World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan ruling party defeated in Colombo local election

இலங்கை ஆளும் கட்சி கொழும்பு மாநகர சபை தேர்தலில் தோல்வியடைந்தது

By W.A. Sunil
12 October 2011

Back to screen version

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, கடந்த சனிக்கிழமை நடந்த கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தோல்வியடைந்தது. இது தலைநகரின் மீது தனது கட்டுப்பாட்டை இறுக்குவதற்கு திட்டமிட்ட ஆளும் கட்சிக்கு ஒரு கணிசமான பின்னடைவாகும்.

23 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்கள் நடந்த போதிலும், கொழும்பு மாநகர சபைக்கான வாக்கெடுப்பு அதிகம் உக்கிரமானதாக இருந்தது. விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையின் பிரகாரம், பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) 101,920 வாக்குகளைப் பெற்று 24 ஆசனங்களை வென்ற அதே வேளை, இராஜபக்ஷவின் சுதந்திர முன்னணி 77,089 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை வென்றுள்ளது. 53 உறுப்பினர்களைக் கொண்ட சபைக்கான ஏனைய 13 ஆசனங்களும், தமிழ் தேசியவாத ஜனநாயக மக்கள் முன்னணிக்கு 6, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 2, ஜனநாயக ஐக்கிய முன்னணிக்கு 2, சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பீ.) 1 மற்றும் சுயாதீனக் குழுக்களுக்கு 2 ஆசனங்கள் என்ற எண்ணிக்கையில் சென்றிருந்தன.

சுதந்திர முன்னணியின் தோல்வியானது இராஜபக்ஷவின் கொள்கைகள் மீதான பரந்த எதிர்ப்பின் திரிபுபடுத்தப்பட்ட வெளிப்பாடாகும். வர்த்தகர்கள்-சார்பு, வலது-சாரி யூ.என்.பீ.க்கும் அரசாங்கத்துக்கும் இடையில் அடிப்படை வேறுபாடுகள் கிடையாது, ஆனால் அது எதிர்ப்பு வாக்குகளை தன்பக்கம் சேகரித்துக்கொண்டுள்ளது.

கொழும்பு மாநகரை தெற்காசியாவின் பிரதான வர்த்தக மையமாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்தின் பாகமாக, கொழும்பில் இருந்து 70,000க்கும் அதிகமான குடிசைவாசி குடும்பங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை, இம்முறை பிரச்சாரத்தில் முக்கிய விவகாரமாக இருந்தது.

இந்த திட்டம், 2001 மற்றும் 2004ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் யூ.என்.பீ. ஆட்சியில் இருந்த போது அது ஏற்றுக்கொண்ட இலங்கைக்கு புத்துயிரூட்டும் வேலைத்திட்டத்தின் கீழேயே முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது இராஜபக்ஷ சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதன் பேரில் இந்த வெகுஜன அப்புறப்படுத்தலை நடைமுறைப்படுத்த சபதம் எடுத்துள்ளார். ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, கொழும்பில் மிகப் பெறுமதியான நிலங்கள் மற்றும் மிக அத்தியாவசியமான கால்வாய்களை பிரதானமாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் 75,000 குடும்பங்களை வேறு இடங்களில் குடியேற்ற வேண்டும் என முன்னதாகவே பிரகடனம் செய்தார். நகரை பூகோள முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யவும் தலைநகரை அழகுபடுத்தவும் அரசாங்கம் திட்டமிடுகின்றது என அவர் தெரிவித்தார்.

இராஜபக்ஷ நிர்வாகம் கொழும்பு மாநகர சபையை (சி.எம்.சி.) கைப்பற்ற சகல முயற்சிகளையும் செய்தது. தேர்தல் நடந்து மறுநாள் சண்டே லீடர் தெரிவித்ததாவது: [ஆளும்] சுதந்திர முன்னணியைப் பொறுத்தளவில், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் சி.எம்.சி.யை வெற்றிகொள்வது இன்றியமையாததாக இருந்தது. உள்நாட்டில் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ முன்னிலை வகித்த கொழும்பை அழகுபடுத்தும் பிரதான முயற்சியின் தற்போதைய திட்டங்களுக்கு பொதுமக்களின் அங்கீகாரமாக அது அமையும். சர்வதேச ரீதியில், சுதந்திர முன்னணியின் கொள்கைகளை மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்கின்றார்கள் என்று காட்சிப்படுத்த ஏனைய உள்ளூராட்சி சபைகளுடன் சேர்த்து சி.எம்.சி.யையும் வெற்றிகொள்ள வேண்டியிருந்தது.

