World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The slaughter in Sirte

சிர்ட்டே நகரில் நடக்கும் படுகொலைகள்

Patrick O’Connor
3 October 2011

Back to screen version

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் தலைமையிலான நேட்டோ நாடுகள் லிபிய நகரமான சிர்ட்டேயில் கொடூரமான யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளன. வடஆபிரிக்க நாட்டில் எஞ்சியிருக்கும் அனைத்து எதிர்ப்புகளையும் நசுக்கும் அவற்றின் வெறித்தனமான முனைவில், நேட்டோவும் தேசிய இடைக்கால சபையோடு அணிதிரண்டிருக்கும் அதன் கைப்பாவை போராளிகள் படையும் பொதுமக்களைக் கொன்றும், நகர்புற மையங்கள் முழுவதிலுமுள்ள கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை அழிக்கும் கண்மூடித்தனமான இராணுவ பலத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

அந்த முற்றகையிலிருந்து தப்பித்து வந்த பல அகதிகள், நேட்டோ குண்டுகளால் பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள், மற்றும் குடிமக்களின் ஏனைய கட்டிடங்களையும் அழிக்கப்பட்டதைப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். வான்வழி வேட்டை தற்போது நாள்முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. கடாபிக்கு எதிரான போராளிகள், 100,000 மக்கள் வாழும் நகருக்குள் போலியாகக்கூட தாங்கள் இன்ன இலக்குகளைக் குறிவைத்து தாக்குகிறோம் என்று தெரியாமல், ராக்கெட்களையும், பீரங்கி குண்டுகளையும், மோர்ட்டர் வெடிகுண்டுகளையும் வீசி வருகின்றனர். மனிதாபிமான நெருக்கடியை இன்னும் அதிகமாக தூண்டிவிடுவதைப் போல, உணவுப்பொருட்கள், தண்ணீர், மருத்துவப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் சிர்ட்டே பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக குழந்தைகளும், வயதானவர்களும், காயப்பட்ட மற்ற மனிதர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி, மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட ஆட்சி-மாற்ற பிரச்சாரத்திற்கு பின்னால் இருக்கும் சூறையாடும் பொருளாதார மற்றும் பூகோளமூலோபாய கணிப்பீடுகளையே இந்த வன்முறை எடுத்துக்காட்டுகிறது. வடஆபிரிக்காவில் அவற்றின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதோடு, அண்டைநாடுகளான எகிப்து மற்றும் துனிசியாவில் எழுந்துள்ள புரட்சிகர எழுச்சிகளால் அவர்களின் நலன்களுக்கு எதிராக முன்நிற்கும் சவாலை எதிர்கொள்ளும் அதேவேளையில், லிபியாவின் இலாபகரமான எண்ணெய் வளங்களின் மீது கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதும் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் நோக்கமாகும்.

சிர்ட்டேயில் நடக்கும் படுகொலைகள், “மனிதாபிமான" வேஷத்தில் நடக்கும் யுத்தத்தை இன்னும் கூடுதலாக அம்பலப்படுத்தி உள்ளது. கடாபியின் துருப்புகள் பெங்காசியில் படுகொலையில் ஈடுபடக்கூடிய நிலையில் இருப்பதாக, எவ்வித ஆதாரமும் இல்லாமல், கடந்த மார்ச்சில் ஏகாதிபத்திய அரசாங்கங்களும், அவர்களுக்காக வக்காலத்துவாங்குபவர்களும் ஊடகங்களில் முறையிட்டனர். இப்போது சிர்ட்டேயில், கடாபி ஆதரவாளர்களின் இரும்புப்பிடியில் இருக்கும் கடைசி ஒரு நகரின் எதிர்ப்பைக் கடந்துவரும் ஒரு முயற்சியில், உண்மையில் நேட்டோ தான் அந்நகரின் மக்கள்மீது இரத்தக்குளியல் நடத்திக் கொண்டிருக்கிறது.

பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக" என்ற பெயரில் யுத்தத்தை ஆதரித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள பல ஊடக மேதாவிகளும், அரசியல் பிரமுகர்களும், இப்போது ஆச்சரியத்திற்கிடமில்லாத விதத்தில், கட்டவிழ்ந்துவரும் தாக்குதல்களுக்கு மத்தியில், ஒன்றிணைந்து மௌனமாக உள்ளனர். பேராசிரியர் ஜூவான் கோல் போன்ற "இடதுகள்" என்றழைத்துக்கொள்ளும் பலரும் மற்றும் Nation இதழும் கூட அதில் உள்ளடங்கும்.

