World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US-led conference backs Syrian puppet group, threatens war

அமெரிக்கத் தலைமையிலான மாநாடு சிரியாவில் கைப்பாவைக் குழுவிற்கு ஆதரவு கொடுத்து, போருக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கிறது

By Niall Green
2 April 2012
Back to screen version

ஞாயிறன்று துருக்கிய நகரமான இஸ்தான்புல்லில் கூடிய சிரியாவின் நண்பர்கள் என்று அழைக்கப்படும் நாடுகளின் மாநாடு சிரிய அரசாங்கத்தை உறுதிகுலைத்து அகற்றும் அமெரிக்கப் பிரச்சாரத்தை ராஜதந்திரமுறைகள் மற்றும் நேரடி இராணுவத் தலையீடு என்னும் வகையில் முடுக்கிவிட முற்பட்டது.

ஐரோப்பிய சக்திகள் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க சார்பு நாடுகள் என்று 74 நாடுகள் குழுவின் தலைமையை வாஷிங்டன் கொண்டுள்ளது. இம்மாநாடு முன்னாள் ஐ.நா.பொதுச் செயலர் கோபி அன்னன் சிரியாவில் ஐ.நா. கண்காணிப்புக் குழுவிற்குத் தலைமை தாங்குகையில் நடைபெற்றது; அக்குழுவோ ஒரு போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்து, அரசாங்கத்திற்கும் எதிர்த்தரப்பிற்கும் இடையே உரையாடலைத் தொடக்கும் இலக்குகளைக் கொண்டுள்ளது. சிரிய ஆட்சி அன்னனுடைய சமாதானப் பேச்சுக்களுக்கு இணங்குகிறது, ஆனால் முக்கிய அமெரிக்க ஆதரவு எதிர்த்தரப்புக் குழுக்கள் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டன. 

ஞாயிறன்று நடவடிக்கைகளைத் தொடக்கிய துருக்கிய பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகன் அன்னானுடைய பணிக்குழு சிரிய நண்பர்களால் அசாத்தின் ஆட்சியுடனான அழுத்தங்களை உயர்த்துவதற்கு பயன்படுத்தப்படும், அது வெளிநாட்டு இராணுவத் தலையீட்டிற்கு தளத்தை அமைக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

சிரிய ஆட்சி [அன்னானுடைய பணிக்குழுவுடன்] ஒத்துழைக்காவிட்டால், ஐ.நா.பாதுகாப்புச் சபையானது அதன் பொறுப்பை நிறைவேற்றத் தேவையானதை செய்துவிடும், அதாவது சிரியாவில் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நான் கூறும் தேவையில் உள்ளேன் என்று எர்டோகன் கூறினார். ஐ.நா. பாதுகாப்புச் சபையானது இந்த வரலாற்றுத் தன்மை படைத்த பொறுப்பை மீண்டும் தவிர்த்தால், சர்வதேச சமூகம் சிரிய மக்களின் தற்காப்பு என்னும் உரிமையை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை என்று செயல்படும்.

இதேபோன்ற கருத்தைத்தான் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டனும் மாநாட்டிற்கு தன் உரையில் தெரிவித்தார்; ஜனாதிபதி அசாத்தின் சிரிய அராசங்கம் கோபி அன்னன் உடைய சமாதானப் பேச்சுக்களுக்கான நிபந்தனைகளை கடைப்படிக்காது என்று பிரதிநிதிகளிடம் அவர் கூறினார். கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது, ஆட்சி அதன் நீண்ட முறிக்கப்பட்ட உறுதிமொழிகள் பட்டியலில் மற்றும் ஒரு செயலைத்தான் சேர்த்துள்ளது என்று நாம் முடிவிற்கு வரவேண்டியுள்ளது என்றார் கிளின்டன். உலகம் அசாத்தை அவர் என்ன செய்கிறார் என்பதை வைத்து முடிவிற்கு வரவேண்டுமே ஒழிய என்ன கூறுகிறார் என்பதை வைத்து அல்ல. நாம் இனியும் வெறுமனே உட்கார்ந்து காலம் தாழ்த்த முடியாது.

