World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India’s government orients towards privatizing water

இந்திய அரசாங்கம் தண்ணீர் தனியார்மயமாக்கலை நோக்கி நகர்கிறது

By Ajay Prakash and Kranti Kumara
30 March 2012
Back to screen version

நாடு முகங்கொடுத்து வரும் கூர்மையான தண்ணீர் நெருக்கடிக்கு ஒரு தீர்வு காண வேண்டியுள்ளது என்ற போர்வையின் கீழ், இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் "2012-தேசிய தண்ணீர் கொள்கை வரைவு" என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தைத் தயாரித்துள்ளது. அது தண்ணீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதியை ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்குவதை ஊக்குவிப்பதை நோக்கி சாய்ந்திருந்தது. சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியால் கொண்டு வரப்பட்ட தண்ணீர் தனியார்மயமாக்கலுக்கான பல திட்டங்கள் உலகம் முழுவதும் ஒரு சமூக பேரழிவாக மாறிப் போயிருக்கும் நிலையில், இந்த கொள்கை முன்னெடுக்கப்படுகிறது. அந்த திட்டங்களின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களும், ஏனைய பெரும் நிறுவனங்களும் தண்ணீர் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைப்புமுறையை பொறிவிற்கு கொண்டு வந்துள்ள நிலையிலும் பெரும் இலாபங்களைக் குவிக்கின்றன

மக்களுக்கு இலவசமாகவும் நம்பகரமாகவும் 24 மணி நேரமும் தண்ணீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைப்புமுறையை வழங்க தேசியளவிலான ஒரு பரந்த துரித வேலைதிட்டத்திற்கு அழைப்புவிடுப்பதிலிருந்து வெகுதூரம் விலகி நின்றிருக்கும் அந்த வரைவுக் கொள்கை தெரிவிப்பதாவது: “இப்போதிருக்கும் நிலைமையைக் கவனத்தில் எடுப்பதும், சட்டங்கள் மற்றும் அமைப்புகளின் ஒரு ஒருங்கிணைத்த அமைப்புமுறையை (overarching system) உருவாக்குவதற்கான கட்டமைப்பை முன்மொழிவதுமே இதன் முதன்மை நோக்கமாகும்..." என்கிறது. [அழுத்தம் சேர்க்கப்பட்டது]   

சட்டங்கள் மற்றும் அமைப்புகளின் ஒரு ஒருங்கிணைந்த  அமைப்புமுறையை" உருவாக்குவதற்கான அந்த முன்மொழிவானது, தண்ணீர் கொள்கை மீதான முடிவெடுக்கும் அதிகாரத்தை மத்தியப்படுத்தும் (centralize) இந்திய அரசாங்க நோக்கத்தின் ஒரு வெளிப்பாடாக உள்ளது. தற்போது தண்ணீர் கொள்கை மீதான முடிவெடுக்கும் அதிகாரம் பெரும்பாலும் மாநில மற்றும் நகராட்சி சட்டவரையறையின் கீழ், அவற்றின் சொந்த கரங்களுக்குள் உள்ளது. இதை மத்தியப்படுத்துவதன் மூலம் கட்டுபாடின்றி பரந்து கிடக்கும் மற்றும் ஒட்டுமொத்தமாக சீரழிந்துள்ள தண்ணீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதியைச் திருத்தியமைப்பதற்கான தீர்வு என்ற பெயரில் அரசாங்கத்தால் "சுதந்திர சந்தை" தீர்வுகளை, அதாவது கட்டணம் வசூலித்தல் மற்றும் தனியார்மயமாக்கலைக் முன்னெடுக்கமுடியும்.    

இந்திய நீர்வள அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அந்த வரைவு ஆவணம், “தண்ணீரை ஒரு பொருளாதார பண்டமாக கையாளப்பட வேண்டியுள்ளது... அதன் துல்லியமான பயன்பாட்டையும் அதன் மதிப்பை உயர்த்திவிடவும் அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டியுள்ளது,” என்று வாதிடுகிறது. அதே நேரத்தில் தண்ணீர் வளத்திட்டங்களின் நிர்வாக, இயக்கம் மற்றும் மேற்பார்வைக்கான  செலவுகளை முற்றாக மீட்டெடுப்பதையும் திணிக்க முனைகின்றது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் மனித இனத்தின் அத்தியாவசியமான இந்த ஆதாரத்தை அதற்கு விலை கொடுத்து வாங்கக்கூடியவர்களுக்கு அளவில்லாமல் கிடைக்கச் செய்யும் ஒரு பண்டமாகவும் விலை கொடுக்க முடியாதவர்களுக்கு அது மறுக்கப்பட்ட ஒன்றாகவும் செய்ய அமைச்சகம் விரும்புகிறது. சந்தை விலை நிர்ணயம் மூலமாக தண்ணீரை பங்கீட்டிற்குட்படுத்தி வினியோகிப்பதன் மூலமாக அது எதை "வீணாக" பயன்படுத்தப்படுகின்றது என்று கூறுகிறதோ அவற்றை வெட்ட அந்த கொள்கை ஒரு சம்மட்டியால் அடிக்கும் (sledhammer) அணுகுமுறையை அறிவுறுத்துகிறது.

