World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP campaign for release of political prisoners: Released detainees speak to the WSWS

 

இலங்கை சோ... அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குப் பிரச்சாரம் செய்கின்றது: விடுதலை செய்யப்பட்ட கைதிகள் WSWS உடன் பேசினர்

By Subash Somachandran
22 October 2011
Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ...), ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கோரி பிரச்சாரம் ஒன்றை முடுக்கிவிட்டுள்ளது. உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் அண்மையில் விடுதலையான பலருடனும் மற்றும் கைதிகளின் உறவினர்களுடனும் கலந்துரையாடல் நடத்தினர். அவர்கள் சோ...யின் பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து 2009ல் இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலான பிரமாண்டமான முகாங்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் அநேகமானவர்கள்மீளக் குடியேற்றப்பட்டுள்ள அதே வேளை, மேலும் 11,000 இளைஞர்கள் இராணுவத்தால்பயங்கரவாத சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டதுடன் இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அந்த 11,000 பேரில் சுமார் 5,000 பேரை விடுதலை செய்துவிட்டதாக அரசாங்கம் கூறிக்கொள்வதோடு, 6,000 பேரை தடுப்பு முகாங்களில் விட்டுள்ளதுடன் அவர்கள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் இருந்த போதும் எந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாகவும் எவர் மீதும் குற்றஞ்சாட்டப்படவில்லை.

தீவின் 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட பல்வேறு போலி குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட மேலும் பல நூறு பேர், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஒரு தசாப்தத்துக்கும் முன்னதாக கைது செய்யப்பட்டதோடு அநேகமானவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படவில்லை.

சர்வதேச விமர்சனங்களை தணிப்பதற்காக ஆகஸ்ட்டில் அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் நீக்கிய போதும் இந்த தடுப்புக் காவல் தொடர்கின்றது. கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிக்கும் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இராஜபக்ஷ புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கைதிகள் தொழில் பயிற்சி உட்படபுர்வாழ்வு பெறுகின்றனர் என அரசாங்கம் கூறிக்கொள்கின்றது. கைதிகளும் அவர்களது குடும்பத்தவர்களும் வழங்கியுள்ள பேட்டிகள், இந்தக் கூற்றின் மோசடித் தன்மையையும் தடுப்பு முகாங்களில் உள்ள நிலைமைகளின் கொடூரமான யதார்த்தத்தையும் அம்பலப்படுத்துகின்றன.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களில் இருந்து தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் பரந்த போராட்டத்தில் இருந்து சோ... முன்னெடுக்கும் பிரச்சாரத்தை பிரிக்க முடியாது. “சோ... இலங்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது என்ற அதன் அறிக்கையில், “அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் கட்டிவிட முயற்சிக்கின்ற நிலையில், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்படும் பொலிஸ்-அரச வழிமுறைகள், தொழிலாளர்களுக்கும் கிராமப்புற வெகுஜனங்களுக்கும் எதிராக தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்படும் என கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. (பார்க்க: சோ... இலங்கை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது.)

இந்தப் பிரச்சாரத்துக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிடுமாறு உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு சோ... அழைப்பு விடுக்கின்றது. ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கான போராட்டமானது, முதலாளித்துவ முறைமைக்கு எதிராக சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான போராட்டத்துடன் பிரிக்கமுடியாதளவு பிணைக்கப்பட்டுள்ளது.

நாம் இரு பேட்டிகளை கீழே வெளியிட்டுள்ளோம். இவற்றில் ஒன்று விடுதலையான கைதியுடையது மற்றையது தடுப்பு முகாமில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியின் தந்தையுடையது.

****

சில மாதங்களுக்கு முன்னர் விடுதலையான 35 வயதான ஒருவரை WSWS நிருபர்கள் சந்தித்தனர். அவரது சிறிய வீடு 8 சதுர மீட்டர் அறையையும், ஒரு வரவேற்பறையையும் மற்றும் பலகைகளால் ஆன ஒரு சிறிய சமையலறையையும் உள்ளடக்கியதாகும். அவருக்கு 4 சிறிய பிள்ளைகள் உள்ளனர். ஆனால் அவரது வீட்டுக்கு மின்சாரமோ குழாய் நீர் வசதியோ கிடையாது. குடி நீர் தேடி குடும்ப உறுப்பினர்கள் 3 கிலோமீட்டர்கள் வரை நடந்து செல்ல வேண்டும்.

