World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The government plans to dismantle JEDB poses a threat to thousands of jobs 

ஜனவசம தோட்டங்களை துண்டாடும் அரசாங்கத்தின் திட்டத்தினால் ஆயிரக்கணக்கான தொழில்களுக்கு ஆபத்து

By M.Vasanthan
26 November 2011
Back to screen version

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் (ஜனவசம) கட்டுபாட்டின் உள்ள தேயிலை தோட்டங்களை துண்டாட இலங்கை அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கை, அத் தோட்டங்களில் வேலை செய்யும் 5200 தொழிலாளர்களின் தொழில்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றது. அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக தொழிலாளர் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சியடைகின்ற போதும், அவர்களது தொழில்களை பாதுகாப்பதற்கான எந்தவொரு போராட்டத்தையும் தொழிற்சங்கங்கள் தடுத்துள்ளன.

1972ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ..சு..), லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (சி.பீ.) ஆகியவை உள்ளடங்கிய கூட்டரசாங்கத்தின் தேசியவாத திட்டத்தின் பகுதியாக  பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட போதே ஜனவசம உருவாக்கப்பட்டது. பெரிய தோட்டங்கள் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அதேநேரம், வளமற்ற தோட்டங்களாக கருதப்பட்டவை ஜனவசமவின் கீழ் கொண்டுவரப்பட்டன.       

தமது தொழிலுக்கு ஆபத்து வருவதை கண்ட தொழிலாளர்கள் முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழ் தேசியமயமாக்கத்தை எதிர்த்தார்கள். கடந்த தசாப்தங்களில் ஜனவசமவுக்குக் கீழ் இருக்க சில பெருந்தோட்டங்கள், துண்டாடப்பட்டு சிங்கள விவசாயிகள் மத்தியில் பங்கிடப்பட்டதோடு ஆயிரக்கணக்காண தொழிலாளர்கள் வேலையை இழந்தார்கள்.

அரசாங்கம் இப்பொழுது ஜனவசம நிர்வாகத்தின் கீழ் மிகுதியாக இருக்கின்ற 17 தோட்டங்களையும் தொழிலாள்ர்களுக்கு தெரிவிக்காமலே தனியார் முதலீட்டார்களுக்கு விற்பதற்கு முயற்சிக்கின்றது. எமது நிருபர்கள் சேகரித்த விபரங்களின்படி, இத்தோட்டங்கள் பல பாகங்களாக துண்டாடப்பட்டு, தனியார் வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட பலவகையான திட்டங்களுக்காக தனியார் கம்பனிகளுக்கும் தனிநபர்களுக்கும் விற்கப்படவுள்ளன.

கண்டியில் உள்ள ஹன்தானைத் தோட்டத்தின் இரு பகுதிகள், நவலோக என்ற தனியார் வைத்தியசாலையை கட்டுவதற்கும், மற்றையது ஒரு பௌத்த பிக்குவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அத்தோட்டத் தொழிலாள்கள் கூறினார்கள். உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்கவும் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு இடம் பார்க்க அங்கு வந்துள்ளார்.

மத்திய மலைநாட்டில்  நாவலப்பிட்டியில் உள்ள போகில் தோட்டத்தில் 110 ஏக்கர் ஏற்கனவே தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தொழில்களை இழக்கும் நிலையை எதிர்நோக்குகின்றார்கள். ஜனவசம தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி [EPF], தொழிலாளர் நம்பிக்கை நிதி [ETF] போன்றவற்றை மத்திய வங்கியின் வைப்பில் இடப்படவில்லை. போகில் தோட்டத்தை சேர்ந்த 350 தொழிலாளர்கள் அக்டோபர் 10 ம் திகதியிருந்து தமது தோட்டத்தை விற்பதை எதிர்த்து ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். 110 ஏக்கரை கொள்வனவு செய்தவர்களை தோட்டத்திற்குள் நுழைய விடாது தொழிலாளர்கள் வீதியை மறித்தார்கள். ஆயினும், தொழிலாளர்களின் எதிர்ப்பு போராட்டத்தை கீழறுத்த தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகம் தனது திட்டத்தை முன்னெடுத்து செல்ல வழிவகுத்தனர்.

பிரதானமாக, ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பு தொழிற்சங்கமான ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் (ஸ்ரீ..சு.தொ.கா.) தொழிலாளர்களின் எதிர்ப்பை நிறுத்தியதிற்கு பொறுப்பாளியாகும். போகில் தோட்டத்தின் தொழிலாளர்களில் அநேகமானவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தலைமையிலான தொழிற்சங்கத்தின் அங்கத்தவர்களாவர்.

அரசாங்கத்தின் திட்டத்தை மூடிமறைப்பதற்கு முயற்சித்த ஸ்ரீ..சு.தொ.கா. பொதுச் செயலாளர் கே.எம். கிருஷ்ணமூர்த்தி, ஜனவசம இந்த நிலத்தை தனது சொந்த விருப்பின் பேரில் விற்பனை செய்துள்ளது. இதை எமது தலைவர் மகிந்தானந்த அலுத்கமகே அறிந்திருக்கவில்லை. அவர் தொழிற் திணைக்களத்துடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சனையை தீர்த்து வைப்பார் என தொழிலாளர்களுக்கு தெரிவித்தார்.

உலக சோசலிச வலைத தள (WSWS) நிருபர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சின் (.தொ.கா.) தலைவரும் பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான முத்து சிவலிங்கத்திடம் வினவியபோது, அவர் போகில் தோட்டத்தில் தமது தொழிற்சங்கத்துக்கு கிளை இல்லை என நழுவிக்கொண்டார். குறுங்குழுவாத தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதை எதிர்க்கின்றன. உண்மையில் அவை அரசாங்கத்தின் திட்டங்களை அமுல்படுத்துகின்ற கருவிகளாகும்.

தொழிற்சங்கங்கள் தனியார் இலாப அமைப்பை பாதுகாப்பதை வெளிப்படுத்திய முத்து சிவலிங்கம், “ஜனவசம தோட்டங்களை துண்டாடி பல தனியாட்களுக்கு விற்பதை நாம் எதிர்க்கின்றோம். ஆனால் இந்த தோட்டங்கள் கம்பனிகளுக்கு கையளிக்கப்பட்டாலோ அல்லது அரசாங்கம் பொறுப்பு ஏற்றாலோ நாம் ஆதரிப்போம் என்றார். இந்த தோட்டங்கள் முதலாளித்துவ கம்பனிகளுக்கு நல்ல இலாபம் தரும் வழியாகையால் இ.தொ.கா. இந்த தோட்டங்களை கம்பனிகளின் கீழ் கொண்டுவருவதற்கு வக்காலத்து வாங்குகின்றது.

மலையக மக்கள் முன்னணி (..மு.) அரசியல் தலைவர் வி. இராதாகிருஸ்ணன், தொழிலாளர் நலன்களில் தனது தொழிற்சங்கம் அக்கறை காட்டாது அலட்சியம் செய்வதை அம்பலப்படுத்திக்கொண்டார். “ஜனவசம துண்டாடப்படுவது சம்பந்தமாக எனக்கு அவ்வளவாகத் தெரியாது, எனது தொழிற்சங்க அலுவலகத்தின் ஊடாக அது பற்றி அறிய வேண்டும்,” என புலம்பினார்.

.தொ.கா. மற்றும் ம..மு.வும் ஆளும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைபின் பங்காளிக் கட்சிகளாகும். அவை 1990ல் அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை தனியார் மயமாக்குவதை ஆதரித்ததுடன், அதற்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் கீழறுத்து, அந்தத் தனியார் கம்பனிகள் தொழிலாளர்களை கொடூரமான முறையில் சுரண்டுவதற்கு வழிவகுத்தன. தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களின் கைகளை கட்டிப்போட்டு, கம்பனிகள் அவர்கள் மீது வறிய மட்டத்திலான சம்பளத்தை திணிப்பதற்கும் வீடு, சுகாதார சேவை மற்றும் கல்வி உட்பட அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கும் ஆதரவு கொடுத்தன.

ஜனவசம நிலங்களை விற்பதை நியாப்படுத்துவதற்காக, அரசாங்கம் ஜனவசம மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்குவதாக பிரச்சாரம் செய்கின்றது. பொது நிறுவனங்களின் பாராளுமன்றக் குழுவின் (கோப்) அறிக்கையின் பிரகாரம், “அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்ட நிர்வாகமான ஜனவசம, மிகப்பெரிய நிதி இழப்பை எட்டியதுடன்,  இதன் நிர்வாகம் கடந்த 10 வருடங்களாக கடனில் மூழ்கியுள்ள அரச நிறுவனங்களில் ஒன்றாகும்.”

ஜனவசம 2005 ஆண்டிற்கும் 2009ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட ஐந்து வருடத்தில் 686 மில்லியன் ரூபாய் நஷ்டமடைந்துள்ளது என மேலும் அது தெரிவித்துள்ளது. அத்தோடு அந்தக் காலப் பகுதியில் வங்கியில் உள்ள இருப்புக்கு அதிகமாகப் பெற்றுக்கொண்ட பணம் 2008ல் 56 மில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. நிர்வாக சபை ஆகக் கூடிய 24 வீத வட்டிக்கு 5 மில்லியன் ரூபாயை கடனாகவும் பெற்றுள்ளது. பெரும்பாலான நட்டங்கள் 2005 க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி இராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகும்.

ஜனவசம எதிர்கொண்டுள்ள பாரிய நட்டம், பிரதானமாக அரசாங்க அடிவருடிகளின் ஊழல்களதும், வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதனதும் மற்றும் சரியான பராமரிப்பன்மை, மீள்நடுகை புறக்கணிக்கப்பட்டமையினதும் விளைவாகும் என தொழிலாளர்கள் குற்றம் சாட்டினார்கள்.

ஜனவசம தோட்டங்களின் வேலை நிலமைகள் தனியார் கம்பனிகளின் வேலை நிலமைகளை விட மோசமானதாகும். ஹன்தானை தோட்டத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி கூறியதாவது: தனியார் கம்பனிகளின் கீழ் தொழிலாளர்கள் அனுபவிக்கும் உரிமைகள் கூட எங்களுக்கு கிடையாது. 2001ல் இருந்தே ஜனவசம நிர்வாகம் எமது சேமலாப நிதியையும் நம்பிக்கை நிதியையும் கொள்ளையடித்துள்ளது. எமது சம்பளத்திலிருந்து அதற்கான காசை அவர்கள் கழித்துக்கொண்டாலும் ஆதனை மத்திய வங்கியில் வைப்பு செய்யவில்லை. 17 தோட்டங்களிலும் சேர்த்து 5,600 மில்லியன் ரூபா கொள்ளையடித்துள்ளனர்.’’

தோட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. .தொ.கா., ..மு., லங்கா தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் உள்ள போதிலும், எங்களின் உரிமைகளை பாதுகாக்க யாரும் இல்லை. நாங்களும் ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கும் தோட்டத்துறை அமைச்சுக்கும் பல கடிதங்கள் எழுதிவிட்டோம், ஆனால் யாரும் அதனை கவனத்தில் எடுக்கவில்லை என அவர் மேலும் கூறினார்.

ஹன்தானை தோட்டத் தொழிலாளர்கள் 700 தொழிலாளர்களை உள்ளடக்கிய கூட்டுக் கமிட்டி ஒன்றை அமைத்து பல எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். தொழிற்சங்கத்தலைவர்கள் தாம் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றுவதில்லை என தொழிலாளர்களை மிரட்டியதுடன் போராட்டத்தை தனிமைப்படுத்தினார்கள். இதன் விளைவாக, ஓய்வு பெற்றவர்களின் சேமலாப நிதியை மட்டுமே வழங்க நிர்வாகம் முன்வைந்துள்ளது.

