World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French president’s associates charged in “Karachigate” scandal

“கராச்சி கேட்” ஊழலில் பிரெஞ்சு ஜனாதிபதியின் கூட்டாளிகள் குற்றம் சாட்டப்படுகின்றனர்

By Kumaran Ira
3 October 2011

Back to screen version

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் நெருக்கமான கூட்டாளிகள் 1994 ம் ஆண்டில் பாக்கிஸ்தானுக்கான நீர்மூழ்கிக் கப்பல்கள் விற்பனையில் சட்டவிரோதமாக கட்சிக்கு நிதி திரட்டும் வகையில் இலஞ்சப் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். “கராச்சி கேட்” என்று அறியப்பட்டுள்ள இந்த ஊழல் சார்க்கோசியின் ஜனாதிபதி என்ற நிலையை இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன; ஏனெனில் இவர் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார் என்று இப்பொழுது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மேலும் அரசாங்க அதிகாரிகள் அதன் விசாரணையில் குறுக்கீடு செய்வதின் மூலம் ஊழலை மூடி மறைக்க முற்படுவதும் தெளிவாகியுள்ளது.

15 பேரைக் கொன்ற –அதில் 11 பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் பொறியியலாளர்களும் அடங்குவர்— 2002 பாக்கிஸ்தான் குண்டுத் தாக்குதலானது, 1994 ம் ஆண்டு பாக்கிஸ்தானுக்கு விற்பனையான பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றிய இலஞ்சப்பணம் கொடுத்தல் இரத்து ஆனதுடன் தொடர்புடையதா என்று  நீதிபதிகள் விசாரிக்கத் தொடங்குகையில் கராச்சி விவகாரம் வெளிப்பட்டது. விசாரணை செய்த நீதிபதிகள் ஆயுத விற்பனையில் இருந்து கிடைத்த இலஞ்சப் பணம் முன்னாள் வலதுசாரிப் பிரதம மந்திரி எடுவார்ட் பலடூர் 1995ல் தோற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கான சட்டவிரோத நிதியாகப் பயன்படுத்தப்பட்டது என்று முடிவிற்கு வந்த பின் இது ஒரு முக்கிய அரசியல் ஊழலாயிற்று. அந்த நேரத்தில் சார்க்கோசி பலடூர் அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்ட மந்திரியாகவும் அவருடைய தேர்தல் பிரச்சாரச் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார்.

இத்தேர்தல் முயற்சியில் பலடூர், ஜாக் சிராக்கிடம் தோற்றார்; அதிகாரத்திற்கு வந்தபின் சிராக் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தங்களில் கொடுக்க வேண்டிய பணங்களை இரத்து செய்தார்; ஏற்பாட்டில் இருந்து நிறைய பணத்தைப் பெற்றிருக்க வேண்டிய பாக்கிஸ்தானிய உளவுத்துறை அதிகாரிகளுக்கு இது கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையொட்டிப் பதிலடியாக பாக்கிஸ்தானியர்கள் குண்டுத் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தனர், அதை அல் கெய்டா மீது குற்றம் கூறினர் என்ற சந்தேகம் நிலவியது.

இப்பொழுது இந்த ஊழலில் சார்க்கோசியின் கூட்டாளிகள் என்று தொடர்புபடுத்தப்படுபவர்களில், வணிகர் Nicolas Bazire உள்ளார்; இவர் பலடூரின் தலைமைப் பணியாளராகவும் 1995 பிரச்சார மேலாளராகவும் இருந்தார்; நீண்டகாலமாக சார்க்கோசியின் ஆலோசகரான Thierry Gaubert; மற்றும் பிரெஞ்சு-லெபனான் வணிகர் Ziad Takieddine –இவர் பாக்கிஸ்தான் மற்றும் சௌதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தங்களில் மோசடிக்காக குற்றம் சாட்டப்பட்டவர், இவற்றில் அவர் இடைத்தரகராக இருந்தார் எனக் கூறப்படுகிறது. Takieddine பிரான்ஸுக்கும் முன்னாள் லிபிய அரசாங்கத் தலைவரான கர்னல் முயம்மர் கடாபிக்கும் இடையே இருந்த தொழில்துறைத் திட்டங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ததாகவும் சந்தேகத்திற்கு உட்பட்டவர்.

