World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The death agony of American democracy

அமெரிக்க ஜனநாயகத்தின் மரண ஓலம்

David North
9 May 2011
Back to screen version

கடந்த வாரம் முழுவதும், ஒபாமா நிர்வாகமும் ஊடகங்களும் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது பற்றி அமெரிக்க மக்களிடையே உற்சாகமூட்ட முயற்சித்தன. பின்லேடனின் மரணம் குறித்து அறிவித்த அவருடைய உரையை ஒபாமா முடித்த உடனேயே, ஊடக ஒளிபரப்புகள் உடனடியாக வெள்ளை மாளிகைக்கு வெளியில் அந்த செய்தியைக் தன்னியல்பாக கொண்டாடிக்கொண்டிருந்த மாணவர்களின் காட்சியை ஒளிபரப்பியது. மதுப்புட்டிகளும், மக்கள் போதையில் இருந்ததன் அறிகுறிகளும் இருந்தபோதினும் கூட, அக்காட்சியின் "சிறப்பார்ந்த" மதிப்பின் தீவிரம் குறைந்தே தான் இருந்தது. அந்த படுகொலைக்கு மக்களின் ஆதரவு பொங்கி வழிவதைப் போல எடுத்துக்காட்ட, அது மிக வெளிப்படையாகவே முனைந்திருந்தது.         

உண்மையில் பின்லேடனின் படுகொலை அமெரிக்காவின் பரந்த மக்கள் மத்தியில் மிகச் சிறியளவில் அறிகுறிகளைக் கொண்டிருந்தது. ஆனால் அவற்றில் எதுவும் ஊடகங்களில் காட்டப்பட்ட மூர்க்கத்தனமான உற்சாகமளவிற்கு இருக்கவில்லை. சில ஊதிப்பெரிதாக்கப்பட்ட சம்பவங்களைத் தவிர, பொதுவாக அவர்கள் வாழும் வாழ்க்கையை விட அமெரிக்க மக்கள் கடந்த வாரம் இன்னும் அதிகப்படியான பிரச்சினைகளுடன் தான் வாழ்ந்தார்கள். அவர்கள் பின்லேடனின் மரணத்திற்காக வருந்தவில்லை. ஆனால் அவரின் கொலைக்காக ஊடகங்கள் கொண்டாடும் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க, அவர்கள் எந்த காரணத்தையும் காணவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் மக்களின் ஜனநாயக நனவை துடைத்தழிக்க செய்த அனைத்து முயற்சிகளின் பின்னரும், அது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. “இலக்காக்கப்பட்டு கொல்லும்" நடைமுறை ஒன்றும் மக்கள் விரும்பும் ஒரு விஷயமல்ல.       

மக்களின் அதிருப்தியை உணர்ந்திருக்க வேண்டிய ஊடகங்கள், அதிகப்படியான விரோத மனோபாவத்துடன் விடையிறுத்துள்ளன. நியூயோர்க் டைம்ஸில் ''தீமையைக்கொல்வது எம்மை தீயவராக்கவில்லை'' (“Killing Evil Doesn’t Make Us Evil”) என்ற தலைப்பில் ஞாயிறன்று வெளியான ஒரு கட்டுரையில், பின்லேடன் படுகொலையில் இருக்கும் சட்டபூர்வதன்மை குறித்த மக்களின் சந்தேக உணர்வுகளை மௌரீன் டௌட் விளாசித்தள்ளி இருந்தார். அந்த படுகொலை சட்டத்திற்குட்பட்டதா என்பதன்மீதான விவாதத்தை "மூடத்தனமான விவாதமென்று" அந்த பெண்மணி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். “எனக்கு நினைவுகள் வேண்டும்; நியாயம் வேண்டும்; பழிக்குப்பழி வாங்க வேண்டும்,” என்றவர் கூவினார். ஜனநாயக கோட்பாடுகளுக்குள் உள்ளார்ந்திருக்கும் ஒரு கருத்தியலான (ideal) நியாயத்திற்கும், விசாரணையின்றி கொல்லும் அதிரடிப்படைகளை அனுப்பிய பழிக்குப்பழிவாங்கும் நடவடிக்கைக்கும் இடையில் ஓர் அடிப்படையான பொருத்தமின்மை உள்ளது என்பதை திருமதி. டௌட் உணர்ந்திருக்கவில்லை.       

