World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US auto workers face historic struggle

அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் வரலாற்றுரீதியான போராட்டத்திற்கு முகங்கொடுக்கின்றனர்

Jerry White
8 September 2011

Back to screen version

செப்டம்பர் 14ஆம் தேதியோடு GM, Ford மற்றும் Chrysler ஆலைகளில் வேலை செய்யும் 114,000 அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்களின் நான்கு-ஆண்டுகால தொழிலாளர் உடன்படிக்கைகள் முடிவுக்கு வருகின்றன. இந்த ஆண்டில் $7 பில்லியனுக்கும் அதிக இலாபத்தை இந்நிறுவனங்கள் ஈட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கின்ற போதினும், 2003இல் இருந்து இதுவரை சம்பள உயர்வைப் பெற்றிராத தொழிலாளர்களின் சம்பளங்களிலும் மற்றும் பணியிட நிலைமைகளில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது என்பதை அவை தெளிவுபடுத்தியுள்ளன.

அதற்குமாறாக, ஒபாமா நிர்வாகம் மற்றும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் (UAW) முழு ஆதரவுடன், வாகனத்துறை மேலதிகாரிகள், எஞ்சியிருக்கும் ஓரளவு அதிக சம்பளம் பெறும் தொழிலாளர்களையும் நீக்கி, குறைந்த சம்பளத்தில் தற்காலிக தொழிலாளர்களுக்கான இடத்தை உருவாக்கும் திட்டத்தோடு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இது தடுக்கப்பட வேண்டுமானால், தொழிலாளர்கள் UAWஇல் இருந்து சுயாதீனப்பட்ட ஒரு போராட்டத்திற்கான புதிய பாதையைக் காண வேண்டும். ஒபாமா நிர்வாகத்தின் வெட்டுக்களுக்கு (இது UAWஆல் ஆதரிக்கப்பட்டுள்ளது) எதிராக தொழிலாளர்கள் ஓர் அரசியல்ரீதியான போராட்டத்தை முகங்கொடுக்கின்றனர் என்பதை அவர்கள் உணரத்தொடங்க வேண்டும்.

GM மற்றும் Chrysler 2009இல் ஒபாமா நிர்வாகம் புனரமைப்பு செய்தமை, வாகனத்துறை தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட மூன்று-தசாப்த கால தாக்குதலின் உச்சகட்டமாக இருந்தது. உடந்தையாய் இருந்த UAW உடன் சேர்ந்து, புதிதாக சேர்ந்த தொழிலாளர்களின் சம்பளத்தை பாதியாக்குதல், நூறு ஆயிரக்கணக்கான ஓய்வுபெற்ற தொழிலாளர்களை மற்றும் அவர்களின் குடும்பங்களை UAWஆல் நடத்தப்படும் குறை-மதிப்பு மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்குள் கொணர்தல், வருடாந்த சம்பள உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ற உதவிகள், வேலைவாய்ப்பின்மை பாதுகாப்புகள் ஆகியவற்றை இல்லாமல் ஆக்குதல் ஆகியவற்றிற்காக, ‘நிலைகுலைவு அச்சுறுத்தலை வெள்ளை மாளிகை பயன்படுத்தியது.

தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிற்கு எதிராகவும் சம்பள-வெட்டு பிரச்சாரத்தை முடக்கிவிட, இந்த தாக்குதல் பெருநிறுவன அமெரிக்காவால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. பாரிய வேலைவாய்ப்பின்மை தொடர்கின்ற நிலையிலும், பொருளாதாரம் ஓர் ஆழ்ந்த மந்தநிலைக்குள் சரிகின்ற நிலையிலும், இது இலாப அதிகரிப்பிற்கு எண்ணெய் ஊற்றியுள்ளது.