 “2009 ஜூன் 15 அன்று நான் இராணுவத்தினரால் தடுப்பு முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன் என அவர் விளக்கினார். “ஆறு மாதங்களின் பின்னர் தொழிற் பயிற்சியுடன் என்னை விடுதலை செய்வதாக கூறினர். எந்தவொரு தொழிற் பயிற்சியும் இல்லாமல், வெறும் கையுடன் இரண்டு வருடங்களின் பின்னரே நான் வெளியில் வந்தேன்.

இராணுவம் என்னை கொண்டு செல்லும் முன், நான் மெனிக் பார்ம் [வவுனியாவுக்கு அருகில்] என்றழைக்கப்படும் பிரமாண்டமான இராணுவ முகாமில் என் குடும்பத்துடன் அடைக்கப்பட்டிருந்தேன். இராணுவக் கட்டுப்பாட்டிலான அந்த முகாங்களில் வன்னியைச் [வட இலங்கை] சேர்ந்த இலட்சக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.

நான் உட்பட கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும், ஒரு உணவுத் தட்டும், ஒரு கோப்பையும் மற்றும் ஒரு போர்வையும் கொண்டு வரச் சொன்னார்கள். நான் வவுனியாவில், பூந்தோட்டம் முகாமில் ஒரு சிறிய பாடசாலைக் கட்டிடத்தில் ஒரு வருடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.

அங்கு சுமார் 430 கைதிகள் இருந்தனர். நாங்கள் ஒரு சிறிய பிரதேசத்தில் கூட்டமாக இருந்ததால் இரவில் தூங்குவதற்கு பெரும் சிரமமாக இருந்தது. மலசல கூடத்திற்குச் செல்ல வரிசையில் நிற்க வேண்டும். ஒரு வருடத்துக்கும் மேலாக எங்களுக்கு சோறு, பருப்பு மற்றும் சோயா தான் மூன்று நேர உணவாகக் கிடைத்தது. முகாமைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த படையினர் தேவையில்லாதவற்றுக்கெல்லாம் எங்களில் குற்றம் கண்டுபிடித்து தகாத வார்த்தைகளில் திட்டுவர். ஏதாவதொரு விடயத்தில் அவர்களுக்குத் திருப்தி இல்லாவிட்டால் அவர்கள் எங்களை அடிப்பார்கள்.

ஒரு வருடத்தின் பின்னர், [இலங்கையின் கிழக்கில்] மட்டக்களப்பு மாவட்டத்தில் திருவண்ணாமடு என்ற ஒரு காட்டுப் பிரதேசத்திற்கு எங்களில் சுமார் 500 பேரைக் கொண்டு சென்றனர். எங்களை காடுகளை துப்பரவு செய்து கூடாரங்களை அமைக்குமாறு கூறினர். அது ஒரு இருண்ட காட்டுப் பிரதேசம். அங்கு நாங்கள் விவசாயம் செய்யத் தள்ளப்பட்டோம்.

மெனிக்பார்ம் முகாமில் தங்கியிருந்த எனது குடும்பத்துக்கு என்னைப் பார்க்க வர அனுமதி எடுக்க முடியாமல் போனது. எங்களது முகாமுக்கோ அல்லது அவர்களது முகாமுக்கோ தொலைபேசி வசதிகள் கிடையாது. எங்களது கடிதங்கள் விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் புலனாய்வுத் துறையினரால் பரிசோதிக்கப்படும்.

ஒருவரிடம் மொபைல் போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கடுமையாகத் தாக்கிய அதிகாரிகள், இது ஏனையவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை என்றனர். ஒவ்வொரு நாள் காலையிலும் நாங்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செய்ய வேண்டும். அரசுக்கு எதிராக செயற்பட வேண்டாம் மற்றும் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணைய வேண்டாம் என கூட்டத்தில் எங்களுக்கு அறிவுறுத்துவர். அதுதான் புனர்வாழ்வு!

ஒரு முறை தன்னை அடித்த இராணுவ அதிகாரியை சில இளைஞர்கள் திருப்பி அடித்துவிட்டனர். ஆத்திரமடைந்த இராணுவம் ஏழு இளைஞர்களை கைது செய்து படையினர் அவர்களை கால்களில் கட்டித் தொங்கவிட்டு கடுமையாக சித்திரவதை செய்தனர். பின்னர் அவர்களை தூர எடுத்துச் சென்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது.

