World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Anti-China rhetoric raises threat of war

சீன-விரோத அறிக்கைகள் யுத்த அச்சுறுத்தலை அதிகரிக்கின்றன

Patrick Martin
7 October 2011

Back to screen version

இரண்டு கட்சிகளின் ஆதரவுடன், அமெரிக்க செனட்டில் நிறைவேற்றுவதற்காக வியாழனன்று கொண்டு வரப்பட்ட சீனாவுடன் ஒரு அமெரிக்க செலாவணி யுத்தத்தைத் திணிக்கும் ஒரு சட்டமசோதா ஓர் ஆத்திரமூட்டும் திசைதிருப்பும் முயற்சியாகும். வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிராக அதிகரித்துவரும் போராட்ட காலக்கட்டத்திற்கு இடையில், அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடிக்கு ஓர் வெளிநாட்டை பலிக்கடாவாக்கும் ஒரு முயற்சியில் ஜனநாயகக் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க உற்பத்தித்துறை பொறிவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான ஓஹியோவின் செனட்டர் ஷெர்ரட் பிரௌன் அந்த சட்டமசோதாவைத் தாக்கல் செய்தார். அது மிச்சிகனின் டெப்பி ஸ்தெப்னொவ், நியூயோர்க்கின் சார்லஸ் ஸ்கூமெர் மற்றும் பென்சில்வேனியாவின் ரோபர்ட் கேசெ போன்ற ஏனைய தொழில்துறை-மாநிலங்களின் ஜனநாயக கட்சி செனட்டர்களிடமிருந்தும் தீவிர ஆதரவைப் பெற்றிருந்தது.

அந்த சட்டமசோதா மீதான விவாதங்களை முடித்து, அதை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பில் (இதில் ஆதரவாக 62 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் பதிவாகின) பெரும்பாலான ஜனநாயக கட்சியினரோடு 12 குடியரசு செனட்டர்களும் சேர்ந்து கொண்டனர். ஜவுளித்துறை ஆலைமூடல்களால் பேரழிவுக்கு உள்ளான தெற்கு மாநிலங்களைச் சேர்ந்த வடக்கு கரோலினாவின் ரிச்சர்டு பர், மிசிசிபியின் தாட் கோச்ரன், ஜோர்ஜியாவின் சாக்ஸ்பெ சாம்பிலிஸ் மற்றும் ஜோனி இஷாக்சன், அலபாமாவின் ரிச்சர்டு ஷெல்பெ மற்றும் ஜெஃபர்சன் செஷன்ஸ் ஆகிய ஆறு செனட்டர்கள் உட்பட, செனட்டில் மிகவும் இழிவான பிற்போக்குசக்திகளாக விளங்கும் சிலரும் இதில் உள்ளடங்குவர்.

காங்கிரஸில் உள்ள யுத்தத்திற்கு தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான குடியரசு கட்சியைச் சேர்ந்த தெற்கு கரோலினாவின் லிண்ட்சே கிரஹாம், அதை செனட்டிற்கு நிறைவேற்ற, திங்களன்று நடந்த ஒரு சம்பிரதாய வாக்கெடுப்பில் (அதில் ஆதரவாக 79 வாக்குகளும், எதிராக 19 வாக்குகளும் பதிவாயின) அந்த சட்டமசோதாவை ஆதரித்தார். அந்த சட்டமசோதாவை ஆதரித்த சுமார் இரண்டு டஜன் குடியரசு கட்சியினரில் கிரஹாமும் ஒருவராவார். ஆனால் அதில் பல பிற்போக்கு திருத்தங்களைச் சேர்ப்பதற்காக அந்த சட்டமசோதாவை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு எதிராக வாக்களித்தார்.

அமெரிக்க பெருநிறுவனங்களும், வங்கிகளும் ஒன்றுமறியா கன்றுக்குட்டிகள் அல்ல, மாறாக அவை இந்த பூமியில் இருக்கும் மிகவும் பேராசைமிக்க, இரக்கமற்ற அமைப்புகளாக இருக்கின்ற போதினும், நெறிமுறையின்றி சீனா சூறையாடும் செலாவணி கொள்கைகளையும், வர்த்தக கொள்கைகளையும் கொண்டிருப்பதாக ஜனநாயகக் கட்சியினரும், குடியரசு கட்சியினரும் சீனாவிற்கு கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்தனர்.

