World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government holds belated local council elections

இலங்கை அரசாங்கம் காலங்கடந்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்துகிறது

By Vilani Peiris
13 September 2011

Back to screen version

இலங்கை அரசாங்கம் 17 மாநகர சபைகள் உட்பட 23 உள்ளூராட்சி சபைகளுக்கு ஆக்டோபர் 8 அன்று தேர்தல் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பு மாநகர சபை உட்பட இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் முன்னதாக நாட்டின் அவசரகாலச் சட்டத்தின் கீழ் எதேச்சதிகாரமான முறையில் ஒத்திவைக்கப்பட்டன.

உள்ளூராட்சி சபை தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படாவிட்டாலும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பு மாநகர சபையை எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து வெற்றி பெறுவதற்காக பெரும் பிரச்சாரமொன்றை முன்னெடுத்துள்ளது. ஒரு சில ஆண்டுகளைத் தவிர கடந்த ஆறு தசாப்தங்களில் அதிக காலம் ஐக்கிய தேசியக் கட்சியே (யூ.என்.பீ.) இந்த மாநகர சபையில் அதிகாரத்தில் இருந்தது.

தலைநகரின் வர்த்தக மையங்களையும் மற்றும் அதைச் சூழ உள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஜனாதிபதி இராஜபக்ஷ கொண்டுள்ள உறுதிப்பாடு, மாநகரை தெற்காசியாவின் பிரதான நிதிய மற்றும் சுற்றுலாத்துறை மையமாக மாற்றுவதற்கான அவரது திட்டத்துடன் பிணைக்கப்பட்டதாகும். அவரது அரசாங்கம், சொத்துக்களை நிர்மாணிப்பவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வழியமைப்பதற்காக ஏற்கனவே குடிசைகளில் வாழ்கின்ற 75,000 குடும்பங்களை வெளியேற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது.

மத்திய கொழும்பை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக சுதந்திர முன்னணி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2008 அக்டோபரில் அரசாங்கம் மோசடி குற்றச்சாட்டுக்களை சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு யூ.என்.பீ. சார்பு சபையை பதவி விலக்கியதோடு சபை விவகாரங்களை நிர்வகிக்க ஒரு விசேட ஆணையாளரை நியமித்தது. சுதந்திர முன்னணி அதைத் தொடர்ந்து குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கும் நிலங்களை விற்பதற்கும் பொறுப்பான, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் காணி அபிவிருத்தி அதிகார சபையையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருப்பது ஜனாதிபதியின் சகோதரர் கோடாபய இராஜபக்ஷவாகும். அரசாங்கத்தின் திட்டங்களை நியாயப்படுத்திய அவர், கொழும்பில் பெறுமதியான காணிகளையும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதான கால்வாய்களையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள 75,000 குடும்பங்களை வேறு இடங்களில் குடியேற்றுவது அவசியம் என அறிவித்தார். உலக முதலீட்டாளர்களை ஈர்க்கக் கூடிய வகையில் நகரை அபிவிருத்தி செய்வதோடு அதை ஒரு அழகான தலை நகராகவும் ஆக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார். 

தனது திட்டத்தின் பாகமாக, அமைச்சரவை கடந்த மார்ச்சில், மத்திய கொழும்பு மற்றும் அதை அண்டிய கோட்டே, தெஹிவளை-கல்கிஸ்சை, கொலன்னாவ, கொடிகாவத்த-முல்லேரியா ஆகிய நான்கு சபைகளையும் உள்ளடக்கும் வகையில், கொழும்பு தலைநகருக்குரிய மாநகர கூட்டுத்தாபனம் (CMCC) என்ற ஒரு புதிய அதிகார சபையை ஸ்தாபிக்க அங்கீகாரமளித்தது. சி.எம்.சி.சி.யை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு ஆளுநர் நிர்வகிப்பதோடு அதை உள்ளடக்கிய சபைகளில் இருந்து பிரதிநிதிகளையும் கொண்டிருக்கும். இதன் விளைவு, தேர்வு செய்யப்பட்ட சபைகள் கீழறுக்கப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ள ஆளுனர்களின் கைகளில் கணிசமான அதிகாரங்கள் குவிக்கப்படுவதாக இருக்கும்.

தேவையான சட்டத்தை இன்னமும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்காததோடு, உள்ளூராட்சி சபை தேர்தல்கள் முடியும் வரை சி.எம்.சி.சி.யை ஸ்தாபிப்பதை தாமதித்து வருகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. கொழும்பு தேர்தலில் ஒரு எதிர் தாக்குதல் வரக்கூடும் என்பதையிட்டு சுதந்திர முன்னணி கவலை கொண்டுள்ளது. மாநகரின் 395,000 வாக்காளர்களில் பெரும்பான்மாயானவர்கள் குடிசை வாசிகளும் ஏனையோர் குறைந்த வருமானம் பெறுபவர்களுமாவர்.

இதே போல், அரசாங்கம் 2010 மே மாதம் முதலில் அறிவிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட மக்கள் வெளியேற்றத்தின் பெரும் பகுதியை காலம்தாழ்த்தி வருகின்றது. இதுவரை நகர அபிவிருத்தி அதிகாரசபை (யு.டி..) 150 குடும்பங்களை வெளியேற்றியுள்ளதோடு சுமார் 15 கடைகளை தகர்த்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் போது குடியிருப்பாளர்களின் சீற்றம் நிறைந்த எதிர்ப்பை நசுக்குவதற்காக அது பொலிசையும் இராணுவத்தினரையும் நிலை நிறுத்தியது. கொம்பனி தெரு மற்றும் வனாதமுல்ல, மற்றும் புளூமென்டல்-கொலன்னாவ ரயில் பாதை அருகிலும் உள்ள 2,500 வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு யு.டி.. அறிவித்தல் கொடுத்துள்ளது.

வேறொரு நடவடிக்கையில், அரசாங்கம் மாநகர மையத்தை அழகுபடுத்தும் தனது திட்டத்தின் பாகமாக, கொழும்பில் இருந்து சுமார் 6,000 நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தியுள்ளது. பல போராட்டங்களின் பின்னர் 1,000 பேருக்கு மட்டும் வியாபாரம் செய்வதற்காக வேறு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்து ஒரு வாரமே ஆன நிலையில், ஆகஸ்ட் 30 அன்று, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமானது புளூமென்டல் பகுதியில் இருந்து 30 குடும்பங்களை அகற்றுவதற்காக நீதிமன்ற உத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளது, ஆனால் இன்னமும் அதை நிறைவேற்றவில்லை. தேர்தல் முடிந்த உடனேயே அரசாங்கம் வெளியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தத் திட்டங்களின் வர்த்தக-சார்பு நோக்கத்தை சுதந்திர முன்னணியின் கொழும்பு மேயருக்கான வேட்பாளர் மிலிந்த மொறகொட கோடிட்டுக் காட்டினார். முன்னாள் அமைச்சரவை அமைச்சரான மொறகொட, தீவின் செல்வந்தர் தட்டினைச் சேர்ந்தவராவார். அவர், நிதிச் சேவைகளில், வியாபாரத் தந்திரங்களில் மற்றும் சொத்து நிர்மாணிப்புகளில் பரந்த வர்த்தக நலன்களைக் கொண்ட மற்றும் பல்வேறு பல்தேசிய கூட்டுத்தாபனங்களுடன் உறவு வைத்துள்ள, குடும்பத்துக்குச் சொந்தமான மேர்கன்டைல் மேர்சன்ட் வங்கியின் ஸ்தாபகத் தலைவராவார். அரசாங்கம் இவரை தெரிவு செய்துள்ளதன் மூலம், பெரும் வர்த்தகர்களுக்கும் மற்றும் மத்தியதர வர்க்க தட்டினருக்கும் வேண்டுமென்றே அழைப்பு விடுக்கின்றது.

வெளியேற்றங்கள் தொடர்பான கேள்விகளை வேண்டுமென்றே தட்டிக்கழித்த மொறகொட, குடிசைவாசிகளை கொழும்பில் இருந்து வெளியேற்றும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று வாக்காளர்களுக்கு பொய் சொல்வதோடு, “அங்கேயே [அதே காணிகளில்] அல்லது அதை அண்டிய சூழலில் அவர்களுக்கு மீண்டும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் வாக்குறுதியளிக்கின்றார். அதே சமயம் தான் கொழும்பைவர்த்தக முதலீட்டாளர்களுக்கு சினேகமானதாகவும் மற்றும் ஒருபொருளாதார மையமாகவும் மாற்றுவதாக கூட்டுத்தாபன தட்டுக்களுக்கு வாக்குறுதியளிக்கின்றார்.

சுகாதார வசதிகளை மேம்படுத்துவதாகவும் இளைஞர்களுக்கு புதிய உற்பத்தி வசதிகளையும் ஏற்படுத்துவதாகவும் மொறகொட வாக்கறுதியளிக்கின்றார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இளைஞர்களின் வேலையின்மை கிட்டத்தட்ட 18 வீதமாக அதிகரித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பிற்கு அதிக நிதியைச் செலவிடுவதற்கு மாறாக, அரசாங்கம் வரவு செலவு பற்றாக்குறையில் பெரும் குறைப்பை ஏற்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றும் அதன் முயற்சிகளின் பாகமாக, உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்துள்ளது.

யூ.என்.பீ. மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) போன்ற எதிர்க் கட்சிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் அடிப்படை வேறுபாடுகள் கிடையாது. யூ.என்.பீ. 2004ல் இருந்து தனக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விகளில் இருந்து தலையெடுப்பதற்காக கொழும்பு சபைக்கான தேர்தலில் வெற்றி பெற மூர்க்கமாக முயற்சிக்கின்றது. ஒரு முன்னணி யூ.என்.பீ. புள்ளியான அதன் மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம். முஸம்மில், கொழும்புக்கான ஒரு புதிய நகர திட்டத்தை அறிவித்துள்ள அதே சமயம், கொழும்பு குடியிருப்பாளர்கள் நகரை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள் என வாக்குறுதியும் கொடுக்கின்றார்.

சுதந்திர முன்னணியைப் போலவே யூ.என்.பீ.யின் வாக்குறுதிகளும் போலியானவை. இலங்கையின் மிகப் பழைய முதலாளித்துவக் கட்சியான யூ.என்.பீ., 1977ல் பெரும் வர்த்தகர்களின் சந்தை-சார்பு திட்டத்தை ஆரம்பித்தமைக்கும், அதன் மூலம் சேவைகளை ஈவிரக்கமின்றி வெட்டிக் குறைத்து, அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தியதோடு தொழில்களையும் வாழ்க்கை நிலைமைகளையும் அழித்தமைக்கும் பொறுப்பாளியாகும்.

கொழும்பில் அதனது குடிசைகளை அகற்றும் திட்டங்களின் பாகமாக பலாத்காரமாக மக்களை வெளியேற்றியமைக்கு யூ.என்.பீ.யும் பொறுப்பாளியாகும். அது 1983ல் சுகததாச விளையாட்டு அரங்கை கட்டுவதற்காக 243 குடும்பங்களை வெளியேற்றியது. அவற்றில் 100 குடும்பங்கள் வரை 1985ல் மட்டக்குளியில் மீண்டும் குடியேறியுள்ளன. 1992-94ம் ஆண்டுகளில், 1,500 குடும்பங்கள் வெள்ளவத்தையில் இருந்து வேறு பிரதேசங்களுக்கு பலாத்காரமாக அனுப்பப்பட்டுள்ளன. அது கொழும்பு மாநகர சபையை கட்டிப்பாட்டில் வைத்திருந்த தசாப்தங்களில், குடிசைவாசிகளை இழிந்த நிலையிலேயே வாழ விட்டமைக்கு யூ.என்.பீ. பொறுப்பாளியாகும்.  

சிங்கள பேரினவாத ஜே.வி.பீ., அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை விமர்சிப்பதை அடிப்படையாகக் கொண்டு தனது பிரச்சாரத்தை தொடுத்துள்ளது. எவ்வாறெனினும் யூ.என்.பீ.யைப் போலவே, ஜே.வி.பீ.யும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தையும் மற்றும் நாட்டின் தமிழ் சிறுபான்மையினர்களுக்கு எதிரான பொலிஸ்-அரச நடவடிக்கைகளையும் முழுமையாக ஆதரித்தது. 2009ல் புலிகள் தோற்கடிக்கப்பட்டதோடு எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டதன் பின்னரே, ஜே.வி.பீ. ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கவலை வெளியிடத் தொடங்கியது.

ஜே.வி.பீ. எப்போதாவது சோசலிசத்தைப் பற்றி குறிப்பிடுவதையும், அல்லது வேலையின்மை பற்றி அல்லது பொதுக் கல்வி மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் பற்றி அது கவலை வெளியிடுவதையும் பார்த்து எவரும் ஏமாந்துவிடக் கூடாது. ஜே.வி.பீ., நீண்ட காலத்துக்கு முன்னரே பெரும் வர்த்தகர்களின் சந்தை-சார்பு திட்டத்தை கட்டி அணைத்துக் கொண்டதோடு சோசலிசத்துக்கான ஒரு மாதிரியாக சீனாவை வெளிப்படையாக பாராட்டியது. 2004ல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஜே.வி.பீ. பங்காளியாக இருந்ததோடு அதன் பெரும் வர்த்தக கொள்கைகளையும் ஆதரித்தது. 2005 ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பீ. இராஜபக்ஷவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களுக்கான ஒரே மாற்றீடு, ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றுக்காகப் போராடுவதே ஆகும். தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே