World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Michigan students denounce Troy Davis execution

மிச்சிகன் மாணவர்கள் ட்ராய் டேவிஸ் மரண தண்டனையை கண்டனம் செய்கின்றனர்

By Tim Tower
24 September 2011

Back to screen version

ட்ராய் டேவிஸின் மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு தடை விதிக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து ஜோர்ஜியாவில் புதனன்று இரவு ட்ராய் டேவிஸ் விஷ ஊசி செலுத்தி மிருகத்தனமாகக் கொலை செய்யப்பட்டது குறித்து எழுந்த பெருங்கோபத்துடன் மிச்சிகன், ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

உயிரிழந்தவருக்கு ஆதரவாக உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்ததையும், அவருக்கு ஆதரவான மனுக்களில் நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்டிருந்ததையும் எடுத்துக் கூறி இந்த நிகழ்வு அமெரிக்க குற்றவியல் நீதித் துறையின் பகல்வேடத்தையும் மிருகத்தனத்தையும் அம்பலப்படுத்தியிருப்பதாக மிச்சிகன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மக்களிடம் விளக்கினர்.

அரசியல் வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் அநீதியும் பிற்போக்குத்தனமும் பெருகி வருவதைக் கண்டு வெகுண்ட சில மாணவர்கள் தன்னெழுச்சியாகத் தான் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள்ட்ராய் டேவிஸுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் என்ற தலைப்பிலான அறிக்கையை விநியோகித்தனர். இது கூடியிருந்தவர்களிடையே பெரும் ஆர்வத்தைப் பெற்றது.

மரண தண்டனை நிறைவேற்ற நேரம் நெருங்க நெருங்க, நூலக அறிவியலில் முதுகலைப் படிப்பு பயின்று வரும் ஜெஃப் இவர்சனுக்கு திகிலும் வெறுப்பும் பற்றிக் கொண்டது. தனது கோபத்தைப் பகிர்ந்து கொள்ளும் சக மாணவர்களின் கூட்டத்தை எதிர்பார்த்து பிரதான வளாக மையமான டியாக் என்று அழைக்கப்படுகிற ஒரு பிளாசாவுக்கு அவர் சென்றார்.

நடப்பது குறித்து கோபமடைந்து ஒரு ஆர்ப்பாட்டம் இருக்குமென எதிர்பார்த்தேன் என்றார் அவர். ஆனால் அப்படி எந்த ஆர்ப்பாட்டமும் நடக்கவில்லை. “பின் வீட்டுக்குப் போய் ஒரு அட்டை தயாரித்தேன்....ஆதரவாக ஏராளமானோரைத் திரட்டிக் கொண்டு வந்தேன்....அதன்பின் எஞ்சிய இரவு முழுவதும் கிறிஸ் என்கிற மனிதருடன் இங்கே நின்று கொண்டிருந்தேன்.”

நீதித்துறையின் இந்தக் கேலிக்கூத்து கருத்துக் கூறப்படாமல் கடந்து செல்லப்படுவதை என்னால் அனுமதிக்க முடியவில்லை என்று ஜெஃப் கூறினார். “எதுவும் செய்யாமலிருப்பது பொறுப்பான விடயமாக எனக்குத் தெரியவில்லை எந்த வழக்கிலுமே மரண தண்டனை கூடாது என்கிறேன் நான், அதிலும் குறிப்பாக இந்த வழக்கில், ஏனென்றால் ட்ராய் டேவிஸ் நிரபராதியாக இருப்பதற்கு உண்மையில் அதிகமான சாத்தியம் உள்ளது.”

நான் நூலக அறிவியல் படிப்பதற்குக் காரணமே மக்கள் தங்களுக்குத் தாங்கள் உதவிக் கொள்வதற்கான உதவியை என்னால் வழங்க முடியும் என்பதற்காகத் தான். டெட்ராயிட்டில் நூலகங்களை மூடுவதால் நமது மிக ஏழ்மைப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு தகவல்களுக்கான அணுகல் தடைப்படுகிறது. டிஜிட்டல் பிரிவினை என்னும் கருத்து எங்கள் துறையில் அடிக்கடி நாங்கள் விவாதிக்கிறோம். கூடுதலான தகவல்கள் டிஜிட்டல்மயமாக ஆக, அதிகமான அளவில் தகவல்களுக்கான அணுகல் என்பது அனைவரும் பகிர்ந்து கொள்ளும் ஒரு உரிமையாக இருப்பதைக் காட்டிலும் பணக்காரர்களின் ஒரு சிறப்புரிமையாக ஆகி விடுகிறது.”

எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது என்கிறார் ட்ராய் டேவிஸ் வழக்கை இரண்டு வருடங்களாய் பின் தொடர்ந்து வரும் கான்ஸ்டன் ஜேம்ஸ். தனது தந்தையுடன் சேர்ந்து அவர் டேவிஸ்க்கு ஆதரவு திரட்டி வந்தார். அரசியல்வாதிகளுக்கும் அமெரிக்க நீதித் துறை அதிகாரிகளுக்கும் கடிதங்கள் எழுதியுள்ளார். உலகமே பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள் என்றே நான் நம்பினேன் என்றார் அவர். “ஆனால் நீதி அமைப்பு பொருட்படுத்தாமல் முன்சென்று அவரைக் கொலை செய்து விட்டது.”

நடந்த விடயம் இவர் தன்னுடைய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வதற்குத் தள்ளியிருக்கிறது. “நாங்கள் அவர்களிடம் மண்டியிட்டி கெஞ்சிக் கொண்டிருந்தோமோ என்று தோன்றுவதாக கான்ஸ்டன்ஸ் கூறினார். “ஆனால் ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கைக்கான உரிமை உள்ளது. எவரொருவருக்கும் மரணத்தை விதிப்பதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது.”அவர் தாங்கியிருந்த அட்டையில்வாழ்க்கைக்கான ஒரு நிலைப்பாட்டை எடுப்போம் என்று எழுதப்பட்டிருந்தது.

"இது நாள் வரை கெஞ்சிக் கொண்டிருந்தோம், இப்போது ஒரு திடமான முடிவு எடுக்க வேண்டிய சமயம் வந்திருக்கிறது என்றார் அவர். “இது தான் கடைசியாக இருக்கப் போவதில்லை. அவர்கள் ஈராக்கில் ஒரு மில்லியன் மக்களைக் கொன்றிருக்கின்றனர், எல்லாம் இலாபத்திற்காக என்றார் அவர்

அமெரிக்க அரசாங்கம் ஒரு கிரிமினல் ஸ்தாபனம். இந்த நாட்டின் மக்கள் பெருவாரியாக இந்தப் போர்களை எதிர்க்கின்றனர். எங்களுக்கு எந்தத் தீங்கும் இழைத்திராத மக்களின் மரணத்தில் இலாபமீட்ட எங்களுக்கு விருப்பம் கிடையாது. யோசித்துப் பாருங்கள், கதை தலைகீழாய்த் திரும்பி மற்ற நாடுகள் எல்லாம் தங்களது கருத்துக்களை நம் மீது திணித்தால் எப்படி இருக்கும் என்று.”

மற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்த அட்டைகளில், “ட்ராய் டேவிஸுக்கு நடந்தது உங்களுக்கும் நடக்கலாம்”, “நான் தான் ட்ராய் டேவிஸ், நீங்கள் தான் ட்ராய் டேவிஸ், நாம் தான் ட்ராய் டேவிஸ் என்பதான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

வகுப்புகளுக்கு மாறிக் கொண்டிருந்த மாணவர்கள் நின்று இந்த விடயம் குறித்து கேட்டறிந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். பலர் 2008 இல் ஒபாமாவுக்கு வாக்களித்திருந்தனர், அவர்கள் எல்லாம் ஜோர்ஜிய மரண அறையில் நடந்த துயரகரமான செயல்முறைக்கு அவரது உணர்ச்சியற்ற உதாசீனத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஜனாதிபதிகுற்றவியல் நீதி அமைப்பில் துல்லியமும் நேர்மையும் நிலவுவதை உறுதி செய்வதற்குஉழைத்ததாகவும் ஆனால் டேவிஸின் வழக்கில் அவர் தலையிட முடியாது, ஏனென்றால் அதுஅரசாங்க வழக்குஎனவும் ஊடகங்களுக்கான செயலரான ஜே கார்னி மூலமாக ஒபாமா ஒரு அறிக்கை விநியோகித்திருந்தார்.

ஆங்கிலத் துறையில் இளநிலைப் பட்டம் பயின்று வரும் ஜேம்ஸ் டலே கூறினார்: “நான் இது குறித்து அதிகமாய் வாசித்திருக்கவில்லை. பொதுவாக மரண தண்டனையை நான் எதிர்க்கிறேன். தவறான நபருக்கு மரண தண்டனை கொடுத்து விடக் கூடும் என்கிற விவாதத்திலும் நான் மரண தண்டனையை எதிர்க்கிறேன். மக்களை மரணத்தில் தள்ளுவது ஒரு அரசாங்கத்திற்கு முறையான செயலாக இருக்காது.” மற்றுமொரு மரண தண்டனை வழக்கில் அரசாங்க சாட்சி பின்னர் பொய் என்று நிரூபணமான ஒரு சம்பவத்தை அவர் மேற்கோள் காட்டினார்.

குழந்தைகளுக்கான உளவியல் துறையில் மூன்றாமாண்டு மாணவராக இருக்கும் ஆம்பர் சாண்டர்ஸ் கூறினார்: “ஆதாரங்களின் பற்றாக்குறை தான் எனக்கு உண்மையிலேயே கவலையளிக்கிறது - பெரும் சந்தேகங்களுக்கு இடையிலேயே அவர் கொல்லப்பட்டார்.” கடந்த காலத்தில்  ஒபாமாவை ஆதரித்து வந்திருக்கும் இவர் இந்த விடயத்தில் ஒபாமாவின் கருத்துகளை முகச்சுளிப்புடன் நிராகரித்தார். “அரசும் குற்றவியல் நீதி அமைப்புமுறையின் ஒரு பாகமே என்றார் அவர். “அரசு மட்டத்தில் ஒரு தவறை உங்களால் திருத்தவியலவில்லை என்றால், தேச மட்டத்திலும் உங்களால் அதனைத் திருத்த முடியாது.”

அவர் மேலும் கூறினார்: “நேற்று உச்சநீதி மன்றம்  அவரது மரண தண்டனைக்கு  இடைக்காலத் தடை விதிக்க மறுத்த போது எனக்கு ஒன்று தெளிவாகி விட்டது, கெஞ்சுவதும் இறைஞ்சுவதும் பயனற்றது என்பது. உலகெங்கும், ஹாங்காங்கில், இங்கிலாந்தில், ஜேர்மனியில், பிரான்சில், அமெரிக்க தூதரகங்களின் முன் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன. மண்டியிட்டு நாங்கள் வேண்டிக் கொண்டிருந்தது போல் தான் கருதுகிறேன்” 

ஒவ்வொரு மனித உயிருக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது. நாம் ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும். நாங்கள் இதனை விட்டு விடப் போவதில்லை. மரண தண்டனை தடைசெய்யப்படும் வரை அதனை மன்னிக்கப் போவதில்லை. இந்த நாட்டில் நடைபெறும் அநீதிகளில் கடலில் ஒரு துளி மட்டுமே இது. மனித உரிமைகளுக்காக என்று பேசுகிறார்கள், ஆனால் ஈராக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்கிறார்கள்.

ஒபாமா தலையிட மறுத்து விட்டார் என்று கேட்டவுடன் எந்த அளவுக்கு எனக்கு மன உளைச்சலானது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. அவமானப்பட வேண்டிய விடயம்!”

அமண்டா ஹில் மனித உடல் இயக்கவியல் (kinesiology )மற்றும் பொது சுகாதாரத் துறையில் முதுகலை பயின்று வருகிறார். அவர் கூறினார்: “தடித்த வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒபாமா ஒரு கோழை என்றே நான் நினைக்கிறேன். அவருக்கு பணக்காரர்களை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். நமது ஊழலடைந்த அரசாங்கம் மற்றும் நீதி அமைப்புமுறையில் ஒரு மனிதனை மரணத்துக்குத் தள்ளும் உரிமை இங்கே யாருக்கு இருக்கிறது?”