World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Talks on Greek national government stagger on without agreement

கிரேக்க தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சுக்கள் உடன்பாடு இல்லாமல் தேக்கம்

By Chris Marsden
9 November 2011
Back to screen version

நேற்று, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளான, ஒரு புதிய தேசிய அரசாங்கம் அமைத்தலை அறிவிப்பது பற்றி கிரேக்கத்தின் அரசியல் ஸ்தாபனத்தால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.

PASOK இன் தலைவர் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ, பிரதம மந்திரி பதவியில் இருந்து கீழிறங்கிய பின் நீண்டக்கால மத்திய வங்கியாளர் லூகாஸ் பாப்படெமோஸை தனக்குப் பின் வருபவர் என அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியுடனான விவாதங்கள் மேலும் ஒரு நாள் நீடித்தன.

பேர்லின், பாரிஸ் மற்றும் வாஷிங்டன் ஆகியவை விரும்பும் வேட்பாளராக பாப்படெமோஸ் உள்ளார். கிரேக்கத்தின் முன்னாள் ஆளுனரும், ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் துணைத்தலைவருமான அவர் இப்பொழுது அமெரிக்காவில் ஓர் உயர்கல்வியாளராக உள்ளார்; தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மிருகத்தன நடவடிக்கைகளை சுமத்துவதை அவருடைய பாதுகாப்பான கைகளில் இருத்துவதுதான் நல்லது என்று கருதப்படுகிறது. 2010ல் ECB ஐ விட்டு நீங்கியபின் அவர் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கற்பித்தார்; தன் புதிய வேலையில் சேர்வதற்கு அமெரிக்காவில் இருந்து கிரேக்கத்திற்குத் திரும்ப வேண்டும்.

பாப்பாண்ட்ரூவிற்குப் பின் பதவிக்கு வரக்கூடியவர்கள் எனக் கருதப்படுபவர்களும் நிதியத் தன்னலக்குழுவிற்கு ஊழியம் செய்பவர்களாகத்தான், குறிப்பாக அமெரிக்காவுடன் நெருக்கமானவர்களாகத்தான் இருப்பர்.

ஐரோப்பிய ஒன்றிய ஓம்பட்ஸ்மன் Nikiforos Diamantouros, விக்கிபீடியாவில் வந்துள்ள அவர் வாழ்க்கைக் குறிப்பின்படி, இந்தியானா பல்கலைக்கழகத்தில் பயின்று, நியூ யோர்க்கிலும், கொலம்பியாவிலும் கற்பித்தார். கிரேக்கத்தின் சர்வதேச மற்றும் மூலோபாய ஆய்வுகள் கூடத்தின் இயக்குனர் என்னும் முறையில், அவர் போர்ட் அறக்கட்டளை மற்றும் மக்கார்தர் அறக்கட்டளையில் இருந்து நிதி பெற்றார். அமெரிக்காவின் நவீன கிரேக்க கற்கைக்கான அமைப்பின் (Modern Greek Studies Association of the US) தலைவராக இருந்துள்ளார்; 1960ல் இருந்து நியூயோர்க்கிலுள்ள தெற்கு ஐரோப்பிய சமூக அறிவியல் ஆய்வுக்குழுவின் துணைக்குழுவின் இணைத் தலைவராக உள்ளார்; இதைத்தவிர பல அமெரிக்க ஆதரவிற்குட்பட்ட அமைப்புக்களிலும் பதவி வகிக்கிறார்.

பானாஜியோடிஸ் ரௌமெலியோடிஸ் IMF ன் இயக்குனரும் முதலீடு, நிர்வாகம் என்பவற்றில் ஈடுபட்டுள்ள Ecofin நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரேக்கப் பொருளாதார மந்திரியும் ஆவார்.

வேட்பாளராக வரலாம் எனக் கூறப்படும் Stavros Dimasஉம் புதிய ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் ஆவார்; முன்பு வோல் ஸ்ட்ரீட்டில் ஒரு உத்தியோகத்தைக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே திங்களன்று PASOK இன் நிதி மந்திரி Evangelos Venizelos தன்னுடைய பதவியில் தொடர்ச்சியை உறுதிப்படுத்த நீடிப்பார் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இவர் நிதியச் சந்தைகளின் மற்றொரு விரும்பப்படும் நபர் ஆவார்; முந்தைய சிக்கன நடவடிக்கைகளுக்கு உடன்பட்டிருந்தார், பாப்பாண்ட்ரூ இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கும் உடன்பட்டார்.

ஒரு தேசிய அரசாங்கம் அமைப்பதில் முக்கிய தடையாக இருப்பது சமூக ஜனநாயக PASOK என்பதைவிட கன்சர்வேட்டிவ்வான புதிய ஜனநாயகக் கட்சியாகும். கட்சித்தலைவர் அன்டோனிஸ் சமரஸ் முன்கூட்டிய தேர்தல்களை விரும்பியவர்; இந்தக் கட்டத்தில் வெட்டுக்களுக்கு கூட்டுப் பொறுப்பு ஏற்பது நச்சு பானக் கிண்ணத்திற்கு ஒப்பானது என்று நம்புகிறார்.

அத்தகைய நடவடிக்கை தேவை என ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டாலும்கூட, ஐரோப்பிய நிதி மந்திரிகள் அடுத்த 8 பில்லியன் யூரோப் பொதியை கிரேக்க உதவிக்கு அனுப்ப மறுத்தபோது அழுத்தங்கள் மீண்டும் வெடித்தன. PASOK ம் புதிய ஜனநாயகக் கட்சியும் பின்னர் எழுத்து மூலமாகமுக்கூட்டான” EU, ECB, IMF ஆகியவை கிரேக்கத்திடம் கோரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதாக ஒப்புக் கொண்டன.

PASOK, சமரஸ், புதிய பிரதம மந்திரி, நிதி மந்திரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோர் ஒரு கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய பொருளாதார, நிதியப் பிரிவுகளின் ஆணையரான ஒல்லி ரெஹ்ன், பாப்பாண்ட்ரூவின் திட்டமான பிணை எடுப்பு பற்றிப் பொதுமக்கள் வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுவது என்பதுநம்பிக்கையை மீறும் கருத்து என்று விவரித்தார். “கிரேக்கத்திற்கும் ஐரோப்பிய பகுதிக்கும் இடையே உள்ள சமூக ஒப்பந்தத்திலுள்ள பழுதை நாம் இப்பொழுது நீக்க வேண்டும். இது எழுத்து மூலம் அமைய வேண்டும் என்றார் அவர்.

ஒரு புதிய அரசாங்கம் தன் வெளிப்படையான, தடையற்ற உறுதிப்பாட்டை 17 ஐரோப்பிய பகுதி உறுப்பு நாடுகள் அக்டோபர் 27ல் எடுத்துள்ள அனைத்து முடிவுகள் பற்றியும் எழுத்து மூலம் உறுதி செய்வது மிகவும் முக்கியமாகும் என்று அவர் வலியுறுத்தினார். “ஒற்றுமை உணர்வு என்பது இருவழிப்பாதை என்பது ஏதென்ஸுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்; பொறுப்புக்களின் தன் பங்கை ஒற்றுமையுடன் அரசியல் வர்க்கம் செயல்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

இதன் பொருள் சமரஸ் வெளிப்படையாக 130 பில்லியன் யூரோ உதவிப் பொதியில் பொறித்துள்ள விதிகளுக்கு ஆதரவு தந்து சிக்கன நடவடிக்கைகளில் கையெழுத்திட வேண்டும் என்பதாகும்.

இதில் நாட்டின் கௌரவம் அடங்கியுள்ளது என்று சமரஸ் ஓர் அறிக்கையில் புகார் கூறியுள்ளார். “கிரேக்கப் பொருளாதாரம் மற்றும் யூரோவைக் காப்பாற்றுவதற்கு, உடன்பாட்டைச் செயல்படுத்துவதுதவிர்க்கமுடியாதது என ஆகிவிட்டது என்பதை நான் பல நாட்களாக பலமுறையும் விளக்கியுள்ளேன்.”

Dow Jones இடம் தன் கவலையை ஓர் அதிகாரி தெரிவித்தார்: “சமரஸ் கட்சிக்குள் தீவிர பிளவுகளை எதிர்கொண்டுள்ளார்; ஏனெனில் பல மூத்த கட்சி உறுப்பினர்கள் அவர் மிக அதிகமாக விட்டுக் கொடுக்கிறார் என்று நினைக்கின்றனர்…. எனவே பலரும் புதிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதை மறுக்கின்றனர்.”

கட்சியின் செய்தித் தொடர்பாளர் Yiannis Michelakis ரெஹ்னுக்குப் பதிலளித்தார். “ஐரோப்பா PASOK அரசாங்கத்திடம் சிறிதும் நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கு அது எங்கள் தேசிய கௌரவத்தை அவமதிக்கலாம் என்று பொருள் தராது.”

பாப்படெமோஸும் புதிய அரசாங்கம் PASOK அல்லது புதிய ஜனநாயகம் விரும்பும் ஆட்சிக்காலத்தை விட கூடுதல் பதவிக்காலத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்படும் நிபந்தனை குறித்து வலியுறுத்தும் வகையில் இடர்பாடுகளை ஏற்படுத்தியுள்ளார். அக்கட்சிகள் இரண்டும் பெப்ருவரி 19 அன்று ஒரு பொதுத் தேர்தலுக்குத் தற்காலிகமாக இசைவு கொடுத்துள்ளன.

முன்னாள் வங்கியாளர் இரு முக்கிய கட்சிகளிடம் இருந்தும் கூடுதலான சுதந்திரத்தை அடைய விரும்பினார்; மந்திரிசபைக்குப் போதுமான அரசியல் செல்வாக்கு முடிவுகள் எடுப்பதற்கு தேவை, ஆனால் PASOK அல்லது புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவு தேவையில்லை என்றார். அதாவது முக்கூட்டு என்னும் அதன் எஜமானர்களுக்கு மட்டுமே அது தாழ்ந்து நடக்கும். புதிய ஜனநாயகக் கட்சி தன் கட்சியிலுள்ள முக்கிய நபர்களின் பெயர்களை கொடுக்கத் தயக்கம் காட்டியது; இது உண்மையான அதிகாரம் மந்திரி சபைக்கு வெளியே இருக்கும் என்ற நிலை தோன்றும் என்பதைத்தான் காட்டியுள்ளது.

பூசலின் விளைவு இன்னும் தெளிவாக இல்லை. ஆனால் இது முடிக்கப்படுவதற்கு முன்பே, கிரேக்கம் உலகின் எட்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான இத்தாலியை எதிர்கொண்டுள்ள பெருகிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளால் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

டெய்லி டெலிகிராப்பின் துணை ஆசிரியரான ஜேரிமி வார்னர் இழிந்த முறையில் குறிப்பிட்டார்: “யூரோப்பகுதிக் கடன் நெருக்கடி மீண்டும் அதன் வகையில்தான் உள்ளது என்பதை இன்று காலை உறுதிப்படுத்தியது; ஒரு தீ அணைந்த உடன், குறைந்தபட்சம் தற்காலிகமேனும்கிரேக்கத்தில் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்பட உள்ளது என்ற தகவல் வந்த நிலையில்மற்றொரு நெருப்பு மூண்டுவிட்டது; இது இத்தாலியில் வந்துள்ளது; அணைப்பதற்குக் கடினமாக மிகப் பெரிதாக சுடர்விடுகிறது.”

இதேபோல் ராய்ட்டர்ஸும் அப்பட்டமாகக் கூறியுள்ளது: “யூரோப்பகுதியின் அரசாங்கக் கடன் நெருக்கடியின் மையத்தானம் என்பதில் இருந்து கிரேக்கத்தை அகற்றிவிட்டு, இத்தாலி பிடித்துக் கொண்டுவிட்டது; அரசாங்கப் பத்திரங்கள் நீடித்திருக்க முடியாத அளவுகளை எட்டிவிட்டன; இது இம்முகாமின் மூன்றாம் பெரிய பொருளாதாரத்தை ஐரோப்பாவினால் இயலாத ஒரு பிணை எடுப்பை நாடும் நிலைக்குத் தள்ளக் கூடும்.”

நியூ யோர்க் டைம்ஸ் உலகச் சந்தைகளில் தொடர்ந்த கவலைக்கிடம் நீடிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது; கிரேக்கத்திலும், இத்தாலியிலும், “பொருளாதாரம் மட்டும் விசாரணையில் இல்லை, மிகச் செல்வாக்கற்ற விருப்பங்களை செயல்படுத்துவதில் ஜனநாயக அரசாங்கத்தின் திறன் குறித்தும்தான்.”

இத்தகைய அறிக்கையின் இழிந்த தன்மை திமிர்த்தனமானது. இரு நாடுகளில் எதுவும் உண்மையான ஜனநாயக அரசாங்கத்தை கொண்டிருக்கவில்லை; ஒன்றில் இன்னும் தேர்தல் நடக்கவில்லை, மற்றொன்றில் பில்லியனர் பெர்லுஸ்கோனி தேர்தலை விலைக்கு வாங்குகிறார். இந்த நிர்வாகங்கள் நிதிய உயரடுக்கிற்குத்தான் உதவுகின்றனமுற்றிலும் மக்கள் விருப்பத்திற்கு எதிராக, மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வு நலன்களுக்கு விரோதமாக.