நான் விடுதலையான மறுநாள், எமது பிரதேசத்தில் பொலிஸ் புலனாய்வு அலுவலகத்தில் என்னை பதிவு செய்துகொண்டேன். புத்தகத்தில் எனது பெயரில் கையொப்பம் இட நான் ஒவ்வொரு மாதமும் அங்கு செல்ல வேண்டும். நாங்கள் விடுதலை செய்யப்பட்டாலும், இன்னமும் கண்காணிக்கப்படுகின்றோம்.

தனது குடும்பத்தைப் போலவே அநேக குடும்பங்களின் வாழ்க்கையை யுத்தம் சீரழித்துவிட்டதாக விடுதலையான கைதி தெரிவித்தார். விடுதலையான கைதிகளுக்கு உதவி செய்வதாகவும் வங்கிக் கடன்களைக் கொடுப்பதாகவும் அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த போதிலும், அவை வெற்று வாக்குறுதிகளே. அவர் பிழைப்புக்காக தனது உறவினர்களில் தங்கியிருக்கின்றார்.

அவர் யுத்தத்தின் குரூரமான அனுபவங்களையும் விளக்கினார். 2006ல் இராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தை புதுப்பித்த போது, அவரது குடும்பம் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்தது. ஏனையவர்களைப் போலவே கண்மூடித்தனமான இராணுவத் தாக்குதலை எதிர்கொண்ட அவர்களும் அடிக்கடி இடம்பெயரத் தள்ளப்பட்டனர். தனது உறவினர்கள் உட்பட பலரது சாவை அவர் கண்டதோடு அவர்களது இறுதிச் சடங்கைக் கூட செய்ய முடியாமல் கைவிட்டுச் செல்லத் தள்ளப்பட்டார்.

எனது குடும்பமும் நானும் இன்று உயிருடன் இருப்பது அதிசயம். அந்த பயங்கரத்தில் இருந்து நாங்கள் தப்பியதை என்னால் நம்ப முடியவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

மெனிக்பார்மைப் பற்றி பேசும் போது, அரசாங்கம் அவற்றை நலம்புரி கிராமங்கள் என அழைத்தாலும், உண்மையில் அவை சிறைச்சாலைகளே என அவர் தெரிவித்தார். தனது உறவினர்களைப் பார்க்கக்கூட ஏனைய முகாங்களுக்கு செல்ல முடியாதிருந்த கைதிகள், தொடர்ச்சியான இராணுவ மற்றும் பொலிஸ் அச்சுறுத்தலின் கீழேயே வாழ்ந்தனர். “எங்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கவில்லை. அது நரகத்தில் வாழ்வது போல் இருந்தது,” என அவர் மேலும் கூறினார்.

யுத்தத்தின் கடைசி மாதங்களில் புலிகளின் தோல்வியைப் பற்றி கேட்ட போது, அவர்கள் மேலும் மேலும் மக்களின் ஆதரவை இழந்துவிட்டதாக அவர் கூறினார். யுத்தத்தில் தங்களுக்கு உதவுமாறு புலிகளின் தலைவர்கள் மக்களை நெருக்கினர். ஆனால், அதே சமயம், அரசாங்கத்துக்கு சகலவிதமான ஆதரவையும் வழங்கிய அதே சர்வதேச சக்திகளிடம் அவர்கள் ஆதரவை எதிர்பார்த்தனர்.

புலிகளின் முன்னால் அரசியல் முன்னமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாத்திரம் பற்றி கருத்துத் தெரிவித்த அவர், “தோல்வியின் பின்னர், தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் எங்களுக்கு கூறினர். அவர்கள் சில அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஏனெனில் மக்களுக்கு வாக்களிக்க வேறு முன்னணி கட்சிகள் இல்லை.”

இனவாத பாரபட்சங்களுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச ஐக்கியத்தினை அடிப்படையாகக் கொண்ட சோ...யின் முன்நோக்கு பற்றி WSWS நிருபர்கள் விளக்கிய போது அவர் தெரிவித்ததாவது: “சோசலிசம் மற்றும் வர்க்கப் போராட்டம் பற்றி நான் முதல் தடவையாக கேள்விப்பட்டாலும், அது ஒரு சிறந்த வேலைத் திட்டமாக இருக்கின்றது. எவ்வாறெனினும், நான் நிச்சயமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தை ஆதரிக்கின்றேன்.”

WSWS நிருபர்கள் 60 வயது முதியவரை சந்தித்தனர். அவரது மகன் தென்னிலங்கையில்  பூஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தத் தந்தை யுத்தத்தால் சேதமான தனது சகோதரியின் வீட்டில் வசிக்கின்றார். அங்கு கதவுகள் ஜன்னல்கள் அல்லது தளபாடங்களோ கிடையாது. அவரது இரு பிள்ளைகளும் யுத்தத்தில் அகப்பட்டனர்.

நான் ஒரு மீனவத் தொழிலாளி. யுத்தத்தால் நாங்கள் இடம்பெயர்ந்து 2006ல் வன்னியில் பூனகரியனில் குடியேறினோம். புலிகள் 18 வயது மாணவனான எனது மகனை பலாத்காரமாக இழுத்துச் சென்றனர். அவர்கள் எங்களது கெஞ்சல்களைக் கூட கணக்கில் எடுக்கவில்லை. யுத்தம் மீண்டும் தொடங்கிய பின்னர் அவர் தப்பிவந்து எங்களுடன் சேர்ந்துகொண்டார்.

யுத்தத்தின் போது நாங்கள் இடத்துக்கிடம் மாறிக்கொண்டே இருந்தோம். நான் நினைக்கின்றேன் குறைந்தபட்சம் நாங்கள் பத்து இடங்களில் தங்கியிருக்கின்றோம். எங்களுக்கு மீண்டும் மீண்டும் தங்குமிடங்களாகப் பயன்படுத்த தடிகளும் தார்புலின் விரிப்புக்களுமே கிடைத்தன. 2009 ஏப்பிரலில் புலிகள் எனது மகளை இராணுவப் பயிற்சிக்காக கொண்டு சென்றனர். அதன் பின்னர் எங்களுக்கு அவளைக் காணவே கிடைக்கவில்லை. நான் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் அவளைக் கண்டு பிடிக்க முயற்சித்தேன். ஆனால் பயனில்லை.

யுத்தத்தின் கடைசி நாட்களில், நான் ஷெல் தாக்குதலுக்கு உள்ளானதோடு எனது காலிலும் முதுகிலும் காயம் ஏற்பட்டது. நான் [முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் உள்ள] மாத்தளன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காகச் சென்றேன். நான் அங்கிருந்த சடலக் குவியல்களைக் கண்டேன், காயமடைந்தவர்களின் அலறல்களையும் கேட்டேன். ஆஸ்பத்திரி மீதும் ஷெல் விழுந்தது.

நாங்கள் தப்பிவிட்ட போதிலும் மெனிக்பார்ம் முகாமுக்குள் அடைக்கப்பட்டோம். போதுமான உணவு, ஏனைய அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதார வசதிகள் இன்றி வாழ்வது ஒரு போராட்டமாக இருந்தது. அது ஒரு சிறை வாழ்க்கை.”

முகாங்களில் இருந்த போது, புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை சரண்டையுமாறு இராணுவத்தினர் பல தடவை அறிவித்தனர். சரணடைபவர்களுக்கு ஆறு மாத பயிற்சி வழங்கப்படும் அதே வேளை, அறவித்தலை அலட்சியம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு 20 வருட சிறைத் தண்டனை அளிக்கப்படுவார்கள்.

நீண்டகால தடுத்துவைப்பையிட்டு பீதிகொண்ட அவரது மகனும் ஏனையவர்களும் சரணடைந்தனர். 2009 மே மாதம் அவரது மகன் நெலுங்குளம்புனர்வாழ்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒரு வருடத்தின் பின்னர், புலிகளிடம் இராணுவப் பயிற்சி பெற்றுள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூஸ்ஸ முகாமுக்கு மாற்றப்பட்டார்.

நாங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அங்கு செல்வோம். சட்ட நடவடிக்கை எடுக்க எங்களிடம் வளங்கள் கிடையாது. எங்களுக்கு உதவி செய்யும் அரசியல் கட்சிகள் கிடையாது. நான் கொக்கி ஒன்றைப் பயன்படுத்தி மீன் பிடிக்கின்றேன். என்னால் போதுமான வருமானம் பெற முடியாது,” என அந்த தந்தை விளக்கினார். “இந்தப் பிரச்சாரத்தை உங்கள் கட்சி முன்னெடுப்பது நல்லது. அதற்கு எனது முழு ஆதரவையும் வழங்க நான் ஒருபோதும் தயங்க மாட்டேன்,” என அவர் மேலும் கூறினார்.