UAWஆல் நிர்ணயிக்கபட்ட குறைந்த-சம்பள வரம்பு ஏற்கனவே உலகளாவிய வாகன தொழில்துறையில் ஒரு போட்டிமிகுந்த போராட்டத்திற்கு களம் அமைத்துள்ளது. இத்தாலிய தொழிலாளர்கள் அமெரிக்க பாணியிலான விட்டுகொடுப்புகளுக்கு உடன்பட வேண்டும்; இல்லையானால் தாம் மலிவுக்கூலி தொழிலாளர்களுக்காக வடக்கு அமெரிக்காவிற்கு உற்பத்தியை நகர்த்த வேண்டியதிருக்கும் என Fiat-Chrysler நிறுவன முதலாளி செர்ஜியோ மார்சியோன தெரிவிக்கிறார்.

ஒருசமயத்தில் அமெரிக்காவில் அதிக சம்பளம் பெறும் தொழில்துறை தொழிலாளர்களாக இருந்த, வேலைக்கமர்த்தப்படும் புதிய UAW தொழிலாளர்கள் தற்போது மணிக்கு $14 டாலர் என்ற இரண்டாம் நிலை கூலியைப் பெறுகிறார்கள். பணவீக்கம் மற்றும் தொழிற்சங்க சந்தா ஆகியவற்றையும் கணக்கிலெடுத்துப் பார்த்தால், இது, UAW ஸ்தாபிக்கப்படுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் 1931இல், அவர்களின் சகாக்கள் பெற்ற மணிக்கு 92 சென்ட் என்ற அளவிற்கு சமமாக உள்ளது. “முதல் நிலை தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களின் வாங்கும்சக்தி அரை-நூற்றாண்டிற்கு முன்னர் இருந்ததற்கு அண்ணளவாக வீழ்ச்சியடைந்திருப்பதைக் காண்கிறார்கள்.

ஆலைகளுக்குள் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 10-12 மணி நேரங்களையும், வேகமான உற்பத்தி மேடைகளையும், குறைந்த இடைவெளிகள் மற்றும் விடுமுறை நாட்களையும், மற்றும் வேலையிழப்பு குறித்த நிரந்தர அச்சுறுத்தலையும் முகங்கொடுக்கின்றனர். வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் வேறு ஆலைகளில் வேலைக்குச் சேர தங்களின் குடும்பங்களோடு நூற்றுக்கணக்கான மைல்களுக்கு நகர வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். GM மற்றும் Chrysler ஆலைகளில் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையையும் UAW விட்டுக்கொடுத்துள்ளது; அத்தோடு சம்பள உடன்பாட்டில் இருந்த  மத்தியஸ்த உரிமை மற்றும் முக்கியமாக இறுதி ஒப்பந்தம் பற்றி வாக்கெடுப்பிற்கு விடும் உரிமையையும் தொழிலாளர்களிடமிருந்து பறிப்பதற்கு அது உடன்பட்டுள்ளது.

பணமில்லை என்பதல்ல இந்த கொள்கைக்கான காரணம், மாறாக வாகனத்துறை முதலாளிகள் மற்றும் ஒட்டுமொத்த நிதியியல் பிரபுத்துவத்தின் இறுமாப்பும், ஒட்டுண்ணித்தனமுமே இதற்கு காரணமாகும். Fordஇன் 41,000 தொழிலாளர்களுக்கு நான்கு சதவீத சம்பள உயர்வோடு, வருடாந்த வாழ்க்கைசெலவு அதிகரிப்பினை சமப்படுத்தும் படியை மீண்டுமளித்தால் அந்நிறுவனத்திற்கு $95.5 மில்லியன் செலவு பிடிக்கும். “இது Ford தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் முலேல் மற்றும் நிர்வாக தலைவர் பில் போர்டு ஜூனியர் இருவருக்கும் மார்ச்சில் கொடுக்கப்பட்ட வரிவிதிப்பிற்கு முன்னான பங்கு பெறுமதியின் கூட்டுதொகையான $98 மில்லியனுக்கு சற்றே குறைவாகும் என்று Automotive Newsஇன் ஒரு சமீபத்திய கட்டுரை குறிப்பிட்டது.

இருந்தபோதினும், தொழில்துறை இதழ் எழுதியது: உயர்வுகள் என்ற கேள்விக்கே இடமில்லை என்பதை பெருநிறுவன நிர்வாகிகளும், தொழிற்சங்க அதிகாரிகளும் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.

தொழிலாள வர்க்கத்தின்மீது ஆழ்ந்த தாக்குதல்களை நடத்த பகிரங்கமாகவே அதன் ஆதரவை பிரஸ்தாபிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் வாகனத்துறை தொழிலாளர்கள் முறித்துக்கொண்டால் மட்டுமே, அவர்களின் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாக்க அவர்களால் போராட முடியும்.

இவ்வகையில், டெட்ரோயிட் பொருளாதார குழுவின் முன் கடந்த மாதம் UAW தலைவர் பாப் கிங் அளித்த அவருடைய உரையில், உயர்ந்தநிரந்தர செலவுகளின் சுமையை, அதாவது ஒருமணி நேரத்திற்கான அதிகப்படி கூலிகளை, நிறுவனங்கள் மீது தொழிற்சங்கங்கள் சுமத்தக்கூடாது என வலியுறுத்தினார். வாகனத்துறை முதலாளிகளின் இலாபங்களைத் தக்கவைப்பதில் UAWக்கும் பொறுப்புண்டு என்பதையும் அவர் தெரிவித்தார். “நம்முடைய நிறுவனங்களை வெற்றிகரமாக்க அடுத்த நான்காண்டுகாலத்திற்கு சம்பள பேச்சுவார்த்தைகளில் இந்த பேரத்தை நாம் விலக்கி வைப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்,” என்று நிர்வாகிகள் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார். “நிலையான செலவுகளைக் கூட்டினால், அதை அவர்களால் செய்ய முடியாமல் போகும்,” அவர் தெரிவித்தது.

சோசலிஸ்டுகள் மற்றும் இடதுசாரி போராளிகளின் தலைமையிலிருந்த வாகனத்துறை தொழிலாளர்கள் எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், GMக்கு எதிராக 1936 ப்ளின்ட் ஆலை உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை கூட்டமைப்பு தலைமையின் முன்னணியில்  இருந்தனர். ஆனால் வால்டர் ரூதெர் உட்பட புதிதாக அமைக்கப்பட்டுள்ள UAW மற்றும் CIOஇன் தலைவர்கள், தொழிலாளர் வர்க்கத்தை ஜனநாயக கட்சிக்கும், அதன் கம்யூனிச-எதிர்ப்பு முனைவுகளுக்கும் அடிபணிய செய்துவிட்டனர்.

அந்த வரலாற்று காட்டிக்கொடுப்பின் முழுமையான தாக்கங்கள் 1970களின் பிற்பகுதி வரையில் முழுமையாக வெளிப்படையாக தெரியவில்லை. 1960கள் மற்றும் 1970களின் போர்குணமிக்க தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் ஆசிய-ஐரோப்பிய போட்டியாளர்களின் எழுச்சி ஆகியவற்றை முகங்கொடுத்த அமெரிக்க வாகனத்துறை முதலாளிகள், தொழிலாளர்களுக்கு எதிராக ஆலைமூடல்கள் மற்றும் பாரிய கூலிவெட்டு தாக்குதல்களைத் தொடங்கினர். அதற்கடுத்து வந்த ஆண்டுகளில், வாகனத்துறை மற்றும் ஏனைய முக்கிய தொழில்துறை தொழிலாளர்கள் அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் சீரழிவையும், அவர்களின் ஆலைகள் மூடப்படுவதையும், அதேவேளை செல்வந்தர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உதவியோடு பாரியளவில் செழிப்படைவதையும் கண்டனர்.

போர்ட் நிறுவன தொழில்துறைத்தொடர்புகள் நிர்வாகியின் மகனான பாப் கிங் UAWஇல் உயர்ந்த பதவிக்கு வந்திருக்கும் வளர்ச்சியானது, இந்த அமைப்பு முதலாளிகள், வங்கியாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பக்கம் போய் கொண்டிருப்பதன் அறிகுறியாக உள்ளது.

UAW, அந்த சொல்லின் எவ்வித அர்த்தத்தில் கூட, ஒருதொழிற்சங்கம் அல்ல. மாறாக அது பெருநிறுவன இலாபங்களின் பாதுகாப்பிற்கும், அதை செயல்படுத்தும் தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆடம்பர வாழ்க்கைமுறைக்கும் அர்பணிக்கப்பட்ட பல-மில்லியன் டாலர் வியாபார அமைப்பாக உள்ளது. பெருநிறுவன நிர்வாக குழுக்களில் இடம் பிடிப்பதும், சம்பளங்களை வறுமை-மட்டத்திற்கு குறைத்து தொழிலாளர்களிடமிருந்து சந்தாக்களை வசூலிக்கும் விதத்தில், அமெரிக்காவினுள் நிறைய உற்பத்தியைக் கொண்டு வர நிறுவனங்களுக்கு ஆர்வமூட்டுவதுமே UAW அமைப்பின் முக்கிய அக்கறையாக உள்ளது.

UAWஇல் இருந்து உடைத்துக் கொண்டு, தொழிலாள வர்க்கம் அதனை சுயாதீனமாக ஒருங்கிணைத்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே இந்த சூழ்ச்சியை வாகனத்துறை தொழிலாளர்களால் தோற்கடிக்க முடியும். இது வாகனத்துறை தொழிலாளர்களின் ஒவ்வொரு பிரிவையும் ஒன்றுதிரட்ட அடிமட்ட குழுக்களை அமைப்பதிலிருந்து தொடங்குகிறது.

ஜனநாயகரீதியில் தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படும் இத்தகைய குழுக்கள், வெறுக்கப்பட்ட இரட்டை-அடுக்கு கூலி முறையை இல்லாதொழிக்கும், மற்றும் வேலைவாய்ப்பு உரிமையை மீட்டெடுக்கும், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறைசார்ந்த மற்றும் அரசியல்ரீதியான முழு பலத்தையும் ஒன்றுதிரட்டும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் பாதுகாக்கும் உரிமைக்கு உத்தரவாதமளிக்க மூடப்பட்ட அனைத்து ஆலைகளும் மீண்டும் திறக்கப்பட வேண்டும்; தொழில்-வழங்குனர்கள் வழங்கிய சலுகைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை, ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வோல்ஸ்ட்ரீட்டிற்காக வங்கி பிணையெடுப்புகளில் ஒப்படைத்து கொண்டே, தொழிலாளர்களுக்குப் பணமில்லை என்று வாதிடும் ஒபாமா நிர்வாகத்திற்கும், முதலாளிகளுக்கும் எதிராக வாகனத்துறை தொழிலாளர்கள் அரசியல்ரீதியாக ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு பணமில்லை என்பது ஒரு பொய். செல்வவளம் இருக்கிறது, ஆனால் அது முதலாளிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கம்யூனிச-எதிர்ப்பு மற்றும் தேசியவாதத்திலிருந்து உடைத்துக் கொண்டு, தொழிலாள வர்க்கம் சோசலிசத்தை நோக்கி திரும்புவதைக் குறிக்கிறது. வாகனத்துறை தொழிலாளர்கள், பெருநிறுவனங்களுக்கு எதிராகவும், முதலாளித்துவத்திற்கு எதிராகவும், அதை பாதுகாக்கும் இரண்டு பெரிய வியாபார கட்சிகளுக்கு எதிராகவும் நனவுபூர்வமாக போராடிய முந்தைய தலைமுறை தொழிலாளர்களின் சோசலிச பாரம்பரியங்களை புத்துயிர்பெறச் செய்யவேண்டும்.

வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டமானது வேலைகளை, சமூக வேலைதிட்டங்களை அழிப்பதற்கு எதிராகவும், சமூகத்தின் ஒரு சதவீதமாக இருக்கும் பணக்காரர்களின் பைகளில் செல்வத்தை மாற்றுவதற்கு எதிராகவும் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கம் நடத்தும் போராட்டத்தோடு இணைக்கப்பட வேண்டும். வாகன தொழில்துறை, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ், அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தின் சோசலிச மாற்றத்தின் ஒரு பாகமாக, ஒரு பொதுத்துறையாக மாற்றப்பட வேண்டும்.