World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

“Total Policing” and the criminalisation of dissent

"முழு பொலிஸ் கண்காணிப்பும்" எதிர்ப்புகளை குற்றமாக்குதலும்

Chris Marsden
12 November 2011
Back to screen version

புதன்கிழமையன்று ஒப்புமையில் ஒரு சிறிய, முற்றிலும் அமைதியான ஆர்ப்பாட்டம் பிரிட்டிஷ் கல்வி முறைக்கு எதிராக நடத்தப்பட்டதில் பொலிஸ் நடவடிக்கையின் அளவு, ஆளும் கட்சி இனி எத்தகைய அரசியல், சமூக எதிர்ப்பையும் பொறுத்துக் கொள்ள தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது.

அமைப்பாளர்கள், செய்தி ஊடகம் மற்றும் பொலிஸின் மாறுபட்ட மதிப்பீடுகளின்படி, பெரும்பாலும் கலகத்தை அடக்கும் பிரிவுச் சீருடைகளை அணிந்திருந்த கிட்டத்தட்ட 4,000 அதிகாரிகள், பொலிசார்-எதிர்ப்பாளர் விகிதத்தை 1:1 அல்லது 2:1 எனப் பிரதிபலித்தது.

புதிய மெட்ரோபொலிடன் பொலிஸ் ஆணையாளர் பெர்னார்ட் ஹோகன்-ஹோ இந்த எதிர்ப்பைமுழுப் பொலிஸ் ரோந்துக் கண்காணிப்பு நடவடிக்கை என்னும் தன் கொள்கையின் ஒரு பரிசோதனை என்று விவரித்தார். அப்படித்தான் அதுவும் தோன்றியது: லண்டன் கிட்டத்தட்ட பெரும் சாலை மூடலுக்கு உட்படுத்தப்பட்டது, அணிவகுப்புப் பாதைகளில் வழியில் இருந்த அனைத்துச் சாலைகளும் பொலிசார், கலகப் பிரிவு வாகனங்கள் குதிரைப்படை அதிகாரிகள், பத்து அடி உயரத் தடுப்புக்கள் ஆகியவற்றால் தடுக்கப்பட்டிருந்தன.

இரயில், நிலத்தடி இரயில், கோச் நிலையங்கள் என்ற இடங்களில் அணிவகுப்பாளர்கள் சந்திக்கப்பட்டுமுழுப் பொலிஸ் ரோந்துக் கண்காணிப்பு நடவடிக்கை என்று முன்புற, பின்புற அட்டகைகளில்  தலைப்பைக் கொண்ட ஒரு 11 பக்க துண்டுப் பிரசுரம் வழங்கப் பெற்றனர். குற்றவியில் நீதி, மற்றும் பொது ஒழுங்கு 1994 சட்டத்தின் 60வது விதி பயன்படுத்தப்படலாம், மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படலாம், முகமூடிகள் அகற்றப்படமுடியும் என்பவை அதில் எச்சரிக்கப்பட்டிருந்தன.

மூன்று மைல் அணிவகுப்புப் பாதையில் அணிவகுப்பிற்கு முன்பும், பின்பும், இரு புறங்களிலும் பொலிசார் சூழ்ந்த வண்ணம் வந்தனர். தலைக்கு மேல் ஹெலிகாப்டர்கள் பறந்தன; பங்கு பெறுவோர் குறித்து பரந்த அளவில் வீடியோப் படங்கள் எடுக்கப்பட்டன.

மேலும் ஒரு ஆத்திரமூட்டும் வகையில், அணிவகுப்பு ஒவ்வொரு 10 நிமிடமும் நிறுத்தப்பட்டது; இதன் பொருள் மூன்று மைல் பாதையைக் கடக்க மூன்று மணி நேரம் நடக்க வேண்டி இருந்தது என்பதாகும். இப்படி அவ்வப்பொழுது சுற்றிவளைத்தல் பொலிசாருக்கு சில இடங்களில் கூட்டத்தில் நுழைவதற்கு உதவியது; ஒரு எதிர்விளைவைத் தூண்டும் நம்பிக்கையில் மக்களைத் தள்ளியும் அவர்கள் மீது பாய்ந்த வண்ணமும் இருந்தனர்.

அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை லண்டன் வோலில் திட்டமிடப்பட்டுள்ள அணிவகுப்பு ஒரு மணி நேரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும், அப்பகுதி முழுவதும் இரண்டு மணி நேரத்திற்குள் முற்றிலும் காலி செய்யப்பட வேண்டும் என்று எச்சரித்திருந்தது. புனித போல் கதீட்ரலில் நடைபெறும் ஆக்கிரமிப்பு எதிர்ப்பிற்கு ஒற்றுமை உணர்வு காட்டும் வகையில் டிரபால்கர் சதுக்கத்தில் ஒரு கூடார முகாமை அமைக்கும் முயற்சியில் தொடர்புடைய பலரையும் பொலிசார் இழுத்து அகற்றிய முறையில் சில நிமிடங்களுக்குள் நின்று போயிற்று.

கிட்டத்தட்ட 35 சதவிகிதம் ஊதியங்களில் குறைப்பு என்னும் அச்சுறுத்தல் குறித்து நிர்வாகத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் மின்சாரவியலாளர் தொழிலாளர்கள் குழு ஒன்று மாணவர்கள் ஆர்ப்பாட்ட எதிர்ப்புடன் சேர்ந்துகொள்ளும் முயற்சியும் இவ்வகையில் சிதைக்கப்பட்டது. மின்சாரவியலாளர் தொழிலாளர்களின் அணிவகுப்பைப் பொலிசார் சூழ்ந்து கொண்டனர்; கிட்டத்தட்ட அவர்கள் கைதிகள் போல் ஆயினர். சிலர் அதை மீறிச் செல்ல முற்பட்டபோது, கலகப் பிரிவுப் பொலிஸார் உள்ளே புகுந்து கைத்தடிகளைப் பயன்படுத்தித் தொழிலாளர்களை தரையில் வீழ்த்தினர். ஸ்டன் கிறனேட்டுகளையும் பொலிஸார் வைத்திருந்தனர் என்று கூறப்படுகிறது. பொது ஒழுங்குச் சட்டத்தின் 60வது விதியின்படி பெயர்களும், விலாசங்களும் எழுதி வாங்கப்பட்டன.

அணிவகுப்பு தொடங்குவதற்கு முன்பு, காவலுக்குப் பொறுப்புக் கொண்டிருந்த சைமன் பௌன்டன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் நீர் பீய்ச்சுதல் திட்டமிடப்படவில்லை, ஆனால் ப்பிளாஸ்டிக் தோட்டாக்களைப் பயன்படுத்த உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்இங்கிலாந்தில் இப்படி நடைபெறுவது இது முதல் தடவை ஆகும்.

முந்தைய பொது ஒழுங்குக் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் 450 கடிதங்களுக்கு மேல் கடிதங்கள் அனுப்பப்பட்டன; அவற்றில் முந்தைய குற்றம் மீண்டும் செய்யப்பட்டால் கைது செய்ய வழிவகுக்கும் என்றும் விசாரணை நடத்தப்படலாம் என்றும் அது மிக விரைவில் செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இக்கடிதங்களில் பல முந்தைய தண்டனை பெறாதவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது; இது பொலிசாரிடம் ஒரு தகவல்தளம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது; அதாவது முந்தைய எதிர்ப்புக்களில் பங்கு பெற்றதுதான் ஒரேகுற்றம் என்பது குறித்து.

Police Oracle இல் மறுபிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், கார்டியனின் குற்றச் செய்தி கட்டுரையாளர் மகிழ்ச்சியுடன் விபரித்ததாவது, பயமுறுத்தல் கடிதங்கள் அனுப்புவது மற்றும் தடியடி சுற்றிவளைப்பிற்கு முன் அனுமதி பெறுவது ஒன்றும் புதிதல்ல. ’என்ன புதியது என்று அவர் கூறினார், Pountain ஆல் எடுக்கப்பட்ட தீர்மானம் இந்த பொதுஜனத்திற்கு தெரியப்படுத்தியதுதான். பிரிட்டிஷ் நகரங்களில் கோடை காலக் கலகங்களின்போது தடியடி நடத்துவதற்கு இசைவு கொடுக்கப்பட்டிருந்தது என்ற அவர், “இன்னும் அதிகம் அறியப்படாதது ஓராண்டிற்கு முன் குறைப்புக்களுக்கு எதிராக மாணவர் ஆர்ப்பாட்டங்களின்போதும் அவை பயன்படுத்தப்படலாம் என்று கொடுக்கப்பட்ட இசைவு ஆகும் என்று கூறினார்.

பொலிஸாருக்கு இன்னும் கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கப்படலாம் என்று உள்துறை மந்திரி தெரிசா மே கூறியதையும் குறிப்பிட்ட அவர், “அதையொட்டி ஒரு பொலிஸ் கண்காணிப்பாளர் பொதுமக்களை குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது அகற்றலாம் என்றார்—“இந்த அதிகாரம் சட்டத் தொகுப்பில் இருந்து 1973ல் அகற்றப்பட்டதற்குப் பின் கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

கடந்த அக்டோபர் மாத மாணவர் எதிர்ப்பின்போது 150க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்வின்போதும் அதற்குப் பின்னரும் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் ஆயுதமில்லாத ஒரு மனிதரைக் கொன்றதுடன் தூண்டுதலுற்ற இக்கோடைக்காலக் கலகங்களை அடுத்து 2,000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர், 11,000க்கும் மேற்பட்ட குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு நீண்டக்கால சிறைத்தண்டனைகள் மிக அற்பமான குற்றங்களுக்குக் கொடுக்கப்பட்டன.

