World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Palestine and the UN: The dead-end of the “peace process”

பாலஸ்தீனமும், ஐக்கிய நாடுகள் சபையும்: “சமாதான வழிமுறைகளின்" முட்டுச்சந்து

Bill Van Auken
24 September 2011

Back to screen version

ஒரு பாலஸ்தீன அரசை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க கோரி பாலஸ்தீன அதிகாரத்தின் (Palestinian Authority) ஜனாதிபதி மஹ்மத் அப்பாஸ், அவருடைய கோரிக்கையை முன்வைத்து அறிவித்த ஓர் உரைக்காக, வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை எழுந்துநின்று கரகோசம் செய்தது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் செய்யப்பட்ட படுகொலைகள், நாசங்கள் மற்றும் அவமானங்களை விவரித்த வாக்கியங்களும் அந்த உரையில் இடம் பெற்றிருந்த போதினும், வெளியுறவு மந்திரிகள், அரசு தலைவர்கள் மற்றும் ஐ.நா. பிரதிநிதிகள் என அப்பாஸின் உரையை கேட்டதரப்பினர், பாலஸ்தீன மக்களின் முந்தைய ஆறு தசாப்த கால அவலநிலையை உணர்ந்தவர்களாக இல்லை. அவர்களில், குறிப்பாக அரேபிய உலகிலுள்ள பல அரசாங்கங்கள் கூட அதற்கு  உடந்தையாக இருந்தன.

பாலஸ்தீன அரசு அங்கீகரிக்கப்படுவதைத் தடுக்க, வாஷிங்டன் பாதுகாப்பு சபையிலுள்ள அதன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. அதற்கு எதிராக இருந்த விரோதத்தால், அந்த உற்சாகமான விடையிறுப்பு உந்தப்பட்டிருக்கலாம்.

பாதுகாப்பு சபையிலுள்ள நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கவும், அல்லது எதிராக வாக்களிக்கவும் அந்நாடுகளை நிர்பந்திக்க அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களின் ஒரு வெட்கக்கேடான பிரச்சாரத்தை அமெரிக்க அதிகாரிகள் நடத்தினர். எடுத்துக்காட்டாக, அந்த விண்ணப்பத்திற்கு ஆதரவாக போர்ச்சுக்கல் வாக்களித்தால், அந்நாட்டிற்கு வழங்கிவரும் நெருக்கடி-கால பொருளாதார உதவியை அமெரிக்கா நிறுத்திவிடுமென்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பாசாங்குத்தனத்தின் வெளிப்பாடும், அச்சுறுத்தலும், வாஷிங்டன் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கவிருந்த செய்தியை இல்லாதொழிக்கவே உதவியிருந்தது. அதில், லிபிய ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்கா-நேட்டோ யுத்தத்தை புகழ்வதும், மற்றும் இதனை அமெரிக்க ஆதரவிலான பன்முகச்சார்பியத்திற்கும் (multilateralism) மற்றும் "அரேபிய மக்கள் எழுச்சியின்" ஒரு நீட்சிக்கும் கிடைத்த ஒரு வெற்றியாக காட்டுவதுமே அதன் நோக்கமாகும்.

ஒபாமா பொதுச்சபையின் தம்முடைய உரையில் இந்த கருத்துக்களை சேர்த்திருந்த போதினும், பாலஸ்தீனம் மீதான கருத்துமுரண்பாட்டில் அவை மறைக்கப்பட்டுவிட்டதை கசப்பான விரக்தியுடன்   ஒத்துக்கொள்ள அவர் நிர்பந்திக்கப்பட்டார்.

நிஜத்தில், பாலஸ்தீன மக்கள் மீதிருக்கும் இஸ்ரேலின் கொடுங்கோன்மைக்கு வாஷிங்டன் அளித்துவரும் நிபந்தனையற்ற ஆதரவானது, அப்பிராந்தியம் முழுவதிலும் அதன் சூறையாடும் ஒட்டுமொத்த ஏகாதிபத்திய கொள்கையின் ஒரு சிறிய பகுதியாகும். அதன் அத்தகைய கொள்கைகள் எண்ணெய் வளம்மிக்க லிபியாவின் ஆட்சி மாற்ற யுத்தத்தில் அதன் மிகவும் பகிரங்கமான வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. “அரேபிய எழுச்சியை" பொறுத்தவரையில், ஒபாமா நிர்வாகம் இஸ்ரேலுடன் சேர்ந்துகொண்டு, அவர்களின் நெருங்கிய கூட்டாளியான எகிப்தில் முபாரக்கையும், துனிசியாவில் பென் அலியையும் அதிகாரத்தில் நிறுத்துவதற்கு சாத்தியப்பட்ட கடைசி தருணம் வரையில் போராடின. தற்போது அவ்விரு நாடுகளிலும், ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கும் மற்றும் தொழிலாளர்கள், இளைஞர்களின் புரட்சிகர போராட்டங்களைத் நசுக்கும் ஆட்சிகளை உறுதிப்படுத்த அவை வேலை செய்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்திற்கான பாலஸ்தீன ஆணையத்தின் மனுவை தடுக்க ஒபாமா நிர்வாகம் ஏன் நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக உணர்கிறது? ஒரு தீர்விற்கான ஒரே பாதையாக இருக்கக்கூடிய "இருதரப்பு" பேச்சுவார்த்தைகளைத் குழப்பத்திற்கு உள்ளாக்கும் விதத்தில், இந்த "ஒருதலைபட்சமான" நடவடிக்கை "சமாதான வழிமுறைகளுக்கு-" குழிபறிக்கும் என்பதே உத்தியோகப்பூர்வ கதையாகும்.

சமாதான வழிமுறை" என்றழைக்கப்படுவது இரண்டு தசாப்தங்களாக நடந்து கொண்டிருக்கும் ஒரு நாடகமாகும். அது அமைதியையும் உருவாக்கவில்லை அல்லது பாலஸ்தீன மக்களின் எந்த விருப்பங்களையும் கூட பூர்த்தி செய்துவிடவில்லை. மாறாக அது இஸ்ரேலிய அரசின் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை மூடிமறைக்க உதவியுள்ளது. இஸ்ரேலிய அரசு கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் ஜியோனிச குடியேறியவாசிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியதோடு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையிலும் மற்றும் ஜெருசலேமின் இன்னும் கூடுதல் பாகங்களை அதன் கட்டுப்பாட்டில் ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது. இது இராணுவ சோதனை சாவடிகளின் பெருக்கத்தோடும் மற்றும் யூதர்களுக்கு மட்டும் என்ற பாதுகாப்பு சாலைகள் மூலம்  ஒரு தேசிய இருப்பை மட்டும் ஈடுவைத்துள்ளது மட்டுமல்லாது ஆக்கிரமிப்பின் கீழ் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையையே சாத்தியமற்றதாக்கியுள்ளது.

அமெரிக்க தரகின் கீழ் நடக்கும் "சமாதான வழிமுறை" திவாலாகிவிட்டதை ஐக்கிய நாடுகள் சபை மௌனமாக ஒப்புக் கொண்டுள்ள போதினும், அப்பாஸூம் பாலஸ்தீன ஆணையத்தின் முதலாளித்துவ தலைமையும் எவ்வித மாற்றீட்டையும் முன்நிறுத்தவில்லை. மாறாக ஐக்கிய நாடுகள் சபையின் உத்திகள் ஏதேனும் விதத்தில் பேச்சுவார்த்தைகளை மீட்டுயிர்ப்பிக்கும் என்பதில் சிரத்தையற்ற நம்பிக்கையை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

பாலஸ்தீனத்தை ஓர் அங்கத்துவநாடாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டுமானால், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்ட பல தீர்மானங்களில் குறிப்பிட்ட பாலஸ்தீன மக்களின் நிலைமையை மாற்றுவதை தவிர வேறொன்றும் செய்யவேண்டியதில்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும், இராணுவ தாக்குதல்களையும் முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அது வாய்திறக்காது. நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் மில்லியன் கணக்கான பாலஸ்தீனர்கள் மீண்டும் திரும்புவதற்குரிய அவர்களின் உரிமையை அதனால் பாதுகாக்க முடியாது. மேலும் இஸ்ரேலுக்குள் வாழும் 1.5 மில்லியன் பாலஸ்தீனர்களுக்கு சம உரிமையையும் அதனால் வென்று கொடுக்க முடியாது.

