World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

What way forward for Spain’s “angry ones”?

ஸ்பெயினின் கோபக்காரர்களின் முன்னாள் இருக்கும் வழி என்ன?

27 May 2011
Chris Marsden
Back to screen version

மே 15 அன்று ஸ்பெயினில் துவங்கிய பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் சோசலிஸ்டுக் கட்சி (PSOE) அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் மீதான தீவிரமான மக்கள் கோபத்தால் உந்தப்பட்டிருந்தது. கோபக்காரர்கள் (los indignados) என்று கூறப்படுவோரின் செறிந்த பகுதியாக இருக்கக் கூடிய 18 முதல் 25 வயது கொண்டோரிடையே பரவலான கஷ்ட நிலைமைகளும் 50 சதவீதத்திற்கு அண்ணளவான வேலைவாய்ப்பின்மை அளவும் இருந்து வருகின்ற நிலையில் தான் இந்தச் சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்படுகின்றன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்து பிரதானக் கட்சிகள், குறிப்பாக PSOE, மற்றும் தொழிற்சங்கங்களை நிராகரிக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்புகள் சென்ற ஆண்டு செப்டம்பர் 29 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ததற்குப் பிறகு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து எதுவும் செய்திருக்கவில்லை. அதேபோல் ஸ்டாலினிசத் தலைமையிலான ஐக்கிய இடதும் (IU) எழுச்சியுறும் சமூகப் போராட்டங்களினால் பலன் பெறவில்லை, ஏனென்றால் பிராந்திய மற்றும் உள்ளூர் அதிகாரங்களில் எங்கெல்லாம் இது ஒரு அடித்தளத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் வெட்டுகளை நிறைவேற்றுகிற ஒரு நெடிய வரலாற்றை இது கொண்டிருக்கிறது.

இந்த இயக்கம் உழைக்கும் மக்களிடையே கணிசமான ஆதரவை வென்றிருக்கிறது. சென்ற ஞாயிறன்று நடந்த பிராந்திய மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் கூட்டம் கூட்டமாய் PSOE யை நிராகரித்து தங்களது அரசியல் அந்நியப்படுதலை வெளிப்படுத்தினர். எந்தச் சின்னத்திற்கும் வழங்கப்படாத அல்லது செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமாய் இருந்தது.

அத்துடன் இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், மற்றும் பெல்ஜியம் என ஐரோப்பா முழுவதிலும் இது ஐக்கியத்தை வெளிப்படுத்தும் போராட்டங்களுக்கும் உத்வேகம் அளித்துள்ளது. இளைஞர் தலைமையிலான கிளர்ச்சி...தெற்கு ஐரோப்பா முழுவதிலும் பரவுகிறது....பிரதான அரசியல்வாதிகள் மீதான நிராகரிப்பு மற்றும் செலவின வெட்டுக்கள் மீதான கோபம் ஆகியவற்றால் இது ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது என்று கார்டியன் இதனை வருணித்தது.

ஸ்பெயினின் அரசியல் பூகம்பத்தில் இருந்து விளைந்த மிக முக்கியமான பின் அதிர்வு புதனன்று கிரீஸில் உணரப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியால் உத்தரவிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை சமூக ஜனநாயகக் கட்சியின் PASOK  அரசாங்கம் திணிப்பதை எதிர்த்து ஏதேன்ஸில் 15000 பேரும் நாடு முழுவதிலும் 30,000 பேரும் இங்கு ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றனர். திருடர்கள், திருடர்கள் என்றும், நெருக்கடியை உருவாக்கியவர்கள் வெளியே போகும் நேரம் வந்து விட்டது என்றும் கிரேக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். 

