிக்கேர் “செலவு என்கிற நாள்பட்ட நோயால்” பாதிக்கப்பட்டுள்ளதாய் அது கூறுகிறது.

விரிவெல்லையைக் குறைப்பது மற்றும் தனியார்மயமாக்கம் இவை இரண்டும் இணைந்த நடவடிக்கைகளின் மூலமாக ஆரோக்கியப் பராமரிப்பை வழங்குவதற்கான பொறுப்பு அரசிடம் இருந்து தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மாற்றப்படவுள்ளது. தயாரிக்கப்பட்டு வரும் இந்தத் தாக்குதல்களின் அளவு கனேடிய முதலாளித்துவத்தின் திட்டங்களில் இருந்து மட்டும் வெளிப்படவில்லை, சர்வதேசரீதியாக அறிவிக்கப்பட்டு வரும் இதே போன்ற வெட்டுகளாலும் வெளிப்படுகிறது. பழைய தொழிற்துறைமயப்பட்ட சக்திகள் அனைத்திலுமே, 2008 பொறிவுக்கும் உலகளாவிய வீழ்ச்சிக்கும் முதலாளித்துவம் எப்படி பதிலிறுப்பு செய்துள்ளது என்றால் கடந்த நூற்றாண்டில் மிகப் பிரம்மாண்டமான சமூகப் போராட்டங்களின் மூலமாக பெரு வணிகங்களிடம் இருந்து தொழிலாளர்கள் பறித்த சமூக நலன்களில் எஞ்சியுள்ளவற்றை அழிக்க முயல்வதின் மூலமாகத் தான்.

ஐரோப்பாவில், பொது நிதியில் இருந்து அளிக்கப்பட்ட வங்கிப் பிணையெடுப்புத் தொகைகள் தொழிலாளர்கள் மீது கடுமையான சமூக வெட்டுகளைத் திணிப்பதற்கு (கிரீஸ் நாட்டின் தொழிலாளர்கள் இந்த வெட்டுகளின் விளைவாக தங்கள் வருவாயில் 30 சதவீதத்தை இழந்துள்ளதாய் கூறப்படுகிறது) சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், யூரோவின் நிலைகுலைவு குறித்த விவாதம் அதிகமுற்று வருகிறது.

அமெரிக்காவில், எந்தக் கேள்வியும் கேட்காமல் டிரில்லியன் கணக்கான டாலர்கள் தொகையை வால் ஸ்ட்ரீட் குற்றவாளிகளுக்கு கையளித்த பின்னர், இரண்டு பெருவணிகக் கட்சிகளுமே மெடிக்கேர் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தில் முன்கண்டிராத வெட்டுகளைச் செய்வதற்குத் தயாரிப்பு செய்து வருகின்றன.

கனேடிய முதலாளித்துவத்திற்கும் இதே திட்டம் தான். அதன் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், இலாபங்கள், சந்தைகள் மற்றும் மூலோபாயச் செல்வாக்கிற்கான உலகளாவிய போட்டியில் அது முன்னே நிற்க வேண்டுமென்றால் அது இப்படிச் செய்வதைத் தவிர வேறொன்றும் இயலாது. ஆனால், கனடாவின் மூலதனம் தெற்குப் பகுதிக்கு தன்னுடைய கடிவாளமில்லாத அமெரிக்க அண்ணனைக் காட்டிலும் சற்று இரக்கமான, கூடுதல் நாகரிகமான ஆளாகக் காட்டிக் கொள்ள முடிந்த காலம் முடிந்து விட்டது என்பதே இதன் அர்த்தமாகும்.