அரசு அமைப்புகள் தண்ணீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி போன்றவற்றை வழங்குவதிலிருந்து அவை ஒரு கட்டண நிர்ணய மேற்பார்வையாளராக (Tariff regulator) மாறுவதற்கு அந்த ஆவணம் அழைப்புவிடுக்கின்றது. பொதுமக்கள் நிதியைக் கொண்டு நீர் வினியோக உள்கட்டமைப்பை உருவாக்கி, பின்னர் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீர் தனியார்மயமாக்கல் "கட்டமைப்பின் கீழ்" அறிவுறுத்தப்பட்ட நீண்டகால அடிப்படையிலான குத்தகைக்குவிடும் -இயக்கும்- பராமரிக்கும் ஒப்பந்தத்தின்படி "பொருத்தமான 'அரசு-தனியார் கூட்டுதிட்டங்களிடம்" ஒப்படைக்க அது அழைப்பு விடுக்கின்றது.

நாடு முகங்கொடுக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்குமான ஒரு தீர்வாக தனியார்மயமாக்கல் மற்றும் சந்தைப்படுத்தலை அறிவுறுத்தும் UPAஇன் ஒட்டுமொத்த பார்வையின் ஒரு பகுதியாக அந்த வரைவு ஆவணத்தின் உந்துதல் உள்ளது. “நீர்வள வல்லுனர்கள்" மற்றும் ஏனைய "பங்குதாரர்களோடு" ஆலோசித்த பின்னர் இறுதி ஆவணம் வெளியிடப்பட உள்ளது. கடந்த 18 மாதங்களில் அந்த அரசாங்கம் பல ஊழல்களால் அதிர்ந்து போயுள்ளது. அவை அரசு சொத்துக்கள் எவ்வாறு மலிவு விலையில் பெரிய வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன என்பதை அம்பலப்படுத்துகின்றன.

அந்த முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டால் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் மில்லியன் கணக்கான ஏழைகளின் மீது (இவர்களில் பலர் பயிர் வளர்ப்பிற்கு நீர் பாசனத்தை சார்ந்திருக்கும் விவசாயிகள் ஆவர்) கூடுதல் சுமையை அதிகரிக்கும்

தற்போதைய நிலையில் பெரும்பான்மை இந்தியர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிவறை வசதிகளின்றி உள்ளனர்.

வெறும் 29 சதவீத இந்திய மக்களுக்கு மட்டுமே குழாய் தண்ணீர் வசதி உள்ளது. இருந்தாலும் கூட பெரும்பாலான நேரங்களில் அது நாளொன்றுக்கு சில மணிநேரமே இயங்குகின்றது. ஏனைய 71 சதவீத மக்கள் அவற்றின் தினசரி தண்ணீர் தேவைக்கு கிணறுகள், ஓடைகள் மற்றும் நதிகளில் இருந்து மெதுவான மாட்டுவண்டிகளின் மூலமாக பெறுகின்றனர். அதேநேரத்தில் நகர்புறங்களில் அவர்கள் தண்ணீர் வாகனங்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

இந்தியா முழுவதிலும் வெறும் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே நீரால் சுத்திகரிக்கக்கூடிய நிலத்திற்கடியிலான சாக்கடையுடன் கூடிய கழிவறைகள் உள்ளன. கிராமப்புறங்களில் நீரால் சுத்திகரிக்க கூடிய கழிவறைகள் (flush-toilets) தோற்றப்பாட்டளவில் இல்லவேயில்லை. UNICEF இன் குறிப்புகளின்படி, 640 மில்லியன் மக்கள் திறந்தவெளியில் தான் கழிவுகளைப் போக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில் சுத்தமான குடிநீர் நாட்டில் போதுமான அளவிற்கு கிடைப்பதில்லை. சுத்தமற்ற குடிநீர் மூலமாகவே 21 சதவீத தொற்றுநோய்கள் பரவுவதாக உலக வங்கி மதிப்பிடுகிறது. தண்ணீர் மூலமாக ஏற்படும் நோய்களால் இந்தியாவில் ஆண்டுக்கு 700,000 குழந்தைகள் இறக்கின்றன.

வரைவு ஆவணத்தில் முன்மொழியப்பட்ட நிலைநோக்கு மாற்றமானது உலக வங்கி (WB) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றால் உந்தப்பட்ட தண்ணீ்ர்-கொள்கைக்கு" மிகப்பொருத்தமாக உள்ளது. அவ்விரு அமைப்புகளின் பிடிக்குள் வரும் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள நாடுகளுக்கு கடன் வழங்குவதற்கான ஒரு நிபந்தனையாக அவை வழக்கமாக தண்ணீர் தனியார்மயமாக்கலை திணிக்கின்றன. தண்ணீர் தனியார்மயமாக்கல் எவ்வித மாற்றமுமின்றி தனியார் பெருநிறுவனங்களுக்கு பாதியளவிற்கு ஏகபோகத்தை (quasi-monopoly) வழங்குகின்ற நிலையில், பெருநிறுவனங்கள் குறைந்தபட்ச பராமரிப்பை வழங்குவது அல்லது முற்றிலுமாக உள்கட்டமைப்பு பராமரிப்பை வழங்காமல் விடுவதால் அது பெரும்பாலும் ஒரேயடியாக சூறையாடலுக்கான ஓர் உரிமமாக அமைகின்றது.

இதற்கு பொலிவியா ஒரு சான்றாகும். பொலிவியாவிற்கு கடன் வழங்குவதற்கான ஒரு நிபந்தனையாக 1998இல் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பு சீர்திருத்தங்களை" திணித்தது. அது தேசிய எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைகள் மற்றும் கோச்சாபாம்பா-இன் உள்நாட்டு நீர்வள அமைப்பான SEMAPAவை விற்க அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தியது. SEMAPA தனியார் முதலீட்டாளர்களின் ஒரு கூட்டமைப்பால் கையகப்படுத்தப்பட்டது. அக்கூட்டமைப்பில் குறிப்பிடத்தக்கதும், நன்கு இணைப்பு பெற்றதுமான அமெரிக்காவின் Bechtel Corporation உம் உள்ளடங்கும். பின்னர் ஒரு முன்னாள் ஊக வணிகரான Paul welfensohn தலைமையிலான உலக வங்கி, “கோச்சாபாம்பாவில் நீர் கட்டண அதிகரிப்பிற்கு மானியங்கள் வழங்கக்கூடாது,” என்று முறையிட்டது.

அங்கே தண்ணீர் விலைகள் இரட்டிப்பாகி பின்னர் சில மாதங்களுக்கு உள்ளாகவே மும்மடங்கு ஆனதோடு சேர்ந்து சமூக பேரழிவு தான் ஒரு விளைவாக இருந்தது. அந்த சூறையாடலை தாங்க முடியாமல் ஜனவரி 2000இல் அப்பிராந்திய மக்கள் 4 நாட்கள் அந்நகரத்தை ஒன்றுசேர்ந்து  இழுத்துமூடும் நிலைக்கு எழுச்சி பெற்று அந்த தனியார் இலாபமீட்டுவோரை துரத்த நிர்பந்திக்கப்பட்டனர்.

தண்ணீர் தனியார்மயமாக்கலை முன்னோக்கி நகர்த்த திரைக்குப் பின்னால் அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு அழுத்தம் அளித்து வருகிறது. பெப்ரவரியில் அமெரிக்க பெருநிறுவனங்களைச் சேர்ந்த 16 பிரதிநிதிகளோடு இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடாகவின் தலைநகர் பெங்களூரில் "அமெரிக்க நீர்வள தொழில்நுட்ப வர்த்தம் திட்டம்" (US Water Technology Trade Mission) என்பதை ஒபாமா நிர்வாகம் முன்னெடுத்தது.

பாரதீய ஜனநாயக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசான இந்தியாவின் இதற்கு முந்தைய அரசாங்கம் தான் முதலில் தண்ணீர் தனியார்மயமாக்கலை நோக்கிய வெள்ளோட்ட நகர்வுகளை எடுத்தது. “சாத்தியமுள்ள இடங்களில் வெவ்வேறு பயன்பாடுகளுக்கான நீர்வள திட்டங்களைத் திட்டமிடுதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் நிர்வகித்தலில் தனியார்துறை பங்களிப்பு வரவேற்கப்படுகிறது" என்று 2002இல் அது அறிவித்தது.

தண்ணீர் தனியார்மயமாக்கலில் ஏற்கனவே மாநில அளவிலும், உள்ளாட்சி அளவிலும் பல பேரழிவுமிக்க பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

1998 இல் மத்திய இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசாங்கம் போராய் தொழிற்பேட்டையின் நீர் வினியோகத்திற்காக ஷியோநாத் ஆற்றின் குறுக்கே அணை மற்றும் நீர்தேக்கம் கட்ட ரேடியஸ் வாட்டர் லிமிடெட் (RWL) என்ற நிறுவனத்திற்கு ஓர் ஒப்பந்தத்தை வழங்கியது.

அந்த ஆற்றின் 23 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒப்பந்தத்தை பெற்றுள்ள அந்த நிறுவனத்திற்கு தனியுடைமை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பல நூற்றாண்டுகளாக அந்த உள்ளூர் கிராம மக்களுக்கும் அவர்களின் வம்சங்களுக்கும் குடிநீர், பாசன நீர், உணவுக்கு மீன்கள் அளித்து வந்த அந்த ஆற்றை அவர்கள் அணுக முடியாதபடிக்கு ஆகி உள்ளது. அந்த கிராம மக்கள் 2003இல் சத்தீஸ்கர் அரசாங்கத்திற்கு எதிராக (இது 2000இல் மத்திய பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலமாக மாறியிருந்தது) போராடினர். RWL நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தம் இரத்துச்செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததோடு இன்றுவரையில் RWL அந்த ஆற்றின் மீது அதன் உரிமைகளைத் தக்க வைத்துள்ளது.

2005இல் தமிழ்நாடு அரசாங்கம் இந்தியாவின் மிகப்பெரிய அரசு-தனியார் கூட்டுதிட்ட (PPP) உடன்படிக்கைகளில் ஒன்றாக  தண்ணீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் திட்டங்களை தொடங்கியது. வேகமாக வளர்ந்துவரும் ஒரு தொழில்துறை நகரமான திருப்பூரில் தொழில்துறை மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கு நாளொன்று 185 மில்லியன் லிட்டர் நீரை வினியோகிக்க, கட்டமைத்து     சொந்த கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகித்து கைமாற்றி கொடுக்கும் BOOT முறையில் (Build-Own-Operate-and-Transfer) 30 ஆண்டுகளுக்கு New Tiruppur Area Development Corporation Ltd (NTADCL) நிறுவனத்திற்கு ஓர் உடன்படிக்கை அளிக்கப்பட்டது. பல்வேறு ஜவுளித்துறை ஆலைகள் மற்றும் 700 சாயத்தொழில் பட்டறைகள் ஒவ்வொரு நாளும் நுரைத்துவரும் இரசாயன கழிவுகளோடு ஏறத்தாழ 87 மில்லியன் லீட்டர் நச்சு கழிவுநீரை உள்ளூர் ஆற்றில் கலந்துவிடுகின்றன. இது நிலத்தடி நீரை குடிக்க முடியாதபடிக்கு செய்திருப்பதோடு நொய்யல், நல்லார் மற்றும் ஜமுனை ஆறுகளையும் கடுமையாக மாசுபடுத்தி உள்ளது. தண்ணீர் தனியார்மயமாக்கல் திட்டங்களைக் கண்காணித்து வரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த அரசு-சாரா அமைப்பான Manthan Adhyayan Kendra (MAK) அறிக்கையின்படி, “நிலத்தடி மற்றும் நிலத்திற்கு மேற்புறத்தில் உள்ள நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளன; குடிநீரை பெரும்பாலும் வெகு தூரங்களில் இருந்து கொண்டு வர வேண்டியுள்ளது,” என்று குறிப்பிடுகிறது.    

பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து இந்தியா அரசியல் சுதந்திரமடைந்து ஆறரை தசாப்தங்களில் இந்திய முதலாளித்துவம் இயலாமை, ஊழல் மற்றும் வெளிப்படையான குற்றத்தனத்தின் ஒரு அப்பட்டமான பதிவுச்சான்றை உருவாக்கி உள்ளது. தண்ணீர் போன்ற வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தேவைகளைத் தனியார்மயமாக்குதல் என்பது சமூக பேரழிவுகளை உண்டாக்கும் என்பதோடு வெடிப்புமிக்க போராட்டங்களையும் தூண்டிவிடும்.