World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

What do the repressive measures imposed in the UK portend?

இங்கிலாந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் என்ன ஒடுக்குமுறை முறைமைகள் திணிக்கப்பட்டுள்ளன?

Robert Stevens
6 September 2011

Back to screen version

பிரதான பிரிட்டிஷ் நகரங்களில் கலகங்கள் வெடித்ததிலிருந்து, ஒரு மாதத்திற்குள்ளாகவே முன்னொருபோதும் இல்லாதளவிற்கு ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கலகங்கள், ஆரம்பத்தில் ஆகஸ்ட் 4இல், வடக்கு இலண்டனில் உள்ள டோட்டென்ஹாமில், நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான 29 வயது நிரம்பிய மார்க் டக்கனை பொலிஸ் படுகொலை செய்ததால் தூண்டிவிடப்பட்ட சமூக கோபத்தின் வெடிப்பாக இருந்தன.

அப்போதிருந்து, மிரட்சியூட்டும் பத்திரிக்கை செய்திகளும், இரத்ததாகத்துடன் பழிக்குபழி வாங்க அழைப்புவிடுப்பதும் அன்றாட வழக்கங்களாகி உள்ளன. சட்டப்புத்தகத்தை மூடி வைக்குமாறு அரசாங்கம் நீதிமன்றங்களுக்கு அனுப்பிய கட்டளைகளோடு, மரண தண்டனை விதிப்பதற்கான முந்தைய அனைத்து விதிமுறைகளும் கைவிடப்பட்டுள்ளன. இலண்டனிலுள்ள பெருநகர பொலிஸின் அனுமதியோடு அனுப்பப்பட்ட ஓர் ஆவணம், 'கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டாம், மாறாக சிறிய குற்றங்களாக இருப்பினும் கூட, அவர்களைக் காவலில் வைத்திருக்கவும்," என்ற குறிப்புகளை விசாரணை அதிகாரிகளுக்கு அனுப்பியது.

ஏற்கனவே 3,000த்திற்கும் மேற்பட்டவர்கள் இலண்டன், பெர்மின்ஹாம், மான்செஸ்டர் மற்றும் ஏனைய நகரங்களிலும், சிற்றூர்களிலும் பாரிய பொலிஸ் வலையில், அதுவும் அற்பத்தனமான குற்றங்களுக்காக, கைது செய்யப்பட்டுள்ளனர். இலண்டனில், 2000த்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான விடலைப்பருவத்தினர் உட்பட, 1,300க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு ஆண்டுக்கணக்கில் சிறையிலிருக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

11 வயது இளங்குழந்தைகள் நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பெயரை வெளியிட விரும்பாத அவர்களின் உரிமையும் கூட பறிக்கப்பட்டுள்ளது

பொலிஸ் பாரிய சோதனைகளை நடத்துவதால் ஒட்டுமொத்த மாவட்டங்களும் அடைக்கப்பட்டுள்ளது. சுமார் 30,000 மக்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக பெருநகர பொலிஸ் கூறியுள்ளது. இதோடு மட்டுமின்றி, சிறைச்சாலைகள் தற்போது முழுவதும் நிரம்பிவிட்டிருப்பதால், அவற்றை பரந்தளவில் விரிவாக்கும் திட்டங்களும் உள்ளன

உளவுத்துறை MI5இன் சேவைகளும், அரசாங்கத்தின் உளவுபார்க்கும் தலைமையகமான GCHQவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சமூக வலையமைப்பு வலைத்தளங்களுக்குள் மற்றும் பிளாக்பெர்ரி குறுந்தகவல் சேவைகளுக்குள் புகுந்து பார்க்கவும் பொலிஸ் இறக்கிவிடப்பட்டுள்ளது. சமூக வலைத் தளங்களை பிரிட்டனில் பயன்படுத்துவதைத் தடுக்க அரசாங்கத்திற்கும், சமூக வலையமைப்பு சேவை வழங்குனர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. கைது செய்யப்பட்ட பலருக்கு, அவர்களுக்கான பிணையில் ஒரு நிபந்தனையாக, சமூக வலையமைப்பு தளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற குறிப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன.

குடும்பத்தாருக்கும் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரோடு தொடர்புபட்டவர்களுக்கும் சேர்ந்து தண்டனை வழங்கும் கொள்கை சட்டமாக்கப்பட்டுள்ளது: இதன்படி, கலகத்தில் ஈடுபட்டமைக்காக ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டால் அவரின் உறவினர்களின் குடும்பங்களுக்கும் சமூக வீட்டுவசதி சேவைகள் மற்றும் பொது சேவைகளுக்கான உரிமை மறுக்கப்படுகிறது.

இந்த அரசு ஒடுக்குமுறையின் மிக கொடூரமான வெளிப்பாடு, பொலிஸால் கொல்லப்படுவோரின் உயர்ந்துவரும் எண்ணிக்கையிலும் வெளிப்படுகிறது. ஆகஸ்ட் 16இல் இருந்து வெறும் ஒரே வார இடைவெளியில், டேசர் ஆயுதங்கள் மற்றும் மிளகுப்பொடி தூவும் கருவியைப் பயன்படுத்தியதன் விளைவாக, தேசியளவில் மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது சட்டவழிமுறையில் உள்ளபடி, இதுபோன்ற படுகொலைகளுக்கு விசாரணைவழக்குகளிலிருந்து விலக்கீட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது.  

ஒருசில கலகங்களுக்காக அப்பால் மேற்தளத்தில் இந்தளவிற்கு அதிகளவிலான மற்றும் அத்துமீறிய விடையிறுப்பு காட்டப்படுவதை ஒருவர் எப்படி கணக்கில் எடுக்கமுடியும்?

பிரதான அரசியல் கட்சிகள், சட்ட அமைப்புமுறை, பொலிஸ் மற்றும் ஊடகங்கள் அனைத்தும், இத்தகைய சம்பவங்களுக்கு எந்த பரந்த சமூக காரணங்களும் இல்லையென்றும், "நீதிக்கு முன்னால் கொண்டு வரப்பட்டவர்கள்" முற்றிலும் குற்றவியல் அடிப்படையில் கையாளப்பட வேண்டுமென்றும் பிடிவாதமாக உள்ளன. கலகங்களுக்கு சில பரந்த, அடிப்படை காரணங்களும் இருக்கக்கூடுமென கூறத் துணிந்த பிபிசி மீது, பிரதம மந்திரி டேவிட் கேமரூன் ஒரு தாக்குதலைத் தொடுத்தார். கேமரூன் கூறியது, "நம்முடைய சமூகத்தில் சமத்துவமின்மை பிரச்சினையை நாம் கையாளாத வரையில், இத்தகைய கலகங்களைத் தீர்க்க உங்களால் ஒன்றும் செய்யவியலாது என்று சிலர் கூறுகின்றனர்," என்றார்

எதார்த்தத்தில், இந்த கலகங்கள் ஓர் தொடக்கம் மட்டுமே என்பதும், இவை தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளின் மத்தியில் சீறிவரும் சமூக அதிருப்தியின் அரசியல்ரீதியிலான சீரற்ற வெளிப்பாடு என்பதும், கேமரூனுக்கும், பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் மிக நன்றாகவே தெரியும். ஆனால் இந்த நிஜத்தை ஒப்புக் கொள்வதும் கூட முதலாளித்துவ அமைப்புமுறையின்மீதும், ஆட்சி செய்வதற்கான அவர்களின் உரிமைகள் மீதும் ஒரு கேள்விக்குறியை நிறுத்தும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்

பிரிட்டன் ஒரு வெடிஉலையாக உள்ளது என்பதையும், இங்கே பெரும் சமூக எழுச்சிகள் வர்க்க பதட்டங்களின் ஒரு பெரும்வெடிப்பால் தூண்டிவிடப்படக்கூடும் என்பதையே இந்த கலகங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. ஏற்கனவே பிரிட்டன் மேற்கத்திய ஐரோப்பாவிலுள்ள மிகவும் சமத்துவமற்ற சமூகமாக உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில், அது வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு சமூக செல்வவளங்களை சமூகத்தின் ஏழை-எளிய அடுக்குகளில் இருந்து பணக்காரர்களுக்கு மாற்றிவிட்டிருக்கிறது. பிரிட்டிஷ் வங்கிகளின் 2008 பிணையெடுப்பின் விளைவாக, வரிசெலுத்துவோரின் பணத்தில் 1 ட்ரில்லியன் பவுண்டிற்கும் மேலான தொகை, தொழிற்கட்சி அரசாங்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டு, பிரதான நிதியியல் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணக்காரர்களுக்கும், சமூகத்தின் ஏனையவர்களுக்கும் இடையில் நிலவும் பெரும்பிளவு, அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 100 பில்லியன் பவுண்ட் வெட்டு திட்டங்களின் விளைவாக இன்னும் கூடுதலாக விரிந்துவருகிறது.

சுமார் 2.5 மில்லியன் மக்கள் உத்தியோகப்பூர்வமாக வேலைவாய்ப்பற்று உள்ளனர். உண்மையான புள்ளிவிபரம் ஆறு மில்லியனுக்கு நெருக்கமாக இருக்கக்கூடும். இதில் ஏறத்தாழ ஒரு மில்லியன் பேர் இளைஞர்கள் ஆவர். ‘கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சியில் இல்லாத’ (NEETs) மேலும் ஒரு மில்லியன் இளைஞர்கள் இருப்பதாக பகுக்கப்பட்டுள்ளனர். இலண்டனின் 73 நாடாளுமன்ற தொகுதிகளிலுள்ள 22 வேலைகளுக்கு இருபது பேர் போட்டியிடுகின்றனர். பெக்ஹாம் மற்றும் ஹாக்னே போன்ற தலைநகரின் வறிய பகுதிகளில், ஒவ்வொரு வேலைக்கும் 40க்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.   

இலண்டன் நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்பட்டவர்களில் 300க்கும் மேற்பட்டவர்களின் நீதிமன்ற ஆவணங்களின் அடிப்படையில், திங்களன்று பைனான்சியல் டைம்ஸால் பிரசுரிக்கப்பட்ட தரவுகள், சந்தேகத்திற்குரியவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சராசரி வருவாய்க்கும் கீழுள்ள பகுதியில் வாழ்பவர்கள் என்பதைக் கண்டறிந்து காட்டியது.

கடந்த கால் நூற்றாண்டில், குறிப்பாக தொழிற்சங்கங்களால், சமூக மற்றும் அரசியல் பதட்டங்கள் திணறடிக்கப்பட்டுள்ளன. கல்வித்துறை செலவு வெட்டுக்களுக்கு எதிராக மாணவர்களிடையே கடந்த இலையுதிர் காலத்தில் தேசியளவில் வெடித்த கலகங்கள் மற்றும் போராட்டங்கள் இரண்டுமே, ‘தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத பெரும்பான்மையினரே அதிகரித்துவரும் மக்கள் அதிருப்திக்கு பெரும்பாலும் வெளிக்காட்டினார்கள் என்பதை எடுத்துக்காட்டியது.

எவ்வாறிருந்த போதினும், இந்த சூழலைத் தொடர முடியாது; தொடரவும் தொடராது. பெரும்-பணக்காரர்களுக்கும், பெரும்பான்மையினருக்கும் இடையிலுள்ள சமூக பிளவு நீடித்திருக்க முடியாது. பாரிய சமூக போராட்டங்கள் தோன்றுவதற்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பெருவணிகங்களின் கருவிகளாக காட்டப்படும் தொழிற்கட்சியாலும், தொழிற்சங்கங்களாலும் கூட அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது.   

இதை நன்கு அறிந்துள்ள ஆளும் வர்க்கம், பொலிஸ் அரசோடு இணைந்தவகையில்  வரலாற்றுரீதியில் முறைமைகளை அதனதன் இடத்தில் நிலைநிறுத்தியுள்ளன. எவ்வாறிருந்தபோதினும், ஜனநாயக ஆட்சியின் அனைத்து வழிமுறைகளையும் கைவிடும் இந்நடவடிக்கை, வர்க்க போராட்டத்தை தீவிரப்படுத்துவதிலும், தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச போராட்டத்திற்குள் திரும்புவதற்கும் ஒரு புறத் தூண்டுதலை அளிக்கிறது.