நாம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வர்த்தக யுத்தத்தில் (trade war) ஈடுபட்டிருக்கிறோம்,” என்று கூறி, இந்த சட்டமசோதா உலக பொருளாதாரத்தில் பேரழிவுமிக்க விளைவுகளை ஏற்படுத்தி ஒரு வர்த்தக யுத்தத்தைத் தூண்டிவிடும் என்ற எச்சரிக்கைகளுக்கு பிரௌன் விடையிறுப்பு காட்டினார். “நம்முடைய மசோதாவை விமர்சிப்பவர்கள், அது சீனாவுடன் ஒரு வர்த்தக யுத்தத்தைத் தொடங்கும் என்று கூறலாம். நல்லது, அவர்களிடம் நான் சில கருத்துக்களைக் கூற வேண்டி இருக்கிறது. நாம் ஏற்கனவே சீனாவுடன் ஒரு வர்த்தக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். அது ஒன்றும் சுமூகமாக போய் கொண்டிருக்கவில்லை,” இது ஸ்கூமெர் கூறியது.

செலாவணி சந்தைகள் விஷயத்தில் வழக்கமாக தலையிடா கொள்கையின்  நிலையிலிருந்து மாறி, மத்திய வங்கி கூட்டமைப்பின் தலைவர் பென் பெர்னான்கெவும் அந்த சட்டமசோதா மீது அவர்தரப்பு ஆதரவை வழங்கியுள்ளார். “உலக பொருளாதாரத்தில் மிகவும் சாதாரண மீட்பு செயல்முறையாக இருக்கக்கூடியதை சீனாவின் செலாவணி கொள்கை தடுத்து வருகிறது என்பதே இப்போதிருந்து நம்முடைய கவலையாகும். அது ஒருமட்டத்திற்கு மீட்பைத் தடுக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸில் உள்ள, குறிப்பாக உற்பத்தி தொழில்துறையோடும் United Auto Workers மற்றும் United Steelworkers போன்ற தொழில்துறையில் இருக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவ நிர்வாகிகளோடும் நெருங்கிய தொடர்பு கொண்ட ஜனநாயக கட்சியினரின் செலாவணி மோசடி எனப்படுவது செய்வதற்காக சீனாவைத் தண்டிக்கும் சட்டமசோதாக்களை கொண்டுவந்த வரலாற்றை கொண்டுள்ளனர்.  

வியாழனன்று நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் ஒபாமா அவருடைய சீனாவிற்கு விரோதமான முழக்கத்திற்கு வார்த்தையளவிலேயை அவருடைய ஆதரவை கொடுத்தார். "சீனா அதன் ஆதாயத்திற்காக வர்த்தக அமைப்புமுறை விளையாட்டில் மிகவும் தீவிரமாக இருப்பதாக" கூறிய அவர், “அதில் ஒன்று தான் செலாவணி மோசடி,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், "ஆனால் இதுபோன்ற பாதுகாப்புவாத நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்கும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை குழப்பத்திற்குள்ளாக்கும் சட்டமசோதாக்களை காங்கிரஸில் கொண்டு வருவதில் எந்த அர்த்தமும் இல்லை,” என்றார்.

பெரும்பாலான பெருநிறுவன அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு, வெள்ளை மாளிகையும், பொருளாதார நெருக்கடியின் மீது வரும் மக்களின் கோபத்தை வோல் ஸ்ட்ரீட்டிலிருந்து ஒரு வெளிநாட்டு பலிக்கடாவை நோக்கி திசைதிருப்ப, சீனாவிற்கு விரோதமான வார்த்தைஜாலங்களைப் பயன்படுத்துவது மதிப்புடையதாக காண்கிறது. ஆனால் அமெரிக்க நிதியியல் பிரபுத்துவமோ, வார்த்தை கோபங்களை தீவிரப்படுத்தி, அதிலிருந்து சீனாவிற்கு எதிராக நேரடியான ஒரு நடவடிக்கைக்கு இறங்குவதென்பது உலக வர்த்தக அமைப்புமுறைக்கு குழிபறிக்கும், உலகப் பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடியை தீவிரப்படுத்தும் என்று உணர்கிறது. மேலும் ஒருவேளை மிகவும் முக்கியமாக இது அதற்கு அதிக கடன் கொடுத்தவரிடமிருந்து உடைமையை மாற்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாடாகவும் கூட இருக்கலாம்.

இதுபோன்றவொரு சட்டமசோதா நிறைவேற்றப்பட்டால், சீனாவுடனான வணிக யுத்தமானது, ஒரேயொரு நாட்டின் கொள்கைகளால் அல்லாமல், முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடியால் தோற்றுவிக்கப்பட்ட அமெரிக்க உற்பத்தித்துறை வீழ்ச்சியை மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களின் வீழ்ச்சியை காப்பாற்றுவதில் ஒன்றும் செய்துவிடப் போவதில்லை. உலக பொருளாதாரத்தின் மீதுவிழும் அதிர்வூட்டும் விளைவுகள் உண்மையில் வேலைகளை அழிக்குமேயொழிய, அவற்றை உருவாக்காது.

இன்னும் அபாயகரமாக, அதுபோன்றவொரு நடவடிக்கை, இராணுவரீதியிலும் பொருளாதார சக்தியாகவும் உயர்ந்துவரும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால செல்வாக்கிற்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்கும் சீனாவுடன் நேரடியாக இராணுவ மோதலை நோக்கிய ஒரு வியப்பூட்டும் அடியாக அமையும்.

ஆனால் இதுபோன்ற அபாயங்களை அமெரிக்க வர்த்தக யுத்த முறைமைகள் உட்கொண்டிருக்கின்றன என்ற உண்மை அவற்றை நடைமுறைப்படுத்துவதை நிராகரித்துவிடாது. “பகுத்தறிவான" கருத்துக்கள் மேலோங்கும் என்ற கருத்தானது, வரலாற்று படிப்பினைகளைக் கைவிடுகிறது. எப்படியிருந்தாலும், ஜேர்மனியும், பிரிட்டனும் மிகவும் நெருக்கமான பொருளாதார உறவுகளைக் கொண்டிருப்பதால், அவை ஒருபோதும் யுத்தத்தில் இறங்காது என்று முதலாம் உலக யுத்தத்திற்கு முன்னரும் கூட பல வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

சர்வதேச உறவுகள் சடத்துவநலன்களால் ஆளப்படுகின்றனவே தவிர பகுத்தறிவால் அல்ல. ஒபாமா நிர்வாகம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அது சீனாவிற்கு எதிராக பல முறைமைகளைப் பின்பற்றியுள்ளது. வணிகத்தைப் பொறுத்த வரையில், தாராளவாத அமைப்புமுறையில் செல்வாக்கு பெற்ற குரல்களால் அது வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் உலக யுத்தத்திற்கான நிலைமைகளை உருவாக்குவதில் வர்த்தக முரண்பாடுகள் வகித்த பாத்திரத்தை நன்கறிந்த நியூயோர்க் டைம்ஸின் கட்டுரையாளர் பௌல் குருக்மானும், சீனாவிற்கு எதிரான முறைமைகளைக் வலியுறுத்துபவர்களில் ஒருவராவார். “சீனாவை பொறுப்பாக்குதல்” (“Holding China to Account”) என்ற தலைப்பில் அக்டோபர் 2இல் வெளியான ஒரு கட்டுரையில் அவர் வலியுறுத்தியது, “தங்களின் செலாவணிகளின் மதிப்பைக் குறைத்துவைக்கும் நாடுகளுக்கு எதிராக… (எல்லாவற்றிற்கும் மேலாக இது சீனாவைக் குறிக்கிறது) நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நாம் நடவடிக்கை எடுக்க முடியும்,” என்றார்.

சீனாவுடன் "கடுமையாக" மாறுவதென்பது "வர்த்தக யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிடும்" என ஏற்றுக்கொண்ட அவர், ஆனால் அத்தகைய அபாயங்கள் "மிகைப்படுத்தப்படுவதாக" குருக்மான் கூறினார்.

குருக்மானும், செனட் ஜனநாயக கட்சியினரும் பொருளாதார யுத்த முரசுகளை ஒலிக்க தொடங்கியிருக்கின்ற நிலையில், சபையிலுள்ள குடியரசு கட்சியினர் இராணுவ தயாரிப்புகள் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக திட்டமிட்டு உளவுவேலைகளில் தீவிரப்படுத்துவதில் குளிர்யுத்தகால அச்ச வகையிலான "கம்யூனிச சீனா" ஈடுபட்டுள்ளதாக மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். சபையின் உளவுத்துறை குழுவின் தலைவரும், குடியரசு கட்சியைச் சேர்ந்த மிச்சிகனின் செனட்டருமான மைக் ரோஜர் வியாழனன்று நடந்தவொரு விவாதத்தில், பெய்ஜிங்கின் இணையவழி உளவுவேலைகள் "பொறுக்க முடியாத அளவிற்கு" வந்துவிட்டன என்றறிவித்தார். “இந்த தொல்லைக்கு முடிவுகட்ட" அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இறங்க அவர் அழைப்புவிடுத்தார்.

