World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

9/11, ten years on

9/11, 10 வருடங்களுக்குப் பின்னர்

Bill Van Auken
12 September 2011

Back to screen version

9/11 சம்பவத்தின் பத்தாவது ஆண்டு நிறைவானது எதிர்பார்த்த வகையில் அமெரிக்க மக்களின் விமர்சனரீதியான சுயசிந்தனை உணர்வுகளை தேய்ந்து போகச் செய்வதற்கும் அச்சம்பவத்தின் பேரில் கடந்த தசாப்தத்தில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களை நியாயப்படுத்துவதற்கும் அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் ஊடகங்களால் தமக்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டது.

ஆயினும் இந்த முயற்சிகள் எல்லாம் உபயோகமிழந்து கொண்டு செல்கின்றன என்கிற ஒரு உணர்வு பரவலாய் தென்படக் கூடியதாய் இருக்கிறது. அமெரிக்க வாழ்க்கையின் மற்ற எல்லா அம்சங்களையும் போலவே, 9/11 சம்பவத்துக்கான உத்தியோகபூர்வ நினைவுநாள் நிகழ்ச்சிகள் மக்களின் உண்மையான கவலைகளுடன் எவ்வித தொடர்புமற்ற ஒரு சம்பிரதாய தன்மையையே கூடுதலாய் கொண்டிருக்கிறது.

பத்து வருடங்களுக்கு முன் நிகழ்த்தப்பட்ட இந்த படுபயங்கர குற்றத்தில் உயிரிழந்த மூவாயிரம் பேரின் உயிர்களுக்கு மரியாதை செய்யப்பட வேண்டும், உயிர் பிழைத்தவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும். ஆனால் அது துயரகரமான மரணங்களை மீண்டும் மீண்டும் மிகத் துஷ்ட நோக்கங்களுக்கு சுரண்டிக் கொள்வதில் இருந்து முழுக்க வேறுபட்ட ஒன்றாகும்.

தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில், செப்டம்பர் 12, 2001 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது. ஆளும் உயரடுக்கின் பூகோளஅரசியல் மற்றும் பொருளாதார நலன்களை தேடி போரில் இறங்குவதை நியாயப்படுத்துவதற்கும் அங்கீகரிப்பதற்கும். அரசியல் ஸ்தாபகம் இவற்றைப் பற்றிக் கொள்ளும் என்ற  இந்த மதிப்பீடு முழுமையாக ஊர்ஜிதமானது.

இந்த ஆண்டின் நினைவுநாளில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் ஆகியோரின் பிரதான பங்கேற்பு ஒரு தீக்குறியான தன்மையை கொடுத்தது. இவர்கள் இரண்டு பேருமே போர்க்குற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படும் அச்சத்தில் அமெரிக்க மண்ணை விட்டு வெளியேறவே முடியாது என்று கூறும் அளவுக்கு 9/11க்குப் பின்வந்த குற்றங்கள் மற்றும் பயங்கரங்களுக்கு மிகவும் நேரடியாகப் பொறுப்பானவர்கள்.

பத்தாவது ஆண்டு நிறைவில் நாம் காணும் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால் அமெரிக்க மக்கள் 9/11 தொடங்கி பத்தாண்டு காலம் பேரழிவான போர்கள், அடிப்படை ஜனநாயக உரிமைகள் சீரழிந்தமை, சமூகச் சீரழிவு மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என மிகக் கசப்பான அனுபவங்களை கடந்து வந்திருக்கின்றனர்.

புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி வைப்பதற்கு அரசியல் ஸ்தாபகம் சிறந்த முயற்சிகள் மேற்கொண்டது, இந்த நினைவுதினத்தை ஒட்டி மிக அதிகமான பாதுகாப்பு கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டதில் அது வெளிப்பட்டது, என்றாலும் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் தங்களுக்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கினாலும் அரசாங்கத்தாலும் என்ன நேருமோ என்பது குறித்துத் தான் பன்மடங்கு அச்சத்துடன் உள்ளனர். வேலை போய் விடுமோ, வீடுகள் போய் விடுமோ மற்றும் முக்கியமான சமூக வேலைத் திட்டங்கள் அழிக்கப்படுமோ என்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்குத் தான் உழைக்கும் மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