தேசிய இடைக்கால சபையால் முன்னதாக வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின்படி, செப்டம்பர் தொடக்கத்தில் 30,000 மக்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தனர், 50,000 பேர் காயமடைந்திருந்தனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேட்டோவால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, அவர்களின் குண்டுதாரிகள் செப்டம்பரின் கடைசி இரண்டு வாரங்களில் மட்டும் ஷெர்டியில் அதிகளவாக 121 பிரத்யேக "முக்கிய தாக்குதல்களை" நடத்தியுள்ளனர். இந்த வான்வழி தாக்குதல்கள் உளவுத்துறையின் குறைந்தபட்ச விபரங்களின் அடிப்படையிலோ அல்லது முற்றிலுமாக உளவுத்துறையின் விபரங்களே இல்லாமலோ நடத்தப்பட்டுள்ளன. ஆகவே இவற்றை சர்வதேச விதிக்களுக்கு முற்றிலும் விரோதமானவையாக, கண்மூடித்தனமானவையாக கருத முடியும்.

துல்லியமான எண்ணிக்கை தெரியாத போதினும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிர்ட்டேயில் சிக்கியுள்ளனர். செஞ்சிலுவை சங்கத்தின் கருத்துப்படி, சுமார் 18,000 பேர் அந்நகரை விட்டு வெளியேறியுள்ளனர். எவ்வாறிருந்தபோதினும், சுற்றுப்புறங்களில் இருந்து வரும் அகதிகளின் சமீபத்திய உள்வரவால், உள்ளூர் மக்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இதில் தவார்காவிலிருந்து வந்த கறுப்புநிற குடும்பங்களின் ஒரு கணிசமான எண்ணிக்கையும் உள்ளடங்கும். அந்நகரம் ஆகஸ்டிலும், செப்டம்பர் தொடக்கத்திலும் தேசிய இடைக்கால சபையின் போராளிகளால் நடத்தப்பட்ட ஒரு கொடூரமான இனப்படுகொலையால் நாசமாக்கப்பட்டது; அப்போது அங்கிருந்து மக்கள் இடம் பெயர்ந்தனர்.

சிர்ட்டே மக்கள் தேசிய இடைக்கால சபை மற்றும் நேட்டோ தலையீட்டிற்கு கசப்பான மற்றும் தீர்க்கமான எதிர்ப்பைக் காட்டியதற்காக, அவர்கள் ஒட்டுமொத்தமாக இந்தவொரு காட்டுமிராண்டித்தனமான தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அந்நகரம் பதவியிறக்கப்பட்ட ஆட்சிக்கு அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறது. கடாபியின் பிறந்த இடமான அங்கே, குழந்தைபருவத்தில் அவர் வளர்ந்த வீடும், அவருடைய முன்னாள் சட்டவாக்க அமைப்பான மக்கள் பொதுச்சபையும் (General Peoples Congress)  சிர்ட்டேயில் கூடுவது வழக்கம்.  

அமெரிக்கா, பிரிட்டிஷ், பிரெஞ்ச் அரசாங்கங்களைப் பொறுத்த வரையில், இந்த அழிப்பு ஒட்டுமொத்த லிபிய மக்களுக்கும் காட்டப்படும் ஒரு எச்சரிக்கையாக இருந்து உதவுகிறது. அதாவது நேட்டோ கண்காணிப்பின்கீழ் உருவாக்கப்படும் கடாபிக்குப் பிந்தைய அரசியலமைப்பிற்குக் காட்டப்படும் எவ்வித எதிர்ப்பும், கடுமையான ஒடுக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதற்கு இதுவோர் எச்சரிக்கையாகும்.

ஷெர்டியில் நிலவும் நிலைமைக்கும், 2004 நவம்பர்-டிசம்பரில் ஈராக் நகரமான ஃபாலுஜாஹில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான அமெரிக்க தாக்குதலுக்கும் இடையில் நிச்சயமாக ஓர் ஒற்றுமை இருக்கிறது. சுமார் 10,000 அமெரிக்க துருப்புகளும், கடற்படையும் வீடுகள், தொழிற்சாலைகள், மசூதிகள் என பாகுபாடின்றி குண்டுகளை வீசி, 250,000 மக்கள் வாழ்ந்த அந்நகரை தரைமட்டமாக்கின. அந்த நடவடிக்கை, ஒட்டுமொத்த ஈராக்கிய மக்களையும் பயமுறுத்தும் விதத்தில், சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு எதிராக எழுந்த சன்னி கிளர்ச்சியை நசுக்க நோக்கம் கொண்டிருந்தது. இப்போது சிர்ட்டேயில் நடப்பதைப் போலவே, ஃபாலுஜாஹில் நடந்த மோதலும் ஒரு யுத்தம் அல்லது போர் போல் அல்லாது ஒரு ஒட்டுமொத்தமான படுகொலையாக இருந்தது. அதில் மிகவும் குறைந்த எண்ணிக்கையோடு, பலவீனமான ஆயுதங்களைத் தாங்கியிருந்த எதிர்ப்பு போராளிகளின் ஒரு குழுவை, உலகின் மிகவும் பேரழிவுமிக்க, தொழில்நுட்பரீதியாக மிகநவீன தரைப்படை மற்றும் விமானப்படை துருப்புகள் வெற்றி கொண்டன.

இறுதி கட்டத்தில் இருப்பதாக காணப்படும் லிபிய யுத்தத்தில் நேட்டோவின் நடத்தை, சந்தேகத்திற்கிடமின்றி, மத்தியகிழக்கு முழுவதிலும் உள்ள அரசாங்கங்களுக்கும் சர்வதேச அளவிலும் ஒரு தகவலை அனுப்ப நோக்கம் கொண்டிருக்கிறது. மார்ச்சில், சார்க்கோசி இதை உறுதியான மொழிகளில் தெளிவுபடுத்தி இருந்தார். அவர் கூறியது: “சர்வதேச சமூகத்தின் மற்றும் ஐரோப்பாவின் பிரதிபலிப்பு இந்த சந்தர்ப்பத்திலிருந்து ஒவ்வொரு கணமும் ஒரேமாதிரியாக தான் இருக்குமென்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும், குறிப்பாக ஒவ்வொரு அரேபிய ஆட்சியாளரும் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.

தற்போதைய லிபியாவாக மாறியிருக்கும் திரிபொலிதானியா, ஃபெஜ்னா, கெரினெய்காவின் (Tripolitania, Fezzna, Cyrenaica) ஒட்டோமான் மாகாணங்களை இணைத்துக்கொள்ளும் அவர்கள் முனைவின் பாகமாக, சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால், 1911 அக்டோபர் 3இல், இத்தாலிய துருப்புகள் திரிபொலியின்மீது ஒரு கடற்படை தாக்குதலைத் தொடுத்தன. காலனிய படைகளுக்கு எதிராக உள்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்த போது, இத்தாலிய தாக்குதல் நடவடிக்கை உடனடியாக ஒட்டோமான் இராணுவ துருப்புகள் மீதான ஒரு தாக்குதல் என்பதிலிருந்து உள்நாட்டு மக்களுக்கு எதிரான பாகுபாடற்ற ஒடுக்குமுறை தாக்குதல்களின், மற்றும் படுகொலைகளின் ஒரு நடவடிக்கையாக நீடிக்கப்பட்டது. 1912 அக்டோபரில் முடிவுக்கு வந்த இத்தாலிய-துருக்கிய யுத்தம், உலகின் முதல் வான்வழி வேவுபார்ப்பு விமானங்கள் மற்றும் குண்டுவீசும் வேட்டைகள் உட்பட நவீன இராணுவ தொழில்நுட்பங்களை ஒருதரப்பு பயன்படுத்திய தன்மையை கொண்டிருந்தது.

முற்றுமுழுதான, நாகரீகமான படுகொலை" என்று அந்த யுத்தத்தை லெனின் விவரித்தார்.

லிபியாவில் இப்போது என்ன நடந்து வருகிறதோ அதை விவரிக்க லெனின் அந்த சொற்களில் எதையும் மாற்ற வேண்டியதில்லை. இருபத்தோராம் நூற்றாண்டில் பகிரங்கமாக காலனித்துவ வகைப்பட்ட  நடவடிக்கைகள் மீண்டும் எழுந்திருப்பது, உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடைந்துவரும் நெருக்கடியின் ஒரு வெளிப்பாடாகும். அமெரிக்க ஆளும் மேற்தட்டு வேகமாக அரிக்கப்பட்டு வரும் அதன் பொருளாதார நிலைமையை ஈடுகட்டும் ஒரு கருவியாக, வேண்டுமென்றே அது அதன் இராணுவ பலத்தை பயன்படுத்த விரும்புகிறது. அதேவேளையில், புதிய ஏற்றுமதி சந்தைகளைத் திறந்துவிடுவதற்கும், ஆதாயமான இயற்கை ஆதாரவளங்களை அணுகுவதைப் பாதுகாக்கவும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் முன்னாள் காலனித்துவ நாடுகளில் அவை இழந்துவிட்ட செல்வாக்கை மீண்டும் பெற ஒரு வாய்ப்பை காணுகின்றன.

சண்டை முடிவதற்கு முன்னாலேயே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து பெருநிறுவன வர்த்தகர்களையும் சேர்த்துக் கொண்டு பல அரசியல்வாதிகள் திரிப்போலிக்கு விரைந்து சென்றனர். சமீபத்தில் அமெரிக்க தூதரால் லிபியாவின் "மகுடத்தில் பதிந்த இரத்தினக்கல்" என்று வர்ணிக்கப்பட்ட, வடஆபிரிக்க நாடுகளிலுள்ள பெரும் எண்ணெய் வளங்களுக்காக, ஒவ்வொருவரும் அவர்களின் பங்கைப் பாதுகாக்க போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றனர்.

1914க்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்ததைப் போல, மனிதயினம் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்ந்திருப்பதை எதிர்கொண்டுள்ளது. யுத்தம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, இந்த இலாபகர அமைப்புமுறையை அகற்ற ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகிறது.