World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Peter Schwarz addresses Berlin election campaign rally

பேர்லின் தேர்தல் பிரச்சார பேரணியில் பீட்டர் சுவார்ட்ஸ் உரையாற்றுகிறார்

By Peter Schwarz  
21 September 2011

Back to screen version

செப்டம்பர் 17ம் திகதி--சோசலிச சமத்துவக் கட்சி (PSG) இனவெறி, போர் மற்றும் சமூகநலச் செலவு வெட்டுகளுக்கு எதிராக கட்சியின் பேர்லின் தேர்தல் பிரச்சார முடிவில் ஐரோப்பியத் தொழிலாளர்கள் கூட்டத்தை நடத்தியது. PSG மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFC) பிரதிநிதிகள், முதலாளித்துவ நெருக்கடி, PSG யின் வேலைத்திட்டம் மற்றும் PSG யின் தேர்தல் பிரச்சாரம் ஆகியவை பற்றிப் பேசினார்கள்.

எதிர்வரும் நாட்களில் நாம் இக்கூட்டத்தின் மிக முக்கியமான பேச்சுக்களை வெளியிட இருக்கிறோம். இவற்றுள் முதலாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினருமான பீட்டர் சுவார்ட்ஸின் உரையாகும்.  

சமீப வாரங்களில் நாம் ஒரு பெரும் குறிக்கோளுடைய பிரச்சாரத்தை நடத்தினோம்; ஞாயிறன்று 40 ஆண்டுகளைக் கடக்கும் நம் கட்சியின் வரலாற்றில் ஒருவேளை இது மிகப் பெரிய, அதிக விழைவுடைய பிரச்சாரமாக இருக்கக்கூடும். PSG யின் முன்னோடி அமைப்பான சோசலிதொழிலாளர் கழகம் (Bund Sozialistischer Arbeiter- BSA), செப்டம்பர் 18-19, 1971ல் ஹனோவரில் நிறுவப்பட்டது. 

நாளை நாம் எத்தனை வாக்குகளைப் பெறுவோம் என்பது பற்றி எனக்குத் தெரியாது. மிக அதிகமான எண்ணிக்கை கிடைக்கும் என நம்புகிறோம்; ஆனால் நம் கட்டுப்பாட்டை மீறிய பல காரணிகளில் அது தங்கியுள்ளது. ஆனால் தேர்தலின் விளைவுகள் எப்படி இருந்தபோதிலும்கூட, இப்பிரச்சாரத்தில் நாம் பேர்லினுக்கும் அப்பாலும் எடுத்துக்காட்டக்கூடிய நமது நிலைப்பாட்டை நிறுவியுள்ளோம். அனைத்து மற்றக் கட்சிகளும் வலதிற்கு நகர்ந்து கொண்டிருக்கையில், நம் கட்சி மட்டும்தான் அரசியல் நிகழ்வுகளில் சுயாதீனமாக தலையிடும் வகையில் தொழிலாளர்களுக்கான ஒரு சர்வதேச சோசலிசத் திட்டத்திற்காகப் போராடுகிறது. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பேர்லின் சட்டமன்றத் தேர்தல்களை நீங்கள் ஞாபகம் வைத்திருக்கலாம். பல அரசியல் கட்சிகள், சமூக நலன்களை கருத்திற் கொள்ளுபவை எனக் கூறிக்கொண்டு அல்லது தங்களை சமூக ஜனநாயக-இடது கட்சி செனட்டில் மாற்றீடு எனக் கூறிக் கொண்டவை அதில் பங்கு பெற்றன. அப்பொழுது இடது கட்சியின் முன்னோடி அமைப்புக்களில் ஒன்றான தேர்தல் மாற்றீட்டுக் கட்சியானது (WASG) செனட் அறிமுகப்படுத்திய சிக்கன நடவடிக்கைகளை குறைகூறி, தன்னுடைய வேட்பாளர்கள் பட்டியலை முன்வைத்தது. மற்ற கட்சிகளும் ஓய்வூதியம் பெறுவோர், வேலையில்லாதோர் பிரச்சினைகளை எடுத்துக் கொண்டன. அவைகளையெல்லாம் இப்பொழுது மறைந்துவிட்டன. அவைகள் இப்பொழுது இடது கட்சியுடன் சேர்ந்துவிட்டன அல்லது கலைக்கப்பட்டுவிட்டன. 

சமூக ஜனநாயக -இடது கட்சி ஆதிக்கத்திலுள்ள செனட்டை இடதில் இருந்து தாக்கும் ஒரே கட்சி நம்முடையதுதான்; தொழிலாளர்கள், இளைஞர்கள், ஓய்வூதியம் பெறுவோர், குடியேறுபவர்கள் மற்றும் சமூகத்தில் நலன் அனுபவிக்காமல் இருப்பவர்கள் என்று அனைவரின் நலனுக்காகவும் நாம் தொடர்ச்சியாகப் போராடுகிறோம். இது பேர்லின், ஜேர்மனி ஆகியவற்றின் எல்லைகளுக்கு மிகவும் அப்பாலும் காணப்படுகிறது. கணக்கிலடங்காத் தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோருடைய சிந்தனைகளில் அவர்கள் நம் வேலைத்திட்டத்தை நீண்டகால விளைவுடையது மற்றும் தீவிரமானது என்று கருதி நம்மோடு இன்று சேராவிட்டாலும்கூட இது அடையாளங்களை விட்டுச்சென்றுள்ளது.  

தொழிலாள வர்க்கம் ஏற்கனவே ஆளும் உயரடுக்கு மற்றும் அவற்றின் கட்சிகளுடன் தீவிர சமூக மோதல்களை எதிர்கொண்டுள்ளது. நம் பிரச்சாரம் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக  சுயாதீனம் பெறவும் அதன் அரசியல் பணிகளை பற்றிய முழு நனவையும் கொள்வதற்கும் உதவுகிறது. இது முக்கிய வர்க்கப் போராட்டங்களின் அடுத்த சுற்றின்போது இன்னும் தெளிவாகத் தெரிய வரும்.

முதலாளித்துவம் நெருக்கடியில் 

நம் தேர்தல் பிரச்சாரத்தின் முழு முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வதற்கு, சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் தீவிரமயமாக்கலின் பின்னணியில் அது கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டும். இதைப் பற்றித்தான் என் உரையின் எஞ்சிய பகுதியில் கூற விரும்புகிறேன். 

கடந்த மூன்று ஆண்டுகளின் போக்குகளை நாம் பரிசீலித்தால், ஒரு வரலாற்றுத் திருப்பு முனையில் நாம் இருக்கிறோம் என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. 1930களுக்குப் பின் மிக ஆழ்ந்த நெருக்கடியில் முதலாளித்துவம் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் சர்வதேச நிதியச் சந்தைகளில் லெஹ்மன் பிரதர்ஸ் சரிவு என்று எழுந்த நெருப்பு அனைத்தையும் சூழ்ந்துள்ள  தீமண்டலாமாகிவிட்டது. வங்கிகள் மட்டும் அல்லாமல், முழு நாடுகளும் நிதியச் சரிவின் விளிம்பில் நிற்கின்றன. டாலருக்குப் பின் உலகில் மிக அதிக முக்கிய இரண்டாம் நாணயமான யூரோ தீவிர ஆபத்தில் உள்ளது. 

முதலாளித்துவத்தின் முக்கிய பிரதிநிதிகளுக்கு இந்த நெருக்கடியின் அளவு பற்றியும் மற்றும் அதன் புரட்சிகர தாக்கங்களைப் பற்றியும் நன்கு தெரியும். நிதிய ஊடகம் மற்றும் பிற தொடர்புடைய வெளியீடுகளை நீங்கள் படித்தால் பரந்த வாசகர்களை இலக்கு கொண்ட வெகுஜன செய்தி ஊடகத்தில் காணப்படுவதை விட இன்னும் வியத்தகு மதிப்பீடுகளைத்தான் காண்பீர்கள். சில உதாரணங்களை உங்களுக்கு நான் மேற்கோளிடுகிறேன். 

சுவிஸ் நாட்டின் மிகப் பெரிய வங்கியான UBS சமீபத்தில் யூரோ தோற்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டது. பொருளாதார இழப்புக்கள் பேரழிவுத் தன்மையைக் கொண்டிருக்கும் என அது கூறுகிறது. கிரேக்கம் போன்ற வலுவற்ற நாடு  யூரோவை விட்டு அகன்றால், முதல் ஆண்டு இழப்பு மட்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 முதல் 50 சதவிகிதம் என இருக்கும். ஜேர்மனி போன்ற செல்வம் படைத்த நாடு யூரோவை விட்டு நீங்கினால், ஜேர்மனிக்கு ஒரு நிதிய ஆண்டில் இழப்பு மட்டும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 முதல் 25 சதவிகிதம் என இருக்கும். 

யூரோவின் உடைவினால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புக்கள் பல வழிகளில் மிகக் குறைந்த கவலையாகத்தான் இருக்கும். எந்த நவீன தனி நாணய ஒன்றியங்களும் ஒருவகை சர்வாதிகார அல்லது இராணுவ அரசாங்கம் அல்லது உள்நாட்டுப்போரை கொண்டுவராமல் முறிந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். என்று UBS எழுதியுள்ளது.

புதன்கிழமையன்று போலந்தின் நிதி மந்திரி ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் பேசினார். அவர் இரண்டு ஆண்டுகளுக்குள் செல்வம் படைத்த நாடுகளில் வேலையின்மை இருமடங்காகும் என்று எச்சரித்தார். 

இதன்பின் அவர் ஒரு பெரிய வங்கியின் தலைவராக இருக்கும் தன் நண்பருடன் கொண்ட உரையாடல் பற்றித் தெரிவித்தார்: நாங்கள் யூரோப் பகுதி நெருக்கடி பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் என்னிடம் கூறினார், 'இந்த அரசியல் அதிர்ச்சிகள், பொருளாதார அதிர்ச்சிகளுக்குப் பின், உண்மையில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாம் ஒரு போரைத் தவிர்க்கவியலாது எனத் தோன்றுகிறது.' சீமான்களே, சீமாட்டிகளே, ஒரு போர். நான் உண்மையிலேயே அமெரிக்காவில் என்னுடைய குழந்தைகள் குடியேறுவதற்கான விண்ணப்பத்தை  வாங்குவது பற்றி யோசிக்கிறேன். 

சமீபத்தில் ப்ளூம்பேர்க் நிதிய வல்லுனர் ஜோர்ஜ் மாக்னஸ், “கார்ல் மார்க்ஸுக்கு உலகப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற ஒரு வாய்ப்பு கொடுக்கவும்என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை வெளியிட்டது. 
 

அவர் கீழ்க்கண்ட சொற்களுடன் தொடங்குகிறார்: நிதிய அச்சங்கள், எதிர்ப்புக்கள் மற்றும் உலகைப் பாதித்துள்ள மற்ற தீமைகளைப் பற்றி விளங்கிக்கொள்ள திணறுகின்ற அரசியல்வாதிகள் நீண்ட காலத்திற்கு  முன்பு இறந்துவிட்ட பொருளாதார வல்லுனர் மார்க்சின் படைப்புக்களை அவர்கள் படிப்பது நன்மையைப் பயக்கும். முதலாளித்துவத்தின் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரக்கூடிய நெருக்கடியைப் பற்றி அவர்கள் விரைவில் உணர்ந்தால், அதில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு நல்ல பாதையை அமைக்க அவர்களால் முடியும். நிதிய நெருக்கடியினதும், அதன் பின்னரான பொருளாதாரச் சரிவில் மத்தியிலும் மார்க்சின் ஆன்மா கல்லறையில் இருந்து,  இருந்தும் வெளிப்பட்டுள்ளது. முதலாளித்துவம் பற்றிச் புத்திக்கூர்மையான மெய்யியலாளரின் பகுப்பாய்வு பல பலவீனங்களை கொண்டுள்ளது, ஆனால் இன்றைய பொருளாதாரம் அவர் முன்கூட்டியே கணித்திருந்த நிலைமைகள் பற்றி வியத்தகு ஒற்றுமைகளை கொண்டிருந்தது. 

இது போன்ற இன்னும் பல உதாரணங்களை, ஆளும் உயரடுக்கு தற்போதைய நெருக்கடி பற்றி தீவிரமாக இருப்பது பற்றி நான் மேற்கோளிட முடியும்.

நிதியச் சந்தைகளுக்கு அடிபணிந்து நிற்றல் 

ஜேர்மனியில் அரசியல் கட்சிகள் சமீபத்தில் கடன் நெருக்கடி புதிய மீட்புப் பொதிகள், யூரோப் பத்திரங்கள் மற்றும் ஒரு ஐரோப்பிய பொருளாதார அரசாங்கம் மூலம் விடைகாணுமா அல்லது அதிக கடன்பட்டுவிட்ட நாடுகள் திவாலாக அனுமதிக்கப்பட்டு, நிதிய ஒன்றியத்தில் இருந்து ஒதுக்கப்பட வேண்டுமா என வாதிட்டுக் கொண்டிருக்கின்றன. முதல் நிலைப்பாடு சமூக ஜனநாயகவாதிகள், பசுமைவாதிகள், இடது கட்சி மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) பெரும்பான்மை ஆகியவற்றால் விரும்பப்படுகிறது. இரண்டாம் நிலைப்பாட்டிற்கு சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்திற்குள் ஒரு சிறுபான்மை ஆகியவற்றின் ஆதரவு உள்ளது.  

ஆனால் இரு முகாம்களும் நெருக்கடியின் செலவுகளை தொழிலாள வர்க்க மக்கள் ஏற்க வேண்டும் என்பதில் உடன்பட்டுள்ளன. ஒரு ஐரோப்பிய தீர்வு தேவை என வாதிடுபவர்கள் எல்லா நிதிய உதவியும் கடன்பட்ட நாடுகளுக்கு அவை கடுமையான சிக்கன நடவடிக்கைகள் எடுத்தல் என்பதுடன் பிணைக்கப்பட வேண்டும், மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையான நிதியச் சர்வாதிகாரம் சுமத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். சமூக ஜனநாயகவாதிகளும் பசுமைவாதிகளும் இதைப் பொறுத்தவரை தங்கள்  பணிகளை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வங்கிகள் ஆணையிடும் வெட்டுக்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றன--கிரேக்கத்தில் பாப்பாண்ட்ரூவும் ஸ்பெயினில் சாபத்தேரோவும் இதைத்தான் செய்கின்றனர். இந்தப் பங்கு ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சியின் ஸ்ரைன்பரூக், பசுமைவாதிகளின் ரிட்டீன் ஆகியோரால் செய்யப்படும்; அதற்கு இடது கட்சியின் ஒஸ்கார் லாபொன்டைனின் ஆசி இருக்கும். 

கிரேக்கம் திவாலாவாதை அனுமதிக்கும் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களுக்கு இடையே உள்ள ஒரே வேறுபாடு இதை ஆதரிப்பவர்கள் ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டிற்கு எதிராக என்னும் ஒரு தேசிய போராட்டத்தில் வரும் சமூகநலச் செலவுக் குறைப்புக்களை செயல்படுத்துவர்; ஆனால் எதிர்ப்பாளர்கள் இன்னும் கட்டுப்பாட்டுடன் கூடிய வழிவகையை ஐரோப்பிய இயக்கத்தின் மூலம் நடத்த விரும்புவர். இரு வழியிலும் சமூக விளைவுகள் பேரழிவு தரக்கூடியதாக இருக்கும்.

கிரேக்கத்தில் இது ஏற்கனவே வந்துவிட்டதைக் காணமுடியும். ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்ட சிக்கன நடவடிக்கைகள் நாட்டை ஆழ்ந்த மந்தநிலைக்கு தள்ளிவிட்டன. நாடு இப்பொழுது ஒரு தீய வட்டத்தின் பிடியில் உள்ளது: சிக்கன நடவடிக்கைகள் மந்தநிலையை விரிவாக்குகின்றன, மந்தநிலை வருவாய்களை குறைக்கிறது, வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை அதிகரிக்கிறது, ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கோருகிறது, அதையொட்டி மந்த நிலையும் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையும் இன்னும் தீவிரமடைகின்றன. இதன் பின் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் வெட்டுக்களுக்கு அழைப்பு விடுகிறது, இவ்வகையில் இது முடிவில்லாமல் செல்கிறது. 

நெருக்கடிக்கு முன்பே குறைவான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்த கிரேக்கத்தின் சராசரி வாழ்க்கைத்தரம் இப்பொழுது கடும் சிக்கன நடவடிக்கைகளின் விளைவினால் மேலும் 40% சரியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்கட்டுமானம் சரிந்து கொண்டிருக்கிறது, வேலையின்மை பெரும் உயர்வை எட்டியுள்ளது. இது தவணை முறையில் இதயத்தாக்குதல் வருவதை ஒத்துள்ளது. 

அதே நேரத்தில் கிரேக்கம் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் போவது ஐரோப்பா முழுவதையும் பெரும் பள்ளத்தில் தள்ளிவிடும். 

இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கை என்னும் இந்த அபத்தமான கொள்கையை எந்த ஒரு அரசாங்கமும் நடைமுறைக் கட்சியும் எதிர்க்கவில்லை. ஒரு முழு மந்தநிலையை திசைதிருப்புவதற்கு, பெரும் அரசாங்க வேலைத்திட்டங்கள் தேவை, இதற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் தேவை, ஊகவணிக இலாபங்கள் மற்றும் உயர் வருமானங்கள் மீது வரிகள் தேவை அல்லது அவை பறிமுதல் செய்யப்படவேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் விவாதிக்கப்படுவதுகூட இல்லை. 

இடது எனக் கருதப்படுபவை, மற்றும் வலது என்று எல்லா நடைமுறைக் கட்சிகளும் நிதியச் சந்தைகள் மற்றும் அவற்றின் தீர்க்க முடியாத கோரிக்கைகளுக்கும் முன்பு அடிபணிந்து நிற்கின்றன. அவை அனைத்தும் ஒருமித்த குரலில் சிக்கனத்திற்கு மாற்றீடு ஏதும் இல்லை என அறிவிக்கின்றன. நிதியச் சந்தைகள் ஏதோ இயற்கையின் சக்தி போல், காலநிலை போல் செயல்படுவதாக இவை கருதுகின்றன; அதற்கு முன் தாங்கள் சக்தி ஏதும் கொண்டிருக்கவில்லை என நினைக்கின்றன. 

ஒவ்வொரு நாளும் நிதியச் சந்தைகள் பதட்டம் அடைகின்றன”, அவை எப்படி ஏதேனும் ஒன்றைக் கோருகின்றன என்பது பற்றிப் படிக்கிறீர்கள். ஒரு பழங்குடி மக்களின் கடவுள் ஒவ்வொரு நாளும் நரபலி கேட்பது போல், இந்த நிதியச் சந்தைகளும் ஊதியக் குறைப்புக்கள், பணிநீக்கங்கள், தனியார்மயமாக்கல் என்று அவற்றின் பெரும் பேராசையைத் திருப்தி செய்யும் இரையைப் பெறுகின்றன.

நெருக்கடிக்குக் காரணம் 

ஆனால் நிதியச் சந்தைகள் ஒன்றும் இயற்கை சக்தி அல்ல. அவற்றின்பின் உறுதியான சமூக நலன்கள் துணை நிற்கிறது. நிதிய நெருக்கடி மற்றும் ஐரோப்பியக் கடன் நெருக்கடி ஆகியவை ஆகாயத்தில் இருந்து ஒன்றும் குதித்து வந்துவிடவில்லை. அவை 1980களின் ஆரம்ப பகுதிகளில்தான் தொடங்கிய வருமானங்கள், சொத்துக்கள் மறுபங்கீட்டு முறையின் விளைவுகள்தான் பெரும்பாலும். 

அப்பொழுது முதல் உயர் வருமானங்கள், செல்வம், சொத்துக்களை அடைதல், இலாபங்கள் ஆகியவற்றின் மீதான வரிகள் பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டன; அதே நேரத்தில் வெகுஜன மக்கள் தொகுப்பின் மீது வரிகளின் பெரும் சுமை விழுந்துவிட்டது; உதாரணமாக மதிப்புக் கூட்டு வரிகள் அதிகப்படுத்தப்பட்டுவிட்டன. அதே நேரத்தில் ஊதியங்கள் தேக்கம் அடைந்துவிட்டன, உற்பத்தி சரிந்துவிட்டது, பொதுநலன்கள் குறைக்கப்பட்டுவிட்டன. சமூகச் செல்வத்தின் இன்னும் கூடுதலான பங்கு வங்கிகளுக்கும் செல்வந்தர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் சென்றுவிட்டன. 

அமெரிக்காவில் மொத்த பொருளாதார உற்பத்தியுடன் ஒப்பிடும்போது பெருநிறுவன இலாபங்கள் ஆறு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துவிட்டன. இதற்கு மாறாக ஊதியங்கள் தேக்கம் அடைந்துவிட்டன. வேலையின்மை 9% க்கும் மேலாக உள்ளது; மக்களில் 15% மிக வறிய நிலையில் வாழ்கின்றனர். சமூக சமத்துவமின்மை என்பது 1920 களுக்குப் பின் மிக உயர்ந்த அளவுகளை அடைந்துள்ளது.

தங்கள் இலாபங்களை அதிகப்படுத்துவதற்காக, வங்கிகள், தனியார் முதலீட்டு நிதிய நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் பெருகிய முறையில் குற்றம் சார்ந்த வழிவகைகளைக் கடைப்பிடிக்கின்றன; இது பிணையற்ற அடைமானக் கடன்களின்  குமிழின் வெடிப்பில் உச்சக்கட்டத்தை அடைந்தது; அது செப்டம்பர் 2008 நிதியச் சரிவைத் தூண்டியது. 

முதலில் வங்கிகள் பொதுக் கருவூலங்களில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டன”. இது பெரும் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைகளை ஏற்படுத்தியது. இப்பொழுது வங்கிகள் இந்த இடைவெளிகள் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தவதின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. சமூக எதிர்ப்புரட்சிக்கு ஒரு கருவி போல் நெருக்கடி பயன்படுகிறது. கடந்த ஆறு தசாப்தங்களில் தொழிலாள இயக்கத்தால் போராடிப் பெறப்பெற்ற அனைத்து சமூக மற்றும் ஜனநாயக வெற்றிகள் அனைத்தும் இழக்கப்படுகின்றன.

பகுத்தறிவுப்படி நடக்க வேண்டும், அதன் செல்வத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்னும் ஆளும் வர்க்கத்திற்கு வைக்கப்படும் முறையீடுகள் பயனற்றவை. இன்றைய நிதியப் பிரபுத்துவம் 1789 புரட்சிக்கு முன் பிரெஞ்சு பிரபுத்துவம் அதன் செல்வத்தில் ஒரு வெள்ளி நாணயத்தைக் கூட விட்டுக் கொடுக்கத்தயாராக இல்லாத நிலையைப் போல்தான் உள்ளது. அவர்களுடைய பேராசை பிடித்த வர்க்க நலன்கள் நெருக்கடியை சமாதான முறையில் தீர்க்கும் முயற்சியை அழிவிற்கு உட்படுத்துகின்றன. நிதியப் பிரபுத்துவத்தின் அதிகாரத்தை முறிக்காமல், வங்கிகள் மற்றும் முக்கிய தொழில்துறை நிறுவனங்களை எடுத்துக் கொண்டு அவற்றை ஜனயாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவராவிட்டால், ஒரு சமூகப் பிரச்சினைகூடத் தீர்க்கப்பட முடியாது. 

ஆளும் வர்க்கம் வன்முறை நிறைந்த வர்க்கப் போராட்டத்திற்கு முறையாகத் தயாரிப்புக்களை நடத்துகிறது. ஐரோப்பாவில் எல்லா இடங்களிலும் சர்வாதிகார ஆட்சிகள் எழுச்சி பெற்றுள்ளன. அரசாங்கக் கருவிகள் வலுப்படுத்தப்படுகின்றன; ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படுகின்றன. இது மிகவும் தெளிவாக பிரிட்டனில் காண முடியும். அங்கு எழுச்சி செய்யும் இளவயதினரை அரசாங்கம் மிகச் சிறு குற்றங்களுக்குக்கூட விரைவான நீதிமன்றச் செயல்கள் மூலம் கடுமையான சிறைத் தண்டனைகளை அளிக்கிறது; இதே நேரத்தில் சந்தை ஊகவணிகர்கள், நாட்டின் பொருளாதாரங்களை அழிவின் விளிம்பிற்குக் கொண்டு வந்தவர்கள் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்படுகின்றனர்.

லிபியப் போர் 

இந்தப் பின்னணியில்தான் லிபியாவிற்கு எதிரான போர் காணப்படவேண்டும். ஒரு ஆக்கிரமிக்கும் காலனித்துவ போருக்கு அபூர்வமாகத்தான் இவ்வாறான இழிந்த வாதங்களினால் நியாயப்படுத்தும் முயற்சி நடந்துள்ளது. 

நேட்டோவும் மற்ற எதிர்க்கும் சக்திகளும் பெங்காசியில் குடிமக்கள் உயிர்களை பாதுகாப்பற்கு என்ற பெயரில், கடாபி ஆட்சியை அகற்ற முற்பட்டுள்ளன; ஏனெனில் கடாபி ஆட்சி சித்திரவதை வழிகளைக் கடைப்பிடித்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்பொழுது ஆயிரக்கணக்கான குடிமக்கள் நேட்டோ குண்டுத் தாக்குதலாலும் எழுச்சியாளர்கள்எனக் கூறப்படுபவர்களாலும்  கொலை செய்யப்பட்டுள்ளனர். சிர்ட்டே மற்றும் பானி வலிட் ஆகிய சிறு நகரங்களில் தொலைக்காட்சிக் காமிராக்கள் முன்னாலேயே முற்றுகை இடுபவர்கள் பெங்காசியில் கடாபி செய்தாதாகக் கூறப்பட்ட செயல்களைச் செய்கின்றனர். அதாவது நகரத்தின் மீது பொறுப்பற்ற முறையில் குண்டுவீச்சு நடத்துதல், பொதுமக்களை படுகொலை செய்தல் என. 

அரசியல் கைதிகள் சித்திரவதையைப் பொறுத்தவரை, திரிப்போலியில் கடாபியின் இரகசியப் படை, அமெரிக்க CIA, பிரிட்டிஷ் M16 ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒத்துழைத்திருந்ததற்கான ஆவணச்சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வாஷிங்டனும் லண்டனும் கடாபியினால் பாதிக்கப்பட்டவர்களை ஜெட் விமானத்தில் கடத்தி அவர்கள் சித்திரவதை, விசாரணைக்கு உட்படுத்தப்படுதல் ஆகியவற்றில் பங்கு கொண்டன. 

தேசிய இடைக்காலக் குழு (NTC) என நேட்டோ அதிகாரத்திற்குள் கொண்டுவந்திருக்கும் அமைப்பு எந்தவித ஜனநாயக சட்டபூர்வத் தன்மையையும் கொண்டிருக்கவில்லை. இதில் கடாபியின் முன்னாள் மந்திரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், மேற்கத்தைய முகவர்கள் என்ற கலவைதான் உள்ளது. முந்தைய அரசாங்கத்தில் இருந்து இது முக்கியமாக வேறுபட்டிருப்பது இது இன்னும் அதிகமாக மேற்கத்தைய சக்திகளுக்கு வளைந்து கொடுக்கும்  கருவியாக இருப்பதுதான். 

பிந்தையவர்கள் இப்பொழுது திரிப்போலியின் வரிசையில் நின்று போர்க் கொள்ளையில் தங்கள் பங்கிற்காக நிற்கின்றனர். லிபியாவிற்கு பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசியும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி காமெரோனும் கடந்த வாரம் வருகை புரிந்ததைத் தொடர்ந்து மறுநாள் துருக்கிய பிரதம மந்திரி எர்டோகான் வருகை இருந்தது; இது ஏகாதிபத்திய திமிர்த்தனத்தில் விஞ்ச முடியாத ஒரு செயல் ஆகும். 

லிபியப் போர் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் வரவிருக்கும் காலனித்துவ போர்களுக்கு ஒரு முன்னோடிதான். நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், பெரும் சக்திகள் தங்கள் பழைய காலனித்துவ முறைக்கு மீண்டும் திரும்புகின்றன. லிபியாவில் இராணுவத்தினால் சுமத்தப்படும் ஆட்சி மாற்றம் என்பது சீனாவிற்கும் ஆபிரிக்காவில் இருந்து அகல வேண்டும் என்னும் எச்சரிக்கையைக் கொடுக்கிறது. 

ஈராக் போரில் இருந்து லிபியப் போரை  வித்தியாசப்படுத்தி காட்டுவது, அமைதிவாத இயக்கம் முற்றிலும் சரிந்துள்ளது என்பதுதான். ஈராக் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்த குட்டி முதலாளித்துவக் குழுக்கள் இப்பொழுது ஆர்வத்துடன் லிபியா மீது நடத்தப்படும் போருக்கு ஆதரவைக் கொடுக்கின்றன. 

முன்னாள் தாராளவாதிகள் மற்றும் சமாதானவாதிகள் ஏகாதிபத்திய போர் முகாமிற்குள் மாறிவிட்டது மிகப் பரந்த அளவிலான தன்மையை உடையது; இது ஒரு தனிநிகழ்வு எனக் கருதப்பட முடியாததாகும். பெரும் சமூகப் போராட்டங்கள் பல நேரமும் இத்தகைய மாற்றங்கள் மூலம்தான் தம்மை அறிவித்துக் கொள்கின்றன. அரசியல் கட்சிகள் வருங்காலப் போராட்டங்களில் தாங்கள் கொள்ள இருக்கும் பங்கிற்குத் தயாரிப்புக்களை நடத்துகின்றன. 

