World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Voluntary teachers from Vanni protest demanding permanent appointment

இலங்கை:வன்னி பிரதேச தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்

By Subash Somachandran
22 November 2011

Back to screen version

நவம்பர் 8ம் திகதி, யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வன்னியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தினை தங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை தொடர்ச்சியாக நடாத்தப்போவதாக ஏற்பாட்டாளர்கள் முதலில் தெரிவித்தனர். ஆனால் ஆளுநரின் செயலாளரான இளங்கோவன், நவம்பர் 9 அன்று நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இது பற்றிக் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என்று வாக்குறுயளித்ததை அடுத்து, அமைப்பாளர்கள் இரண்டு மணித்தியாளத்துக்குள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இவர்கள் அனைவரும், தங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற ஒரே எதிர்பார்ப்புடன், கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு குறையாமல் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்ற போதிலும், இதுவரையும் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்களில் அனேகமானவர்கள் இளைஞர்களாக இருக்கும் போது தமது சேவையை ஆரம்பித்தவர்கள், தற்பொழுது திருமணமாகி குடும்பத்தவர்களாகிவிட்டார்கள். ஒரு தொழிலைத் தக்க வைத்துக்கொள்ளவும் மாணவர்களின் நலன் கருதியும் இவர்கள் தமது பணியை தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர்.

ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கடந்த 30 வருடங்களாக யுத்தத்திற்கே அதிகம் செலவு செய்துவந்துள்ளன. நாட்டின் முன்னைய யுத்தப் பிரதேசங்களான வடக்கு மற்றும் கிழக்கில் கல்விக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அங்கு பாடசாலை கல்வியும் பல்கலைக்கழக கல்வியும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் போது பாடசாலைகள் தரைமட்டமாக்கப்பட்டதோடு எஞ்சியிருந்த பாடசாலை கட்டிடங்களை இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. இராணுவத் தாக்குதலில்களில் மாணவர்களும் ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

இந்தப் பிரதேசங்களில் மக்கள் இப்போது மீளக் குடியேற்றப்பட்டிருந்தாலும், கல்வி வசதியில் பெரும் பற்றாக்குறை நிலவுவதோடு அநேக மாணவர்கள் தற்காலிக குடில்களிலேயே கல்வியைத் தொடர்கின்றனர்.

முன்னாள் யுத்தப் பிரதேசங்களில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, வலயக் கல்விப் பணிப்பாளர்களும் பாடசாலை அதிபர்களும் க.பொ.. உயர்தரம் கற்ற இளைஞர், யுவதிகளை ஆசிரியர் நியமனத்தின் போது முன்னுரிமை வழங்கப்படும் என்ற உறுதி மொழியுடன் பணிக்கு அமர்த்தினார்கள்.

ஆனால் ஆசிரியர் நியமனங்களின் போது அரசாங்கத்தின் பங்காளி அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா போன்றோர் தமது அரசியல் நலன்களைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடியவாறு செயற்பட்டனர்.

வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆசிரியர்கள் சேவைக்கு உள்வாங்கப்பட்டிருந்த போதிலும், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் கைவிடப்பட்டுள்ளார்கள். தங்களுக்கு சம்பளமோ கொடுப்பனவுகளோ கிடைக்காததால் குடும்பங்களைப் பராமரிப்பதற்கு இவர்கள் தனியார் வகுப்புகளை நடத்துவதோடு ஏனைய வேலைகளுக்கும் செல்கின்றனர். இருந்த போதும் இவர்களின் வரவுகள் அதிபர்களாலும் அதிகாரிகளாலும் கணிக்கப்படுகின்றன.

மல்லாவி மாகாவித்தியாலயத்தில் 2005ம் ஆண்டு சேவையில் சேர்ந்த ஒரு தொண்டர் ஆசிரியர் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய போது, அந்த பாடசாலை யுத்தத்தினால் பாரிய பாதிப்புக்கு உட்பட்டதாகவும், இடம்பெயர்ந்து சென்றபோது கூட மரங்களின் கீழ் வைத்து பாடம் நடத்தியதாகவும் கூறினார். “வன்னியில் வாகனங்கள் கிளைமோர் குண்டுகளில் சிக்கிய போது நாங்கள் எமது உயிரையும் வெறுத்து பிள்ளைகளை வாகனங்களில் கல்விச் செயற்பாட்டுக்காக கொண்டு சென்றோம். யுத்தத்தில் எனது குடும்பத்தில் மூவரை இழந்து, நானும் காயப்பட்டேன். இறுதியில் வவுனியாவில் மெனிக்பாமில் அடைக்கப்பட்டிருந்த போது, ஊன்றுகோலுடன் சென்று பிள்ளைகளுக்கு படிப்பித்தேன். இன்னமும் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை..” என அவர் கூறினார்.

எமது பாடசாலை கட்டிடம் தற்போது திருத்தப்பட்டிருந்தாலும் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. எண்பதுக்கும் அதிகமான மாணவர்கள் யுத்தத்தில் தாய் அல்லது தகப்பனை அல்லது இருவரையும் இழந்துள்ளனர். எப்போதும் சோகத்தை சுமந்துகொண்டிருக்கும் அவர்களை கல்வியில் அக்கறை செலுத்த வைப்பது மிகவும் கடினமானது. தமக்கு கல்வி கற்பதற்கு விருப்பம் இல்லாமல் உள்ளது என்று கூறுகிறார்கள். பல மாணவர்களுக்கு வீட்டில் சரியான உணவு வசதிகூட கிடையாது என அவர் மேலும் விளக்கினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமாராட்சி கிழக்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியாகும். அங்கு செம்பியன்பற்றில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர் பேசுகையில், யுத்தத்தினால் தகர்க்கப்பட்ட பாடசாலைக் கட்டிடங்களில் ஒன்றை மட்டுமே அரசாங்கம் புனரமைத்துக் கொடுத்துள்ளதாகவும், சேதமான கட்டிடங்களிலும் வகுப்புகள் நடத்தத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “450 மாணவர்கள் உள்ள எமது பாடசாலையில் 6 நிரந்தர ஆசிரியர்களும் மூன்று தொண்டர் ஆசிரியர்களுமே இருக்கிறார்கள். இங்கு க.பொ.த. சாதாரண தரம் வரை வகுப்புகள் இருந்தாலும் ஆய்வுகூடங்களோ நூலகமோ கிடையாது என அவர் தெரிவித்தார்.

இனிமேல் தொண்டர் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்று அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் வன்னிப் பிரதேசத்திலும், யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதி மற்றும் கிராமப் புறங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. தீவகப் பகுதிகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை தீவில் சென் அன்ரனீஸ் கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவுக்கு ஆசிரியர் இல்லாத காரணத்தினால் பாடசாலை நிர்வாகம் அந்த மாணவர்களை யாழ்ப்பாண நகரில் உள்ள சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு அனுப்பிவைக்கின்றது.

அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ள அரசாங்கம், கல்விக்கு ஆகக் குறைந்த தொகையை ஒதுக்கியுள்ளது. இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்கியதன் மூலம் முழு இலவசக் கல்வியையும் அழிப்பதற்கு  திட்டமிட்டுள்ளது.

அரசாங்கம் நாட்டில் உள்ள அரசாங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடாசாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து தரமான இலவசக் கல்வியை வழங்குவதற்கு மாறாக, அவற்றில் வளப்பற்றாக்குறையை ஏற்படுத்தி அவற்றின் செயற்பாட்டினை முடக்குவதன் ஊடாக, தனியார் முதலாளிகளின் இலாபத்தினை அடிப்படையாகக் கொண்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை விஸ்தரிக்கத் திட்டமிட்டுள்ளது.