World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel’s largest ever protests oppose inequality

சமத்துவமற்ற நிலைமைக்கு எதிராக இஸ்ரேலில் இதுவரையும் இல்லாதவகையில் மிகப் பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

By Jean Shaoul
5 September 2011

Back to screen version

சனிக்கிழமை மாலை இஸ்ரேல் நகரங்களில் கிட்டத்தட்ட 430,000 மக்கள் தெருக்களுக்கு வந்து தொழிலாளர்கள் வருமானத்திற்குள் வாழமுடியாத அளவிற்குப் பெரிதும் உயரும் வீட்டு வாடகைகள், வாழ்க்கை தேவைச் செலவுகள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை நடத்தினர்.

இஸ்ரேலின் வரலாற்றிலேயே இந்த ஆர்ப்பாட்ட அணிவகுப்புக்கள் மிகப் பெரியவை ஆகும்; ஆகஸ்ட் 6ம் தேதி ஆர்ப்பாட்ட அணிவகுப்பில் 250,000 பேர் கலந்து கொண்டதைவிட மிகப் பெரியது ஆகும். செப்டம்பர் 1982ல் பெய்ரூட்டிருந்த அகதி முகாம்களான சப்ரா மற்றும் ஷாடில்லா படுகொலைகளில் இஸ்ரேலின் பங்கை எதிர்த்துத் தெருக்களுக்கு வந்த 400,000 பேர் கொண்ட அணிவகுப்பையும் விட மிகப் பெரியது ஆகும்.

இஸ்ரேலில் 7.75  மில்லியன் மக்களில் 5.5 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர். இது பிரிட்டனில் 3 மில்லியன் மக்கள் அல்லது அமெரிக்காவில் 18 மில்லியன் மக்கள் பங்கு பெற்றதற்குச் சமமாகும்.

உயரும் வீட்டு விலைகள், வீட்டு வாடகைகள் மற்றும் அரசாங்கத்தின் தனியார்மயமாக்கும் திட்டங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர். பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் மீது கூடுதலான வரிகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் VAT மற்றும் பெட்ரோலிய எரிபொருள் மீது வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் முறையீடு செய்துள்ளனர்.

முக்கிய ஆர்ப்பாட்டம் டெல் அவிவில் நடைபெற்றது; இங்கு 300,000 இளைஞர்கள், ஓய்வு பெற்ற தம்பதிகள், குடும்பங்கள் என்று அஷ்கெனஜி மற்றும் மிஸ்ரஹி யூதப் பிரிவினர் ஆகியோர்கள்  “அவர்கள் [அரசாங்கம்] எண்ணிக்கையை மட்டுமே புரிந்துகொள்கிகின்றனர் என்று கோஷமிட்டு சமூக நீதி வேண்டும் எனக் கோரினர்.

ஆர்ப்பாட்ட சூழல் முழுவதும் பெரும் திருவிழாக் கோலமாக இருந்தது; இசை நிகழ்ச்சிகளும் மாபெரும் தொலைக்காட்சித் திரைகளும் நாடு முழுவதும் எதிர்ப்புக்களைக் காட்டின.

கிட்டத்தட்ட 50,000 பேர் பாரிஸ் சதுக்கம் மற்றும் அருகில் இருந்த தெருக்களில் குழுமியதை ஜேருசலம் கண்ணுற்றது. இது இக்கோடை காலத்தில் நடந்த அணிவகுப்புக்களில் வந்ததைப் போல் இருமடங்கு ஆகும்.