Bazire மற்றும் Gaubert கைதுசெய்யப்பட்டு பொலிசாரால் இரண்டு வாரங்களுக்கு முன்பு விசாரிக்கப்பட்டனர். 1990களில் பாக்கிஸ்தானுக்கு விற்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் இலஞ்சப் பணம் பெற்றதாக Bazire குற்றம் சாட்டப்பட்டுள்ளார்; Gaubert சுவிட்சர்லாந்தில் இருந்து பணத்தை தோல்பெட்டிகளில் கொண்டுவந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 8ம் திகதி, Gaubert இன் முன்னாள் மனைவி Hélène de Yougoslavie பொலிசிடம் தன் கணவர் அடிக்கடி சுவிட்சர்லாந்திற்கு Takieddine னுடன் 1995ல் சென்று, அங்கு பணத்தைப் பெற்று பாரிஸில் Bazire ரிடம் ஒப்படைத்தார் என்று கூறினார்.

இந்த விவகாரம் சார்க்கோசி நிர்வாகத்திற்குக் கணிசமான அரசியல் பிரச்சினையானதால், அரசாங்க அதிகாரிகள் விவகாரம் பற்றி கண்டித்து, இதில் சார்க்கோசிக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மறுத்தனர். செப்டம்பர் 22 அன்று ஜனாதிபதி மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, “இந்த வழக்கின் எக்கூறுபாட்டிலும் நிக்கோலா சார்க்கோசியின் பெயர் தோன்றவில்லை, இந்த வழக்கின் சாட்சி அல்லது தொடர்புடையவர் எவராலும் மேற்கோளிடப்படவில்லை” என்று அறிவித்தனர்.

இந்த அறிக்கையே விவாதங்களைத் தூண்டியது; பிரெஞ்சு நீதித்துறை அதிகாரிகள் ஜனாதிபதி அலுவலகம் ஒரு குற்றவிசாரணயில் தலையிடுகிறது எனக் குற்றம் சாட்டினர். Le Monde, “இந்த இரு அறிவிப்புக்களும் வியப்பைத் தருகின்றன: உண்மையில் திரு சார்க்கோசியின் பெயர் வழக்கில் தோன்றவில்லை என்று எலிசே எப்படிக் கூறமுடியும்—வழக்கு பற்றிய ஆவணங்களை அது பார்வையிடாவிட்டால்? ஆனால் நாட்டின் தலைவரும் ஜனாதிபதியும் வழக்கில் சட்டநுட்பப்படி தொடர்பற்று இருப்பதால், நடக்கும் சட்ட வழக்கில் உள்ள ஆவணங்களை அவர்கள் பரிசீலிப்பதற்கான காரணம் ஏதும் இல்லை” என்று எழுதியுள்ளது.

மாஜிஸ்ட்ரேட்டுக்கள் சங்கத்தில் தலைவர் Christophe Regnard ஐ இக்கருத்து பற்றி AFP வினாவிற்கு உட்படுத்தியுள்ளது. “இது சட்ட இரகசியத்தன்மையைத் தெளிவாக மீறுவது ஆகும். எலிசே [ஜனாதிபதி அரண்மனை] இவ்வளவு மட்டமாக வழக்கில் உள்ள ஆவணங்களை அது பார்வையிட்டது என ஒப்புக் கொள்வது பெரும் வியப்பாக உள்ளது. அத்தகைய ஒப்புதல் அசாதாரணமானது” என்றார் அவர்.

ரெக்னார்ட் மேலும் கூறினார்: “நாம் ஒன்றும் கள்ளம் கபடற்று இருக்க வேண்டாம். தகவல்கள் சுற்றி வருகின்றன. ஆனால் பொதுவாக அவை இரகசியமாக இருக்கும். பொதுநிலையில் இருந்து பார்த்தால், இது அரச காலத்தில் உள்ள பீதி போல் தோன்றுகிறது.”

சார்க்கோசி முகாமிலுள்ள அதிகாரிகள் Le Monde செய்தியாளர் மீது ஒற்று வேலை பார்த்ததிலும் தொடர்பு கொண்டிருந்தனர் என்று சமீபத்தில் தெரியவந்துள்ளது; அந்தச் செய்தியாளர் பெத்தன்கூர் ஊழல் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்; இதில் சார்க்கோசியின் முகாமும் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில் சார்க்கோசியின் நெருக்கமான நண்பரும் முன்னாள் உள்துறை மந்திரி Brice Hortefeux ம் நீதித்துறை வழிவகையின் இரகசியத்தை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்; இது வழக்கு பற்றி Gaubert உடன் அவர் கொண்ட தொலைப்பேசித் தொடர்புகள் வெளிப்பட்டதை அடுத்து வந்துள்ளது.

செப்டம்பர் 23ம் திகதி, Hortefeux, Gaubert இருவருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் பதிப்பை Le Monde வெளியிட்டது; இது பொலிசால் செப்டம்பர் 14ம் திகதி பதிவு செய்யப்பட்டது. இந்த உரையாடலில் Gaubert இடம் தன்னுடை முன்னாள் மனைவி பொலிசிடம் கொடுத்த சாட்சியம் பற்றி Hortefeux கூறியுள்ளார்; செப்டம்பர் 8 அன்று கராச்சி விவகாரம் பற்றிய விசாரணையின் ஒரு பகுதியாக அது இருந்தது.

செப்டம்பர் 20 அன்று Hortefeux உடன் உரையாடல் நடத்தியதை Gaubert பொலிசிடம் ஒப்புக் கொண்டார். “Brice Hortefeux என்னிடம் பெயரிடப்படாத சாட்சி என் மனைவி ஹெலன் என்பதை உறுதிபடுத்தினார்” என்று அவர் கூறினார். ஜூலை மாதம், அவருடைய வீட்டைப் போலிசார் சோதனையிட்டபின், Gaubert விவகாரம் பற்றிப் பொலிசிடம் எதையும் கூறவேண்டாம் என்று Gaubert மனைவியிடம் கூறி அவரை அச்சுறுத்தும் வகையில், “நீ ஏதாவது கூறினால், உன் குழந்தைகளைக் காணமாட்டாய்; நான் கீழே சரிவுற்றால், நீயும் என்னுடன் விழுந்துவிடுவாய்” என்றார்.

சார்க்கோசியைக் காப்பதற்காக, இந்த விவகாரத்தில் Hortrefeux உடைய குறுக்கீடு ஊழலில் பிரெஞ்சு ஜனாதிபதியின் தொடர்பை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. செய்தி ஊடகத் தகவல்கள் பரந்த முறையில் Hortefeux ன் இந்த விவகாரத்தில் ஈடுபாட்டை ஊழலின் மையத்தில் சார்க்கோசி இருப்பதின் தெளிவான அடையாளம் என்று காண்கின்றன.

கராச்சி கேட் ஊழல் விவகாரத்தை நீதிபதிகள் விசாரிக்கத் தொடங்கியவுடன் சார்க்கோசியும் அவருடைய நிர்வாகமும் 2002 குண்டுத் தாக்குதல்களுக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் விற்பனைக்கும் இடையே உள்ள தொடர்பு, மற்றும் இவ்விவகராத்தில் இவருடைய பங்கு ஆகிய கூற்றுக்களை உதறித்தள்ளினர். ஆனால் லக்சம்பர்க் பொலிஸ் அறிக்கை ஒன்றில் “நிக்கோலா சார்க்கோசி பாக்கிஸ்தான் ஒப்பந்த ஊழலில் இலஞ்சப் பணம் சுற்றி வருவதற்கு நிதியப் புள்ளிகளில் முக்கியமானவராக இருந்தார்” என்று கூறியுள்ளது.

பொலிஸ் அறிக்கையின்படி, “குடியரசின் ஜனாதிபதி, வரவு-செலவுத் திட்ட மந்திரியாக இருந்தபோது, 1994ம் ஆண்டு லக்சம்பர்க் தளமுடைய கடல்கடந்த Heine நிறுவனத்தைத் தோற்றுவிப்பதில் நேரடிக் கண்காணிப்பைக் கொண்டிருந்தார்; இதுதான் ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்கப் பயன்படுத்தப்பட்டது.”

ஊழலில் சார்க்கோசியின் பங்கு பற்றிய குற்றச்சாட்டுக்கள் “குறைகூறுவதற்கு இடமில்லாத குடியரசு” ஊக்குவிக்கப்படும், பிரெஞ்சு அரசியல் தூய்மைப்படுத்தப்படும் என்னும் அவருடைய பிரச்சார உறுதிமொழிகளின் போலித்தன்மையை அம்பலப்படுத்தியுள்ளன. கராச்சி மற்றும் பெத்தன்கூர் விவகாரங்கள் முழு அரசியல் ஸ்தாபனத்தையும் தொடர்புபடுத்தும் தொடர்ச்சியான அரசியல்-நிதிய ஊழல்களின் ஒரு பகுதி ஆகும்; இதில் சார்க்கோசியின் போட்டியாளர்கள் முன்னாள் ஜனாதிபதி சிராக் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் ஆகியோரும் அடங்குவர்; இது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கொள்ளை முறை வெளியுறவுக் கொள்கையை அம்பலப்படுத்துகிறது.