M-15 (மே-15) ஆர்ப்பாட்டங்கள் ஸ்பெயின் புரட்சி என அழைக்கப்படுகின்றன. ஆனால் அவர்களின் இப்போதைய நிலையில் விட்டால், ஒரு தெளிவான வேலைத்திட்டம், முன்னோக்கு மற்றும் அரசியல் தலைமை இல்லாமல், இந்த மக்கள் இயக்கமானது, ஐரோப்பிய வங்கிப் பிணையெடுப்புகளின் மற்றும் ஆழமடையும் மந்த நிலையின் முழுச் சுமையையும் உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்தும் தீர்மானத்துடன் உள்ள ஆளும் மேற்தட்டினரைத் தோற்கடிக்க பரிதாபமாக இயலாமையானதாக உள்ள நிலையே நிரூபணமாகும்.

போர்த்துக்கலில் மார்ச் மாதத்தில் தலைமுறையால் சுரண்டப்படும் (The Scraping-By Generation) வலைத்தளத்தால் அணிதிரட்டப்பட்டு பதினோரு நகரங்களில் 300,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தினர் என்பதை இங்கு நினைவுகூர்வது நல்லது. ஆனாலும் இன்று அந்த இயக்கம் காணாமல் போய் விட்டது, இத்தனைக்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட 78 பில்லியன் யூரோ பிணையெடுப்புக்குப் பிரதிபலனாக கடுமையான செலவின வெட்டுக்களையும் வரி அதிகரிப்புகளையும் திணிப்பதற்கு வாக்குறுதி அளிப்பதன் அடிப்படையில் தான் அனைத்துப் பிரதான கட்சிகளும் ஜூன் 5 பொதுத் தேர்தலில் வெல்லும் பொருட்டு போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.

உள்ளிருப்பு போராட்டங்களை முடிந்த அளவு தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதற்கு கோரிக்கைக்கு மேலாக வேறெதுவும் முன்னேற்றமடையாத  நிலையில் தங்களது போராட்டம் ஒரு முட்டுக்கட்டையான நிலையை எட்டிக் கொண்டிருப்பதாக பங்குபெறுவோரில் சிலரிடையே ஒரு எண்ணம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆயினும், அதிகமான நகரங்களில் அதிகமான போராட்டங்கள் என்பதைத் தாண்டி ஒரு அரசியல் திட்டநிரலை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்காக இயக்கத்தை கடத்திக் கைப்பற்றுவதற்கான ஒரு சூழல் வளர்த்தெடுக்கப்படுகிறது.

M-15 போராட்டங்கள் ஏராளமான இணையப் பிரச்சாரங்களால் தலைமை கொடுக்கப்படுகிறது, இவை அனைத்துமே கூட்டாகச் சேர்ந்து எந்தத் தலைமையும் இல்லை என்பதையும் இயக்கம் ஒரு அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பைக் கொண்டது என்பதையும் திட்டவட்டமாய் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், எந்தப் பிற குழுக்களும் அதன் அரசியலை ஆர்ப்பாட்டங்கள் மீது கட்டளையிடக் கூடாது என அவை வலியுறுத்துகின்றன. 

ஆயினும் சில குறிப்பிட்ட அரசியல் போக்குகள் வேலை செய்கின்றன. இப்போதைய உண்மையான ஜனநாயகம் (Real Democracy Now) என்ற அமைப்பு சென்ற தசாப்த காலத்தில் முன்னணி வட்டங்களில் வளர்த்தெடுக்கப்பட்டிருந்த பல்வேறு உலகமயமாக்கல் எதிர்ப்பு இயக்கங்களாலும் மற்றவற்றாலும் உந்தப்பட்டு, தொடர்ச்சியான சிறுசிறு சமூக மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்துகிறது. ஆனால் இன்று மில்லியன்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் முகம் கொடுக்கிற சிரமமான நிலைக்குப் பொறுப்பான அந்தக் கட்சிகளை மற்றும் அமைப்புகளை சவால் செய்வதில்லை. “nolesvotes” என்கிற இன்னொரு குழு பிரபலமான வணிகர்களின் உருவாக்கமாய் இருக்கிறது, இதில் ஒருவர் சமூக வலைப்பின்னல்களில் சம்பந்தப்பட்டவர்.