அமெரிக்க தலைமையிலான சிரிய நண்பர்கள் கூட்டணி இந்த ஆண்டு முன்னதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையை தவிர்க்கும் வகையில் நிறுவப்பட்டது; இது அசாத் ஆட்சிக்கு எதிரான தீர்மானங்களை ரஷ்யா, சீனா ஆகியவற்றின் தடுப்பதிகார வாக்குகளினால் நிறைவேற்ற முடியவில்லை. அந்த இரு அரசாங்கங்களும் வாஷிங்டனின் முயற்சியான சிரிய ஆட்சி மாற்ற நடவடிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டன.

2003ல் ஈராக் மீதான சட்டவிரோதப் படையெடுப்பிற்கு முன் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகத்தின் விருப்பமுடையோர் கூட்டணி என்பதைப்போல், ஒபாமா நிர்வாகமும் சிரிய நண்பர்களின் குழு ஒன்றை அமைத்து, மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் உடைய ஒரு முன்னாள் காலனித்துவ நாட்டிற்கு எதிரான திமிர்த்தன ஏகாதிபத்திய நடவடிக்கையை மூடிமறைக்கும் அத்தி இலையாகப் பயன்படுத்துகிறது.

இஸ்தான்புல் மாநாடானது சிரிய தேசியக் குழு (SNC) உறுப்பினர்களை சிரிய மக்களின் பிரதிநிதிகள் என்னும் முறையில் மாநாட்டில் பங்கு பெற அழைத்திருந்தது. பேச்சுக்கள் தொடங்குமுன் செய்தி ஊடகத்திற்கு கொடுத்த அறிக்கை ஒன்றில், SNC தலைவர் பர்ஹன் கலியௌன் இராணுவ வகையில் சிரியாவிற்குள் மனிதாபிமானத் தாழ்வாரங்கள் நிறுவப்பட வேணடும், எதிர்த்தரப்பிற்கு ஆயுதங்கள் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாங்கள் பலமுறையும் சுதந்திர சிரிய இராணுவத்திற்கு (FSA) ஆயுதங்கள் வேண்டும் என்று கூறிவருகிறோம். சிரிய நண்பர்கள் மாநாடு இக்கோரிக்கைப்படி செயல்படும் என்று விரும்பிகிறோம்.

வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் நன்கு அறிந்துள்ளபடி, SNC மிகவும் பிளவுற்றிருக்கும் ஓர் அமைப்பு ஆகும்; சிரியாவிற்குள் மக்கள் ஆதரவு அதற்கு இல்லை. தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சுதந்திர சிரிய இராணுவம் (FSA) மற்றும் பல இஸ்லாமிய அடிப்படைவாத போராளிக் குழுக்களுடன் சேர்ந்த வகையில் SNC அரசாங்க ஊழியர்கள் மற்றும் கட்டிடங்கள் மீது நடந்துள்ள பல பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புள்ளது எனக் கூறப்படுகிறது; அத்தாக்குதல்கள் குடிமக்களை பலரைக் கொன்றுள்ளது, பலரைக் கடத்தியுள்ளது, சித்திரவதை மற்றும் குறுங்குழுவாத எதிர்ச்சக்திகள் கொலைகள் ஆகியவற்றையும் நடத்தியுள்ளது.

ஆயினும்கூட சிரிய நண்பர்களின் இறுதிக் கூட்ட அறிக்கை SNC க்கு அனைத்துச் சிரிய மக்களின் நெறியான பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தைக் கொடுத்துள்ளது. இப்புதிய விருதிற்கு சர்வதேச சட்டத்தில் எந்தக் கனமும் கிடையாது; ஆனால் SNC ஐ காத்திருக்கும் அரசாங்கம் என்னும் நிலைக்கு உயர்த்தும் ஒரு கருவியாகக் கொள்ளப்படுகிறது; எப்படி 2011ல் லிபியாவில் முயம்மர் கடாபியின் ஆட்சியை நேட்டோ தலைமையிலான போர் மூலம் அகற்றுவதற்கு முன்னதாக அங்கிருந்த எழுச்சியாளர்களின் தேசிய மாற்றுக்கால குழு தகுதி உயர்வைப் பெற்றதோ அதேபோல்.

SNC, FSA இரண்டுமே துருக்கியில் தளம் கொண்டுள்ளன; அப்பிராந்தியத்தின் மற்ற அமெரிக்க சார்பு உடைய அரசாங்கங்களிடமிருந்து ஆயுதங்கள், நிதி உதவி மற்றும் பயிற்சிகளைப் பெற்றுள்ளன, குறிப்பாக சௌதி அரேபியா, கட்டார் ஆகியவற்றிடமிருந்து. கடந்த வாரம் வாஷிங்டன் உத்தியோகபூர்வமாக தான் அசாத் எதிர்ப்புக் கூறுபாடுகளுக்கு ஆயுதம் கொடுக்க இருப்பதாக அறிவித்தது; பேராபத்து இல்லாத ஆயுதங்களும், மிக இலகுரக, நவீன தொடர்புச்சாதனங்களும் அளிக்கப்படும், அவைகள் எதிர்த்தரப்பு போராளிகளுக்கு சிரியாவிற்குள் தங்கள் தாக்குதல்களை ஒருங்கிணைக்க அனுமதிக்கும் என்றும் கூறியது.

SNC க்கு ஒரு அறக்கட்டளை நிதியை நிறுவுதல் குறித்தும் இஸ்தான்புல் மாநாடு விவாதித்தது. ஆனால் பிரதிநிதிகளிடையே பணம் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து கருத்து வேறுபாடு உள்ளது. சௌதி அரேபியாவும் கட்டாரும் எதிர்த்தரப்புப் போராளிகளுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக ரொக்கம் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. வாஷிங்டன் மற்றும் ஐரோப்பியச் சக்திகள் வெளிப்படையாக இதற்கு உறுதி கொடுக்கத் தயங்குகின்றன; மாறாக நிதியம் மனிதாபிமானத் திட்டங்கள் என்று கூறப்படுபவற்றிற்கு வழங்கப்படுவதை விரும்புகின்றன.

அமெரிக்கா மற்றும் ஒரு 12 மில்லியன் டொலர்களை SNC க்கு ஆதரவாகக் கொடுக்கும் என்று கிளின்டன் அறிவித்தார்; அதே நேரத்தில் ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி கைடா வெஸ்டர்வெல்லெ தன் அரசாங்கம் 7.6 மில்லியன் டொலர்களை எதிர்த்தரப்பிற்குக் கொடுக்கும் என்று அறிவித்தார். சௌதி அரேபியா மற்றும் பிற வளைகுடா முடியரசுகள் நிதிக்குப் பல பில்லியன் டாலர் அன்பளிப்புக் கொடுக்கத் தயாரிப்புக்களை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

இப்பணம் சிரிய தேசியக் குழுவிற்குக் கொடுக்கப்படும்; அதன் மூலம் சிரியாவிற்குள் ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்துபவர்களுக்கு அனுப்பப்படும். இக்குழுவின் தலைவர் காலியௌன் கூறினார்: “SNC நிர்ணயிக்கப்படும் ஊதியங்களை அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றவர்கள் என FSA ல் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் பொறுப்பை மேற்கோள்ளும். அதாவது சிரியாவிலுள்ள எழுச்சியாளர்கள் என்போர் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் வளைகுடா ஷேக் ஆட்சிகளின் கூலிபெறும் படையினர்களாக இருப்பர்.

இஸ்தான்புல் மாநாட்டில் SNC ஐ மட்டுமே அங்கீகரித்த வகையில், வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் பிற சிரிய எதிர்தரப்புக் குழுக்களுக்கு நெறி இல்லை என்ற நிலையைக் கொடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக ஒரு எதிர்த்தரப்பு குழுவான தேசிய ஒருங்கிணைப்புக் குழு (National Coordination Committee) என்பது, ரஷ்ய அரசாங்கத்தின் தலையீட்டினால் அசாத் ஆட்சியுடன் பேச்சுக்களை நடத்துவதில் பங்கு பெற்றது, மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை.

ரஷ்யாவும் சீனாவும் சிரியாவின் நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை; இத்தகைய கூட்டம் ஒன்று பெப்ருவரி மாதம் துனீசியாவில் நடந்தபோதும் அதில் பங்கு பெறவில்லை. இஸ்தான்புல்லில் நடைபெற்ற கூட்டத்தைக் கிரெம்ளின், கோபி அன்னன் குழுவின் இராஜதந்திரப் பணியின் செயற்பாடுகளில் இருந்து திசைதிருப்புவது என்று கண்டித்துள்ளது; இது சமாதானப் பேச்சுக்களைக் கொள்வதற்குப் பதிலாக சிரியாவின் உறுதியைக் குலைக்கும் என்றும் கூறியுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சரகத்தின் அறிக்கை ஒன்று சனிக்கிழமை கூறியுள்ளதுபோல், இஸ்தான்புல் கூட்டம் மோதலை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான உரையாடலை நாடவில்லை. மாறாக, வெளித் தலையீட்டுற்குத்தான் இது வழிவகை செய்யக்கூடும்.

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் கடந்த வாரம் வாஷிங்டன், மேற்கு ஐரோப்பியச் சக்திகள் மற்றும் வளைகுடா முடியாட்சிகளானது அசாத் உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் குறுகிய பார்வை உடையவை என்றும் மோதலை நீடிக்கத்தான் உதவும் என்றும் கூறினார்; அதே நேரத்தில் ஐ.நா. ஆதரவுடைய கோபி அன்னன் பணிக்குழுவானது சிரியாவில் உள்நாட்டுப் போரை முழு அளவில் தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு என்றும் வலியுறுத்தினார்.

ஈராக்கிய அரசாங்கம் இஸ்தான்புல் மாநாட்டிற்குப் பிரதிநிதிகளை அனுப்ப மறுத்துவிட்டது. ஈராக்கியச் செய்தித் தொடர்பாளர் அலி மூசாவி AFP  செய்தி நிறுவனத்திடம் கடந்த வாரம் பாக்தாத்  அதன் நடுநிலை பாத்திரத்தை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது, சில நேரம் மத்தியஸ்தர் பங்கு ஏதேனும் ஒரு மாநாட்டில் பங்கு பெறத்தான் வேண்டும் என்று இல்லை எனவும் உள்ளது என்றார்.

வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளில் இருந்து ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றிய வெறித்தனக் குரல்கள் வந்தாலும், சிரியாவிற்கு எதிரான பிரச்சாரம், இஸ்தான்புல் மாநாட்டில் வெளிப்பட்டவை, அசாத்தை அகற்றி அவருடைய பாத்திஸ்ட் ஆட்சிக்குப் பதிலாக ஏகாதிபத்திய நலன்களுக்குத் தாழ்ந்து நடக்கும் ஆட்சியை இருத்த வேண்டும் என்பதுதான். இதுதான் எரிசக்தி செழிப்புடைய மத்திய கிழக்கை மாற்றி அமைக்கும் அமெரிக்க மூலோபாயத்தின் பரந்த தன்மையில் ஒரு பகுதி ஆகும். இதில் இப்பிராந்தியத்திலுள்ள சிரியாவின் முக்கிய நட்பு நாடான ஈரானில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவதும் அடங்கும்.

ஈரானுக்கு எதிராக வாஷிங்டன் போரைத் தயாரிக்கிறது என்பதற்கு அடையாளமாக ஜனாதிபதி பாரக் ஒபாமா வெள்ளியன்று ஈரானிய எண்ணெய், எரிவாயுத் தொழில்துறைக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இவை ஏற்கனவே அமெரிக்க காங்கிரசால் இயற்றப்பட்டுவிட்டன. உலக எண்ணெய் விலைகளில் இதன் பாதிப்பைக் குறைக்கும் வகையில், ஏற்கனவே இந்த ஆண்டு 20 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில், ஒபாமா நிர்வாகம் சௌதி அரேபியாவில் இருந்து எண்ணெய் அதிகம் பெறுவதற்கான ஓர் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

CNN கருத்துப்படி வெள்ளியன்று வெளிவிவகாரச் செயலர் கிளின்டனுக்கும் சௌதி அரசர் அப்துல்லாவிற்கும் இடையே நடந்த பேச்சுக்களில்,  சிரிய நண்பர்கள் கூட்டத்திற்கான தயாரிப்பு என்ற மறைப்பில்,  அரசர் அமெரிக்கப் பொருளாதாரத் தடையினால் ஏற்படக்கூடிய ஈரானிய எண்ணெய் இழப்புக்களை ஈடுசெய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இது சௌதி அரேபியாவை நாள் ஒன்றிற்கு ஒன்றில் இருந்து இரண்டு மில்லியன் பீப்பாய்கள் கூடுதலாக உற்பத்தி செய்ய வைப்பதற்குச் சமமாகும்.