எல்லா கொலையும் ஒரேமாதிரியானது தான் என்பதால், ஒசாமாவைக் கொல்வது நம்மையும் ஒசாமாவைப் போல ஆக்குகிறது என்றுரைப்பது உண்மையிலேயே சில இரண்டாந்தர ஊகங்களுக்குப் பின்னாலிருக்கும் பு்த்திகுறைந்த போலிக்கருத்தாகும்,” என்று டௌட் தொடர்கிறார்

டௌட் அவருடைய கருத்தின் எதிர்ப்பொருளை தவறவிட்டுள்ளார். உண்மையில் படுகொலையென்பது மிகவும் பிரத்தியேகமானதாகவும், சட்டவிரோதமான கொலையாகவும் உள்ளது. அந்த நடவடிக்கை உச்சபட்ச ஜனநாயக விதிமீறல்களாகவும், சட்டமீறல்களாகவும் கருதப்படுவதால், ஓர் அரசு குறிப்பாக அமெரிக்க அரசு அதை நடைமுறையில் கொள்வதென்பது நீண்டகால அரசியல் தாக்கங்களைக் கொண்டிருக்கும். 1960களில் அரசியல் படுகொலைகளில் அமெரிக்க ஈடுபட்டிருந்தமை, நிக்சன் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த குற்றத்தன்மைக்கும், அமெரிக்காவின் ஜனநாயக உரிமைகளை அது மீறியதற்கும் இட்டுச்சென்ற சட்டவிரோத நடவடிக்கை வடிவங்களின் ஒரு பாகமாக இருந்தது

பிரான்க் சர்ச் தலைமையில் வெளியிடப்பட்ட பிரபலமான 'செனட் குழுவின் 1976 அறிக்கை', வெளிப்படையாகவே, படுகொலைகள் "அமெரிக்க கோட்பாடுகள், சர்வதேச நெறிமுறைகள், மற்றும் நீதிநெறிகளுக்குப் பொருத்தமாக இல்லையென்று" அவற்றை கண்டித்தது.

படுகொலையின் குற்றங்குறைகளைத் தெளிவாக அறிந்திருக்கும் ஒபாமா நிர்வாகம், ஒரு மூர்க்கத்தனமான துப்பாக்கிச்சண்டையில் அவர் கொல்லப்பட்டதாகவும், அவர் அவருடைய கையில் ஆயுதமேந்திய நிலையில் மரணத்தை சந்தித்ததாகவும் கூறி, பின்லேடன் படுகொலையில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் ஒரு சட்டப்பூர்வமான பிரச்சினைகளைத் தவிர்க்க முயற்சித்தார். கடந்த வாரத்தின் போது, இந்த ஆரம்பகட்ட விளக்கம் கைவிடப்பட்டது. அங்கே துப்பாக்கிச்சண்டையும் நடக்கவில்லை, பின்லேடனும் ஆயுதமேந்தி இருக்கவில்லை

2005இல் ஒசாமா பின்லேடனை குறிவைத்தல்: அமெரிக்க வெளிநாட்டு கொள்கையில் படுகொலையை பயன்படுத்துவதன் சட்டபூர்வதன்மையை ஆராய்தல்(Targeting Osama Bin Laden: Examining the Legality of Assassination as a Tool of US Foreign Policy”) என்ற தலைப்பில் Duke Law Review இல் வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்ததைப் போல, சட்டத்தின் மிக எளிமையான விளக்கத்திலும் கூட, பின்லேடனின் உண்மையான மரண சூழல் ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டிக்கிறது. யுத்த நிலைமைகளின்கீழ் படுகொலைகள் நியாயமானவையா என்பதை ஆராயும் ஒரு தலையங்கத்தில் அந்த கட்டுரை ஆசிரியர் ஹோவர்ட் . வாட்ச்டெல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “எடுத்துக்காட்டாக, ஒசாமா பின்லேடன் சரணடையும் நிலையில் இருந்தால், ஓர் அமெரிக்க இராணுவ சிப்பாய் அவரைக் கொல்வதென்பது சட்டவிரோதமாகும்.” ஆனால் என்ன நடந்ததோ, அது அப்படியே துல்லியமாக இருப்பதைப் போல் தோன்றுகிறது.

எந்தவொரு சம்பவத்திலும், டௌட் கொல்வதற்கு ஆதரவளிக்கும் அவருடைய வாதத்தை சட்டத்தின் நுட்பமான நுணுக்கங்களின் அடிப்படையிலும் கூட கொண்டு வர முயற்சிக்கவில்லை. அந்த வெறுப்பு நடவடிக்கை வெறுமனே எதனோடு சம்பந்தப்பட்டது என்பதையும் கூட அவர் பார்க்கவில்லை. சட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லையென்றால், படுகொலை குறித்த விவாதங்கள் "அர்த்தமற்றவையென்று" என்றவர் எழுதுகிறார். அந்த விஷயத்தில் நியூயோர்க் டைம்ஸூம் அவ்வாறே எழுதுகிறது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இராணுவ தலைவர் அபு ஜிஹாத் என்றழைக்கப்பட்ட கலீல் அல்-வஜீரை இஸ்ரேல் அரசு படுகொலை செய்ததற்கு, 1988 ஏப்ரலில் டைம்ஸ் காட்டிய பிரதிபலிப்பை நினைவுகூர்வது மதிப்புடையதாக இருக்கும். அந்த படுகொலைக்கு இஸ்ரேல் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை என்றபோதினும் கூட, அபு ஜிஹாத்தின் படுகொலைக்கு ஷமீர் அரசாங்கமே உத்தரவிட்டிருந்ததாக கருதப்பட்டது. காசா மற்றும் மேற்குகரையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் பாலஸ்தீன எழுச்சிகளுக்கு வழிகாட்டிய மற்றும் ஒருங்கிணைத்த ஒரு "பயங்கரவாத" தலைவருக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு முறைமையாக அந்த நடவடிக்கையை ஷமீர் அரசாங்கம் உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகளில் நியாயப்படுத்தியது.   

ஒரு கோபமான கருத்துரையில், நியூயோர்க் டைம்ஸின் அப்போதைய பிரதான தலையங்க ஆசிரியராக இருந்த டோம் விக்கர், அந்த படுகொலை "சட்டமீறலாகும்ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் கீழ்படியும் ஓர் அரசாங்கம் ஒரு நாகரீகமான நடவடிக்கையைக் கோருகிறது,” என்று அறிவித்தார். "இஸ்ரேலின் மிக உயர்ந்த, மிக பொறுப்புவாய்ந்த தலைவர்கள் ஓர் அரசியல் படுகொலைக்கு திட்டவட்டமாக ஒப்புதல் அளிக்கும் கருத்திற்கு" அவர் அவருடைய கவலையை வெளியிட்டார்.    

படுகொலை செய்வதற்குரிய ஒரு நியாயப்பாடாக, "சமரசமற்ற எதிரிகளால் சூழப்பட்ட நிலைமையில், தோற்றப்பாட்டளவில் ஒரு யுத்த அரசாக இஸ்ரேல் வாழ்ந்து கொண்டிருக்கிறது" என்ற வாதத்தை விக்கரின் தலையங்கம் நிராகரித்தது. “திட்டமிட்ட படுகொலையென்பது பயங்கரவாதத்தின் கருவியாகும். அது ஒரு நாகரீகமான சமூகங்களின் கருவியல்ல. அவ்விஷயத்தில் அது எப்போதும் சட்டவிரோதமானதும், மனிததன்மையற்றதும், நீதிநெறி தவறியதுமாகும்,” என்று அவர் அறிவித்தார்.

விக்கரால் வெளியிடப்பட்ட உணர்வுகளை இன்றைய ஊடக அமைப்புகளில் காண முடியவில்லை. கடந்த கால்-நூற்றாண்டு அமெரிக்க ஆளும் மேற்தட்டின் ஜனநாயக பொறுப்புணர்வுகள் சிதைந்து போயிருப்பதைக் காட்டுகின்றன.

அமெரிக்காவிற்கு பயங்கரவாதத்தால் மறைமுகமாக முன்னிறுத்தப்பட்டிருக்கும் "அச்சுறுத்தல்", இந்த பொய்களுக்கான காரணமல்ல. 9/11 சம்பவத்திற்கு முன்னரே கூட, அமெரிக்க ஜனநாயகம் ஏற்கனவே சிதைவு நிலைக்கு வந்துவிட்டிருந்தது. 1990களின் இறுதியில், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மீது எழுந்த ஓர் அவதூறுக்காக (கிளிண்டன் மீது சுமத்தப்பட்ட வழக்கு) அவரை சதிமூலம் பதவியிலிருந்து இறக்க முடியவில்லை. மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளை, அதாவது தங்களின் வாக்குகள் எண்ணப்பட வேண்டுமென்ற குடிமக்களின் உரிமையை உச்சநீதிமன்றம் ஒடுக்கியதோடு, 2000ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்கு வந்தது.  

புரியாத புதிராக மூடிமறைக்கப்பட்டிருக்கும் ஒரு நாளான செப்டம்பர் 11ஆம் தேதியால் (9/11), ஜனநாயகத்தின் சீரழிவு இன்னும் அதிகரிக்கப்பட்டது. பெரும் பொய்களின் அடிப்படையில் யுத்தங்கள் தொடங்கப்பட்டன. அரசியலமைப்பு கோட்பாடுகள் மற்றும் உரிமைகளை அகற்றுவதை நியாயப்படுத்த கடந்த தசாப்தம் முழுவதும் முடிவில்லாமல், போலித்தனமான பயங்கரவாத அச்சுறுத்தல் தூண்டிவிடப்பட்டிருந்தது.

இந்த பிற்போக்குத்தனமான நிகழ்முறைக்குக் காரணம் என்ன? ஒரு சிறிய மேற்தட்டிடம் திரண்டிருக்கும் பெரும் செல்வ திரட்சிக்கும், ஜனநாயகத்தின் மீது அதற்கிருக்கும் கொடூரமான விரோதத்திற்கும் இடையிலிருக்கும் தொடர்பைத் தவறவிடுவதானால், ஒருவர் குருடாகத் தான் இருக்க வேண்டும்.

இந்த சூழலில், நியூயோர்க் டைம்ஸில் கடந்த வாரம் '' ஆன்மீக நித்தியவாதத்தின் அரசியல்''(The Politics of Solipsism) என்ற தலைப்பில் தலையங்க எழுத்தாளர் டேவிட் புரூக்ஸால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட மற்றொரு கட்டுரையைக் கணக்கில் எடுப்பதும் அவசியமாகிறது. அக்கட்டுரை, ஒரு குடியரசை ஸ்தாபிப்பவர்களின் கண்ணோட்டத்தில் இருக்கும் நெறிப்பிறழ்வாக ஜனநாயகத்தை அறிவிக்கிறது. “ஒரு குடியரசிற்கும், ஒரு ஜனநாயகத்திற்கும் இடையிலான வித்தியாசம் கடந்த சில தசாப்தங்களில் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அது முக்கியமான ஒன்றாகும்,” என்று அத்தலையங்கம் அறிவிக்கிறது.

புரூக் மேலும் தொடர்ந்து எழுதுகையில், “கடந்த பல ஆண்டுகளில், ஜனநாயக கோட்பாடுகள் குடியரசு கோட்பாடுகளை முழுங்கிவிட்டன. ஜனநாயகமற்றது மற்றும் சட்டநெறிமுறையற்றது என்று கூறிக்கொண்டு, வெகுஜன விருப்பங்களின் பாதையில் நிற்கும் எந்த அமைப்போடும் நாங்கள் இப்போது பொறுமை இழந்துவிட்டோம்,” என்கிறார்.

புரூக் அவர் விசனப்படும் ஜனநாயகப்படுத்தும் நிகழ்போக்கு பற்றி தெளிவில்லாமல் இருக்கிறார். அவர் "கடந்த சில தசாப்தங்கள்" என்றும், “கடந்த சில ஆண்டுகள்" என்றும் மட்டும் தான் பேசுகிறார். உண்மையில் "உயிர் வாழ்வு, சுதந்திரம், மகிழ்ச்சிக்கான தேடல்" ஆகியவை மறுக்கமுடியாத உரிமைகளாகும் என்று அறிவித்த, ஜெஃப்ர்சனின் சுதந்திர பிரகடனத்திலிருந்து அதன் தூண்டுதலை பெற்ற ஒட்டுமொத்த ஜனநாயக பாரம்பரியத்தையும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இன்னும் வரலாற்றுரீதியாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், டைம்ஸின் அரசியல் மெய்யியலாளராக சேவையாற்றி வரும் புரூக், “மக்களின் அரசாங்கம், மக்களுக்கான அரசாங்கம், மக்களால் நடத்தப்படும் அரசாங்கம்" என்ற தம்முடைய முன்மொழியை வரையறுத்த லிங்கனால் ஜெட்டிஸ்பெர்க்கில் வலியுறுத்தப்பட்ட "சுதந்திரத்தின் புதிய பிறப்பு" என்பதை நோக்கி அவருடைய துப்பாக்கியைத் திருப்புகிறார். பலமான ஜனநாயக கண்ணோட்டத்தைப் பொறுத்த வரையில், புரூக் ஆழ்ந்த வெறுப்பை மட்டும் தான் உணர்கிறார். “ஒரு வியாபாரம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதைப் போல தான், ஓர் அரசியல்வாதி வாக்காளர்களுக்கு தங்களின் கடமையை செய்ய நினைக்கிறார்,” என்றவர் எழுதுகிறார்.  

நிதியியல் மற்றும் பெருநிறுவன பிரபுத்துவம் கோரிவரும் சமூக செலவினங்களின் பெரும் வெட்டுக்களுக்கு எதிராக எழுகின்ற மக்கள் எதிர்ப்பு தான், ஜனநாயகத்திற்கு எதிரான புரூக் வசைமாரி பொழிவதற்கு உடனடிக் காரணமாகும். வாக்காளர்கள் அவர்களது உரிமையை  தற்போது நடைமுறைப்படுத்தும் விருப்பத்தை  கட்டுப்படுத்தும் அமைப்புரீதியான ஒழுங்குமுறைகளை அங்கீகரித்துக்கொள்ள வேண்டும்.” அரசியல்வாதிகள் வாக்காளர்களின் உடனடி தேவைகளை இன்னமும் பூர்த்தி செய்து கொண்டிருக்க முடியாது" என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார்.

இங்கே நாம் வெறுமனே தனிப்பட்ட எழுத்தாளர்களின் கட்டுரைகளைக் கையாளவில்லை. டைம்ஸ் இதழில் தலையங்கம் எழுதுபவர்கள், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஆழமான பிற்போக்குத்தனமான அரசியல் மனோபாவத்திற்கும், போக்குகளுக்கும் வெளிப்பாட்டை அளித்து வருகிறார்கள். ஜனநாயகத்திற்கான அதன் பொறுப்புணர்வு மறைந்து வருகிறது. அது உள்நாட்டிலும் முடிவில்லா வெளிநாட்டு வன்முறைகளில் இருந்தும் குற்றவியல்தனமாக நிதியியல் மோசடிகளின் மூலமாக பெறப்பட்ட அதன் செல்வவளத்தைத் திரட்டுவதிலும், பாதுகாப்பதிலும் தான் மும்முரமாக உள்ளது

அமெரிக்க எல்லைகளுக்கு வெளியில், கடந்த தசாப்தத்தின் போது அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மில்லியன்களில் இல்லையென்றாலும் நூறு ஆயிரக்கணக்கில் உள்ளனர். அமெரிக்காவிற்குள்ளும் கூட, தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை வறுமையில் தள்ள அச்சுறுத்தும் ஒரு சமூக எதிர்புரட்சியை ஆளும் வர்க்கம் தீவிரப்படுத்தி வருகிறது.

எல்லையில்லா வன்முறை, சட்டமீறல், ஜனநாயக ஒடுக்குமுறை என்பவைதான் சமகாலத்திய அமெரிக்க முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனமான துன்பியல்

ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பு மற்றும் சமூக பிற்போக்குதனத்தைத் தோற்கடிப்பதென்பது ஒரு சர்வதேச சோசலிச திட்டத்தின் அடித்தளத்தில் தொழிலாளர் வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஒன்றுதிரட்டுவதைச் சார்ந்துள்ளதுசோசலிச சமத்துவக் கட்சி இந்தக் கடமையை செய்ய தன்னை அர்ப்பணித்துள்ளது