World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Occupy Wall Street and the Democratic Party

வோல் ஸ்ட்ரீட் முற்றுகை இயக்கமும், ஜனநாயகக் கட்சியும்

Bill Van Auken
8 October 2011

Back to screen version

வோல் ஸ்ட்ரீட் முற்றுகை எதிர்ப்பு அதன் நான்காவது வாரத்தில் நுழைந்திருக்கின்ற நிலையில், அது மேலும்மேலும் கூர்மையான அரசியல் அழுத்தங்களையும், ஜனநாயகக் கட்சி  பற்றிய கேள்வியை மையத்தில் கொண்டிருக்கும் தேர்வுகளையும் எதிர்கொள்கின்றது.

வியாழனன்று, ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் துணை ஜனாதிபதி ஜோ பிடென் இருவரும் போராட்டக்காரர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதத்தில் அறிக்கைகளை வெளியிட்டனர். "நம்முடைய நிதியியல் அமைப்புமுறை இயங்கும் விதம் குறித்து மிகவும் பரந்தளவில் ஏற்பட்டுள்ள விரக்திக்கு அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்," என்று ஒபாமா, வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். உண்மையில் வங்கிகளின் பிணையெடுப்பிற்கான TARP (பிரச்சனைக்குள்ளான சொத்துக்களுக்கு உதவும் திட்டம்) திட்டத்திற்கான அவருடைய ஆதரவையும் அதே மூச்சில்  நியாயப்படுத்தினார்.  

வாஷிங்டனில் நடந்த ஒரு கலந்துரையாடலில், "போராட்டக்காரர்களுக்கும், Tea Partyக்கும் இடையில் நிறைய பொதுவான தன்மைகள் இருப்பதாக" பிடென் வலியுறுத்தினார். “Tea Pary ஏன் தொடங்கப்பட்டது. அவர்கள் TARP அநியாயமானதாக கருதினார்கள்,” என்றவர் கூறினார்.

Tea Partyயோடு ஒப்பிட்ட பிடெனின் மேற்கோள் ஏதோ முன்னேற்பாடின்றி வெளியானதல்ல. Tea Partyஐ குடியரசுக் கட்சியினர் பயன்படுத்திக் கொண்டதைப் போலவே, அந்த போராட்டங்களை அதன் சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள ஜனநாயகக் கட்சிக்குள் ஒரு விருப்பம் இருப்பதையே ஜனநாயகக் கட்சி மூலோபாயவாதிகளால் முன்வைக்கப்படும் பல அறிக்கைகளும், ஜனநாயகக் கட்சியினரை சுற்றியிருக்கும் பிரமுகர்களால் எழுதப்படும் செய்தித்தாள் தலையங்கங்களும் எடுத்துக்காட்டுகின்றன.

வலதுசாரி, போலி-வெகுஜன Tea Party பெரும்பாலும் குடியரசுக் கட்சியால் உருவாக்கப்பட்டு, Fox News மற்றும் ஏனைய ஊடகங்களால் வளர்த்துவிடப்பட்டது. எவ்வாறிருந்தபோதினும், ஒபாமா நிர்வாகத்தால் வோல் ஸ்ட்ரீட்டிற்கு ஆதரவான கொள்கைகள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், வங்கி பிணையெடுப்புகள் சீரழிந்துவரும் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் மீது எழுந்த மக்கள் கோபத்தை மிகவும் பிற்போக்குத்தனமாக முடிவிற்கு  திசைதிருப்பிவிட  பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அது நிரூபித்து காட்டியது.

வோல் ஸ்ட்ரீட்டில் தொடங்கி தற்போது அமெரிக்கா முழுவதும் பரவிவரும் போராட்டம், பெருநிறுவன நிதியாதரவைப் பெற்ற மற்றும் ஊடகங்களால் ஊக்குவிக்கப்பட்ட Tea Party போலில்லாமல், மிகவும் வேறுபட்ட மூலத்தைக் கொண்டுள்ளது. அது மக்களின் பாரிய அதிருப்தியின் ஓர் உண்மையான வெளிப்பாடாக உள்ளது. மிகச்சரியாக வங்கியாளர்களையும், ஊகவணிகர்களையும் அது குறிவைத்து வருகிறது என்ற உண்மையே முதலாளித்துவத்திற்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதை பிரதிபலிக்கின்றன.

இது அமெரிக்க பெருநிறுவனங்கள் மற்றும் அரசியல் அமைப்புமுறையில் பெரிய எச்சரிக்கையொலியை உருவாக்கியுள்ளது. இந்த போராட்டத்தை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தி, எப்படியாவது அதை ஒபாமா நிர்வாகத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்குப் பின்னால் கடிவாளமிடுவது தான் ஜனநாயகக் கட்சியினரின் நோக்கமாகும். அவர்கள் மக்கள் கோபத்திற்கு அதையொரு பாதுகாப்பான தடுப்பாக்க (valve) விரும்புகிறார்கள். அதேநேரத்தில் அதை பயன்படுத்தி ஜனநாயகக் கட்சியினரின் அடித்தளத்தை "பலப்படுத்தவும்" விரும்புகிறார்கள்.

வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது, “ஆங்காங்கே வெடித்துவரும் போராட்டங்கள் இடதிற்குத் நோக்கி மக்கள் திரும்பும்  போராட்டத்தின் தொடக்கமாக இருக்கலாம். அது வலதிற்கு சாய்ந்த Tea Partyக்கு எதிராக சமப்படுத்துகிறது, சில ஜனநாயகக் கட்சியினர் அஞ்சும்  ஒரு "உற்சாக இடைவெளியை" (enthusiasm gap) அது நிரப்புகிறது என சில ஜனநாயகக் கட்சி ஆய்வாளர்கள் கூற கேட்க முடிகிறது.”

புதனன்று நியூ யோர்க் நகரின் ஃபோலெ சதுக்கத்தில் நடந்த பாரிய போராட்டத்திற்கு முன்னால் தொழிற்சங்க தலைவர்கள் அணிவகுத்துவந்தமை இந்த நோக்கத்தை தெளிவுபடுத்தியது. அவர்களின் வெற்று வீராவேசங்களிலும், தளர்ந்துபோன முழக்கங்களிலும் இடையிடையே அந்நிகழ்வில் பங்கெடுத்திருந்த ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளின் அறிவிப்புகளும் நிரம்பியிருந்தன. தொழிற்சங்க நிர்வாகிகளில் ஒருவரான RWU Local 100 தலைவரான ஜோன் சாமூல்சன் கூறுகையில், ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான முயற்சிகளுக்குப் பின்னால் வோல் ஸ்ட்ரீட் போராட்டக்காரர்கள் அணிதிரள வேண்டுமென வலியுறுத்தினார்.

இதற்கிடையில், குறிப்பிடத்தக்க ஜனநாயகக் கட்சியினரில் ஒருசிலர் ஜூகோட்டி பூங்காவின் அந்த முகாமிற்கு விஜயம் செய்யவும் இல்லை என்பதோடு, அந்த போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கைகளையும் கூட அளிக்கவில்லை.

அவர்களில் குறிப்பிடத்தக்கவர், இந்த வாரம் பின்வரும் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்த பிரதிநிதிகளில் ஒருவரான  சார்ல்ஸ் ராங்கெல் ஆவார். "அமெரிக்க மக்கள் போதியளவு  வைத்திருக்கிறார்கள். அவர்கள் நரகத்தைப்போல் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்பதில் நான் உடன்படுகிறேன்,” என அவர் குறிப்பிட்டார்.  

காங்கிரஸ் அங்கத்தவரான ஹார்லெம் நகரின் கோடீஸ்வரரான இவர்   வேண்டுமானால் "நரகம் போல் பைத்தியக்காரத்தனமாக" இருக்கலாம், ஆனால் வோல் ஸ்ட்ரீட் பணத்தைத் தொடர்ந்து சுருட்ட முடியாமல் போகுமோவென அவரால் அதிகம் கோபப்படாமல் இருக்க முடியாது. இந்த ஆண்டின் அவருடைய பிரச்சாரத்திற்கான ரொக்க பங்கு, சுமார் $69,000 என கணக்கிடப்பட்டுள்ளது. முன்னர் காங்கிரஸின் Ways and Means குழுவின் தலைவராக இருந்து, பின்னர் வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பை ஆதரித்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக உயர்ந்த ரான்கெல் இனால், பணம் நன்கு செலவிடப்பட்டது.

வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியான பௌல் குரூக்மானின் ஒரு தலையங்கத்தில் ஜனநாயக கட்சியினரின் நோக்கங்கள் இன்னும் தெளிவாக வெளியிடப்பட்டிருந்தன. தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக கட்சி அதிகாரிகளிடமிருந்து பெற்ற ஆதரவு குறிப்புகளை மேற்கோளிட்டு காட்டி குரூக்மான் எழுதினார், “வோல் ஸ்ட்ரீட் முற்றுகை ஒரு முக்கியமான நிகழ்வாக தெரிய தொடங்கியுள்ளது. அது தவிர்க்கமுடியாமல் ஒரு திருப்புமுனையாகவும் கூட பார்க்கப்படக்கூடும்.”

எதற்கான ஒரு திருப்புமுனை? முக்கியமாக பராக் ஒபாமாவை இரண்டாவது முறையாக ஆட்சியில் இருத்துவதற்கான ஒரு திருப்புமுனை.

குரூக்மான் தொடர்ந்து எழுதுகையில், “ஜனநாயகக் கட்சியினருக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வங்கியாளர்கள் னாதிபதிக்கு சாதகமாக திரும்பி அவர்களின் நன்றிக்கடனைத் திருப்பி செலுத்திவிட்ட போதினும்கூட, பொருளாதார மீட்சியை அளிக்கத் தவறிய வங்கியாளர்களுக்கு சாதகமான கொள்கைகளைப் பின்பற்றியதன் மூலமாக ஒபாமா நிர்வாகம் அதன்மீதிருந்த பெரும் நல்லெண்ணங்களை வீணடித்துவிட்டது. ஆனால் இப்போது திரு. ஒபாமாவின் கட்சிக்கு அவ்வாறு செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போராட்டங்களைச் சிரத்தையோடு எடுத்துக்கொள்ள வேண்டுமென அவர்கள் விரும்புவதைப் போலவே, அவற்றை சிரத்தையோடு எடுத்துக்கொள்வது தான் இப்போதைக்கு ஒபாமா நிர்வாகம் செய்ய வேண்டியதாகும்,” என்று எழுதினார்.

முக்கியமாக ஒபாமா அடுத்ததாக "செய்ய வேண்டியதென்ன”? Medicare, Medicaid, சமூக பாதுகாப்பு, முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்துவரும் வேலைவாய்ப்பின்மை, தொழிலாள வர்க்கத்தின் நிஜமான கூலிகளில் இன்னும் கூடுதலான குறைப்புகள் போன்ற முக்கிய சமூக திட்டங்களில் நாசகரமாக வெட்டுகளாக மாற்றும் ஒரு $4 ட்ரில்லியன் பற்றாக்குறை-குறைப்பு திட்டத்தின் மூலமாக, ஏற்கனவே இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருவதற்கான அட்டவணை ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.

வங்கிகள், பெருநிறுவனங்கள், பெரும்-பணக்காரர்களின் நலன்களைத் தூக்கிப்பிடித்திருந்த கொள்கைகளை மூடிமறைக்கும் வெகுஜன  வார்த்தைஜாலங்களைப் பயன்படுத்தி 2008 தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றனர். உண்மையில் அதுபோன்ற ஒன்றை, "மீண்டும் செய்வதையே" ஜனநாயகக் கட்சியினர் விரும்புகின்றனர். இதற்காக தான் வோல் ஸ்ட்ரீட் போராட்டங்களை மிகவும் முக்கியமான ஒன்றாக அவர்கள் பார்க்கிறார்கள். இன்றைய நிலைமைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களோடு ஏதோவொரு விதத்தில் அவர்களை அடையாளம்கண்டு கொள்கின்றார்கள் என்றால், அது ஒபாமா நிர்வாகத்தின் நிஜமான வரலாற்றை இவற்றிற்குள் மூடிமறைக்க முடியுமென அவர்கள் நம்புகிறார்கள்.

ஜனநாயகக் கட்சியினர் ஏதோவிதத்தில் "தீமை குறைந்தவர்கள்" மற்றும் குடியரசு கட்சியினரையும் வோல் ஸ்ட்ரீட்டையும் எதிர்க்கும் ஒரு கருவி என்பது போன்ற நப்பாசைக்கு புதிய உயிர்கொடுக்க பெரும்பிரயத்தனம் செய்கின்றனர். சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) போன்ற போலி-இடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் உதவியோடு, அவர்கள் வோல் ஸ்ட்ரீட் போராட்டத்திற்குள்ளேயும் இந்த மோசடியை வளர்த்துவிட முயற்சித்து வருகிறார்கள்.

உண்மையில் ஜனநாயகக் கட்சியானது வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு கட்சியாகும். வரலாற்றிலேயே மிகப் பெரிய வோல் ஸ்ட்ரீட் பிரச்சார நிதியை ஒபாமா பெற்றதும் மற்றும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து மிகவும் தீர்க்கமாக அவர் பின்பற்றிய கொள்கைகளுமே அதை நிரூபிக்கின்றன.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுந்த வெகுஜன போராட்டங்கள், 1930களின் தொழிற்சங்க போராட்டம், 1960களின் உள்நாட்டு உரிமைகள் மற்றும் யுத்த-எதிர்ப்பு போராட்டங்கள் என பின்னால் திரும்பி பார்த்தால், வரலாற்றுரீதியில், ஜனநாயகக் கட்சியானது அமெரிக்க உழைக்கும் மக்கள் நடத்திய சமூக போராட்டங்களுக்கு புதைகுழிவெட்டுபவராக உள்ளது. அந்த போராட்டங்கள் அனைத்துமே ஜனநாயகக் கட்சிக்குள் திருப்பிவிடப்பட்டு, அவை நிதியியல் மேற்தட்டிற்கு பாதிப்பில்லாமல் செய்யப்பட்டதோடு மட்டுமில்லாமல், மாறாக அவை முதலாளித்துவ ஆட்சிக்கு புதிய சாதகமாகவும் திருப்பிவிடப்பட்டன.

இதே அடிப்படை தலைவிதி தான் ஈராக் யுத்தத்திற்கு எதிராக எழுந்த பாரிய போராட்டங்களிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அவை தேர்தல் காலத்திற்கேற்ப ஒழுங்குப்படுத்தப்பட்டு, ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழைந்ததும் சுருட்டி போடப்பட்டது.

வோல் ஸ்ட்ரீட்டுக்கு எதிராக போராடுபவர்களும் அதேபோன்ற ஒரு கதியைத் தவிர்க்க விரும்பினால், “தீமை குறைந்தவர்கள்" எனும் மோசடியை நிராகரித்து, ரு பெருணிக கட்சிகளுக்கு எதிராகவும், அவை பாதுகாக்கும் இலாபகர அமைப்புமுறைக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்யும் போராட்டத்தில் இறங்க வேண்டும்.

சமூக சமத்துவமின்மைக்கு முடிவு கட்டி, மேலே உள்ள ஒரு சதவீதத்தினரை இன்னும் செழிப்பூட்டுவதற்கு மாறாக, சமூகத்தின் பெரும்பான்மையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பொருளாதார வாழ்க்கையை ஒழுங்கமைக்கும் சக்தி ஒரு பரந்த சோசலிச போராட்டத்திற்குள் ஒன்றுதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்திடம் மட்டுமே உள்ளது.

முதலாளித்துவம் தோற்றுவிட்டது. சோசலிசத்திற்காக அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்திற்கு தயாரிப்பு செய்வதே தற்போது பற்றியெறியும் தேவையாக உள்ளது. வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிராக போராட விரும்பும் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து, அதை கட்டியெழுப்புமாறு நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.