இதே போன்ற சித்திரம்தான் சர்வதேச அளவிலும் நடத்தப்படுகின்றன. எங்கெல்லாம் தொழிலாளர்களும் இளைஞர்களும் மிருகத்தன சிக்கன வெட்டுக்கள் சுமத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனரோ, அவைகள் அனைத்தும் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகின்றன.

உதாரணமாக கிரேக்கத்தில் அக்டோபர் 20ம் திகதி நடந்த பொது வேலைநிறுத்தம் 15,000 கலகப் பிரிவுப் பொலிஸின் தாக்குதலுக்கு உட்பட்டது; சின்டக்மா சதுக்கம் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலில் மூழ்கியது. அமெரிக்காவில் வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்புக்கள், ப்ரூக்லின் பிரிட்ஜில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் என 700 பேர் அக்டோபர் 1ல் கைது செய்ய்பட்டதற்கு எதிராக நாடெங்கிலும் பெரிய அளவில் படர்ந்தன. அப்பொழுது முதல் பல உள்ளூர் பொலிஸ் படைகள் கலகப் பிரிவு ஆயுதங்கள், கண்ணீர்ப் புகைக்குண்டு இன்னும் பல ஆயுதங்களைப் பயன்படுத்தி நாடு முழுவதும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,000 க்கும் மேல் உயர்ந்தது.

இவ்வகையில் கடுமையான அடக்குமுறையைக் கையாளுதல், வர்க்கங்களுக்கு இடையே தீவிர துருவமுனைப்படுதல் வந்திருப்பதின் அடையாளம் ஆகும்.

பிரிட்டனில் இப்பொழுது மேற்கோளிடப்படும் கலகச் சட்டம் முதலில் 1714ல் இயற்றப்பட்டது; அதில் கலகம் செய்வது மரண தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என இருந்தது. பின்னர் 1837ல் இது ஆயுட்காலச் சிறைத்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

மிக அதிகம் அறியப்பட்ட இதன் பயன்பாடு 1819 பீடர்லூ படுகொலை என்று மான்செஸ்டரில் நடந்தது ஆகும்; அதில் பாராளுமன்றச் சீர்திருத்தம் கோரி, மற்றும் பொருளாதாரச் சுமைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய 80,000 பேர் மீது குதிரைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது; அதில் 15 பேர் கொல்லப்பட்டனர், 700 பேர் காயமுற்றனர்.

கிளாஸ்கோவில் 1919 கறுப்பு வெள்ளிக்கிழமை அன்று, கலகப் பிரிவுப் பொலிசாரும், 10,000 துருப்புக்களும் குறைந்த பணி நேரத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக அனுப்பப்பட்டனர். கறுப்பு வெள்ளிக்கிழமை சம்பவம் ரஷ்யாவில் அக்டோபர் 1917 புரட்சிக்குப் பின் நடந்தது; அப்பொழுது பிரிட்டனின் உயரடுக்குஒரு வகையான போல்ஷிவிக் எழுச்சி ஏற்படுமோ என அஞ்சியது. இத்தகைய அதிகாரங்கள் இன்று செயல்படுத்தப்படுகின்றன என்னும் உண்மை, முதலில் இரகசியமாகவும், பின்னர் உத்தியோகபூர்வ ஆரவாரத்துடனும் என்பது, பிரிட்டன், ஐரோப்பா, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்று பெரும் செல்வக் கொழிப்பு உடைய ஒரு தன்னலக்குழு எப்பொழுதும் கூடுதலாகும் சுயச் செல்வக் கொழிப்பை தொடர்வதற்காக சமூக வாழ்வின் எல்லா கூறுபாடுகளுக்கும் ஆணையிடுகிறது. பொருளாதார நெருக்கடி மோசமாகிவரும் சூழ்நிலையில், இது வெட்டுக்கள் மற்றும் சிக்கனம் என மில்லியன் கணக்கான மக்கள் மீது சுமத்தும் கோரிக்கையாகிறது; இந்நடவடிக்கைக்கு ஜனநாயக ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை.

இதுதான் உலகெங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் ஒரு பொலிஸ் அரசின் கூறுபாட்டைக் கொண்ட நடவடிக்கைகளை செயல்படுத்த நிர்ணயிக்கிறது; கிரேக்கத்தில் ஒரு இராணுவ ஆட்சி மாற்றம் என்னும் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இதை எதிர்கொள்ள வேண்டிய முறை ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்தை கட்டமைத்தல் மற்றும் உண்மையான ஜனநாயக, சமத்துவ சமுதாயத்திற்காக ஒரு புரட்சிகர முன்னோக்கை ஏற்றல் என்பதாகும்; அது தன்னலக்குழுவின் சொத்துக்களை பறிமுதல் செய்து, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வீடுகள், நல்ல ஊதியம் இவற்றைப் பெறுவதற்கான சமூக உரிமைகளை நிறைவேற்றுவதற்கு உகந்த உற்பத்தி அமைப்பைக் கட்டமைத்தல் என்ற அடிப்படையைக் கொண்டிருக்க வேண்டும்.