தொழிலாளர்கள் கூறியவாறு, ஹன்தானை தோட்ட நிர்வாகம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 7 பேர்ச் (175 சதுர அடி) நிலம் ஒதுக்கியிருப்பதாக தொழிலாளர்களுக்கு தெரிவித்த போதிலும், தொழிலாளர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எப்படி இருந்த போதும் இந்த நில ஒதுக்கீட்டின் நோக்கம், தொழில்களை அழிப்பதும் தொழிலாளர்களின் சமூக செலவீனங்களில் இருந்து விடுபட்டு, அவர்களின் எதர்காலத்தை அழிப்பதுமாகும்.

ஜனவசம தோட்டங்களை துண்டாடுவது, அரசாங்க நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மற்றும் மறுசீரமைப்பதை துரிதப்படுத்தும் அரசாங்க திட்டத்தின் பாகமாகும். அதே நேரம், இலங்கை பெருந்தோட்டத்துறை கூடுதலான லாபம் பெறக்கூடிய வகையில் சர்வதேச சந்தையில் போட்டியை எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என அரசாங்கமும் தனியார் கம்பனிகளும் வலியுறுத்துகின்றன.

இலங்கை பெருந்தோட்ட தொழிற்துறையைபோட்டியிடத் தக்கதாக வைத்திருக்க ஒரு உடனடி திட்டத்தை வகுக்க எம்.ஜே.எஃப். குழுமத்தின் உற்பத்தி முகாமையாளர் மாலி பெர்ணான்டோ அண்மையில் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட அற்ப சம்பள உயர்வை விமர்சித்துள்ள அவர், அதனால் 1 கிலோகிராம் தேயிலைக்கு 150 ரூபாய் இழக்கப்படுவதாக கூறியுள்ளார். கென்யாவுடன் ஒப்பிடும் போது, இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 60 வீதம் அதிகமாக உள்ளது என வாதிடுகின்றார். “தொழிற்சங்கங்களுடனான தொழிற்துறைசார் பேரம் பேசல்கள் காலங்கடந்துவிட்டன காலனித்துவ காலத்திலிருந்த வதிவிட தொழிலாளர் முறையும் காலவதியாகிவிட்டது,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

செய்தி தெளிவானது, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை சர்வதேச போட்டிக்கு ஏற்றவாறு குறைத்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு எஞ்சியிருக்கின்ற நலன்புரி வேலைத்திட்டங்களை வெட்டிக் குறைப்பதோடு அவற்றை மேலும் சிறியதாக்க வேண்டும் என பெருந்தோட்டக் கம்பனிகள் கோருகின்றன. ஜனவசம தனியார்மயமாக்கப்படுவதுடன் அந்தத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் கொடூரமான சுரண்டல் நிலைமைகளை எதிர்கொள்வர்.

ஒவ்வொரு தொழிற்சங்கமும் தாம் அரசாங்கத்திற்கும், கம்பனிகளுக்கும் அவர்களுடைய திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உதவி செய்யவுள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளன. தொழிற்சங்கங்களிலிருந்து விலகி, தோட்டங்கள் பூராகவும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் ஏனைய தொழிற்துறையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள வர்க்க சகோதரர்களுடன் ஒன்றிணையவும் நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டியது அவசர பணியாகும். இராஜபக்ஷ  அரசாங்கத்திற்கு எதிராகவும் முதலாளித்துவ முறைமைக்கு எதிராகவும் போராடி தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் கீழ் சோசலிச தேசியமயமாக்கத்தின் அடிப்படையில் மட்டுமே தொழிலாளர்களால் தொழில் மற்றும் சம்பளத்தை காக்க முடியும்.