இதைத்தவிர 40,000 பேர் இஸ்ரேலின் மூன்றாவது மிகப் பெரிய நகரமான ஹைபாவில் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர்; இந்நகரத்தில் யூத, அரேபிய மக்கள் கலந்து வாழ்கின்றனர்; இந்த எதிர்ப்பு இஸ்ரேல் அதன் அரபுக் குடிமக்கள் மீது பாகுபாடு காட்டுவதை எதிர்த்து நடத்தப்பட்டது. வாடி நிஸ்நஸ் கூடார நகர எதிர்ப்புக் கூடாரத்தின் பிரதிநிதியான ஷாஹின் நாசர், “இன்று நாம் விளையாட்டு விதிகளை மாற்றுகிறோம். ஹம்மஸ் மற்றும் பவா பீன்ஸ் என்ற தளத்தைக் கொண்ட இணைந்த வாழ்வு இனிக்கிடையாது. நடப்பது என்ன என்றால் உண்மையான இணைந்த வாழ்வுதான்; அரேபியர்களும் யூதர்களும் ஒன்றாக, தோளோடு தோள் சேர்ந்து, சமூக நீதி, அமைதி ஆகியவற்றைக் கோருகின்றனர். பட்ட துன்பங்கள் போதும். [பிரதம மந்திரி] பிபியே வீட்டுக்குச் செல்க! [நிதி மந்திரி] ஸ்டீனிட்சே, செல்க, மீண்டும் வரவேண்டாம்; [வீட்டு மந்திரி] அடியாசே, வணக்கம், நீங்கள் ஒழிவது பெரும் தீமை அகல்வதற்கு ஒப்பானது.”

வறிய நிலையிலுள்ளவளர்ச்சிபெறும் சிறு நகரங்கள் பெரிய ஆர்ப்பாட்டங்களைக் கண்டன; கிட்டத்தட்ட 12,000 பேர் அபுலா அணிவகுப்புகளிலும், 7,000 பேர் ரொஷ் பின, கிர்யட் ஷெமோனாவிலும் பங்கு பெற்றனர். தெற்கே, மொத்தம் 1,000 பேருக்கும் மேலானவர்கள் மிட்ஸ்பே ரமோன் மற்றும் அராத்தில் கலந்து கொண்டனர்; இவை நெகெவ் பாலைவனத்தில் உள்ள சிறுநகரங்கள் ஆகும்; அமைப்பாளர்கள் 100 பேரைத்தான் எதிர்பார்த்திருந்தனர்.

அமெரிக்காவில் வசிக்கும் முன்னூறு இஸ்ரேலியர்களும் நியூ யோர்க் நகரத்தில் ஆர்ப்பரித்து, “நியூ யோர்க், டெல் அவிவ்ஒரே புரட்சிதான்

எதிர்கட்சியான கடிமா கட்சியின் தலைவரான Tzipi Livni தன்னுடைய ஆதரவாளர்களை ஆர்ப்பாட்டத்தில் சேருமாறு அழைப்பு விடுத்தார்; தன்னை ஒரு சமூக ஜனநாயகக் கட்சி என அழைத்துக் கொள்ளும் மெரெட்ஸ் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பும் பின்பும் கூட்டங்களை நடத்தி பொதுநல அரசாங்க மீட்பு தேவை எனக் கோரியது. இந்த அரசியல் சக்திகளின் நோக்கம் சமத்துவமின்மைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை இருக்கும் அரசியல் முறைக்குள் கட்டுப்படுத்தி வைத்தல் என்பது ஆகும்.

ஒரு பாலஸ்தீனிய இஸ்ரேலியச் சட்டமன்ற உறுப்பினரும் UAL-Ta’al  கட்சியின் உறுப்பினருமான அஹ்மத் டிபி சமூக நீதி, மற்றும் பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்கும் இடையே உள்ள பொருளாதார இடைவெளி அகற்றப்பட வேண்டும் என அழைப்பு விடுத்த எதிர்ப்புக்களில் கலந்து கொண்டார்.

துவக்கத்தில் அமைப்பாளர்கள்மில்லியன் பேர் அணிவகுப்பு என்று அழைப்பு விடுத்திருந்தாலும்கிட்டத்தட்ட மொத்த மக்களில் எட்டில் ஒரு பகுதிவந்திருந்த எண்ணிக்கையான 430,000 என்பது தொழிலாளர் வர்க்கத்தினர் அவர்களின் குடும்பங்களை எதிர்கொண்டிருக்கும் பெரும் சமூக நெருக்கடிக்கு நிரூபணம் ஆகும். இந்த எண்ணிக்கை அதிகாரிகள் உறுதியாக கூடார நகர எதிர்ப்புக்களை மூடி அணிவகுப்பின் அளவைக் குறைக்க வேண்டும் என்று கொண்டிருக்கும் முயற்சிகளை மீறி வந்தது என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

Home Front Command வறிய தெற்கு சிறு நகரங்கள் பெரு நகரங்களான Be’er Sheva, Ashdod, Ashkelon, Sederot ஆகிவற்றில் ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்து அறிவிப்புக் கொடுத்திருந்தனர்; காசாப் பகுதியில் இருந்து ராக்கெட் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

புதன்கிழமையன்று, இஸ்ரேலிய இரயில்வே ஜேருசலம், டெல் அவிவ் மற்றும் பீர்ஷிபா, மற்றும் டெல்அவிவ் ரயில் பாதைகள் பழுது நீக்குவதற்காக சனி இரவு மூடப்போவதாக அறிவித்தது; ஆனால் பல வாரங்களாகவே அது ஆர்ப்பாட்டத்தைப் பற்றி அறிந்திருந்தது. வெள்ளி பிற்பகல் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றுதான் போக்குவரத்து அமைச்சரகத்தை கூடுதல் எண்ணிக்கையில் இரயில்களை விடுமாறும், பஸ் போக்குவரத்துக்களுக்கு ஏற்பாடும் செய்து டெல் அவிவிற்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறக் கட்டாயப்படுத்த வழிவகுத்தது.

ஜேருசலத்தில் பொலிசார் பெருகிய முறையில் வன்முறை அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். செவ்வாயன்று பொலிசார் நகரத்தில் அதிக வீட்டு வாடகைகளை எதிர்த்து முகாம்களை முதலில் நிறுவியவர்களில் இருவர் மீது குற்றம் சாட்டியது. ஓர் ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு இஸ்ரேலின் பாராளுமன்றம் இருக்கும் நெசல் வளாகத்தில் அத்துமீறி நுழைய முற்பட்டனர், டெல் அவிவ் ஜேருசலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்தைத் தடைக்கு உட்படுத்தும் வகையில் டயர்களை எரித்தனர்  என்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது வைக்கப்பட்டது. வெள்ளியன்று பொலிசார் பிரதம மந்திரியின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு வெளியே சிறு ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு இரு எதிர்ப்பாளர்களைக் கைது செய்தனர்; இவர்கள் போக்குவரத்திற்குத் தடை செய்கின்றனர் என்று கூறப்பட்டது.

எதிர்ப்புக்களை எதிர்நோக்கும் முக்கிய ஆபத்து சுயாதீன அரசியல் தலைமை இல்லாததுதான். இந்த வார வெகுஜன அணிவகுப்புக்கள் இயக்கத்தின்உச்சக்கட்டம் என்று கூறப்பட்டன; வேறு எதுவும் திட்டமிடப்படவில்லை. பல கூடார நகரங்களும் காலியாகிக் கொண்டிருக்கின்றன, விடுமுறைக்காலம் முடிந்தவுடன் மாணவர்களும் தொழிலாளர்களும் பள்ளிக்கும் பணிக்கும் திரும்புவதால்.

மூன்று வாரங்கள் முன்பு அமைப்பாளர்கள் இஸ்ரேலின் சிறு நகரங்களில் எதிர்ப்புக் குவிப்பைக் காட்ட முடிவெடுத்தனர்; இது எதிர்ப்புக்கள் கட்டவிழ்த்த பெரும் சமூக சக்திகளை ஒட்டி ஒரு பின்வாங்குதல் ஆகும். அரசாங்கத்துடன் மோதலை வளர்ப்பது குறித்து அவர்களுடைய பெருகிய கவலையை அது பிரதிபலித்தது.

எதிர்ப்புத் தலைவர்களில் ஒருவரும், தேசிய மாணவச் சங்கத்தின் தலைவருமான இட்ஜிக் ஷ்முலி ஆர்ப்பாட்டங்களை மூட முயலும் நேடன்யாகு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தத் தன் விருப்பத்தை அடையாளம் காட்டியுள்ளார். மொத்த வரவு-செலவுத் திட்டத்தில் நேடன்யாகு நியமித்த குழு ஒன்று சில பூச்சுவகைச் சீர்திருத்தங்களை முன்வைக்கிறது; ஆனால் அரசாங்கமோ  தொழிலாளர்களுக்கு உண்மையான சலுகைகள் எதையும் அளிக்கப் போவதில்லை என்ற உறுதியைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக் பாதுகாப்பு வரவு-செலவுத்திட்டத்தில் குறைப்புக்கள் தேவை என்பதை நிராகரித்துவிட்டார்

வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல் மற்றும் அரசாங்கத்தின் அரபு எதிர்ப்புக் கொள்கைகள் இவற்றிற்கு இடையே தொடர்பு ஏதும் இல்லை என்று எதிர்ப்புக்களை ஒழுங்கமைப்பவர்கள் கூறுகின்றனர்; இதையொட்டி பாலஸ்தீனியர்களுடன் ஒன்றுபட்ட இயக்கம் வளர்வது தடுக்க முயலப்படுகிறது. அவர்கள் எதிர்ப்பு இயக்கத்தைஅரசியல் தன்மை இல்லாத ஒன்றாகத் தக்கவைக்க முற்படுவதாகவும், அவர்களின் கோரிக்கைகள் சமூக நீதி”, “பொதுநல அரசு ஆகியவற்றிற்காகத்தான் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உண்மையில், அமைப்பாளர்கள் உறுதியான முன்னோக்கைக் கொண்டுள்ளனர்; அதாவது, ஆர்ப்பாட்டங்கள் நேடன்யாகு அரசாங்கத்திற்குச் சவால் விடுவது போல் வரக்கூடாது என. அதே நேரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கடிமா, உத்தியோகப்பூர்வ எதிக்கட்சியில் திசைதிருப்பவும் முற்படுகின்றனர். நேடன்யாகுவின் கூட்டணி அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தை அவர்கள் எதிர்க்கின்றனர்; அதுவோ இஸ்ரேலிய வரலாற்றிலேயே மிகத் தீவிர வலதுசாரி அரசாங்கம் ஆகும்.

 

எதிர்ப்பு அமைப்பாளர்களில் ஒருவரான Daphne Leef, ஒரு பேட்டியில் Ha’aretz இடம், முதல் ஆர்ப்பாட்ட அணிவகுப்பிலேயே நான் கூறினேன், ‘நிலைமையைச் சீராக்குக, இன்னமும் கூட நிலைமையைச் சீராக்க முடியும். நிலைமையை நீங்கள் சீராக்கவில்லை என்றால், நீங்கள் வேலையில் இருந்து அகற்றப்பட வேண்டும் அவர் சீராக்க முடியும் என நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு அவர் முற்றிலும் எதிர்ப்புறம் திரும்பவேண்டும். அவரோ ஒரு முதலாளித்துவச் சிந்தனைப் போக்கைக் கொண்டுள்ளார்; அப்போக்கு செல்வந்தர்களுக்கு முதலில் பணத்தைக் கொடுத்து பின் [அது] சிறிது சிறிதாக கீழே செல்ல அனுமதிக்கிறது. அது ஒன்றும் எதிர்ப்பு இயக்கத்தின் சொல்லாட்சி அல்ல.”

இத்தகைய கருத்துக்கள் எதிர்ப்பாளர்களுக்கும் முழு இஸ்ரேலியத் தொழிலாளர் வர்க்கத்திற்கும்  அரசியல் முட்டுச்சந்தைத்தான் பிரதிபலிக்கிறது. அவர்களுடைய கோரிக்கைகள் நேடன்யாகு அரசாங்கத்தை வீழ்த்தி சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காகப் போராடுவதின் மூலம்தான் தீர்க்கப்பட முடியும்.