World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

G20 meeting: upbeat assessments mask deep rifts

ஜி20 கூட்டம்: உற்சாகமான மதிப்பீடுகள் ஆழமான விரிசல்களைத் திரைபோட்டு மறைக்கின்றன

Nick Beams
18 October 2011

Back to screen version

வார இறுதியில் பாரிஸில் நடந்த ஜி20 நிதி அமைச்சர்களின் கூட்டங்களின் முடிவில், வார்த்தைகள் எல்லாம் உற்சாகம் பொங்க இருந்தன என்றாலும் உண்மை என்னவென்றால் ஐரோப்பிய அரசுகளின் கடன் மற்றும் வங்கி நெருக்கடி என்கின்ற சிக்கலான நிலையிலிருந்து விடுவிப்பதற்கு முந்தைய கூட்டங்கள் மற்றும் உச்சி மாநாடுகளை விடவும் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை என்பது தான்.

நவம்பர் 3 அன்று நடக்கவிருக்கும் ஜி20 நாடுகளின் தலைவர்களின் கூட்டத்திற்கு முன்தயாரிப்பாக அக்டோபர் 23 அன்று நடைபெறத் திட்டமிடப்படுள்ள ஐரோப்பிய உச்சி மாநாட்டின் சமயத்தில் யூரோமண்டல நாடுகள் தமது நிதி நெருக்கடியைக் கையாளுவதற்கான ஒரு திட்டத்துடன் வர வேண்டும் என்று ஐரோப்பாவிற்கு வெளியிலான நாடுகள்  (அமெரிக்கா முன்னிலையில் நின்றது, பிரிட்டனும் சேர்ந்து கொண்டது) வலியுறுத்தின.

ஐரோப்பிய நிதி அமைப்புமுறைக்கு கூடுதலான நிதி உதவியை வழங்குவதற்கு ஏதுவாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதாரவளங்களை அதிகப்படுத்துவது குறித்து கூட்டத்திற்கு முந்தைய நாட்களில் பேச்சு இருந்தது. இதை அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் எதிர்த்தன. அமெரிக்க கருவூலச் செயலரான டிமோதி கேய்த்னரின் வார்த்தைகளில் சொல்வதானால், 390 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும் நிதியத்தின் கையிருப்புகள் நிதி வளத்தில் கணிசமான அளவே.

யூரோமண்டலம் தமது சொந்த நாணயமதிப்பை ஆதரிப்பதற்குச் செய்ய வேண்டிய நடவடிக்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதியாதாரத்தை அதிகரிப்பதன் மூலம் பிரதியீடு செய்ய முடியாது என்று ஐக்கிய இராச்சியத்தின் சான்சலர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன் செய்தியாளர்களிடம் கூறினார். கனடா நிதி அமைச்சரான ஜிம் ஃபிலாஹெர்டி கூறும் போது, ஐரோப்பியர்கள் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் தான் கவனம் குவிக்கப்பட வேண்டுமே ஒழிய சர்வதேச நாணய நிதியத்தின் ஆதாரவளங்களை அதிகரிப்பது என்பது போன்ற முக்கியமற்ற கேள்விகளின் மீது அல்ல என்றார்.

கூட்டத்தில் இருந்து விடுக்கப்பட்ட ஒரு அறிக்கை, முறைமையாக நடக்கும் நிதி நடுக்கங்களைத் தடுப்பதற்கு நாணய புழக்கத்தை வழங்க புதிய வழிகளைக் காணுவதற்கும் நடப்பு சாதனங்கள் மற்றும் ஏற்பாடுகளை வலிமையூட்டுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கு அழைப்பு விடுக்கும் ஒரு பகுதியைக் கொண்டிருந்தது. ஃபைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டதைப் போல, சர்வதேச நாணய நிதியத்திற்கு புதிய ஆதாரவளங்களுக்கான அவசியமில்லை என்கிற நிலையைப் பராமரிக்கின்ற அதே சமயத்தில் சூழ்நிலை கோரினால் சர்வதேச நாணய நிதியம் தலையீடு செய்வதையும் அத்துடன் ஐரோப்பிய ஆதாரவளங்களில் இருந்து கணிசமான கூடுதல் உறுதிப்பாட்டையும் அமெரிக்கா ஆதரிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு இந்தச் சிக்கலான நடை கேய்த்னருக்கு ஏதுவாக இருந்தது.  

ஐரோப்பிய சக்திகள் ஒரு திறம்பட்ட திட்டம் இருப்பதாய் கூறிக் கொள்கின்றன, ஆனால் அதை இனிதான் அவர்கள் அமைக்க வேண்டும். இதற்கான காரணமாக நிதி நெருக்கடியில் இருந்து எழுகின்ற மோதலுக்குட்படும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நலன்கள் இருக்கின்றன. நாடுகளுக்கு இடையே பிளவுகள் இருப்பது மட்டுமல்ல முக்கிய வங்கிகள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலும் கூட இருக்கிறது. 

ஜூலை 21 அன்று வகுக்கப்பட்டு இப்போது முற்றிலும் போதுமானதற்றதாக அறியப்படும் கடைசியாக உருவாகிய ஐரோப்பியத் திட்டம், கடன்பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள், ஒரு ஒட்டுமொத்த பிணையெடுப்புத் தொகுப்பின் பாகமாக, அவர்களது கிரேக்கக் கடன்கள் மீது 21 சதவீத பிடிமானத் தொகைக்கு (Haircut" - அதாவது அந்தப் பத்திரங்கள் அதன் மதிப்பின் 79 சதவீத அளவுக்குத் தான் பிணைச் சொத்தாகக் கருதப்படும்) அனுமதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கிரீஸின் பொருளாதார நிலை மோசமடைந்து செல்கின்ற நிலையில் (இதற்கான காரணத்தில் பிணையெடுப்புத் திட்டம் என்று சொல்லப்பட்ட ஒன்றின் கீழ் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் தாக்கம் கொஞ்சமும் குறைவில்லாது இருந்தது) ஜேர்மன் அதிகாரிகள் 50 அல்லது 60 சதவீதத்துக்கு நெருக்கமாய் இந்த பிடிமானத் தொகை அளவைக் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். 

பிரான்ஸ் அதனை எதிர்க்கிறது ஏனென்றால் அதன் வங்கிகள் ஏற்கனவே துருவி ஆராயப்பட்டு கடன் மதிப்பீட்டு முகமைகளால் தரவரிசையிறக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இது அவ்வங்கிகளுக்கு மேலும் எதிர்மறையான விளைவைக் கொடுக்கும்.

பின் வங்கிகளின் மறுமுதலீட்டுத் திரட்டல் பிரச்சினை, அதாவது அவை கொண்டிருக்கும் நிதிச் சொத்துக்களின், குறிப்பாக அரச கடனின், மதிப்பில் ஏற்படும் இழப்புக்கு ஈடுகட்டும் விதமாக அவற்றுக்குள் கூடுதல் பங்கு மூலதனத்தைச் செலுத்துவது என்னும் பிரச்சினை, வருகிறது.

இது தனியார் சந்தைகள் மூலமும் தேசிய அரசாங்கங்கள் மூலமும் நடக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய நிதி ஸ்திரப்படுத்தல் ஏற்பாடு (EFSF) அமைப்பின் தலையீடு கடைசிக் கட்ட நடவடிக்கையாகத் தான் இருக்க வேண்டும் என்றும் ஜேர்மன் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் பிரான்சோ, தேசிய நிதிகளை வங்கி அமைப்புமுறைக்குள் செலுத்தும் எந்த நடவடிக்கையும் தனது AAA அரச  கடன் தரவரிசைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலைப்படுகிறது. ஆகஸ்டு மாதத்தில் அமெரிக்கா கடன் மதிப்பீட்டில் S&P முகமையால் தரவரிசை இறக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்கனவே இத்தரவரிசை அழுத்தத்தில் உள்ளது.

இது தவிர, வங்கிகளும் அவற்றின் பிரதிநிதிகளும் கட்டாய மறுமுதலீடுபெருக்கல் நடவடிக்கை எதற்கும் ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளனர். ஜேர்மன் நிதி அமைச்சர் வொல்வ்காங் ஷொய்பிள இற்கு அனுப்பப்பட்டிருக்கும் ஆவேசக் கடிதம் என்று சொல்லப்படும் ஒரு கடிதத்தில், எந்த ஆபத்து மதிப்பீடும் மூலதனத் தேவைகளின் நடப்புக் கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்க வேண்டுமேயன்றி  வருங்காலத்திற்காக திட்டமிடப்படுகின்ற ஒழுக்க நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அல்ல என்பதை நாட்டின் ஐந்து வங்கிக் கூட்டமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

டொஷ் வங்கியின் தலைமை நிர்வாகி ஜோசப் அக்கர்மான், வங்கியின் மூலதன விகிதத்திற்கு ஊக்கமளிக்க அரசு நிதிகளை ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும் தான் சொத்துக்களை விற்றுத் தள்ளுவதையே விரும்புவதாக எச்சரித்துள்ளார். அத்தகையதொரு நடவடிக்கை கடன் சந்தைகள் துரிதமாக இறுக்கமடைந்து நிதி நெருக்கடியை ஆழப்படுத்துவதில் விளையும்.

உலகளாவிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான முக்கியமானதொரு தரகுக் குழுவான சர்வதேச நிதியியல் நிறுவனமும் (The Institute of International Finance) இந்த மோதலுக்குள் குதித்திருக்கிறது. கடன்பத்திரம் கொண்டிருப்பவர்களின் பிடிமானத் தொகையை அதிகப்படுத்தும் பொருட்டு ஜூலை 21 உடன்பாட்டை மறுபடியும் திறப்பதற்கான நடவடிக்கைகளை இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநரான சார்லஸ் டலரா தாக்கினார். உடன்பாடு ஏற்பட்டதென்றால் ஏற்பட்டது தான் என்றார் அவர். ஐரோப்பிய நிதி விவகார ஆணையரான ஓலி ரேனிடம் இந்த ஆட்சேபனைகள் குறித்து கேட்கப்பட்டபோது ஜுலை உடன்பாட்டில் தொழில்நுட்பத் திருத்தங்கள் அவசியப்படுவதாகக் கூறினார். நாங்கள் அந்த உடன்பாட்டை மறுபடித் திறக்கவில்லை, மீள்பார்வை தான் செய்கிறோம்.

கிரேக்க பிடிமானத் தொகையின் அளவு மட்டுமே வங்கிகளின் ஒரே கவலையாக இருக்கவில்லை. வங்கிகள் தம்மிடமுள்ள அரச கடன் பத்திரங்களை நடப்பு சந்தை விலைகளில் மதிப்பிடக் கோரும் ஐரோப்பிய வங்கித்துறை ஆணையத்தின் நடவடிக்கைகள் கடும் ஆபத்துகளை உருவாக்கும் என்று டலாரா தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகள் அந்த நாடுகளின் கடன் சந்தைகளின் மீது அழுத்தம் ஏற்படுத்தி அவற்றின் கடன்பத்திரங்களின் மதிப்பில் கூடுதல் சரிவுக்கு வழிவகுக்கும். இது ஒரு நச்சுச் சுழற்சிக்கு இட்டுச் செல்லும்....மூலதனம் தலைவாசல் வழியாக நுழைந்து பின்வாசல் வழியாக வெளியே வந்து விடும், ஏனென்றால் வங்கிகளின் நிதிநிலை அறிக்கையில் இருக்கும் அரச கடனின் மதிப்பு வீழ்ச்சி காண்பதால்.

வங்கிகளுக்கான இறுக்கமான வரைமுறைகளைத் திணிப்பதன் மூலம் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அத்தனை முயற்சிகளும் பயனற்றுப் போயிருப்பதையே டலாராவின் கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இத்தகையதொரு நிலையை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இன்னும் ஆழமான நெருக்கடியை உருவாக்கக் கூடிய நடவடிக்கைகளைக் காட்டி அச்சுறுத்துவதன் மூலம் அவர்கள் பதிலிறுப்பு செய்கின்றனர்.

அதேபோல் அரசாங்கங்களிடம் இருந்து ஒருமித்த நடவடிக்கை எதற்குமான சாத்தியக்கூறும் இல்லை. ஒவ்வொரு அரசாங்கமும் தனது சொந்த பெருநிறுவன மற்றும் நிதி நலன்களின் பேரிலேயே செயல்படுகின்றன என்கிற உண்மைக்கான இன்னொரு விளக்கக்காட்சியாக ஜி20 கூட்டம் இருந்தது.

அமெரிக்க வங்கிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒரு பிணையெடுப்புக்கு அமெரிக்கா அழுத்தமளித்து வருகிறது. ஏனென்றால் இந்த அமெரிக்க வங்கிகள் ஐரோப்பியக் கடனில் நேரடியாக அதிகம் பங்குபெற்றிருக்கவில்லை என்றாலும் அந்த ஐரோப்பிய நாடுகளின் கடன்நிலையால் பாதிக்கப்படக் கூடிய நாடுகளின் கடன்-திருப்பித்தரும் நிலையில் ஏற்படும் பாதிப்பால் பெரும் இழப்புகளைச் சந்திக்கும்.

சமயங்களில் சர்வதேச நிதி அமைப்புமுறையின் குவாண்டனாமோ விரிகுடா என்று அழைக்கப்படுகிற (ஏனென்றால் மற்ற பிற இடங்களில் சட்டவிரோதமாகக் கருதப்படக் கூடிய பல நடைமுறைகள் இங்கே (தனது நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் எதிராக) தண்டனைப் பயமின்றி செய்யப்படுவதைக் காணலாம்) இலண்டன் மாநகரத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கு பிரிட்டன் உறுதி பூண்டிருக்கிறது. அத்துடன் ஐரோப்பிய சக்திகள் ஒரு திட்டத்தில் உடன்பட முடியவில்லை...ஏனென்றால் அந்தந்த வங்கிகளின் மோதும் நலன்களின் காரணத்தால்.

கடந்த வாரத்தில் ஜி20 கூட்டத்தை ஒட்டி, ஃபைனான்சியல் டைம்ஸ் 2009 வசந்த காலத்தை மறுபடியும் கொண்டு வர என்கிற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது.

உலகப் பொருளாதாரத்தின் நிலை இதை விடக் கவலைக்குரியதாய் இருக்க முடியாது என்று அது துவங்கியது. பங்குச் சந்தைகளில், குறிப்பாக அரச கடன் விடயத்திலான, அபிவிருத்திகள் முதலீட்டாளர்கள் இடையே பெரும் கவலைக்குக் காரணமாகியுள்ளன. பெரும் பொருளாதாரப் போக்குகள் அளிக்கும் உறுதி அதிகமாயில்லை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலைவாய்ப்பு விகிதம் நம்பிக்கையூட்டுவதாய் இல்லை, அத்துடன் சீனாவின் வளர்ச்சி விகிதங்களும் கூட உலக வர்த்தகத்தின் மந்தநிலையால் பாதிப்படைந்துள்ளன. வணிக முடிவுகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன அத்துடன் இரட்டை அடுக்கு மந்தநிலையின் அபாயம்  தப்பிக்க முடியாததொரு நிலை கூடியிருப்பதாய்த் தோன்றுகிறது.

2009 ஏப்ரல் ஜி20 உச்சிமாநாட்டில் எட்டப்பட்ட உடன்பாடுகளை நினைவுகூர்ந்த அந்தத் தலையங்கம் அதேபோன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகள் இன்னொரு முறை செலுத்தப்படுவதற்கு அழைப்பு விடுத்தது. அதிமுக்கியமான நம்பிக்கை என்கிற விடயம் தான் உலகம் பேரழிவைத் தவிர்ப்பதற்கு உதவ முடியும் என்று அது வலியுறுத்தியது. முற்சமயத்தில் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட முடிந்திருந்தது, அதேபோல் மறுபடியும் மீட்டெடுக்கப்பட முடியும்.

2009 இல் உடன்பாடுகள் சாத்தியமானதற்குக் காரணம் மேலாதிக்க முதலாளித்துவ சக்திகளின் நலன்கள் தற்காலிகமாக ஒருகோட்டில் நின்றதனால் தான். இப்போது இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், நெருக்கடியின் அபிவிருத்தியானது அவற்றிடையிலான உட்பொதிந்த மோதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

ஆழமான வறுமை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் ஆகியவற்றை ஒரு தீர்வாகக் கருதுவதையன்றி, இலாப அமைப்புமுறை உருவாக்கியிருக்கும் நெருக்கடிக்கு முதலாளித்துவ வர்க்கத்திடம் எந்தப் பதிலும் இல்லை.

ஜி20 கூட்டம் நடந்து கொண்டிருந்த அதேநேரத்தில் உலகளாவிய அளவில் நடந்து கொண்டிருந்த ஆக்கிரமிப்புப் போராட்டங்கள் தீர்வு அமைந்திருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டின: பெருநிறுவன இலாபத்திற்காய் இல்லாமல் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காய் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கு செய்வதனை அடிப்படையாகக் கொண்ட சோசலிசத்திற்காக சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது தான் அந்தத் தீர்வு