World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The crisis of the euro

யூரோவின் நெருக்கடி

Peter Schwarz
25 November 2011
Back to screen version

இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து, யூரோவைக் காப்பாற்றுவதற்கு புதிய நடவடிக்கைகளை பற்றி முடிவெடுப்பதற்கு உச்சிமாநாடு ஒன்று நடத்தப்படாத மாதமே இல்லை. இப்பொழுது ஆண்டு முடிவை நெருங்கிக்கொண்டுள்ள நிலையில் யூரோவின் நெருக்கடி முன்னையதைவிட தீவிரமாகத்தான் உள்ளது.

ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு வழங்கல் அமைப்பைத் (EFSF) தோற்றுவித்தது, அதன் அதிகரிப்பு, செயற்பாட்டு வளர்ச்சி, ஐரோப்பிய மத்திய வங்கியானது அரசாங்கங்களின் பத்திரங்களை வாங்குதல், கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸில் கடுமையான சிக்கன நடவடிக்கைகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் IMF என்னும் முக்கூட்டு கிரேக்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தைக் கண்காணித்தல், போர்த்துக்கல், கிரேக்கம், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அரசாங்கங்கள் மாறியது--இந்நடவடிக்கைகள் அனைத்தும் சமீபத்திய மாதங்களில் தலையங்கங்களில் ஆதிக்கம் செலுத்தின, ஆனால் நிதியச் சந்தைகளின் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை. மாறாக சந்தைகள் இப்பொழுது பீதியில் உள்ளன.

யூரோ வலையத்தின் சுற்று நாடுகளிலிருந்து முக்கிய நாடுகளுக்கே இப்பொழுது கடன் நெருக்கடி நகர்ந்துவிட்டது. கிரேக்கம், அயர்லாந்து மற்றும் போர்த்துக்கல்லை அடுத்து ஸ்பெயின், இத்தாலி, ஏன் பிரான்ஸ் கூட தங்கள் அரசாங்கப் பத்திரங்களுக்கு அதிக வட்டி கொடுக்கும் நிலை வந்துள்ளது; இதையொட்டி அவை இனி கடன் பொறியில் இருந்து தப்ப முடியாது. புதன்கிழமை, ஜேர்மனியின் 6 பில்லியன் யூரோக்கள் பத்திர விற்பனைகூட வாங்குபவர்களை ஈர்க்கவில்லை. "முழு யூரோப் பகுதியின் மீதும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம்" என்று பகுப்பாய்வாளர்கள் இதை விவரித்துள்ளனர்.

அதன் தற்போதைய வடிவில் யூரோ தப்பிப்பிழைக்க முடியும் என்று பல பகுப்பாய்வாளர்கள் நம்பவில்லை. 20 முக்கிய உயர்கல்விக் கூடங்கள், கொள்கை இயற்றுபவர்கள் மற்றும் வணிகத் தலைவர்களிடையே நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், ஆறு பேர்தான் நாணய ஒன்றியம் தப்பிப்பிழைக்கும் என்று நம்புகின்றர் என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. மற்றும் 10 பேர் "முக்கிய" யூரோப்பகுதி, குறைந்த உறுப்பு நாடுகளைக் கொண்டதுதான் ஒருவேளை வரக்கூடிய மாற்றீடாக இருக்கும் எனக் கருதுகின்றனர்.

யூரோ வலையத்தின் சரிவு என்பது பேரழிவு தரக்கூடிய பொருளாதார, சமூக விளைவுகளை ஏற்படுத்தும்--இக்கருத்து குறித்து அனைத்து வல்லுனர்களும் உடன்படுகின்றனர். அது கண்டம் முழுவதையும் சமூக எழுச்சிகளில் தள்ளுவதோடு, கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்த தேசிய நலன்களின் மோதல்களிலும் ஆழ்த்தும்.

இப்பின்னணியில், ஐரோப்பாவில் தேசிய அழுத்தங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் ஆதரவைக் கொண்டுள்ள பிரான்ஸும் இத்தாலியும், கூட்டு ஐரோப்பிய பத்திரங்களுக்கு (யூரோப் பத்திரங்கள்) அழைப்புவிடுகின்றன. நிதிச் சந்தைகளின் திருப்தியற்ற ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு வரம்பற்ற ECB  நிதிகள் கடன்பட்டுள்ள நாடுகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. இதை உறுதியாக ஜேர்மனி நிராகரித்து, ஒவ்வொரு நாடும் அதன் வரவு-செலவுத் திட்டத்தைக் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மூலம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது--இதையொட்டி கிரேக்கத்தில் நடப்பதுபோல் பெருமந்த நிலையும் அழிவும் வந்தாலும் சரி, என்பதுதான் இதன் பொருள்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோ புதன்கிழமையன்று பிரஸ்ஸல்ஸில் யூரோப் பத்திரங்கள் பற்றித் தன் திட்டங்களை அளித்தபோது, பேர்லின் தீவிர வெறியுடன் அதை எதிர்கொண்டது. "பரோசாவின் தூண்டுதல்" குறித்துச் செய்தி ஊடகங்கள் கூச்சலிட்டன; அவருடைய  முன்முயற்சியை சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் பாராளுமன்றத்தில் கண்டித்தார். "ஐரோப்பிய ஆணையத்தின் வரலாற்றில் ஒரு பொழுதும் ஆணையத்தின் தலைவர் பகிரங்கமாக ஒரு ஜேர்மனியச் சான்ஸ்லரால் இவ்வகையில் தாக்கப்படவில்லை" என்று Süddeutsche Zeitung கருத்துக் கூறியது.

 

பவேரிய CSUவின் பொதுச் செயலாளரான அலெக்சாந்தர் டோப்ரிண்ட், Bild பரபரப்புப் பத்திரிகையில் " Dolce Vita அரசுகளின் கூலிக்காரன், நம் பணப்பெட்டிக்குள் அவர்களுடைய கைகளைக் கொண்டுவர விரும்புகிறவர்" என்று பரோசாவைத் தாக்கினார். பொருளாதார மந்திரி பிலிப் ரோஸ்லர் ஜேர்மனி மற்ற யூரோ அரசுகளுக்காக நிதியப் பொறுப்பை எடுக்காது என்று வலியுறுத்தினார். "யூரோப் பத்திரங்கள் வேண்டாம் என்று நாம் கூறுகிறோம்" என்றார் அவர். "ஒரு மாற்ற ஒன்றிம் என்பது தவறு, ஏனெனில் ஜேர்மனியின் வரிசெலுத்துபவர்கள் செலவைப் பொறுப்பெடுக்க வேண்டி வரும். யூரோப் பத்திரங்கள் தவறு, ஏனெனில் ஜேர்மனி கொடுக்க வேண்டிய வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்று பொருளாகும்" என்றார் அவர்.

வியாழனன்று பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மற்றும் புதிய இத்தாலியப் பிரதம மந்திரி மரியோ மொன்டியைச் சந்திக்கையில் சான்ஸ்லர் மேர்க்கெல் யூரோப் பத்திரங்களுக்கு அவருடைய "வேண்டாம்" கருத்தை வலியுறுத்தினார். மாறாக ஜேர்மனியும் பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடுகளில் அடுத்த சில நாட்களில் சில மாற்றங்களை முன்வைக்கும் என்றார். அதன் நோக்கம் பிரஸ்ஸல்ஸிற்கு இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த வழிவகை கொடுப்பதாகும். உறுதிப்பாடு, வளர்ச்சி உடன்பாட்டை மீறுபவர்கள் "பொறுப்பேற்க வலியுறுத்தப்படவேண்டும்" என்று அவர் கூறினார்.

ஆரம்ப எதிர்ப்பிற்குப் பின் EFSF இன்னும் பிற நடவடிக்கைகளுக்கு அவர் ஒப்புக்கொண்டதைப் போல் யூரோப் பத்திரங்களுக்கும் இறுதியில் மேர்க்கெல் ஒப்புதல் கொடுப்பார் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. ஆனால் இதற்கு அவர் அதிக விலை கேட்கக் கூடும். இதற்கு ஈடாக ஜேர்மனிய அரசாங்கம் உறுதிப்பாட்டு உடன்படிக்கை இறுக்கப்பட வேண்டும், அதையொட்டி பிரஸ்ஸ்ல்ஸ் தனிப்பட்ட உறுப்பு அரசுகள்மீது கிட்டத்தட்ட அவைகளின் வரவு-செலவுத் திட்டங்களில் சர்வாதிகாரத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவ விரும்பும். இது ஐரோப்பிய ஒன்றியம் பொதுக் கருத்தையோ ஜனநாயக வழிமுறைகளோ பொருட்படுத்தாமல் நெருக்கடியின் சுமையை மக்கள் மீது செலுத்துவதற்கு அனுமதிக்கும்.

யூரோப் பத்திரங்களானது வங்கிகள் மற்றும் பெரும் செல்வக் கொழிப்புடையவர்களுடைய சொத்துக்களை பொதுப் பணத்தைக் கொண்டு காப்பாற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் நெருக்கடியின் சுமை தொழிலாளர் வர்க்கத்தின் மீது மாற்றப்படுகிறது. ஆயினும்கூட, சமூக ஜனநாயகவாதிகள், பசுமைக் கட்சியினர் மற்றும் ஜேர்மனிய இடது கட்சி ஆகியவை ஆர்வத்துடன் யூரோப் பத்திரங்களுக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.

EFSF மற்றும் பிற நடவடிக்கைகள் செய்துள்ளதுபோல்தான் யூரோப் பத்திரங்களும் நெருக்கடியைத் தீர்க்க அதிகம் உதவாது.

இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை அவற்றின் இடர்களைத் தன் பொருளாதார வலிமை மூலம் ஜேர்மனி அகற்றலாம் என்பது ஒரு போலித் தோற்றம் ஆகும். ஜேர்மனி மிக அதிகம் கடன்பட்டுள்ளது, அதன் ஏற்றுமதியை நம்பியிருப்பதால் உலகப் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு மிகவும் உட்படக்கூடும் என்ற உண்மையைப் புறக்கணித்தாலும், அதன் பொருளாதாரம் மிகப் பெரியது அல்ல. ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3 ட்ரில்லியன் டாலர்கள் என்பது முழு ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பகுதிதான், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றின் கூட்டு GDP ல் பாதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நெருக்கடியின் அடிப்படைக் காரணம் ஐரோப்பிய நாடுகளின் கடன்தன்மை அல்ல. உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன்கள் அமெரிக்கா, ஜப்பான் அல்லது பிரிட்டன் ஆகியவற்றைவிடக் கணிசமாகக் குறைவானதுதான். மாறாக, இது முதலாளித்துவ அமைப்புமுறையின் சர்வதேச நெருக்கடி ஆகும்; அதன் மையம் அமெரிக்காவில்தான் உள்ளது. உட்பிளவுகளும் பூசல்களும் நிறைந்திருப்பதால் ஐரோப்பா நிதியச் சந்தைகளில் இலக்காக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பாவை "ஐக்கியப்படுத்திவிடவில்லை", மிகச் சக்திவாய்ந்த நிதிய, தொழில்துறை நிறுவனங்களுக்குத் தாழ்த்தித்தான் விட்டுள்ளது; தேசியப் பகைமைப் போக்குகளை அது வெற்றிகொள்ளவில்லை, நெருக்கடி தீவிரமாகும்போது எல்லாம் அவைகள் மீண்டும் எழுச்சி பெறுகின்றன. முதலாளித்துவ வர்க்கம் இயல்பாக அதனுடைய மக்கள் நலன்களின் அடிப்படையில் கண்டத்தை ஐக்கியப்படுத்த இயலாது, ஏனெனில் முதலாளித்துவ தனியார் சொத்துடைமை தவிர்க்கமுடியாமல் தேசிய அரசுகளுடன் பிணைந்துள்ளது.

நெருக்கடிக்கு ஒரு முற்போக்கான தீர்வு தற்பொழுதுள்ள சொத்து உறவுகளை மாற்றுவதின் அடிப்படையில்தான் முடியும். வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் முக்கிய தனியார் செல்வங்கள் பறிமுதல்செய்யப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, சமூகம் முழுவதற்கும் சேவைசெய்யும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். சமூகத் தேவைகள்தான் இலாப உந்துதலை விட முன்னுரிமை பெற வேண்டும்.

அத்தகைய சோசலிச முன்னோக்கு ஐரோப்பாவில் ஒரு நெருக்கமான பொருளாதார, சமூகப் பிணைப்புடைய சமூகத்தை சர்வதேச ஒத்துழைப்புடன் தொழிலாள வர்க்கத்தினை நெருக்கமாக ஐக்கியப்படுத்துவதன்மூலம்தான் அடையப்படமுடியும். அதன் நோக்கம் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை கட்டமைப்பதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதற்கு மாற்றீடாக 1930களில் இருந்ததைப்போல் கண்டத்தைப் பிளவுகளுக்கு உட்படுத்தி சர்வாதிகாரம், யுத்தம் என்பதாகத்தான் இருக்கும்.