World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

What lies behind the rescue of the Euro?

யூரோ மீட்பின் பின்னணியில் என்ன உள்ளது

Peter Schwarz
21 October 2011

Back to screen version

இந்த வார இறுதியில் பிரஸ்ஸல்ஸில் நடக்க உள்ள ஐரோப்பிய ஒற்றிய உச்சிமாநாடு குறித்து பெரும் எதிர்பார்ப்புக்கள் வந்துள்ளன. பங்கு பெறுவோர் கருத்துப்படி, யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தப்பிப்பிழைத்தல் என்பதே இதில் உட்பட்டுள்ளது. ஆனால் கூட்டத்தில் இருந்து உறுதியாக எதுவும் வெளிப்படாது, மற்றொரு உச்சிமாநாடு அடுத்த புதன் அன்று நடக்கும் என்று வந்துள்ள அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நம்பிக்கைகள் பிசுபிசுத்துவிட்டன.

செவ்வாய் அன்று பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி, யூரோப்பகுதித் தலைவர்கள் வார இறுதியில் கடன் நெருக்கடியைத் தீர்க்கத் தைரியமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஐரோப்பிய ஒற்றுமை பிரச்சனைக்குள்ளாகலாம் என்று வலியுறுத்தினார்: “யூரோ தகர்க்கப்பட அனுமதிப்பது என்பது ஐரோப்பாவை அழித்தல் என்னும் இடருக்கு இட்டுச் செல்லும். ஐரோப்பாவையும் யூரோவையும் அழிப்பவர்கள் நம் கண்டத்தில் மீண்டும் மோதல் மற்றும் பிளவுகள் வருவதற்குப் பொறுப்பைக் கொள்ள வேண்டும்.” என்று சார்க்கோசி எச்சரித்தார்.

பிரான்ஸின் பிரதம மந்திரி பிராங்கோய் பில்லன் எச்சரித்தார்: “நாம் வெற்றி பெறவில்லை என்றால், ஐரோப்பா பெரும் அபாயத்திற்குட்படும்.” ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌபிள நிலைமைமிக பதட்டமாக உள்ளதுஎன்று கூறி பின்னர்யூரோ ஆபத்தில் உள்ளது என எச்சரித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முறிவு என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் பேரழிவு விளைவுகளைத்தான் கொடுக்கும். தேசிய விரோதங்கள் மற்றும் மோதல்கள் என இரண்டு உலகப் போர்களைத் தூண்டி கண்டத்தை கடந்த நூற்றாண்டின் முதல் பகுதியில் அழிவிற்குக் கொண்டு வந்த நிலைமையைத்தான் இது புதுப்பிக்கும். ஆனால் சார்க்கோசி, பில்லன், ஜேர்மனியச் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ஷௌபிள ஆகியோர்  ஐரோப்பிய ஒன்றியத்தைமீட்பதற்காகமுன்வைத்துள்ள திட்டங்கள் அதே பேரழிவுத் தன்மையைத்தான் கொண்டுள்ளன. அத்திட்டங்கள் அனைத்துமே நெருக்கடியின் சுமையை மக்கள்மீது சுமத்தி மில்லியன் கணக்கான மக்களை வேலையின்மை, வறுமை ஆகியவற்றில் தள்ளுபவையாகத்தான் உள்ளன.

ஜேர்மனிய, பிரெஞ்சு அரசாங்கங்கள் ஒருமீட்புத்திட்டத்தின் விவரங்களைக் குறித்து சமரசத்திற்கிடமில்லாத வகையில் எதிரெதிர் முனையில் உள்ளன. “மிக ஆழ்ந்த விவாதங்கள், மிகத் தீவிரமான மாநாடுகள், தொலைப்பேசி மாநாடுகள், பேச்சுக்கள்நடைபெறுகின்றன என்று ஷௌபிளவின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் அறிவித்தார். புதன் கிழமை அன்று சார்க்கோசி அசாதாராண முறையில் பிராங்பேர்ட்டிற்குப் பறந்து சென்று மேர்க்கெலையும் மற்ற முக்கிய ஐரோப்பிய ஒன்றிய, ஐரோப்பிய மத்திய வங்கிப் பிரதிநிதிகளையும் இரண்டு மணி நேரக் கூட்டத்தில் சந்தித்தார். ஆனால் தீர்க்கப்படாத மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் பிரச்சினைகளில் இவர்கள் முடிவு காண்பதில் தோல்வியுற்றனர்.

ஆனால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளின் பொது நோக்கம் குறித்து உடன்பாடு உள்ளது: அதாவது சமூகநலச் செலவுகள் ஐரோப்பா முழுவதும் பெரிதும் குறைக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் இன்னும் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் வங்கிகளைக் காப்பாற்ற வழங்கப்பட வேண்டும்.

இக்கொள்கையின் விளைவுகள் கிரேக்கத்தில் காணப்படலாம். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி உடன் உடன்பட்டு பாப்பாண்ட்ரூ அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக, ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் சமூகநலச் செலவுகள் ஆகியவை வியத்தகு அளவில் சரிந்தன; வேலையின்மை அதிகரித்துவிட்டது, கணக்கிலடங்கா சிறு வணிகர்கள் திவாலாகிவிட்டனர். சிக்கனத் திட்டம் ஆழ்ந்த மந்த நிலையைத் தூண்டியுள்ளது; அது வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை, வெட்டுக்களையும் மீறி, அதிகரித்து விட்டது. கிரேக்கத்தின் மீட்பு எனக் கூறப்பட்ட செயலில் வங்கிகள் மட்டுமே ஆதாயம் அடைந்தன. அவை அவற்றின் பெரும்பாலான கிரேக்க அரசாங்கப் பத்திரங்களை ஐரோப்பிய மத்திய வங்கிக்கு அல்லது ஐரோப்பிய மீட்பு நிதிக்கு  விற்க முடிந்தது.

ஐரோப்பாவை மீட்பதற்குப் பதிலாக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வங்கிப் பிணை எடுப்புக்கள் இணைந்த நிலை, பிரஸ்ஸல்ஸில் வார இறுதியில் ஒப்புக் கொள்ள இருப்பது, கண்டத்தைத் தகர்த்துவிடும் அச்சறுத்தலைக் கொண்டுள்ளது. இக்கொள்கைகள் ஐரோப்பிய நாடுகளைப் பொருளாதாரப் பாதாளத்தில் தள்ளி தேசியப் மோதல்களை அதிகப்படுத்தும்; இதைத்தான் யூரோ மீட்பு நிதி குறித்த நோக்கம், அமைப்பு பற்றிய கடுமையான மோதல்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளன.

ஐரோப்பிய மக்களிடையேஇந்த அரசியல், பொருளாதாரப் பைத்தியக்காரத்தனம் பற்றிப் பெருகிய எதிர்ப்பு வளர்ந்துள்ளது. புதன் அன்று ஏதென்ஸ் 35 ஆண்டுகளுக்கு முன்பு இராணுவ ஆட்சிக்குழு கவிழ்ந்ததற்குப்பின் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தைக் கண்டது. நூறாயிரக்கணக்கான மக்கள் கடந்த சனிக்கிழமை ஸ்பெயின், இத்தாலி இன்னும் பல நாடுகளில் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர். இந்த இயக்கம் துனிசியா மற்றும் எகிப்தில் துவங்கிய புதுப்பிக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் ஒரு பகுதி ஆகும். இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பல பகுதிகளில் பரவியுள்ளது. இது நிதிய மூலதனத்தின் (வோல் ஸ்ட்ரீட்) மேலாதிக்கம் மற்றும்  பெருகும் சமுகச்சமத்துவமின்மை (1 சதவிகிதத்தினர் நடத்தும் ஆட்சி) ஆகியவற்றிற்கு எதிராக இயக்கப்படுகிறது.

இந்த இயக்கம் அதன் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. முக்கிய அரசியல் பணிகளை தீர்ப்பதற்கு அது கணிசமான தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு, முதலாளித்துவம் இயல்பான முறையில் ஐரோப்பாவை ஒரு முற்போக்கான அடிப்படையில் ஒன்றுபடுத்த முடியவில்லை என்பதுதான் மீண்டும் வெளிப்படையாகியுள்ளது. பல மாதங்களாக அரசாங்கங்கள் நிதியச் சந்தைகளின் இசைக்குத்தான் நடனம் புரிந்துள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிக் கூட்டங்கள் நடந்தன; ஒவ்வொன்றும் ஒருவிரிவான தீர்வைஅளிப்பதாக உறுதியளித்ததுஆனால் ஒவ்வொரு உச்சிமாநாட்டிற்குப் பின்னும் நெருக்கடி தீவிரம்தான் அடைந்தது.

இந்த நிலைமை தெருக்களில் இருந்து அழுத்தம் கொடுப்பதின் மூலம் மாற்ற முடியாதது. தவறாக இயக்கப்படும் கொள்கை முடிவுகளின் விளைவுகள் மட்டுமே அல்ல இந்த நெருக்கடி; அப்படி இருந்தால் அவை சரிசெய்யப்பட முடியும். இது சமரசத்திற்கு இடமில்லாத வர்க்க விரோதப் போக்கில் அடித்தளத்தைக் கொண்ட ஒரு சமூக அமைப்புமுறையின் நெருக்கடி ஆகும். முதலாளித்துவ முறை சீர்திருத்தப்பட முடியாதது; அது இல்லாதொழிக்கப்படத்தான் வேண்டும்.