அப்பாஸூம், பாலஸ்தீன அதிகாரத்தின் தலைமையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் பாலஸ்தீன மக்களிடையே கொஞ்சநஞ்ச நம்பிக்கையை வென்றெடுக்கும் ஒரு விடாப்பிடியான முயற்சியில் ஐ.நா பக்கம் திரும்பியுள்ளனர். சில விதத்தில், பாலஸ்தீன அதிகாரமானது எகிப்திலும், துனிசியாவிலும் மக்களால் தூக்கியெறியப்பட்ட ஆட்சிகளிலிருந்து மிகவும் வேறுபட்டதல்ல. அமெரிக்காவின் நிதியுதவி பெறும் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு ஒத்துழைத்து வேலை செய்துவரும் ஒரு பரந்த பொலிஸ் இயந்திரத்தை நிர்வகித்து வருகின்ற நிலையில், தேர்ந்தெடுக்கப்படாமலேயே, அது கட்டளைகள் மூலமே  ஆட்சி செய்கிறது. அது பாலஸ்தீன தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை மாறாக வெளிநாட்டு மானியங்கள் மற்றும் ஊழலிருந்து தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொண்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளின் ஒரு சிறிய தட்டை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அல்-ஜசீராவால் வெளியிடப்பட்ட இஸ்ரேலிய-பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளின் ஒரு தசாப்த கால ஆவணங்களின் இரகசிய சுருக்கக்குறிப்புகள், “பாலஸ்தீன செய்தித்தாள்களில்" காட்டப்பட்டதைப் போல, வெளிநாடுகளில் வாழும் பாலஸ்தீனியர்கள் திரும்பி வருவதற்கான உரிமையை மறுத்தும், தோற்றப்பாட்டளவில் கிழக்கு ஜெருசலேமின் அனைத்து பாகங்களையும் கைவிட்டும், ஒரு "யூத அரசாக" இஸ்ரேலிய அந்தஸ்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்ட இனச்சுத்திகரிப்பில் இணைந்தியங்க உடன்பட்டும் பாலஸ்தீன தலைவர்கள் துல்லியமாக ஒட்டுமொத்தமாக சரணடைந்துள்ளனர்.

வாஷிங்டனின் பிடிவாதம் பொதுவாக 2012 தேர்தல்களையும் மற்றும் யூத வாக்குகள்" என்றழைக்கப்படுவதையும் ஆதாரமாக வைத்து விவரிக்கப்படுகிறது. “யூத வாக்குகள்" என்பது அமெரிக்க யூதர்களின் பெரும்பான்மையையோ (அல்லது அந்த விஷயத்தில் இஸ்ரேலில் உள்ள பெரும்பான்மையினரையோ) பிரதிநிதித்துவப்படுத்தாத, மாறாக இஸ்ரேல் அரசியலமைப்பில் உள்ள மிகவும் வலதுசாரி உட்கூறுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த மற்றும் மிதமிஞ்சிய செல்வத்தைக் குவித்திருக்கும் ஜியோனிச பிரிவினை  குறிக்கும் ஒரு வழக்குச் சொல்லாகும். அமெரிக்க இஸ்ரேலிய அரசியல் நடவடிக்கை குழு (AIPAC) போன்ற அமைப்புகள் அமெரிக்காவின் இரண்டு முதலாளித்துவ கட்சிகளின் கொள்கைகள் மீது ஒரு அசுரத்தனமான பாரபட்ச செல்வாக்கைக் கொண்டிருக்க முயல்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எவ்வாறிருந்தபோதினும், அங்கே உள்ளார்ந்த மிகவும் அடிப்படையான நலன்கள் உள்ளன. இஸ்ரேல் அரை நூற்றாண்டிற்கும் மேலாக மத்தியகிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டிற்கு ஒரு கொத்தளமாக இருந்து உதவியுள்ளது. அனைத்திற்கும் மேலாக, 1978இல் மெனாசெம் பெகின் (Menachem Begin) மற்றும் அன்வர் சதாத்தால் (Anwar Sadat) கையெழுத்திடப்பட்ட கேம்ப் டேவிட் உடன்படிக்கை வரையில் அனைத்து வழிகளிலும் சென்று திரும்பிப் பார்த்தால், “சமாதானத்திற்கான" பேச்சுவார்த்தைகளில் வாஷிங்டன் ஒருவித "நேர்மையான தரகராக" சேவை செய்வதாக காட்டப்படும் பாசாங்குத்தனமானது, அப்பிராந்தியத்தில் அதன் நலன்களை அதிகரிக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு கருவியை அளித்துள்ளது.

அரசாக-ஆக்குவதில் ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பிற்கு அமெரிக்கா காட்டும் விரோதமானது, “சமாதான வழிமுறை" என்றழைக்கப்படுவதன் மீது அதற்கிருக்கும் ஏகபோகத்தைத் தக்கவைப்பதில் அது தீர்மானமாக இருப்பதின் பெரும் பகுதியால் உந்தப்பட்டுள்ளது. முக்கியமாக, பிரெஞ்ச் ஏகாதிபத்திய மற்றும் லிபியாவிலுள் Total Oil நிறுவனத்தின் நலன்களை முன்னெடுக்க யுத்தவிமானங்களையும், ஏவுகணைகளையும் பயன்படுத்துவதில் முனைப்பாக இருந்த பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி, அமெரிக்காவால் நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டன என்பதற்கும், அவரின் சொந்த பிரெஞ்ச் தீர்வை முன்னெடுப்பதற்கும் பாலஸ்தீனத்தை அரசாக-ஆக்கக் கோரும் விண்ணப்பத்தின் மீதான நடந்த விவாதத்தைப் பயன்படுத்தினார்.

ஒருபுறம் பாலஸ்தீன அதிகாரத்தில் ஆளும் கோஷ்டி நலன்களால் உந்தப்பட்டும், மறுபுறம் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளால் உந்தப்பட்டிருக்கும் பாலஸ்தீன அரசாக்கத்தின் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் விவாதமானது, பாலஸ்தீன மக்களின் ஜனநாயக மற்றும் சமூக தேவைகளைப் பாதுகாப்பதோடு சிறிதும் சம்பந்தப்பட்டதல்ல. முடிவில், அவை புரட்சிகர போராட்ட வழிமுறைகளினால் மட்டுமே அடையப்பட முடியும்.

துனிசியாவிலும், எகிப்திலும் பரந்த எழுச்சிகளை தோற்றுவித்த உலக முதலாளித்துவத்தின் தீர்க்கமுடியாத நெருக்கடி, இஸ்ரேலிலும் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பிராந்தியங்களிலும் கூட அதிகரித்துவரும் எழுச்சிகளுக்கு எண்ணெய் ஊற்றி வருகின்றன. அவை இஸ்ரேலிலேயே சமூக நிலைமைகளின் மீது பரந்த நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களில் சமீபத்தில் எதிரொலித்தன. ஒரு பொதுவான சோசலிச மற்றும் சர்வதேச வேலைதிட்டத்தின் அடிப்படையில், சர்வதேச அளவில் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக மத்திய கிழக்கின் சோசலிச கூட்டமைப்பிற்கு போராடுவதில், அரேபிய மற்றும் யூத தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதே தீர்க்கமான கேள்வியாக உள்ளது.