PSOE மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கான பொது மன்னிப்பாகக் கூறத்தக்க ஒன்றை பலப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் தயாராய் இருப்பது தான் புரட்சிகர மற்றும் சோசலிச அடையாளங்களைக் கூறித் தங்களை முன்னெடுக்கிற பல்வேறு முன்னாள்-இடது குழுக்களின் நிலையாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாய் இவர்கள் இந்த இயக்கத்தின் தன்னெழுச்சியான தன்மையையும் அதன் முன்னோக்கு இன்மையையும் போற்றிப் புகழ்வதுடன், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கிய ஆய்ந்தறியும் உந்துதலையும் இல்லாதொழிக்கத்தான் இந்த வேலை. 

ஐக்கியச் செயலகத்துடன் (United Secretariat) இணைந்துள்ள Izquierda Anticapitalista அமைப்பைச் சேர்ந்த மிக்கேல் ஏர்பன் ஒரு நிறைவுபெறாத புராணம் குறித்து எழுதுகிறார். பிரசங்கமும் நடைமுறையும் கைகோர்த்து நடக்க வேண்டும், இதனைப் போகும் பாதையில் உருவாக்கிக்கொள்ள முடியும்.

என் லூசா (En Lucha) “முகாம்களில் காணும் பிரம்மாண்டமான சக்தியும், தீரமும், படைப்புத் திறனும்.....தொழிலாள வர்க்கத்தின் பெரும் சடரீதியான வலிமைத் திறனுக்குள் பாய்ச்சப்படுவதற்கு  (இங்கு அவர்கள் குறிப்பிடுவது தொழிற்சங்க அமைப்பின் பின்னால்) அழைப்பு விடுகிறது, கடந்த காலத்தில் என்றாலும் செப்டம்பர் 29 பொது வேலைநிறுத்தத்தின் போது நாம் கண்ட ஒன்றினைப் போல.  

El Militante குழு தனது அரசியல் விசுவாசத்தை ஆலோசனையளிப்பதில் இன்னும் அப்பட்டமாய் நிற்கிறது. ”CCOO மற்றும் UGT தொழிற்சங்கத் தலைவர்களின் தலைமையை ஏற்றுக் கொள்வதில் தான் M-15 எதிர்ப்பு இயக்கத்தின் வருங்காலம் அமைந்திருப்பதாய் இது வலியுறுத்துகிறது, தொழிலாள வர்க்கம், இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் அதற்குப் பதிலிறுப்பு அளிக்கும் பொறுப்பை அவர்கள் ஏற்றாக வேண்டும்.

இந்த முன்னோக்கு அரபு வசந்தத்தால் நியாயப்படுத்தப்பட்டுள்ளதாய் இந்தப் போக்குகள் கூறிக் கொள்கின்றன. ஆனால் உண்மையோ இதற்கு நேரெதிராய் உள்ளது. எகிப்திலும் துனிசியாவிலும், கடந்த வாரங்களில் ஸ்பெயின் முழுவதையும் ஆக்கிரமித்த எதிர்ப்பு இயக்கங்களையும் விட மிகப் பரந்ததாய் அமைந்திருந்த எதிர்ப்பு இயக்கங்கள் சர்வாதிகாரிகளை வீழ்த்துவதில் வெற்றி பெற்றன, ஆனால் அவை சர்வாதிகார ஆட்சிகளை விட்டு விட்டன. வெகுஜன மக்கள் விரும்பிய உண்மையான ஜனநாயக மாற்றத்திற்குப் பதிலாக, முதலாளித்துவ வர்க்கக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தை இன்னும் மிகக் கொடூரமான முறையில் அடக்கி தனியந்தஸ்து பெற்ற சிலரின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கே செயல்பட்டுள்ளன. பல்வேறு ஜனநாயகச் சீர்திருத்த ஆலோசனைக் குழுக்களில் இருக்கும் தொழிற்சங்கத் தலைவர்களின் மும்முரமான ஒத்துழைப்புடன் தான் இது அனைத்துமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அத்தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தாக்கப்படுகின்றனர், வேலைநிறுத்தங்கள் சட்டவிரோதமாக்கப்படுகின்றன என்கின்ற நிலைமையிலும் கூட. இதனிடையே வெகுஜன அதிருப்தி, பாரிய வேலைவாய்ப்பின்மை, நெருக்கும் வறுமை ஆகியவற்றுக்கு வழிவகுக்கின்ற சமூகப் துயரங்கள் அப்படியே இருக்கின்றன.

ஸ்பெயின், ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரே பிரச்சினைகளையே எதிர்கொள்கின்றனர்.

ஊழலடைந்த அரசியல்வாதிகளுக்கு எதிரான ஒரு போராட்டம் என்பதைக் காட்டிலும் மிகமேலான ஒன்றில் தொழிலாள வர்க்கம் ஈடுபட்டிருக்கிறது. இந்த அரசியல்வாதிகள் உழைக்கும் மக்களை முன்னெப்போதையும் விட மிகக் கடுமையாகச் சுரண்டுவதன் அடிப்படையிலமைந்த ஒரு முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அமைப்புமுறையை நல்ல ஊதியமளிக்கப்பட்டுப் பாதுகாப்பவர்கள் மட்டுமே.

2008ல் முதலில் வெடித்த உலகளாவியப் பொருளாதார நெருக்கடியே இன்னும் தீர்க்கப்படவில்லை. நாளுக்கு நாள் இது மோசமடைந்தே வருகிறது. இதன் முழுப் பாதிப்பையும் தொழிலாள வர்க்கமே உணர்ந்து நிற்கிறது, வங்கிகளும் ஊக வணிகர்களும் தங்களை பிரம்மாண்டமான கொடுப்பனவுகள் மற்றும் ஊதிய உயர்வுகளால் குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றனர். இவையெல்லாம் சீர்திருத்தங்களுக்கு கோரிக்கைவிடுவதன் மூலம் திருத்தக்கூடிய விதிவிலக்குகள் அல்ல. சமூகத்தின் ஒரு துருவத்தில் செல்வம் குவிவதென்பது இன்னொரு துருவத்தில் துயரமும் வேலைச்சுமையும் திரள்வதையே சுட்டிக் காட்டுகிறது என்று மார்க்ஸால் அடையாளம் காட்டப்பட்ட இப்போது எந்த ஜனநாயகக் கட்டுப்பாடும் கூட இன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிற முதலாளித்துவத்தின் அத்தியாவசியமான அம்சத்தையை அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். 

உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களையும் அத்தியாவசியமான சமூகத் தேவைகளையும் பாதுகாப்பதென்பது இனியும் இலாப அமைப்புமுறையின் தொடர்ந்த உயிர்வாழ்வதுடன் இணக்கமானதாக இல்லை. அடிப்படையாக சோசலிசரீதியாய் சமூகத்தை  உருமாற்றுவதற்குக் குறைந்த எதுவும் பலனளிக்காது. ஸ்பெயினிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் ஒட்டுமொத்த முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தின் உயர்ந்த பீடங்களைக் கைப்பற்றி அவற்றை சமூக உடைமையாக்கி, வங்கிகளையும் பெரும் நிறுவனங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கக் கூடிய ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காகப் போராடுவது தான் திட்டநிரலில் இப்போது உள்ள பணியாகும்.

தொழிலாள வர்க்கத்தின் மற்றும் நடப்பு அமைப்புமுறைக்குக் கீழ் எந்த எதிர்காலமும் இல்லாத ஒரு இளம் தலைமுறையின் சமூக நலன்களுக்காகப் போராடுகிற ஒரு புதிய அரசியல் கட்சியையும் ஒரு புதிய தலைமையையும் கட்டுவதற்கு இது கோருகிறது. ஸ்பெயினிலும் மற்றும் உலகெங்கிலும் அத்தகையதொரு கட்சியை ஸ்தாபிப்பதற்குத் தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் ஐரோப்பியப் பிரிவுகளும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன.