World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Political tasks of the Egyptian Revolution

எகிப்திய புரட்சியின் அரசியல் கடமைகள்

Johannes Stern
13 September 2011

Back to screen version

சமீபத்திய நாட்களில் அமெரிக்கா ஆதரவு இராணுவ ஆட்சிக்கு எதிராக ஒரு புதிய வேலைநிறுத்த, எதிர்ப்புக்கள் அலை எகிப்து முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் அஞ்சல் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் பல பிரிவினர்  வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலதிக எதிர்ப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி ஆண்டின் முதல் நாளான செப்டம்பர் 17 அன்று ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புக்கள் விடப்படுள்ளன.

அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை பெப்ருவரி மாதம் பாரிய வேலைநிறுத்தங்களை மூலம் அகற்றியபின், எகிப்தில் தொடர்ந்திருக்கும் சர்வாதிகாரத்தினை எதிர்த்த முக்கிய சக்தியாக தொழிலாள வர்க்கம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஏழு மாதங்கள் நேரடி இராணுவ ஆட்சிக்குப் பின், இராணுவம் புரட்சியை பாதுகாக்கும், மற்றும் ஒரு ஜனநாயக மாறுதலுக்குபொறுப்பேற்கும் என்னும் நப்பாசைகள் சிதைந்துவிட்டன. SCAF எனப்படும் ஆயுதப்படைகளின் தலைமைக்குழு முபாரக் ஆட்சியின் விரிவாக்கமாகத்தான் பரந்தளவில் கருதப்படுகிறது.

ஞாயிறன்று, எகிப்தின் இராணுவ ஆட்சியாளர்கள் அவசரகாலச் சட்டங்கள் நீடிக்கப்படும் என அறிவித்தனர். இச்சட்டம் அகற்றப்பட வேண்டும் என்பதே புரட்சியின் மத்திய கோரிக்கையாக இருந்தது. இராணுவக்குழு இந்த வசந்தகாலத்தில் வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டம் செயல்படுத்தப்படும் என அச்சுறுத்தியிருந்தது, ஆனால் அதைப் பயன்படுத்தும் தைரியத்தைக் கொண்டிருக்கவில்லை.

இஸ்ரேலிய அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் இறந்தும், 1,000க்கும் மேற்பட்டோர் காயமுற்றதுமான வெள்ளியன்று இஸ்ரேல் துதரகத்திற்கு எதிராக எதிர்ப்பை காட்டியவர்கள் மீது கையாளப்பட்ட வன்முறை ஏகாதிபத்தியத்தின் முகவர் என்னும் முறையில் இராணுவ ஆட்சிக்குழுவின் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இஸ்ரேலுடன் சேர்ந்து, எகிப்து அமெரிக்க வெளிநாட்டு நிதியுதவியை அதிகம் பெறுகிறது. எகிப்தின் ஆளும் தளபதிகள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் பல தசாப்தங்கள் நெருக்கமாக உழைத்து வருகின்றனர்.

தொடரும் எதிர்ப்புக்கள் தொழிலாள வர்க்கத்தை அனைத்து ஸ்தாபனமயப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து பிரித்துள்ள அரசியல் பிளவை எடுத்துக்காட்டுகின்றன. இச்சக்திகள் அனைத்தும் அவை இஸ்லாமியவாதிகளாயினும், தாராளவாதம் அல்லது போலி இடதுகளாயினும் அவை இராணுவம் குறித்து நப்பாசைகளையே வளர்க்கின்றன. முபாரக்கின் தளபதிகள் ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை நிறுவுவர் என்று கூறுகின்றனர். இப்பொய்களின் நோக்கம் எகிப்திய தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்கி, அதன் சொந்த அமைப்புக்கள் மற்றும் கட்சிகளை அமைப்பதை தடுப்பது, மற்றும் இராணுவ ஆட்சியை அகற்ற போராடுவதையும் மற்றும் அதிகாரத்தை தன் கைகளிலேயே அது எடுத்துக் கொள்ளுவதை தடுத்தல் என்பதாகும்.

இராணுவ ஆட்சிக்கு இக்கட்சிக்ள் ஆதரவு என்பதற்குப் பின்னணியில் ஆழ்ந்த சமூக, பொருளாயாத நலன்கள் உள்ளன. அவை ஆயுதப்படைகளின் தலைமைக் குழுவை எகிப்திய முதலாளித்துவ அரசாங்கத்தின் முதுகு எலும்பு, ஆளும் வர்க்கத்தின் சலுகைகளை பாதுகாக்கும் என்று கருதுகின்றன. இதில் முக்கியமாக மத்தியதர வர்க்கம், போலி-இடது கட்சிகள் எகிப்திய சோசலிஸ்ட் கட்சி (ESP), தொழிலாளர்கள் ஜனநாயக கட்சி (WDP), புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) போன்றவை உள்ளன. இவை அனைத்தும் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பயனற்ற விமர்சனங்களை வெளியிட்டு, அதே நேரத்தில் மக்கள் எதிர்ப்பை அரசு தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என முனையும் பயனற்ற முறையீடுகளாக திசைதிருப்புகின்றன.

இராணுவ ஆட்சி அகற்றப்படுவதற்கு அவை ஆழ்ந்த விரோதப் போக்கைக் கொண்டுள்ளன. அதேபோல் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கான போராட்டத்தையும் எதிர்க்கின்றன. ஜூலை மாதம் நடைபெற்ற கடைசி சுற்று வெகுஜனப் போராட்டங்களின்போது, புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் மக்களின் இரண்டாம் புரட்சிக்கானகோரிக்கைகளை நேரடியாக எதிர்த்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. இராணுவ ஆட்சி அகற்றப்படுவதை தடுக்கும் வகையில் இந்தப் போலி இடது குழுக்கள் ஐக்கிய மக்கள் முன்னணிஎன அழைக்கப்படும் கூட்டில் தாராளவாத, இஸ்லாமியக் குழுக்களுடன் நுழைந்து, ஆகஸ்ட் 1ம் தேதி தஹ்ரிர் சதுக்கத்தில் எதிர்ப்பாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு வழிவகுத்தன.

இக் குழுக்கள் சோசலிசக் கொள்கைகளுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கிவில்லை. இவை ஒரு சிறிய, வசதிபடைத்த மத்தியதர வகுப்பு அடுக்கின் நலன்களைப் பிரதிபலிக்கின்றன, அதாவது செய்தியாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என அரசியல் ஆளும்தட்டுடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்பவர்கள், அவர்களுடைய தலைவர்கள் சர்வதேச செய்தி ஊடகத்திற்கு உழைக்கின்றனர், தோளோடு தோள் முஸ்லிம் சகோதரத்துவம் இன்னும் பிற முதலாளித்துவ அமைப்புக்களுடன் இணைந்துள்ளதுடன், விளம்பரம், வருமானங்கள் ஆகியவற்றை எளிதில் பெறுகின்றனர். அவர்கள் இப்பொழுது சுயாதீன தொழிற்சங்கங்கள்கட்டமைக்கப்படுவதில் ஆதாயம் காண முற்படுகின்றனர். இதற்கு மேலை அரசாங்கங்கள், அரசு சாரா அமைப்புக்கள் ஆகியவற்றின் நிதி கிடைக்கிறது. இதனால் தொழிலாளர்களின் போராட்டங்களை நெரிக்க ஒரு புதிய அதிகாரத்துவம் தோற்றுவிக்கப்படும்.

புரட்சியின் அனுபவம் தொழிலாளர்களின் சமூக நீதி மற்றும் உண்மையான ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கைகள் இராணுவ ஆட்சி, அதைக்காக்கும் அனைத்துப் பிரிவுகளுக்கும் எதிரான முழு உணர்வுடன் கூடிய புரட்சிகரப் போராட்டத்தின் மூலம்தான் சாதிக்கப்பட முடியும் என்று காட்டுகிறது. வேலைநிறுத்த இயக்கத்திற்கு சாத்தியமான ஒரே முன்னோக்கு அவ்வியக்கத்தை ஒரு பொது வேலைநிறுத்தமாக விரிவுபடுத்தி, இராணுவ ஆட்சியை வீழ்த்தி அதற்குப் பதிலாக சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்தை நிறுவுதல்தான்.

உலக முதலாளித்துவம் 193களுக்குப் பின்னர் மிகப் பெரிய நெருக்கடியில் இன்னும் தீவிரமாக ஆழ்கையில், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்திற்கான நிலைமைகள் சாதாகமாகப் பெருகுவது என்பது மட்டுமின்றி, அத்தகைய அமைப்பிற்குப் போராடுவது என்பது அதிகரித்தளவில் ஒரு நடைமுறைப் பணியை முன்வைக்கின்றது. எகிப்திய புரட்சி எழுப்பியுள்ள பிரச்சினைகளை எகிப்து மட்டுமே தீர்ப்பது என்பது இயலாத செயல் ஆகும்.

சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆளும் வர்க்த்திற்கு எதிரான போராட்டத்தில் நுழைகிறது. இஸ்ரேலில் தொழிலாள வர்க்கம் பிரதம மந்திரி பெஞ்சமின் நேடன்யாவிற்கு எதிராக பாரிய எதிர்ப்புக்களில் வெளிப்பட்டுள்ளது. இன்னும் அடிப்படையில் இஸ்ரேலிய வாழ்வு பில்லினியர்களின் தன்னலக்குழுவில் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பதற்கு எதிராக எனலாம். யூதத் தொழிலாளர்கள் தங்கள் அரபுச் சகோதரர்களுடன் ஜனநாயக, சமூக உரிமைகளுக்கான ஒரு பொதுப் போராட்டத்திற்கு கைகோர்த்து இணையத் தொடங்கிவிட்டனர்.

ஐரோப்பாவில் தொழிலாளர்களும் இளைஞர்களும் நிதியச் சந்தைகளுக்கு முற்றிலும் தாழ்ந்த வகையில் அரசாங்கங்கள் சுமத்தியுள்ள பேரழிவு தரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுகின்றனர். அமெரிக்க தொழிலாளர்கள் இந்த ஆண்டு விஸ்கோன்சினில் சமூகநலச் செலவுக் குறைப்புக்களுக்கு எதிராக பாரிய எதிர்ப்புக்களை தஹ்ரிர் சதுக்க எதிர்ப்புக்கள் கொடுத்த ஊக்கத்தோடு நடத்தினர்.

அதே நேரத்தில் ஏகாதிபத்தியத்தின் சர்வதேச போர் மற்றும் சமூகப் பிற்போக்குத்தனத்திற்கான உந்துதல் இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் அப்பட்டமாகியுள்ளது. நேட்டோ ஒரு வளைந்துகொடுக்கும் கைப்பாவை ஆட்சியை லிபியாவில் நிறுவி, நாட்டை மேற்கத்தைய பெருநிறுவனங்களின் நலன்களுக்குச் சூறையாடவும், நாடு எதிர்ப்புரட்சிச் சூழ்ச்சிகளுக்குத் தளமாக உதவும் வகையிலும் செயல்பட உதவுகிறது

தன் புரட்சிகரப் போராட்டத்தை நடத்தவும் புரட்சிகர வர்க்க ஒற்றுமைக்குச் சர்வதேச வகையில் அழைப்புவிடுவதற்கும் எகிப்தியத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த போராட்ட அமைப்புக்களைக் கட்டமைக்க வேண்டும்.

1917 ரஷ்ய புரட்சியின்போது, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் போல்ஷிவிக் கட்சியின் அரசியல் செல்வாக்கின்கீழ், தொழிலாள வர்க்கம் தொழிலாள வர்க்கப் புரட்சி மற்றும் அரசாங்க அதிகாரத்தின் அமைப்புகளான சோவித்துக்களை (குழுக்களை) நிறுவியதுபோல்ஷிவிக்குகள் இப்படி ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தினை முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை அகற்றுவதற்கும் ஒரு தொழிலாள வர்க்க அரசாங்கத்தை நிறுவுவதற்கும் இட்டுச்சென்றனர்.

அத்தகைய தொழிலாளர்கள் அமைப்புக்கள் இல்லாத நிலை, அத்தகைய புரட்சிகரக் கட்சி இல்லாத நிலை, இக்கட்டத்தில் முதலாளித்துவம் அரசாங்க அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கும் உற்பத்திச் சக்திகள் மீதான கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளவும், ஒரு எதிர்ப்புரட்சியைத் தயாரிக்கவும் உதவியுள்ளது. ஒரு புதிய புரட்சிகரத் தலைமையை கட்டமைப்பதுதான் மிக முக்கியமான பிரச்சினை; இது தொழிலாள வர்க்கத்திற்கு முழு புரட்சிகர, சர்வதேச வேலைத்திட்டம், மூலோயம் ஆகியவற்றைக் கொடுத்து ஊக்குவிக்கும்.

அத்தகைய முன்னோக்கை முன்வைக்கும் ஒரே போக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுதான் (ICFI). இது லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நிரந்தரப் புரட்சிக் கோட்டபாட்டின் மரபியத்தை ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினர் காட்டிக் கொடுப்பில் இருந்து பாதுகாக்கிறது. எகிப்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவைக் கட்டமைக்குமாறு நாம் தொழிலாளர்களை வலியுறுத்துகிறோம். அது உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக மத்திய கிழக்கில் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக போராடும்.