World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Maruti Suzuki workers’ struggle must spearhead working-class political offensive

இந்தியா: மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தாக்குதல் முனையாக வேண்டும்

Statement of the World Socialist Web Site
20 October 2011
Back to screen version

சுசுகி பவர்டிரெயின் ஆலையின் தொழிலாளர்கள் மானேசர் மாருதி சுசுகி கார் ஒருங்கிணைப்பு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஆதரவான தங்களது வேலைநிறுத்தத்தில் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளனர் (இவர்களில் சிலரது படங்கள் மேலே அளிக்கப்பட்டுள்ளன).

இந்தியாவெங்கிலும் தொழிற்சாலைகளிலும் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் நிலவி வரும் குறைந்த ஊதியங்கள், ஒப்பந்த தொழிலாளர்களை பரவலாய் பயன்படுத்துவது, எதேச்சாதிகார வேலைவிதிகள், மற்றும் போர்குணமிக்க தொழிலாளர்களை திட்டம்போட்டு பழிவாங்குவது ஆகிய கொத்தடிமைச் சூழலுக்கு எதிராக மாருதி சுசுகியின் கார் ஒருங்கிணைப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் ஜூன் மாதம் முதலாக ஒரு உறுதிமிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் அடுத்தடுத்த வேலைநிறுத்தப் போராட்டங்களையும் வேலையிட உள்ளிருப்புப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகியின் நிர்வாகத்திடம் இருந்து வருகின்ற ஒடுக்குமுறைமிக்க அச்சுறுத்தல்கள் மற்றும் மாருதி சுசுகி தொழிற்சாலைக்கு அதீதச் சுரண்டலுக்கு இலக்காகும்ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டுவரும் தொழில் ஒப்பந்ததாரர்கள் மூலமான குண்டர் வன்முறை இவற்றையெல்லாம் சந்தித்துக் கொண்டே தான் அவர்கள் இப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

அவர்கள் சமீபத்தில் ஆலை உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடக்கிய அடுத்த சில நாட்களிலேயே கூர்கான்-மானேசர் தொழிற்துறைப் பகுதியில் இருக்கும் 12,000 தொழிலாளர்கள் அப்போராட்டத்திற்கு ஆதரவாக வேலைப் புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்தனர். ஏறக்குறைய இரண்டு வார காலமாக சுசுகி பவர்டிரெயின் மற்றும் சுசுகி மோட்டார்சைக்கிள் ஆகிய இரண்டு சுசுகியின் துணைநிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மானேசர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்

இவ்வாறிருந்தபோதிலும், மானேசர் மாருதி சுசுகி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஒரு பெரும் அபாயத்தில் உள்ளது. போலிஸ் வன்முறை வெறியாட்ட அச்சுறுத்தலின் கீழ் அவர்கள் தங்களது ஒருவார கால உள்ளிருப்புப் போராட்டத்தை சென்ற வெள்ளியன்று முடித்துக் கொள்ளத் தள்ளப்பட்டனர். அந்த நாளில் முன்னதாக, உள்ளிருப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதான பேரில், கனமாய் ஆயுதமேந்திய 1,500 போலிசார் தொழிற்சாலைக்குள் நுழைந்து வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைப் பலவந்தமாய் வெளியேற்ற தயாரிப்பு செய்து கொண்டிருந்தனர்.

மானேசர் தொழிற்சாலையில் இப்போது பகுதியாக உற்பத்தியை மீண்டும் துவக்கியிருக்கும் மாருதி சுசுகி (MSIL) இத்தொழிற்சாலையில் தொழிலாளர்களின் எந்த எதிர்ப்பையும் நசுக்குவதற்கு உறுதிபூண்டுள்ளது ஹரியானா ஆலைச் செயல்பாடுகள் முடங்கியதால் 50,000 வாகனங்கள் உற்பத்தி செய்ய முடியாமல் போனதையும் 300 மில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்புகள் தோன்றியதையும் ஜப்பானியருக்கு சொந்தமான இந்த நிறுவனம் ஒப்புக் கொள்கின்ற போதிலும் ஒருகுறுகிய கால தீர்வைக் காட்டிலும் தொழிலாளர்களுடனான நீடித்த யுத்தத்தையே நிறுவனம் விரும்புவதாக MSIL தலைவர் ஆர்.சி.பார்கவா தொடர்ந்து அறிவித்து வந்திருக்கிறார்.

பெருவணிகங்களும், காங்கிரஸ் தலைமையிலான தேசிய மற்றும் மாநில அரசாங்கமும், மற்றும் ஒட்டுமொத்தமாக அரசியல் ஸ்தாபிபமுமே மாருதி சுசுகிக்கு முழு ஆதரவையும் வழங்குகிறது. சென்ற ஜூன் மாதத்தில் மோதல் வெடித்தது முதலாகவே, ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் நிர்வாகத்தின் ஒரு அங்கம் போலத் தான் செயல்பட்டு வந்திருக்கிறது. சென்ற ஜூன் மாதத்தின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என இது அறிவித்தது. புதிதாக உருவாக்கப்பட்ட மாருதி சுசுகி ஊழியர்கள் கூட்டமைப்புக்கு (MSEU) சட்டப்பூர்வ அங்கீகாரத்தை மறுத்ததோடு, MSEU அரசியல்ரீதியாகஅழிவுகரமான நோக்கம் கொண்டது என்றும் நிறுவனத்தின் எடுபிடியாக இருக்கும் தொழிற்சங்கமே தொழிலாளர்களின் பிரதிநிதி என்றும் வலியுறுத்தியது.

தொழிலாளர்கள் ஒருநன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்திட ஒப்புக் கொள்ளும் வரை 33 நாட்களுக்கு நிறுவனம் கதவடைப்பு செய்ததை அரசாங்கம் முழுமையாக ஆதரித்தது. தொழிலாளர்கள் அதன் அச்சுறுத்தலுக்குப் பணிந்து சென்ற வெள்ளியன்று ஆலையில் இருந்து வெளியேறாமல் இருந்திருந்தால் அவர்கள் மீது போலிசாரை ஏவி விடும் தயார் நிலையில் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் இருந்தது.

இந்தியா கடந்த இரண்டு தசாப்த காலத்தில் ஒரு மலிவு-உழைப்பு உற்பத்தியாளராக உலக முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குள்  ஒருங்கிணைந்ததன் ஊடாக எழுந்திருக்கக் கூடிய புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு உற்பத்தித் துறைகளின் குணாம்சமாக விளங்கும் கொத்தடிமை வேலைச் சூழல்களுக்கு எதிராக பெருகி வரும் தொழிலாள வர்க்கத்தின் சவாலின் ஒரு பகுதியாக இருப்பதால் இந்த மானேசர் தொழிலாளர்களின் போராட்டத்தை இந்திய ஆளும் உயரடுக்கு வெறுக்கிறது, இதனைக் கண்டு அஞ்சுகிறது. கடந்த 18 மாதங்களில் வாகனத் துறை மற்றும் மின்னணுத் துறைத் தொழிலாளர்கள் பங்குபெற்ற தொடர்ச்சியான பல போர்க்குணமிக்க போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தென்னிந்தியாவில் ஃபாக்ஸ்கான் BYD எலெக்ட்ரானிக்ஸ், சான்மினா மற்றும் ஹூண்டாய் தொழிற்சாலைகளில் நடந்த போராட்டங்கள் இதில் அடங்கும்.

அடிப்படை உரிமைகளையும் மற்றும் உயர்த்துகொண்டே செல்லும் உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் பாதிப்பைத் தாக்குப்பிடிக்கும் வகையிலான ஊதிய உயர்வுகளைப் பெறுவதற்குமான முயற்சியில் தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையில் இறங்குகின்ற அதே சமயத்தில், இந்தியப் பெருநிறுவனங்களோபெருநிறுவன இந்தியாவின் எழுச்சிக்கு உரம்போட்ட ஒடுக்குமுறை நிலைமைகளைப் பராமரிப்பதோடு நிற்கவில்லை. 1930களின் பெருமந்தநிலைக்குப் பின் உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் நெருக்கடிக்கான பதிலிறுப்பாக தொழிலாளர்கள் மீதான சுரண்டலை அது மேலும் தீவிரப்படுத்த முனைகிறது

MSIL எடுத்துக் கொள்வோம். கடந்த மூன்று ஆண்டுகளில் மானேசர் தொழிற்சாலையில் உற்பத்தியை 40 சதவீதம் வரை நிர்வாகம் உயர்த்த முடிந்திருக்கிறது. இதனைச் செய்வதற்கு அது தொழிலாளர்களின் ஓய்வு இடைவேளைகளைக் குறைத்து விட்டது, எந்த மட்டத்திற்கு என்றால் தேநீர் அருந்துவதை அவர்கள் கழிப்பறை செல்லும் நேர இடைவெளியில் தான் செய்தாக வேண்டும் என்கிற மட்டத்திற்கு. அத்துடன் இன்னும் கூடுதல் இலாபங்களைப் பிழியும் முயற்சியாக, தண்டனை அபராத முறை என்கிற பெயரில் தொழிலாளர்களின் ஊதியங்களையும் திட்டம்போட்டு வெட்டி விடுகிறது

பெருநிறுவனங்கள், குறிப்பாக தொழிலாளர்களை வேலையிலிருந்து அகற்றி விட்டு வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து கொள்வதற்கு வசதியாக, தமது கரத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இந்திய அரசாங்கம் நாட்டின் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி எழுத வேண்டும் என்று கோரி வருகின்றனர். நாட்டின் மலிவு-உழைப்பு ஆட்சிமுறையைப் பாதுகாக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்பதை இந்த வாரத்தின் ஆரம்பத்தில் அதன் தலைமைப் பொருளாதார ஆலோசகரான கவுசிக் பாசு கூறிய கருத்துக்கள் தெளிவாய் விளங்கப்படுத்துகின்றன. நாட்டின் இரு இலக்க பணவீக்க விகிதத்திற்கு அதிகரித்துச் செல்லும் ஊதியங்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய பாசு இந்தியாவின்உழைப்புக்கான செலவு குறைவு அனுகூலம் தீவிரமாய் இல்லாதொழிக்கப்பட்டிருப்பதாக கூறினார்

பெருவணிகங்கள், அரசாங்கம், போலிஸ் மற்றும் நீதிமன்றங்களின் ஒன்றுசேர்ந்த தாக்குதலைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் கொத்தடிமை நிலைமைகளுக்கான ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் தொழில்ரீதியான மற்றும் அரசியல்ரீதியான தாக்குதல் முனையாக தங்களது வேலைநிறுத்தத்தை மாருதி சுசுகி தொழிலாளர்கள் ஆக்க வேண்டும். மானேசர் மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடத்தப் பெறும் வேலைநிறுத்தங்கள் தொழிலாளர் அடிப்படை உரிமைகளுக்கான ஒரு போராட்டத்தில் (அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரத் தொழிலாளர்களாக உடனடியாக மாற்றுவது உள்ளிட்ட) கூர்கான் -மானேசர் தொழிற்துறைப் பகுதியிலும் மற்றும் இந்தியாவெங்கிலும் தொழிலாளர்களை அணிதிரட்ட முடியும் என்கிற சாத்தியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன

மாருதி சுசுகி தொழிலாளர்கள் அத்தகையதொரு போராட்டத்தைத் தொடுப்பதற்கு கூர்கான்-மானேசர் பகுதியில் செயல்படும் இந்து மஸ்தூர் சபா (HMS), அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் இந்திய தொழிற்சங்க நடுவம்(CITU) உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு பெரும் ஸ்ராலினிசக் கட்சிகளும் மற்றும் அவர்களது இடது கூட்டணியும் மிகப் பெரும் முட்டுக்கட்டையாக நிற்கின்றன.

தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் மானேசர் MSIL தொழிலாளர்களின் போராட்டத்தைத் தனிமைப்படுத்தவும் அதேசமயத்தில் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காக மாருதி சுசுகி நிர்வாகத்துடன் கைகோர்த்து செயல்பட்டு வரும் மாநிலத்தின் காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் அதன் தொழிலாளர்துறை ஆகிய அதே சக்திகளிடமே தலையீடு கோரி விண்ணப்பம் செய்வதற்கு அவர்களை வலியுறுத்தவும் திட்டமிட்டு வேலை செய்து வருகின்றன

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அங்கமான AITUC சென்ற ஜூன் மாதத்தில் MSEU மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை, அந்தப் போராட்டம் கூர்கான் -மானேசர் தொழிற்துறைப் பகுதி தொழிலாளர்களிடையே ஆதரவை வென்றெடுக்கத் தொடங்குகின்ற சமயத்தில் அதனைக் கைவிடுவதற்கும், தொழிலாளர்களின் பிரதானக் கோரிக்கைகளை சேர்க்கத் தவறிய ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி MSEU தொழிற்சங்கத்தை வற்புறுத்தியது.

AITUC மற்றும் CPM கட்சியுடன் இணைப்பு கொண்ட CITU ஆகிய இரண்டு தொழிற்சங்க அமைப்புகளுமே அக்டோபர் 1 அன்று எட்டப்பட்ட இரண்டாவது வேலைக்குத் திரும்பும் ஒப்பந்தத்தின் கீழ் நிறுவனத்தின்நன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்திட உடன்படுமாறு தொழிலாளர்களுக்கு நெருக்குதலளிப்பதில், மானேசர் தொழிற்சாலையின் எடுபிடித் தொழிற்சங்கம் இணைப்பு கொண்டிருக்கும் HMS ஆதரித்தன. எதிர்பார்த்தபடியே, தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பிய வெகு சீக்கிரத்திலேயே நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை மீறியது, புதிய பழிவாங்கும் நடவடிக்கைகளை அறிவித்தது, நிறுவனம் கதவடைப்பு செய்யப்பட்ட காலத்திற்கு தொழிலாளர்களுக்கு இருமடங்கு ஊதியமளிக்க மறுத்தது, அத்துடன் 1000 ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் பணியிலமர்த்தும் அதன் வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியது.

AITUC மற்றும் CITU உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்புகளின் நோக்கம் என்னவென்றால், “தொழிலாளர்களிடையே அமைதி நிலவச் செய்வதில் அதாவது முதலாளிகளின் மலிவு-உழைப்பு வேலை ஆட்சிமுறையைக் கண்காணிப்பதில்  தாங்களும்கூட்டாளிகளாக இருக்க முடியும் என்பதில் மாருதி சுசுகி நிர்வாகம் மற்றும் ஹரியானா அரசாங்கத்துக்கு உறுதியளிப்பதுதான். அதனால் தான் ஒவ்வொரு சமயத்திலும் அவர்கள் வேலைநிறுத்த இயக்கத்தை தனிமைப்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் ஒடுக்குவதற்கும் முனைந்திருக்கின்றனர்.

AITUC மற்றும் CITU இன் பாத்திரம் CPI மற்றும் CPM இன் முதலாளித்துவ சார்பு அரசியலில் இருந்து தான் தவிர்க்கமுடியாதபடி பாய்ந்து வருகிறது. இந்த இரண்டு ஸ்ராலினிசக் கட்சிகளும் தங்களை தொழிலாள வர்க்கக் கட்சிகளாக அழைத்துக் கொள்கின்ற போதிலும், இவை இரண்டுமே இந்தியாவை அந்நிய மூலதனத்திற்கான ஒரு காந்தமாகவும் மலிவு உழைப்பு உற்பத்தியாளராகவும் மாற்றுவதற்கான இந்திய ஆளும் உயரடுக்கின் முனைப்புடன் சேர்ந்து செயலாற்றி வந்துள்ளனர்.

2004 முதல் 2008 ஆம் ஆண்டு வரையான முழுக்காலமும், மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் முந்தைய பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து அதிக மாற்றமில்லாத பெருவணிக ஆதரவுப் பொருளாதாரக் கொள்கைகளையும் மற்றும் அமெரிக்க ஆதரவு வெளியுறவுக் கொள்கையையும் பின்பற்றுவதாக ஒப்புக் கொண்ட போதிலும் கூட அதற்கு CPM தலைமையிலான இடது முன்னணி முட்டுக் கொடுத்து வந்திருந்தது. அத்துடன் சமீப காலம் வரை மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய CPM தலைமையிலான இடது முன்னணி ஆட்சியில் இருந்த மாநிலங்களிலும் அது முதலீட்டாளர் ஆதரவுக் கொள்கைகளையே பின்பற்றியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைநிறுத்தங்களை தடைசெய்தது மற்றும் தங்களது நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக பறிமுதல் செய்வதை எதிர்த்த விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஆகியவையும் இதில் அடங்கும்

இந்திய பெருவணிகங்களின் பாரம்பரியமான ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியைப் போன்றே, ஸ்ராலினிச CPI மற்றும் CPM கட்சிகளும், சந்தை ஆதரவுச்சீர்திருத்தங்களை மனிதத்தன்மையுடனான முகத்துடன் செய்ய முடியும் என்கின்ற மற்றும்இந்திய முதலாளித்துவத்தின் கொள்ளையடிக்கும் இலட்சியங்களை தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளின் தேவைகளுடன் இணக்கமுறச் செய்வது சாத்தியமே என்கிற பொய்க்கு தூபம் போடுகின்றன. ஆனால் கடந்த இரண்டு தசாப்த கால இந்தியாவின்புதிய பொருளாதாரக் கொள்கையோ நேரெதிரான ஒன்றைத் தான் விளங்கப்படுத்தியுள்ளது: இந்தியாவின்எழுச்சியானது தொழிலாளர்களை மிருகத்தனமாய் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது, அத்துடன் விவசாயப் பொருட்களுக்கான ஆதரவு விலைகள் மற்றும் மானியங்களை வெட்டியதன் மூலமும் அரசு நிதிகளை விவசாயத்திலிருந்து இந்தியாவின் மனித வளம் மற்றும் இயற்கை ஆதாரவளங்களைச் சுரண்டுகின்ற பெரும் திட்டப்பணிகளின் வணிகத் தேவைகளுக்கு திருப்பியதன் மூலமும் விளைந்த விவசாயத் துறை நெருக்கடியும் இதனுடன் கைகோர்த்து வந்திருந்தது.    

மானேசர் மாருதி சுசுகி தொழிலாளர்களும் மற்றும் இந்தியாவெங்கிலுமான தொழிலாளர்களும் தங்களது அடிப்படை உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்கள் தங்களை ஸ்ராலினிச தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் மற்றும் கட்சிகளிலிருந்து சுயாதீனமான வகையிலும் அவற்றை எதிர்த்தும் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு போராட்டத்திற்கான புதிய அமைப்புகளை, எல்லாவற்றுக்கும் மேலாய் பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த ஒரு புரட்சிகரத் தொழிலாள வர்க்கக் கட்சியை கட்ட வேண்டும்:

தொழிலாள வர்க்கம் தன்னை ஒரு சுயாதீனமான சக்தியாக உருவமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியப் பெருவணிகத்தின் மலிவு உழைப்பு ஆட்சிமுறைக்கான எந்த சவாலும் உடனடியாக தொழிலாளர்களை அவர்களது முதலாளிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகம் மற்றும் அரசுக்கு எதிராகவும் நிறுத்துகிறது. வங்கிகளையும் அடிப்படைத் தொழில்துறையையும் பொதுமக்களின் உரிமையின் கீழ் வைக்கக்கூடிய ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளது அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டுமே சமூகத்தின் சொத்துக்களை உருவாக்கும் மக்களால் தனியார் இலாபத்திற்கு அல்லாமல் மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காய் வரையப்பட்ட ஒரு பகுத்தறிவுபட்ட சோசலிச வேலைத்திட்டத்தின் படி பொருளாதார வாழ்க்கை மறுஒழுங்கமைத்துக் கொள்ளப்பட முடியும்.

முதலாளித்துவ உலக நெருக்கடியின் சுமையை தமது தோள்களின் மீது சுமத்த முனையும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் முயற்சியை எதிர்ப்பதில் இந்தியத் தொழிலாளர்கள் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் அதே பாதையிலேயே நிற்கின்றனர். எகிப்து மற்றும் துனிசியாவிலான புரட்சிகள் தொடங்கி மற்றும் கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் அரக்கத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி சர்வதேசரீதியாக அரும்பத் தொடங்கியிருக்கும் முதலாளித்துவ-விரோதவோல்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கம் வரை சமீப மாதங்களில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் ஒரு மறுஎழுச்சி காணப்பட்டிருக்கிறது.

இந்த புறநிலை ஒற்றுமையானது, நாடுகடந்த பெருநிறுவனங்களுக்கு எதிரான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலமாகவும், ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும், மற்றும் இறுதியாக சமூகத்தை சோசலிசரீதியாக மாற்றியமைப்பதற்காகவுமான ஒரு நனவான மூலோபாயமாக மாற்றப்பட வேண்டும்

இந்தியா போன்ற வளர்ச்சி குறைந்த நாடுகளில், தொழிலாள வர்க்கம் தனது சமூக நிலையை முன்னேற்றுவதற்கான போராட்டமானது வறுமை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான கிராமப்புற பரந்த மக்களின் போராட்டத்துடன் இயல்பாகவே பிணைந்துள்ளது.

இந்தியத் தொழிலாளர்கள் கிராமப்புற ஏழைகளின் நலன்களின் ஆதரவாளனாக இருக்கவேண்டுவதுடன், நிலப்பண்ணையார்கள், வட்டிக்குக் கொடுப்பவர்கள் மற்றும் பெருவணிகங்களின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதில் அந்த கிராமப்புற ஏழை மக்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும், அத்துடன் முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு போராட்டத்தின் மூலமாக மட்டுமே உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட முடியும் என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்

இந்த வேலைத்திட்டத்துடன் உடன்படும் அனைத்துத் தொழிலாளர்களும் மற்றும் சோசலிச சிந்தனையுடைய இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளும் 1917 ரஷ்யப் புரட்சி மீதான ஸ்ராலிசத்தின்  காட்டிக் கொடுப்புக்கு எதிராக 1938 ஆம் ஆண்டில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் உலகப் புரட்சிகரக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைய வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்துகிறது.