உலக முதலாளித்துவ அமைப்பின் நிலத்திற்குக் கீழான அடுக்குகளின் நகர்வுகள், கனேடிய ஆளும் வர்க்கத்தை, அதன் இலாபங்களை அதிகரிப்பதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான நெருக்கமான உறவுகளில் இருந்து பாயக் கூடிய மூலோபாய அனுகூலங்களைப் பராமரிப்பதற்கும், சமூகப் பிற்போக்குத்தனம் மற்றும் போரை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கம் அரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு கனேடிய ஆயுதப் படைகளை (CAF) விரிவாக்குவது மற்றும் மறுஆயுதபாணியாக்குவது மூலம் கனடாவின் ஏகாதிபத்தியம் பதிலிறுப்பு செய்து கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவிற்கு எதிரான போர்களில் CAF இப்போது ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகித்துக் கொண்டிருக்கிறது. கனடாவின் மூலதனத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகளின் உத்தரவின் பேரில், கண்டப் பாதுகாப்பு சுற்றளவு (Continental Security Perimeter) என்பதற்குத் தலைமை முன்னுரிமை என்பதான வடிவத்தில் அமெரிக்காவுடன் இன்னும் நெருக்கமான ஒரு கூட்டுக்கு ஹார்ப்பர் பேரம் பேசி வந்திருக்கிறார்.   

தங்கள் திட்டம் எதிர்ப்பைச் சம்பாதிக்கும் என்பது ஆளும் மேற்தட்டிற்கு நன்றாகத் தெரியும். உதாரணமாக மெடிக்கேர் திட்டத்திற்கான மக்களின் ஆதரவு குறித்து புகார் கூறும் கருத்துகள் கனடாவின் செய்தித்தாள்களில் நிரம்பி வழிகின்றன. குளோப் மற்றும் மெயில் என்கிற கனடாவின் உத்தியோகபூர்வமான செய்தித்தாள் ஹார்ப்பரின் “தீரத்திற்காக” அதாவது மக்கள் எதிர்த்தாலும் ஜனநாயக உரிமைகளை எதிர்த்து அந்த முடிவெடுக்க அவர் தயாராய் இருந்தமைக்காக அவரைப் பாராட்டியுள்ளது.

2008 டிசம்பரில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்து ஒரு லிபரல்-தலைமையிலான கூட்டணியால் இடம்பெயர்த்தப்படாமல் தவிர்ப்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத கவர்னர்-ஜெனரலின் தன்னிச்சையான அதிகாரங்களை அவர் பயன்படுத்திக் கொண்டது இந்தத் தீரத்திற்கு மிக முக்கியமானதொரு உதாரணமாகும். உலகின் ஏழாவது பெரும் பணக்காரரான டேவிட் தாம்சனுக்குச் சொந்தமான தி குளோப் பத்திரிகையும் கனேடிய மூலதனத்தின் மிகச் சக்திவாய்ந்த பிரிவுகள் அனைத்தும் இந்த அரசியல்சட்டக் கவிழ்ப்பை ஆதரித்தன. அப்போது தான் அவர்கள் பொருத்தமற்றதாய் கருதும் ஒரு அரசாங்கம் அதிகாரத்துக்கு வருவதை அவர்கள் தடுக்க முடியும்.

இந்தத் திட்டம் ஆளும் வர்க்கத்தை தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதல் பாதையில் நிறுத்துவதோடு, புரட்சிகரப் போராட்டங்களை அரசியல் திட்டநிரலில் இடம்பெறச் செய்கிறது.

இந்த விடயத்தில், சென்ற ஜூன் மாதத்தில் டோரோண்டோவில் ஜி20 மாநாட்டின் போது ஹார்ப்பர் அரசாங்கம் நடாத்திய அரச சீண்டல் புதிய அர்த்தத்தை எடுக்கிறது. போலிசார் நூற்றுக்கணக்கானோரை காரணமின்றிக் கைதுசெய்ததோடு அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறையைக் கையிலெடுத்துத் தாக்கினர். ஹார்ப்பரின் கூட்டாளியான டோரோண்டோ மே ராப் ஃபோர்டு, தனது தனியார்மயமாக்கத் திட்டங்களைச் செலுத்த கருங்காலிகளைப் பயன்படுத்த தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார். டோரோண்டோ தினசரிகளின் பக்கங்களில் “பிரெஞ்சு பாணியில்” மக்கள் எதிர்ப்புகளுக்கு தயாரிப்பு நடந்து வருவதாக விவாதங்கள் கூறுகின்றன.