தற்பொழுதைய நெருக்கடி பல தசாப்தங்களில் வளர்ந்த ஒன்றாகும். 1980 களில் இருந்து அல்லது அதற்குச் சற்றும் முன்பு இருந்து, தொழிலாளர்களின் வருமானங்கள் தேக்கம் அடைந்துள்ளன, அல்லது சரிந்துள்ளன. அதே நேரத்தில் சமூகத்தின் உயரடுக்கில் உள்ள ஒரு தட்டு சொல்லமுடியாத செல்வக்கொழிப்பைச் சேமித்துள்ளது. அச்செல்வம் இடைவிடாமல் தொழிலாளர் வர்க்கத்தின் உபரிமதிப்பைச் சுரண்டுவதின் மூலம்தான் தக்க வைத்துக் கொள்ளப்பட முடியும்.

முடிவில்லாமல் ஊதியங்களையும் பணிநிலைமைகளையும் தாக்குதல், பொது நிதிகளைக் கொள்ளையடித்து செல்வந்தர்களின் வரிகளைக் குறைத்தல், சமூகநலச் செலவுகளில் கடுமையான குறைப்புக்கள் மற்றும் வங்கிகளை மீட்பதற்குப் பில்லியன்களைச் செலவழித்தல் ஆகியவை அனைத்தும் இந்த இலக்கிற்குத்தான் உதவுகின்றன. இந்த நடவடிக்கைகள் விதிவிலக்கு இல்லாமல் அனைத்து முக்கியக் கட்சிகளாலும் ஆதரவைப் பெறுகின்றன. சமூக ஜனநயாகம், இடது, பசுமை, கிறிஸ்துவ ஜனநாயகம், கன்சர்வேடிவ் அல்லது தாராளவாதம் என்று எப்படி இருந்தாலும், அனைத்துக் கட்சிகளும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை என்று வலியுறுத்துகின்றன.

இவை கணக்கிலடங்காஇடதுஅமைப்புக்களின் ஆதரவைக் கொண்டுள்ளன. அவை சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை அரசாங்கத்திற்குத் தீமை தராத எதிர்ப்புக்களாக அல்லது முறையீடுகளாக மாற்ற முயன்று, வெகுஜன இயக்கத்தை ஆளும் உயரடுக்கின் ஏதேனும் ஒரு அடுக்கிற்குத் அடிபணியவைக்க  முற்படுகின்றன.

கிரேக்கத்தில் ஆளும் PASOK கட்சிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் தொழிற்சங்கங்கள் பெரும் முயற்சியுடன் சிக்கன நடவடிக்கைகளுக்கு முக்கியப் பொறுப்பைக் கொண்டுள்ள பாப்பாண்ட்ரூ அரசாங்கம் வீழ்ச்சி அடைவதைத் தடுக்க முற்படுகின்றன.அரசியல் கூடாதுஎன்னும் கோஷத்தின் அடிப்படையில், “சீற்றம்அடைந்துள்ளதாகக் கூறும் இயக்கம் அரசியல் முன்னோக்குகள் பற்றிய எந்த விவாதத்தையும் அடக்குகிறது. இதற்கு ஏராளமான போலி இடது குழுக்களின் ஆதரவு உள்ளது.

இந்த அமைப்புக்கள் அனைத்தில் இருந்தும் தொழிலாளர்கள் முறித்துக் கொள்ள வேண்டும். ஐரோப்பா ஒரு மகத்தான வர்க்கப் போராட்டங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இவை அரசியல்ரீதியாகவும் தயாரிக்கப்பட வேண்டும். கடந்த நூற்றாண்டுடன் தொடர்பு கொண்ட பேரழிவுகள் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக செயல்பட்டால்தான் தவிர்க்கப்பட முடியும். இதற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சோசலிச வேலைத்திட்டம் தேவைப்படுகிறது.

ஐரோப்பாவிலுள்ள தொழிலாளர்கள் ஒன்றுபட்டு தேசியவாதம் மற்றும் சமூகச் சரிவைஐரோப்பா காப்பாற்றப்பட வேண்டும்என்ற பெயரில் உபதேசிக்கும் அனைத்தையும் நிராகரிக்க வேண்டும். இப்பொழுது முன்னே இருக்கும் பணி ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை கட்டமைப்பதுதான். ஐரோப்பியத் தொழிலாளர்களின் அரசாங்கம் ஒன்று வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை கையேற்றுக்கொண்டு அவற்றின் ஆதாரங்களை, இலாபத்தைச் செல்வந்தர்களுக்குத் தோற்றுவிப்பது என்பதற்குப் பதிலாக புதிய வேலைகளைத் தோற்றுவிப்பதற்கும், சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பயன்படுத்த வேண்டும்.

உலக சோசலிச வலைத்தளமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இத்தகைய வேலைத்திட்டத்திற்குத்தான் போராடி, ஒவ்வொரு நாட்டிலும் அத்தகைய முன்னோக்கை அடைவதற்காகப் பிரிவுகளைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன.