World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

SPD, Greens prepare for coalition in Berlin

சமூக ஜனநாயக கட்சியும் பசுமைவாதிகளும் பேர்லினில் கூட்டணிக்குத் தயாராகின்றன

By Emma Bode
5 October 2011

Back to screen version

சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் இடது கட்சி ஆகியவற்றின் கூட்டணி பேர்லின் மாநிலத் தேர்தல்களில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, சமூக ஜனநாயகக் கட்சி இப்பொழுது ஒரு புதிய கூட்டணியை பசுமைவாதிகளுடன் சேர்ந்து உருவாக்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது; இதற்கு முன்னாள் ஆட்சி புரிந்த மேயர் கிளவ்ஸ் வோவரைட் (SPD) தலைமை தாங்குவார்.

கிட்டத்தட்ட 10,000 வாக்குகளுக்கு மேல் இழந்துவிட்டபோதிலும்கூட, சமூக ஜனநாயகக் கட்சி பேர்லின் பிரதிநிதிகள் மன்றத்தில் (செனட்) அதிக இடங்களைக் கொண்டுள்ள கட்சியாக உள்ளது. ஆனால் ஒரு புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு அது ஒரு கூட்டாணிப் பங்காளிக் கட்சியைக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவ ஜனநாய யூனியனுடன் (CDU) சேர்ந்தால் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு பாதுகாப்பான கூட்டணிப் பெரும்பான்மை கிடைக்கும். ஆனால், மாறாக அது புதிய செனட்டில் பசுமைவாதிகளுடன் சேர முயல்கிறது. இது நிர்வாகத்திற்கு ஒரே ஒரு வாக்கு பெரும்பான்மை என்ற நிலையை ஏற்படுத்தும். இந்த முடிவிற்குக் காரணம் முக்கியமாகத் தேசிய மட்டத்திலான அரசியல் குறித்த விருப்பங்களாகும். பேர்லின் செனட்டில் பசுமைவாதிகளுடன் ஒரு கூட்டு என்பது பின்னர் மத்திய ஆட்சி மட்டத்தில் ஒரு வருங்கால சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைவாதிகள் கூட்டணிக்குத் அடித்தளம் அமைக்கும்.

சமூக ஜனநாயகக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாய யூனியன் மற்றும் பசுமைவாதிகள் ஆகியோருக்கு இடையே ஆராய்வு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், அரசாங்கக் கொள்கையில் பிரச்சினைகளில் உடன்பாடுகள், வேறுபாடுகள் குறித்த பட்டியல் செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்டது. இவற்றில் உள்நாட்டுப்பாதுகாப்பு, கல்வித்துறை, எரிசக்தி மற்றும் போக்குவரத்துப் பிரிவுகள் மற்றும் புறநகர்ப் போக்குவரத்து முறையான S-Bahn தனியார்மயமாக்கல் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகள் அடங்கியிருந்தனபசுமைவாதிகளுடனான பொது உடன்பாடு கிறிஸ்தவ ஜனநாய யூனியனுடையதை விட மிக அதிகமாக இல்லை என்றுதான் தோன்றுகிறது.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளுக்கு இடையே வேறுபாடுகள் செய்தி ஊடகத்தில் போக்குவரத்துக் கொள்கை போன்ற இரண்டாம்தரப் பிரச்சினைகளைக் குறித்து வெளியிடப்பட்டது. அவர்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில், பேர்லின் பசுமைவாதிகள் A 100 நகர போக்குவரத்து கிழக்கே இனியும் விரிவாக்குதல் என்பதை நிராகரித்தது; ஏனெனில் இது காலம் கடந்துவிட்ட போக்குவரத்துக் கருத்து என்று அது கூறியுள்ளது. ஏற்கவே இத்திட்டத்திற்காக திட்டமிட்டுள்ள நிதி  நகரப் போக்குவரத்தில் 3.2 கி.மீ.நீளத்திற்கு புதிய இணைப்பைகட்டமைப்பதற்குப் பதிலாக, இருக்கும் சாலைகளைப் பராமரித்தல் மற்றும் ஒலிக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்பட வேண்டும் என அவர்கள் வாதிட்டுள்ளனர்.

தன்னுடைய சொந்த வரவு-செலவுத் திட்டத்தில் இருத்து நிதியைப் பயன்படுத்துவதைத்தவிர, பேர்லின் செனட் கூட்டாட்சிப் போக்குவரத்துத் துறையில் இருந்து 420 மில்லியன் யூரோக்களை A120  போக்குவரத்து விரிவாக்கத்திற்குக் கேட்கலாம். சமூக ஜனநாயகக் கட்சி மாநில அரசியல்வாதிகள் ஒதுக்கப்பட்ட நிதியை வேண்டாம் எனக் கூற விரும்பவில்லை. அவர்கள் உள்கட்டுமானத்தில் முன்னேற்றங்கள் என்பது நகரத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்றும் (தற்காலிகமாக என்றாலும்) சாலை அமைப்பதில் வேலைகளைத் தோற்றுவிக்கும் என்றும் அறிவிக்கின்றனர். பேர்லின் மாநிலத்தில் இப்பொழுது 13%க்கும் மேலானவர்கள் வேலையின்மையில் உள்ளனர்; வறுமை பெருகுகிறது, வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய அதிக வரிவிதிப்பு மூலம் வருமானத்தை பெறும் வாய்ப்பு குறைவுதான்.

பசுமைவாதிகள் அரசாங்கத்தில் பங்கு பெறுவதற்கு சுற்றுச் சூழல் தொடர்பாகத் தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பர் என்பது நன்கு தெரிந்ததே; எனவே A100 போக்குவரத்தை பொறுத்தவரை இருதிறத்தாருக்கும் பாதிப்பு இல்லாத சமரசம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஆரம்பத்தில் வந்துள்ள சமரசத்திட்டப்படி கூட்டாட்சி அரசாங்கத்தை நிதி ஒதுக்குவதில் மாற்றம் கோரப்படும். அதன்பின்னர் அது பிற போக்குவரத்துத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். இத்திட்டம் வெற்றிபெறவில்லை என்றால், திட்டமிட்டுள்ள போக்குவரத்து விரிவாக்கம் செயல்படுத்தப்படலாம்.

பேர்லினுக்கு நிதி ஒதுக்கீடு பற்றி முடிவு இன்னும் ஏற்படவில்லை என்றாலும், மத்திய போக்குவரத்து மந்திரி பீட்டர் ரம்சௌவர் (CSU) உடனடியாக இச் சமரசத்திட்டத்தை நிராகரித்தார். சில செய்தி ஊடக வர்ணனையாளர்கள் அதை கூட்டாட்சித் தேர்தல் பிரச்சாரம் எனக் கருதுகின்றனர்.

மத்திய பாராளுமன்றத்தில் இத்தலைப்பு பற்றிய விவாதத்தில், கட்சிப் பிரதிநிதிகள் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை வீசினர். விவாதம் ஒருவகையில் பயனற்றது. ஏனெனில் தற்பொழுது A 110 விரிவாக்கத்திற்கு எதிராக ஒரு நீதிமன்ற நடவடிக்கை உள்ளது. அதன் முடிவு அடுத்த ஆண்டுதான் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய போக்குவரத்துத் துறையில் தற்பொழுது சாலைக் கட்டமைப்புத் திட்டங்களில் 47 பில்லியன் யூரோக்கள் உள்ளன. இதில் மத்திய வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து 1.5 பில்லியன் யூரோக்கள்தான் ஒதுக்கப்பட முடியும்.

செய்தி ஊடகம் மற்றும் பல அரசியல்வாதிகள் இப்பிரச்சினையைப் பரபரப்பாக ஆக்கியுள்ளனர். இதற்குக் காரணம் இன்னும் பரந்த தாக்கங்களை கொண்ட பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவது ஆகும். உதாரணமாக வருங்காலக்கூட்டணிப் பங்காளிகள் பேர்லினில் பள்ளிகளுக்கு நிதிகள் கொடுப்பர், சமூக வீடுகள் திட்டத்திற்கு எந்த அளவிற்கு நிதி ஒதுக்கப்படும், எத்தனை பொதுத்துறை வேலைகள் அழிக்கப்படும், சமூகநலச் செலவுகளில் இன்னும் எவ்வளவு குறைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்பது பற்றி எவ்வித பகிரங்க  விவாதமும் இல்லை. பசுமைவாதிகளின் சொந்தத் தேர்தல் அறிக்கை 500 மில்லியன் யூரோக்களுக்கான கூடுதல் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இத்திட்டங்கள் பற்றியும் எவ்வித பகிரங்க விவாதமும் இல்லை.

எதிர்பார்த்தபடி, A 100 பற்றிய சமரசம் தோல்வி அடைந்தபின்னரும்கூட, பசுமைவாதிகள் கட்சியின் கடந்த வெள்ளியன்று நடந்த மாநாடு சமூக ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதற்குப் பெரும்பான்மையான வாக்குகளைக் கொடுத்தது. இரு கட்சிகளிலும் கூட்டாட்சி மட்டத்தில் இருந்து பேர்லினில் உடன்பாடு தேவை என்பதற்கு அழுத்தங்கள் வருகின்றன என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பேர்லின் செனட்டில் செயல்படக்கூடிய தன்மை இருக்கும் ஒரு கூட்டணி மத்திய ஆட்சி மட்டத்திலும் ஒரு சமூக ஜனநாயகக் கட்சி -பசுமைவாதிகள் கூட்டணிக்கு வழிவகுக்க உதவும்.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் என இரு கட்சியிடமும் யூரோ மீட்புப் பொதிக்கு பண்டேஸ்டாக்கில் ஆதரவைப் பெற்ற போதிலும், கிறிஸ்துவ ஜனநாயக-தாராளவாத ஜனநாயகக் கட்சியின் மத்திய கூட்டணி கடுமையான பிளவில் உள்ளது. கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் முழுவீச்சில் நடக்கும் சமூக எதிர்ப்புரட்சி ஜேர்மனிக்கும் விரிவாக்கப்படும். ஐரோப்பிய வங்கிகளுக்கு கொடுப்பதற்கு தேவையான மீட்பு நடவடிக்கைகளுக்கான பெரும் நிதிய ஒதுக்கீடு தேசிய வரவு-செலவுத் திட்டத்தில் இருந்துதான் வரவேண்டும். சட்டப்பூர்வமான நோய்வாய்ப்பட்டகால ஊதியத்தை குறைப்பது கூட இதில் தவிர்க்கப்படவில்லை. தொழிலாள வர்க்கம் பெற்றுள்ள அனைத்துச் சமூகநல ஆதாயங்களும் அகற்றப்படவுள்ளன.

1998க்கும் 2005க்கும் இடையே கெராட் ஷ்ரோடர் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஜொஸ்கா பிஷ்ஷரின் (பசுமைக்கட்சி) கூட்டாட்சிக் கூட்டணி, ஆழ்ந்த பொதுநல வெட்டுக்களைச் செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியைக் கண்டது. இதுதான் ஹார்ட்ஸ் பொதுநல, தொழிலாளர்துறை சீர்திருத்தங்களைஅறிமுகப்படுத்தி, மிகப் பெரிய அளவில் ஒப்பந்த வேலைகளையும், குறைவூதிய வேலைகளையும் விரிவுபடுத்தியது. பல தசாப்தங்கள் முன்பு உழைத்து சமூக காப்பீட்டுத் திட்டத்திற்கு பணம் அளித்தவர்கள்கூட பெரும் வறுமையில் இருந்து பாதுகாக்கப்படவில்லை. மேலும் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் ஜேர்மன் இராணுவம் யூகோஸ்லாவியா மற்றும் ஆப்கானிஸ்தானப் போர்களில் பங்கு பெறவும் உடன்பட்டன.

சில செய்தி ஊடக விமர்சகர்கள் மிக பலமற்ற, ஒரு வாக்குப் பெரும்பான்மை என்று பேர்லினில் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைவாதிகள் கொண்டிருக்கும் பெரும்பான்மை அரசியல் உறுதியற்ற தன்மைக்கு ஒரு அடையாளம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இடது கட்சியுடன் 10 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடத்தியபின், சமூக ஜனநாயகக் கட்சி பேர்லின் தலைமை அது தன் நீண்டகாலப் பங்காளியை முக்கிய வாக்கெடுப்பு வரும்போது நம்பலாம் என்பதை நன்கு அறிந்துள்ளதுகுறிப்பாக பிரச்சினை புதிய செலவுக் குறைப்புக்கள் என வரும்பனோது. 2001-2011 தசாப்தத்தில் அது பதவியில் இருந்த காலத்தில், சமூக ஜனநாயகக் கட்சி -இடது கட்சிக் கூட்டணி ஒப்புமையில் வேறு எந்த ஜேர்மனிய மாநில அரசையும் விட மிக அதிக செலவுக் குறைப்புக்களைச் சுமத்தியது.

மத்திய ஆட்சி மட்டத்தில், ஜேர்மனிய முதலாளித்துவம் வெடிப்புத்தன்மை உடைய வர்க்கப் போராட்டங்களுக்கு தயாரிப்புக்களை நடத்திவருகிறது. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகள் ஆளும் உயரடுக்கின் செல்வாக்கு மிக்க பிரிவுகளால் தற்பொழுது திட்டமிடப்படும் பெரும் சமூகப் பேரழிவைச் செயல்படுத்தும் பங்கை செவ்வனே கொண்டு நடாத்த தயாரிக்கப்படுகின்றன.