தேர்தல் பிரச்சாரத்துக்கு ஜனாதிபதி இராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் தலைமை வகித்தார். அரச நிர்வாகத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் பகிரங்க அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் தேர்தல் சட்டங்களையும் மீறி, கோடாபய இராஜபக்ஷவும் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  

சிவில் உடை அணிந்த பொலிசார் புடைசூழ, ஜனாதிபதி இராஜபக்ஷ நகரில் பல குடிசைப் பிரதேசங்களுக்குச் சென்றார். அவர் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் குடிசைவாசிகளை அழைத்து பல கூட்டங்களை நடத்தியதோடு தனது அதிவறிய விருந்தாளிகளுக்கு விலையுயர்ந்த உணவுகளையும் பாணங்களையும் வழங்கினார். அரசாங்கம் ஊடகம் உட்பட தனது களஞ்சியத்தில் இருந்த சகல வளங்களையும் ஏக்கத்துடன் அணிதிரட்டிக்கொண்டு, குடிசைவாசிகள் மாற்று வீட்டுத் திட்டங்களில் குடியேற்றப்படுவார்கள் என்பதை உணர்த்துவதற்கு முயற்சித்தது.

இத்தகைய வெற்று வாக்குறுதிகள் சந்தேகம் மற்றும் நம்பிக்கையீனத்துடன் மோதிக்கொண்டன. சில குடிசைவாசிகள் ஏற்கனவே கசப்பான அனுபவங்களைக் கொண்டவர்கள். ஆயுதப் படைகள் மற்றும் பொலிசாரையும் பயன்படுத்தி பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட அவர்களது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

சி.எம்.சி.க்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, இராஜபக்ஷ அரசாங்கம் மெல்லிய-மறைமுகமாக அச்சுறுத்தல் விடுப்பதையும் நாடியது. யூ.என்.பீ. மற்றும் ஏனைய எதிர்க் கட்சிகளாலும் ஆளப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கு மத்திய அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் இருந்து நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காது என்பது பொதுவான கதையாகும். அதே சமயம், சுதந்திர முன்னணி அரசியல்வாதிகளால் அணிதிரட்டப்பட்ட குண்டர் படைகள் வாக்காளர்களை அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்டனர்.

சுதந்திரமும் நீதியுமான தேர்தலுக்கான பிரச்சாரம் என்ற அமைப்பின் இயக்குனர் கீர்த்தி தென்னகோன் தேர்தல் தினத்தன்று தெரிவித்ததாவது: “வெளிப்படையான தேர்தல் சட்ட மீறல்களுடன் இந்த பிரச்சாரத்தில் ஒரு தொந்தரவான போக்கு தோன்றியது. அரச வளங்கள் பெருமளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதோடு அரசாங்கம் சகல வாய்ப்புகளையும் கொண்டிருந்த நிலையில் பிரச்சாரம் ஒரு பக்கச் சார்பானதாக இருந்தது. தேர்தல் சட்ட மீறல்களை குறைப்பதற்கு தேர்தல் ஆணையாளரும் அவரது மாவட்ட மட்ட அதிகாரிகளும் தங்களால் முடிந்தவரை செய்த போதிலும், அவர்களால் முழுமையாக சாதிக்க முடியவில்லை. எனவே இதை ஒரு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலாக எங்களால் கூற முடியாது.

யூ.என்.பீ. தலைவர் தமது சி.எம்.சி. வெற்றியை புகழ்ந்துகொண்டார். கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இது எதிர்கால தேர்தல்களில் கட்சி வெற்றிபெறுவதற்கு இன்றியமையாதது என அறிவித்தார். யூ.என்.பீ. 2004ல் இருந்தே தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்ததோடு, அது கட்சிக்குள் கோஷ்டி மோதல்களை உக்கிரமாக்கி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தலைமைத்துவத்தை ஸ்திரமற்றதாக்கியது.

ஜனநாயக உரிமைகளையும் குடிசையில் வாழ்பவர்களின் நலன்களையும் பாதுகாப்பதாக கூறும் யூ.என்.பீ.யின் கதையளப்புக்களை எவரும் நம்பக் கூடாது. யூ.என்.பீ. ஒரு பெரும் வர்த்தகர்களின் கட்சியாகும். 1970களின் கடைப் பகுதியில் இருந்து சுதந்திர சந்தை வேலைத்திட்டத்தையும், நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தையும் தொடங்கிவைத்து முன்னெடுத்தமைக்கு யூ.என்.பீ.யே பொறுப்பாளியாகும். 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் யுத்தம் முடிவுக்கு வந்தது. அது ஆட்சியில் இருந்தால், மக்களை அப்புறப்படுத்துவது உட்பட பெரும் வர்த்தகர்களின் கோரிக்கைகளை முன்னெடுப்பதில் இராஜபக்ஷ அரசாங்கத்தைப் போலவே ஈவிரக்கமற்றதாக இருக்கும்.

தமிழ் இனவாத அரசியலில் காலூண்றிக்கொண்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.), 2006ல் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மீண்டும் தொடங்கிய ஆளும் சுதந்திர முன்னணி, மற்றும் யுத்தத்துக்கு ஆதரவளித்த எதிர்க் கட்சியான யூ.என்.பீ. ஆகிய இரண்டின் மீதும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த பகைமைக்கு அறைகூவல் விடுத்து ஆறு சி.எம்.சி. ஆசனங்களை வென்றுள்ளது.

ஜ.ம.மு. முன்னதாக யூ.என்.பீ. உடன் கூட்டணி சேர்ந்திருந்தாலும், இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில், அது கொழும்பு மற்றும் தெஹிவளை-கல்கிஸ்சை மாநகரசபைக்கு போட்டியிடுவதற்காக போலித்-தீவிரவாத நவசமசமாஜக் கட்சியுடன் கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டது. சோசலிசக் கொள்கைகளை வெளிப்படையாக நிராகரித்த அவர்கள், அதற்குப் பதிலாக மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களுக்காக கூட்டுப் பிரச்சாரம் செய்தனர். தெஹிவளை-கல்கிஸ்சை மாநகர சபையில் ஜ.ம.மு.-நவசமசமாஜக் கட்சி கூட்டுக்கு கிடைத்த ஆசனத்தை நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன வென்றுள்ளார்.

சனிக்கிழமை தேர்தல் நடந்த ஏனைய 22 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 21 சபைகளை சுதந்திர முன்னணி வென்றுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக நடந்த ஏனைய தேர்தல்களில் போலவே, சிங்கள இனவாதத்தில் மூழ்கிப் போயிருந்த அதன் பிரச்சாரம், புலிகள் மீதான இராணுவ வெற்றியை தூக்கிப்பிடிப்பதை பிரதானமாகக் கொண்டிருந்தது. அதன் கூட்டணிப் பங்காளியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கல்முனை நகர சபையை மீண்டும் கைப்பற்றியது.

ஒரு ஆசனத்தைக் கூட வெல்லத் தவறிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.), முன்னதாக தன்வசம் கொண்டிருந்த 33 உள்ளூராட்சி சபை ஆசனங்களில் ஐந்தை மட்டுமே தக்கவைத்துக்கொண்டது. 2004ல் சுதந்திர முன்னணியின் கூட்டரசாங்கத்தில் பங்கெடுத்துக்கொண்டதில் இருந்தே நெருக்கடியை எதிர்கொண்ட ஜே.வி.பீ., தற்போது இன்னுமொரு ஊக்கக்கேடான அரசியல் பிளவுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது.

சி.எம்.சி. தேர்தலில் சுதந்திர முன்னணி தோல்வியடைந்தமை, உழைக்கும் மக்களதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுப்பதில் இருந்து அதை தடுத்துவிடப் போவதில்லை. அதன் நிகழ்ச்சித் திட்டம், விரிவடைந்து வரும் சர்வதேச பொருளாதார நெருக்கடியினாலேயே உந்தப்படுகின்றது. இந்த நெருக்கடியினால் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளுமாக, உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் தொடுக்கத் தள்ளப்பட்டுள்ளன.

முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூக சீரழிவுக்கு ஒரே மாற்றீடு சமுதாயத்தை சோசலிச முறையில் மாற்றியமைப்பதே ஆகும். கொழும்பில் இருந்து நகர்ப்புற வறியவர்களை அப்புறப்படுத்துவதற்கு எதிரான பிரச்சாரத்திலும், உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த போதும் சிறைகளில் எஞ்சியுள்ள ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்திலும் சோசலிச சமத்துவக் கட்சியே முன்நிற்கின்றது. முதலாளித்துவத்தை தூக்கி வீசி தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிச குடியரசுகளை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்துக்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை இந்தப் பிரச்சாரம் இலக்காகக் கொண்டுள்ளது