9/11 எப்படி நம் அனைவரையும் ஒன்றாய் கொண்டுவந்ததுஎன்பதைப் பிரகடனம் செய்யும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் ஊடகங்கள் இறைத்துக் கொண்டிருக்கின்றன என்கிற அதே சமயத்தில், ஆரம்பத்தில் இருந்தே வர்க்கப் பிளவுகள் காணக்கூடியதாகவே இருந்தன. இரட்டைக் கோபுரத்தின் அழிப்பு ஏற்படுத்திய பொருளாதாரச் சரிவு நூறாயிரக்கணக்கான மக்களுக்கு அவர்களின் வேலைகளை இழக்கச் செய்து நியூயோர்க்கின் வீடல்லாதோருக்கான வசிப்பிடங்களின் எண்ணிக்கையை நிரம்பி வழியச் செய்தது, ஆனால் தலைமை நிர்வாக அதிகாரிகளோ இந்த தாக்குதல்கள் இலாபங்கள் குவிப்பில் பாதிப்பு ஏற்படுத்தாதிருப்பதை உறுதி செய்து கொண்டனர். மிகவும் அடிமட்ட விலைகளில் பங்குகளை வாங்கி மில்லியன்களைக் குவிக்க அவர்கள் இந்த துயர சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்தப் பேரழிவின் போது உடனடியாக விரைந்து வந்து செயலாற்றி தீயை அணைக்கப் போராடியவர்களும் மற்றவர்களும் இப்போது புற்றுநோய் மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகளுக்கு முகங்கொடுத்து மருத்துவச் சிகிச்சைக்காக அல்லாடும்படி தள்ளப்பட்டிருக்கின்றனர், அதேசமயத்தில் உலக வர்த்தக மைய வணிக உரிமையாளர்களுக்கு கொழுத்த இலாபங்களை உறுதி செய்வதற்கு பாரிய மானியங்கள் கையளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

9/11 ஐச் சுற்றி கதைகளைப் புனைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்களில் பெரும் பகுதியினர் அன்று என்ன நடந்தது என்பது பற்றிய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வக் கதையை நம்புவதாக இல்லை. அந்த துயரத்தை அன்று எதிர்கொண்ட நியூயார்க் மக்களில் பாதிக்கும் குறையாத மக்கள், அரசாங்கத்தில் ஏதோவொரு மட்டத்தில் 9/11 தாக்குதல்கள் குறித்து முன்கூட்டி தெரிந்திருந்தனர் எனவும் அவர்கள் திட்டமிட்டு அதனை நடக்க அனுமதித்தனர் எனவும் நம்புவதாக கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டியுள்ளன. தாக்குதல்கள் நடந்த அதே நியூயோர்க்கில் தான் அவற்றின் பேரில் போர்கள் நடத்தப்படுவதற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பும் நிலவுகிறது என்பதும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் இன்னும் ரகசியத்தாலும் மூடிமறைப்புகளாலும் சூழப்பட்டுள்ளன. 2004 இல் தனது அறிக்கையை விநியோகித்த 9/11 ஆணைக்குழுவின் ஆவணங்கள் - இந்த ஆவணங்கள் கனமான வகையில் திருத்திய வடிவத்தில் என்றாலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டியவை - தேசியக் காப்பகத்தில் மூடி வைக்கப்பட்ட நிலையிலேயே தொடர்வதாக சென்ற வாரம் தகவல்கள் வெளியாயின.

எப்படியிருந்தாலும் அந்த ஆணைக்குழுவிற்கு கொடுக்கப்பட்டிருந்த வேலை இந்த தாக்குதல்கள் மற்றும் அவற்றின் முன் தயாரிப்புகள் குறித்த ஒரு புறநிலை ஆய்வை மேற்கொள்வது அல்ல, மாறாக அமெரிக்க உளவுத்துறை அமைப்பினுள் முன்பே நன்கு தெரிந்து இந்தத் தாக்குதல்களில் அவை உடந்தையாக இருந்தன என்பதற்கான ஆதாரங்களை ஒன்றுகூடி மூடிமறைப்பது தான்.

இந்தத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டிருந்தவர்களில் ஏராளமானவர்கள் 9/11 க்கு முந்தைய இரண்டு ஆண்டு காலமாகவே CIA  மற்றும் FBI இன் கடுமையான கண்காணிப்பிற்கு இலக்காகியிருந்தவர்கள் என்பது நமக்குத் தெரியும். சென்ற மாதத்தில் வெளியான ஒரு நேர்காணலில் வெள்ளை மாளிகையின் முன்னாள் தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைமை ஆலோசகரான ரிச்சார்ட் கிளார்க், தாக்குதல் நடப்பதற்கு வெகு முன்னதாகவே இந்த விமானக் கடத்தல்காரர்களில் இரண்டு பேர் அமெரிக்காவில் நுழைந்திருந்த விடயம் CIA  இற்கு நன்கு தெரியும் என்றும் அவர்கள் அத்தகவலை பிற உளவுத்துறை அமைப்புகளுக்கு தெரியப்படுத்தாமல் திட்டமிட்டு மறைத்து விட்டனர் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்

ஒரு விடயம் நிச்சயம், தாக்குதலுக்குப் பிந்தைய இந்தப் பத்து வருடங்களில், வெளிப்பட அமெரிக்க வரலாற்றின் மிகப் பேரழிவான உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் தோல்வி ஒன்றிற்கு அமெரிக்க உளவுத்துறை வட்டங்களிலோ, இராணுவத்திலோ அல்லது ஜோர்ஜ் புஷ் அல்லது பில் கிளிண்டன் நிர்வாகங்களைச் சேர்ந்தவர்களிலோ இருந்து ஒரு மனிதரும் கூட ஒரு பதவியிறக்வோ அல்லது வேறு எவ்விதமாகக்ககூட பொறுப்பாக்கப்படவில்லை. யாரையேனும் ஒருவரைப் பொறுப்பாக்கினால் அவர் பதில் கேள்விகள் கேட்க வழிவகுத்து அது அரசு சம்பந்தப்பட்டிருப்பதற்கான அதிரவைக்கும் ஆதாரத்தை வெளிக்கொண்டுவந்துவிட அச்சுறுத்தும் என்ற தவிர்க்கமுடியாத முடிவிற்கு ஒருவர் வரமுடியும்.

9/11 என்ன தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது?

9/11 “எல்லாவற்றையுமே மாற்றி விட்டதாகமீண்டுமொரு முறை அமெரிக்க மக்களிடம் சொல்லப்படுகிறது. உண்மை என்னவென்றால் அதற்குப் பின்னர் அமுல்படுத்தப்பட்ட கொள்கைகளும், நடவடிக்கைகளும் தாக்குதல் நடப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு தசாப்தம் முன்பிருந்தே தயாரிப்பு செய்யப்பட்டு வந்தது என்பது தான்.

1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதானது உலகின் ஒட்டுமொத்த அதிஉயர்சக்தியாக பிரகடனம் செய்து கொண்ட அமெரிக்காவுக்கு உலக மேலாதிக்கத்தை உறுதிசெய்ய பிரம்மாண்டமான வாய்ப்பினைத் திறந்து விட்டிருந்தது. பனிப் போரினால் அமெரிக்க இராணுவவாதத்திற்கு இருந்த கட்டுப்பாடுகள் எல்லாம் நொருங்கிப் போயின, அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நிலை தொடர்ந்து வீழ்ந்து கொண்டே சென்ற நிலையைச் சரிசெய்வதற்கான ஒரு உகந்த வழியாக அமெரிக்காவின் சவாலற்ற இராணுவ மேலாதிக்கத்தை அமெரிக்க ஆளும் உயரடுக்கின் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினர் பயன்படுத்தப் பார்க்கும் நிலை தோன்றியது.  