அரசியல் தலைமை இன்றி இருப்பது தான் தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் மையமான அரசியல் பிரச்சினை ஆகும். நடப்புத் தேர்தலில், ஹார்ப்பரின் திட்டங்களுக்கான மக்களின் வெறுப்பு சமூக ஜனநாயகக் கட்சியான NDPக்கு கணிசமான வாக்குகளின் வடிவத்தை எடுத்தது. நான்காவது இடத்தில் இருந்ததில் இருந்து உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக பாய்ந்து வந்திருக்கிறது, 64 கூடுதல் தொகுதிகளை வென்றுள்ளது. இதுவரை ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமே கொண்டிருந்த கியூபெக்கில் 57 பேரை வென்றிருப்பதும் இதில் அடங்கும்.

ஆனால் தொழிலாள வர்க்கத்தின் அதிகரிக்கும் அரசியல் அதிருப்தியால் பலனடைவதற்குக் கொஞ்சமும் தகுதியற்ற கட்சி தான் NDP ஆகும். தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கட்சியான NDP அரசியல்ரீதியாக தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்கு ஒரு கருவியாக இருக்கிறது.

உலகெங்கும் இருக்கும் சமூக ஜனநாயகக் கட்சிகளைப் போலவே NDPயும் வெகுகாலத்திற்கு முன்பே தனது சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தையும் கூட மறுதலித்து விட்டது. இரண்டு வருடத்துக்கும் குறைவானதொரு காலத்துக்கு முன்பாகத் தான், ஆப்கானிஸ்தானில் போரை நடத்துவதற்கும் “நிதிப் பொறுப்பை” தனது முதல் கோட்பாடாய்க் கொண்டு ஹார்ப்பரின் பெருநிறுவன வரிக் குறைப்புகளை அமல்படுத்துவதற்கும் உறுதிபூண்டிருந்த லிபரல்-தலைமையிலான கூட்டணியில் குட்டிக் கூட்டாளியாய் சேவை செய்ய அது தயாராய் இருந்தது.

நடந்து முடிந்திருக்கும் தேர்தலுக்கான தனது களமாக, கன்சர்வேடிவ்களின் அதே காலச் சட்டகத்தில் நிதிநிலையை சமநிலைப்படுத்த அது வாக்குறுதியளித்தது. பணக்காரர்களின் மீது வரி அதிகரிப்பு இல்லாமலும் இராணுவச் செலவினத்தை நடப்பு அளவுகளில் (உண்மையில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தின் மிகப் பெரும் அளவு) பராமரிக்கவும் அது ஆலோசனையளித்தது.

கனடாவில் உள்ள தொழிலாள வர்க்கம் உலகெங்கும் போலவே போராட்டத்துக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது, அது தீரமுடனும் தளர்ச்சியின்றியும் போராடும். ஆனால் அது தாக்குப் பிடிக்க வேண்டும் அதோடு கடந்த மூன்று தசாப்தங்களில் பழையபடி திரும்புவதான நிலைமைகளில் கண்டதை விட மிகப் பெரும் பின்விளைவுகளைத் தரக் கூடிய தோல்வியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், முதலாளித்துவ இலாப அமைப்புமுறையை நிராகரிப்பது மற்றும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் பொதுவான நலன்களை தனது போராட்டத்தின் அடிப்படையாகக் கொள்வது ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு புதிய முன்னோக்கினை அது உருவாக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் இந்த முன்னோக்கிற்காகப் போராடுவதைத் தான் கனடாவின் சோசலிச சமத்துவக் கட்சி தனது அடிப்படைப் பணியாக அமைத்துக் கொண்டிருக்கிறது. ஆலை மூடல்கள் மற்றும் சமூக வெட்டுகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் பல போராட்டங்கள், பொருளாதார வாழ்க்கையை இலாபத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைக்காமல் சமூகத் தேவையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கின்ற தொழிலாளர்’ அரசாங்கங்களை கனடாவிலும் மற்றும் உலகெங்கிலும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்.