இந்த வாரம் வெளியான பெண்டகனின் ஓர் அறிக்கை, அமெரிக்க ஆயுத உற்பத்தி தளங்களுக்குத் தேவையான அரிய உலோகங்கள் சீன வினியோகஸ்தர்களிடமிருந்து மட்டுமே கிடைக்கின்றன என்பதை குறிப்பிட்டுக்காட்டியது. சீனா தற்போது அரிய-பூகோள ஆக்சைடுகளில் 95 சதவீதத்தையும், நவீன யுத்த தளவாடங்களுக்கு முக்கியமான உயர்நுட்ப மின்சாதனங்களில் முக்கிய பாத்திரம் வகிக்கும் 17 தனிமங்களையும் தயாரித்து வருகிறது. செவ்வாயன்று வெளியான ஓர் அறிக்கை, இதுபோன்ற உலோகங்களுக்காக "ஒரு நிலையான சீனா-அல்லாத ஆதாரத்தைக் காண்பது அவசியமாகும்" என்று குறிப்பிட்டது.

பெண்டகனின் முந்தைய அறிக்கைகள், சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சியின், குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவில் இருந்து ஜப்பான் வரையில் உள்ள ஆசிய மண்ணின் தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள பரந்த தீவு பிராந்தியங்களில் அமெரிக்காவின் செல்வாக்கிற்கு இருக்கும், மறைமுக அச்சுறுத்தலின் மீது ஒருமுனைப்பட்டிருந்தது. இத்தகைய ஒரு எதிரியின் வளர்ச்சியை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் காலவரையின்றி பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. அது அதன் இராணுவ நடவடிக்கைக்கு பெரும் ஆதரவை ஒன்றுதிரட்டும் ஒரு பிரச்சார முழக்கத்தின் பாகமாக "அமெரிக்க வேலைகளுக்கு" இருக்கும் மறைமுக அச்சுறுத்தலைப் பயன்படுத்தும்.

இந்த உள்ளடக்கத்தில், ஜனநாயக கட்சியினரின் கடிவாளமில்லா வெளிநாட்டு எதிர்ப்புவாதத்தின் மிகவும் அபாயகரமான பாத்திரம் வகிக்கப்படுகிறது. செனட்டர் ஸ்கூமெர், “அமெரிக்க உற்பத்தித்துறைக்காகவும், அமெரிக்க வேலைகளுக்காகவும் சமாதானக்கொடி உயர்த்த விரும்பாதவர்களில் நானும் ஒருவன்,” என்று அறிவிக்கும் போது ஒருவேளை மிகவும் உறுதியாக இருக்கிறார்.

உள்நாட்டிலும், சீனாவிலும், உலகம் முழுவதிலும் அமெரிக்க உற்பத்தித்துறை சீன போட்டிக்கு எதிராக வெற்றிகரமாக எதிர்த்து நிற்குமென்பது எனக்கு தெரியும்ஆனால் அந்த விளையாட்டு மைதானம் ஒரேசமமாக இருந்தால் மட்டுமே அது நடக்கும்,” என்றவர் குறிப்பிட்டார். வாதத்தில் இந்த வரிகளைக் கொண்டு வந்தமை, ஏகாதிபத்திய யுத்த ஆதரவிற்கு அது இட்டுச் செல்கிறது என்பதற்காக மட்டும், மிகவும் பிற்போக்குதனமானதல்ல.

ஒரேசமமான ஆடுகளத்திற்கு" ஸ்கூமெர் அழைப்புவிடுத்திருப்பதானது, அமெரிக்க தொழிலாளர்களின் கூலிகளையும், வாழ்க்கை தரங்களையும் சீனாவின் அளவிற்கு குறைப்பதையும் குறிக்கிறது. அதற்காக தான் அமெரிக்க நிறுவனங்களை அவற்றின் வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு "போட்டியாக" செய்வதை அமெரிக்க பெருநிறுவன முதலாளிமார்கள் விரும்புகிறார்கள்.

கூலிகளைப் போட்டிபோட்டு குறைக்கும் இதுபோன்றவொரு கொள்கைக்கு, ஒரு நாகரீகமான அளவிற்கு உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரங்களை உயர்த்துவதற்கான ஒரு பொதுவான போராட்டத்தில், அமெரிக்க, சீன, ஐரோப்பிய, ஜப்பானிய மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்துவதே ஒரே மாற்றீடாக உள்ளது. முதலாளித்துவத்திற்கும், தேசிய அரசு முறைக்கே கூட ஒரு முடிவு கட்டுவதற்கான ஒரு போராட்டத்தின் மூலமாகவும், அனைவருக்கும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் வேலைகளில் நேர்மையான சமத்துவத்தோடு ஓர் உலக சோசலிச சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு போராட்டம் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும்.