1997ல் ஸ்பிக்ன்யூ பிரெசென்ஸ்கி (கார்டரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கையில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவுடனான ஆட்சிக்கு எதிராக இஸ்லாமிய முஜாகிதீன் அமைப்பினால் நடத்தப்பட்ட சிஐஏ ஆதரவுப் போருக்குப் பிரதான திட்டம் வகுத்தல் நிபுணரே இவர் தான்) யூரோசியாவில் மேலாதிக்க சக்தியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக வேண்டியுள்ளதற்கும் எந்த பிராந்தியப் போட்டியாளரும் எழுவதை அது தடுக்க வேண்டியதற்குமான மூலோபாயக் கட்டாயத்தை வெளிவரை செய்து காட்டினார். அந்த வகையில் அமெரிக்க மக்களின் ஜனநாயக உள்ளுணர்வுகள்அமெரிக்க இராணுவப் படையின் தீவிரப் பயன்பாட்டிற்கான ஒரு தடையாக இருந்ததாக அவர் The Grand Chessboardஎன்னும் தனது புத்தகத்தில் எச்சரித்தார். “மக்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பாக  இருப்பதாகத் தோன்றும் எண்ணத்திற்கு ஒரு திடீர் அச்சுறுத்தல் அல்லது சவால் எழுகின்றதான நிலைமைகளின்கீழ் மட்டுமே இந்தப் பிரச்சினையானது வெல்லப்பட முடியும் என்று அவர் ஆலோசனையளித்தார்.

9/11 அத்தகைய ஒரு திடீர் அச்சுறுத்தல் அல்லது சவாலையே வழங்கி, குறைந்தபட்சம் நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பதான பேரில் தற்காலிகமாகவேனும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு  மக்கள் ஆதரவை உருவாக்கியது.

முதல் போர் ஆப்கானிஸ்தானில், முன்னதாக எந்த தலிபான் அரசாங்கம் அதிகாரத்துக்கு வர அமெரிக்கா ஆதரவளித்ததோ, அதே தலிபான் அரசாங்கத்தை கவிழ்க்க, தொடங்கப்பட்டது. போர் தொடங்கி சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு, 10,000 அமெரிக்கத் துருப்புகள் இன்னும் அந்நாட்டில் தான் இருக்கின்றன, இத்தனைக்கும் அங்கு அல் குவேய்தா கணிசமான அளவில் இல்லை என்பதை அமெரிக்க அதிகாரிகளே ஒப்புக் கொள்கிறார்கள். உலகின் நிச்சயமான எண்ணெய் கையிருப்புகளில் சுமார் 20 சதவீதமும் அதன் எரிவாயு கையிருப்புகளில் எட்டில் ஒரு பகுதியும் கொண்டிருக்கக் கூடிய காஸ்பியன் படுகையின் அருகில் ஒரு மூலோபாய முகப்புதளத்தினை ஆப்கானிஸ்தான் வழங்குகிறது.

ஆப்கானிஸ்தான் போரைத் தொடர்ந்து 2002 இல் புஷ் விநியோகித்த தேசியப் பாதுகாப்பு மூலோபாயம் வந்தது. தனது நலன்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதாக தான் கருதும் எந்த நாட்டிற்கு எதிராகவும் முன்கூட்டியபோர் தொடுக்கும் உரிமை அமெரிக்காவுக்கு இருப்பதாக அது கூறிக் கொண்டது. எந்த வலிந்து தாக்கும் போர் நூரென்பேர்க் நீதிமன்றங்களால் வெளிப்படையாக மறுதலிக்கப்பட்டிருந்ததோ, எந்த வலிந்து தாக்கும் போர் நாஜிக்களுக்கு எதிரான பிரதான போர்க்குற்ற குற்றச்சாட்டின் சாரமாக இருந்ததோ, அந்த வலிந்து தாக்கும் போரைத் தொடுப்பதற்கான உரிமம் தான் உண்மையில் இந்த மூலோபாயம்.

2003ல், உலகின் இரண்டாவது பெரிய நிச்சயமான எண்ணெய் கையிருப்புகளை வைத்திருக்கும் ஈராக்கில் ஆட்சி மாற்றத்திற்காக ஆத்திரமூட்டப்படாமலேயே போர் தொடுக்கப்பட்டு இந்த தத்துவம் நடைமுறையில் கொண்டு வரப்பட்டது. ஈராக்குடன் அல்கொய்தாவுக்கு இல்லாத உறவுகளைப் புனைந்து கூறியும், “பேரழிவு ஆயுதங்கள்இருப்பதாகப் பொய்களைக் கூறியும் இந்தப் போர் நியாயப்படுத்தப்பட்டது.

முழுமையாகக் குற்றமயமாகிக் கொண்டிருக்கும் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் ஆரம்ப மைல்கற்கள் தான் இந்த நிகழ்வுகள். அமெரிக்காவின் வலிந்து தாக்கும் போர்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கியர்கள் உயிர்களையும், ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் மற்றும் இப்போது லிபியாவில் ஆயிரமாயிரக்கணக்கிலான மக்களின் உயிர்களையும் குடித்திருக்கிறது

சித்திரவதையும் படுகொலையும் அரசுக் கொள்கையாக பகிரங்கமாகப் பிரகடனம் செய்யப்பட்டு முன்னெப்போதையும் விட அருவெருப்பூட்டும் நடவடிக்கைகளுக்குள் இறங்கியதும், அத்துடன் குவாண்டானாமோ, அபு கரிப், பக்ராம் விமானத் தளம் மற்றும் CIA இன் மறைமுகதளங்களில்நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித்தன நடைமுறைகள் உலகளாவிய கோபத்தைத் தூண்டியது குறித்த திடுக்கிடும் செய்திகளும் இந்தப் போர்களுடன் கைகோர்த்து வந்திருந்தன. அமெரிக்க இராணுவத்தைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதோடு சேர்த்து CIA இன்  இராணுவமயமாக்கம் பெருகிக் கொண்டு செல்வதும் கைகோர்க்கிறது, அது நடத்தும் வேட்டையாடும் ஆளில்லா விமானங்களின் கூட்டம் பாகிஸ்தானிலும், யேமனிலும், சோமாலியாவிலும் மற்றும் பிற நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்திருக்கிறது. பெரும் நிதியாதார உதவிகளுடன் பிளாக்வாட்டர் போன்ற அமைப்புகளால் நடத்தப்படும் கூலிப்படை இராணுவங்களின் உருவாக்கத்தையும் இது கண்டிருக்கிறது, இந்த அமைப்புகள் யாருக்கும் பதில் கூறக் கடமைப்பட்டதில்லை.

கடந்த பத்து வருடங்களில் காத்ரினா புயல் மற்றும் BP எண்ணெய் கசிவு உட்பட ஒன்று மாற்றி ஒன்றாக உள்நாட்டுப் பேரிடர்கள், அடிப்படை உள்கட்டமைப்பு சிதைந்து கொண்டே செல்வதையும், சமூக ஏற்றத்தாழ்வின் வியாபகத்தையும், மக்களின் பெரும்பகுதியினர் மோசமான வாழ்க்கை நிலைமைகளில் காலம்தள்ளிக் கொண்டிருப்பதையும் மற்றும் பொருளாதார வாழ்க்கையின் அத்தனை அம்சங்களும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு கீழ்ப்படிந்ததாக ஆக்கப்பட்டு அதனுடன் முன்னெப்போதையும் விட உயரத்தில் இருக்கும் 1 சதவீதத்தினரிடம் மட்டும் சொத்துக்கள்  திரண்டு கொண்டே செல்லும் வெட்கம்கெட்ட காட்சியையும் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

அமெரிக்க முதலாளித்துவத்தின் நிதிமயமாக்கலும் மற்றும் ஊக வணிகத்திற்கும் அப்பட்டமான குற்றச் செயலுக்கும் இடையிலான எல்லை மறைந்து போனதும் தான் 2008 செப்டம்பரின் வோல்ஸ்ட்ரீட் உருக்குலைவை உருவாக்கியது, இதில் 25 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையிழந்தனர்.

உள்நாட்டிலான பாரிய வேவு வேலை மற்றும் புஷ் நிர்வாகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு மறுப்பு ஆகியவை தொடங்கி வலுவற்ற பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு அமெரிக்கக் குடிமகனைக் கொல்வதற்கும் உரிமை உண்டு என்பதான ஒபாமா நிர்வாகத்தின் திட்டவட்ட உறுதி வரை ஜனநாயக உரிமைகளின் மீதான ஒரு தாக்குதலால் அரசியல் வாழ்க்கை ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது

போரை அல்லது ஜனநாயக உரிமைகளின் அழிப்பை முதலாளித்துவ இருகட்சி அமைப்புமுறையின் கட்டமைப்புக்குள்ளாக எதிர்ப்பது சாத்தியமில்லை என்பதையே ஒபாமாவின் தேர்வு விளங்கப்படுத்தியது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கத் துருப்புகள் இன்னும் ஈராக்கில் இருந்துகொண்டு தான் இருக்கின்றன, ஆப்கானிஸ்தானிலான போர் கூர்மையாக அதிகரிப்பு கண்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி புஷ்ஷின் தத்துவத்தையும் கடந்து சென்றிருக்கிறார், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நலன்களுக்கும் விழுமியங்களுக்கும்அச்சுறுத்தலைக் காணக் கூடிய எந்த ஒரு இடத்திலும் அதற்காகப் போரிடக் கூடிய உரிமையை அவராக வழங்கிக் கொண்டார். “வணிகப் பாய்வும்”, அதாவது அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் மற்றும் அவை உருவாக்கும் இலாபங்களால் ஏவி விடப்படும் தடையில்லாச் சந்தைக் கொள்கைகள்தான் இந்த விழுமியங்களில்அடங்கியுள்ளது.  

இந்தப் புதிய சித்தாந்தம் லிபியா மீதான ஆத்திரமூட்டப்படாத போரில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆட்சி மாற்றம் செய்து அமெரிக்க நலன்கள் மற்றும் மேற்கத்திய எண்ணெய் நிறுவங்களுக்கு கூடுதலாய்க் கீழ்ப்படிகிற ஒரு கைப்பாவை அரசை நிறுவுவதை வெளிப்படையான இலக்காய்க் கொண்டு இந்தப் போர் நடத்தப்படுகிறது.

9/11 மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த போர்கள், அமெரிக்க புத்திஜீவித்தன வட்டத்தில் ஏதேனும் முன்னர் எஞ்சியிருந்திருந்தால் கூட அதுவும் ஆழமாய் சிதையத் தொடங்கியதை அம்பலப்படுத்தவும் சேவைபுரிந்துள்ளன. 1990களின் ஊக வணிக எழுச்சி மூலம் சொத்துக்களைத் திரட்டும் சாத்தியத்தில் பங்கேற்ற போதே அதன் நேர்மை ஏற்கனவே அரிக்கப்பட்டு விட்டது. புதிதாகத் தோன்றிய சமூக நலன்கள் இந்த அடுக்கிற்குள் இருந்த பலரையும் தங்களை ஏகாதிபத்தியத்திற்கு தகவமைத்துக் கொள்வதற்கு இட்டுச் சென்றது. இவர்கள் ஈராக் போரை முறையானது என்று சித்தரித்து வெள்ளை மாளிகையின் குற்றங்களுக்கு தாராளவாத நியாயப்படுத்தல்களை வழங்கி, முந்தைய சகாப்தத்தின் போரெதிர்ப்பு மனோபாவங்களை மறுதலித்தனர்.  

இந்த நிகழ்வுப்போக்கு லிபியப் போரில் நினைத்ததை சாதித்திருக்கிறது. இப்போர் தாராளவாதக் கல்வியாளர்கள் மற்றும் முன்னாள் இடதுகளின் பரந்த அடுக்குகளிடம் இருந்து ஆர்வமுடனான ஆதரவை வென்றிருக்கிறது. முன்னாள் காலனித்துவ நாடு ஒன்றை ஏகாதிபத்தியம் கையகப்படுத்துவதை மனித உரிமைச் செயல்பாடு போன்று எடுத்துக்காட்ட இவர்கள் உதவினர்.

இந்தப் பொதுவான போக்கின் மிகத் தீவிரமான வெளிப்பாடுகளில் ஊடகங்களின் பரிதாபகரமான பாத்திரமும் ஒன்றாக உள்ளது. தனது இணைந்துள்ளசெய்தியாளர்கள் மூலமாக, ஒவ்வொரு இராணுவவாத நடவடிக்கையும் உற்சாகமூட்டும் ஊழியரைப் போலவும் அந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு கூறப்படும் பொய்களைக் கொண்டுசேர்க்கும் பாதைவழியாகவும் இது சேவை செய்கிறது

போருக்கு பெரும் வெகுஜன எதிர்ப்பு எழுந்த நிலைமைகளின் கீழ் சித்தாந்தரீதியாக வலது நோக்கிய திருப்பம் நடந்தது. இந்த எதிர்ப்பு மேலும் தீவிரப்படவே செய்திருக்கிறது என்றாலும் இந்த இருகட்சி அரசியல் அமைப்புமுறையில் அதனால் குறிப்பிடத்தக்க வெளிப்பாடு எதனையும் காண முடியவில்லை.

9/11 ஐ சாக்காகக் கொண்டு 2001 இல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆரம்பிக்கப்பட்ட முயற்சி விரும்பிய முடிவுகளை உருவாக்கவில்லை. ஆப்கானிஸ்தான் ஈராக் இரண்டிலுமே போர்கள் இரத்த ஆற்றிலான படுதோல்விகளாக ஆகின. அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு புதிய எண்ணெய் இலாபங்களுக்கு ஒரு அதிர்ஷ்டப் பரிசு மூட்டையைக் கொண்டு வரவில்லை, மாறாக ஒரு தசாப்தக் காலப் போருக்குக் கொட்டப்பட்ட டிரில்லியன்கணக்கான டாலர்கள் அமெரிக்க நிதி நெருக்கடியை ஆழப்படுத்த மட்டுமே செய்துள்ளது.

ஆயினும் இந்தத் தோல்விகள் எல்லாம் அமெரிக்க இராணுவவாதத்தின் முடிவுக்குக் கட்டியம் கூறுவதாக இல்லை. அதற்கு நேரெதிராய், இன்னும் மிகப் பெரிய மிகப் பயங்கரமான போர்கள் வரவிருக்கின்றன என்பதையே அவை சுட்டிக் காட்டுகின்றன. ஈராக்கில் அமெரிக்கத் துருப்புகளைத் திரும்பப் பெறுவது குறித்த விவாதங்களுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக CIA செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான அழைப்புகளும் கைகோர்த்து வந்துள்ளன. லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக கொஞ்சமும் வெட்கமின்றி நடத்தப்படும் போர் மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் வேறெங்கிலும் மறுபடியும் நடக்கும் என எதிர்பார்க்கலாம். அத்துடன் சீனாவுக்கு எதிரான போருக்கும் பெண்டகன் தயாரிப்பு செய்து வருகிறது

 “21 ஆம் நூற்றாண்டின் போர்கள்பற்றிப் பேசுகையில் புஷ் எதனை அவ்வாறு குறிப்பிட்டாரோ அந்தப் போர்கள் குறைவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, அவை தவிர்க்கவியலாமல் ஒரு புதிய மற்றும் மிகப் பெரிய கேட்டை உருவாக்கும்.

9/11 க்குப் பிந்தைய தசாப்தத்தின் அனுபவங்களில் இருந்தான தீர்மானகரமான படிப்பினை என்னவென்றால் இராணுவவாதம் மற்றும் பிற்போக்குத்தனத்திற்கான மூலவளமாக இருக்கும் இலாப அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக சுயாதீனமாக அணிதிரள்வதன் அடிப்படையில் மட்டுமே போருக்கு எதிராகவும் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தும் நிகழ்த்தப்படும் போராட்டம் நிகழ்த்தப்பட முடியும்.

அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழமடையும் நெருக்கடி புரட்சிகர எழுச்சிகளின் ஒரு புதிய காலகட்டத்திற்கு முன்னறிவிப்பாக இருக்கிறது. ஒரு நன்கு செதுக்கப்பட்ட சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தைக் கொண்டு வரும் போராட்டங்களை ஆயுதபாணியாக்குவதற்கான புரட்சிகரத் தலைமை மற்றும் முன்னோக்கு குறித்ததே மையமான கேள்வியாக இருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, இதன் அர்த்தம், சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவது என்பதாகும்.