முதல் உலகப் போருக்கு சற்றுமுன் இதேபோன்ற போக்கு காணப்பட்டது. ஏகாதிபத்தியத்தின் தழுவல் குறித்து லெனின் எழுதினார்: “காலத்தின் அடையாளம் தனது வருங்காலம் பற்றிப் பொதுவானஆர்வம், ஏகாதிபத்தியத்தை ஆர்வத்துடன் பாதுகாத்தல் மற்றும் அதன் உண்மைத் தன்மையை எப்படியும் அழகுபடுத்துதல் என்று உள்ளது”. இது இன்றைய நிலைமைக்கும் உறுதியாகப் பொருந்தும். 

தங்கள் முந்தைய அமைதிவாத, தாராளவாத, “இடதுகருத்துக்களுக்கு மத்தியதர வர்க்கங்களில் வசதிபடைத்த பிரிவுகளின் பிரதிநிதிகள்தான் விடை கொடுத்துள்ளனர். இந்த அடுக்குகள் பசுமைவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் குட்டிமுதலாளித்துவ இடதுஎன்று பிரான்சிலுள்ள புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவற்றில் நிறைந்து உள்ளனர். அவர்கள் சமூகத்திலுள்ள தீவிர வர்க்க துருவப்படுத்தல்களுக்கு பிரதிபலிக்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் இலக்கு 

வரவிருக்கும் சமூக எழுச்சிகள், வர்க்கப் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பது எமது பணி ஆகும்.  

சமீப மாதங்களில் துனிசியா மற்றும் எகிப்து, மாறுபட்ட வடிவங்களில் அமெரிக்காவில் விஸ்கோன்சினில், ஸ்பெயின், கிரேக்கம், இஸ்ரேலில் நாம் கண்டிருப்பது ஒரு ஆரம்பம்தான். இதேபோன்ற சமூக வெடிப்புக்களை சீனா, ஜேர்மனி உட்பட மற்ற நாடுகளிலும் காண உள்ளோம். 

துனிசியா மற்றும் எகிப்தில் பெரும் கலகங்களுக்கு வழிவகுத்த சமூக அழுத்தங்கள் நீண்டகாலமாக தயாரிப்பில் உள்ளன ஆயினும்கூட எழுச்சிகள் வியப்பைக் கொடுக்கும் வகையில் வெளிப்பட்டன. ஓராண்டிற்கு முன் ஹொஸ்னி முபாரக் மக்கள் எழுச்சியினால் 30 ஆண்டுகாலம் பதவியில் இருந்த பின் அகற்றப்படுவார் என்று யார் நம்பியிருக்க முடியும்? நூறாயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேலில் நெத்தன்யாகுவிற்கு எதிராகத் தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்  என யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? 

இந்த எழுச்சிகளில் தொழிலாள வர்க்கமே சமூக உந்து சக்தியாக உள்ளது. ஆனால் இப்பங்கை அரசியல்ரீதியாக செய்ய அது இன்னும் தயாராக இல்லை. இதையொட்டி முதலாளித்துவம் மற்றும் குட்டி முதலாளித்துவ சக்திகள் இயக்கத்தை ஆதிக்கத்திற்குள் வைத்துள்ளன. இப்பொழுது அந்த பிற்போக்குச் சக்திகள் மேலோங்கி நிற்கும் ஆபத்து வந்துள்ளது. 

பேர்லின் தேர்தலில் நாம் தலையிட்டது வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களில் ஒரு சர்வதேச தொழிலாள வர்க்கத் தயாரிப்பிற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும். நாம் ஒரு அடிப்படைக் கொள்கையில் உறுதியாக உள்ளோம்: எது உள்ளதோ அதைக் கூறுவோம், வாக்குகள் அதிகம் பெறுவதற்காக எதையும் கூறப்போவதில்லை. வரவிருக்கும் காலத்தில், தங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் பல தொழிலாளர்களும் இளைஞர்களும் நம் அரசியல் பகுப்பாய்வும் நம் கணிப்புக்களும் மிகச் சரியானவை என்ற முடிவிற்கு வருவர்