World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Defend Günter Grass!

குந்தர் கிராஸை பாதுகார்!

By Ulrich Rippert 
7 April 2012
Back to screen version

புதன் அன்று 84 வயதான எழுத்தாளரும் நோபல் இலக்கியப் பரிசு பெற்றவருமான குந்தர் கிராஸ் வெளியிட்ட கவிதை ஒன்றில் அவர் ஈரான் மீதான விரோத நிலைப்பாட்டிற்காக இஸ்ரேலைத் தீவிரமாக கண்டித்திருந்தார். எது கூறப்பட வேண்டும் என்ற தலைப்பைக் கொண்ட இவருடைய கவிதை  Süddeutsche Zeitung பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

கவிதை (ஜேர்மனியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது) கீழ்க்கண்டவாறு ஆரம்பிக்கின்றது: நான் ஏன் மௌனமாக உள்ளேன், எது வெளிப்படையாகவும்/ எது போர் விளையாட்டுக்களின் நடைமுறையில் உள்ளது பற்றியும் மிக நீண்டகாலமாக  மௌனமாக உள்ளேன், அதன் முடிவில் தப்பிப் பிழைப்பவர்களாகிய நாம் அநேகமாக அடிக்குறிப்பில் இருப்போம். இஸ்ரேலிய அரசாங்கம் அணுவாயுதத் தயாரிப்பு நடப்பதாகச் சந்தேகிக்கப்படும், நிரூபிக்கப்பட்டிராத ஒரு நாட்டின்மீது முதலில் தாக்குதல் நடத்தும் உரிமையை இஸ்ரேலிய அரசாங்கம் பயன்படுத்தவிரும்புவதை கிராஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு மாறாக இஸ்ரேல், ஒரு வளர்ச்சியடைந்துவரும் அணுவாயுதத்திறன் கொண்டுள்ளது, இதை அது இரகசியமாக வைத்துள்ளது, எவருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, ஏனெனில் இது கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவில்லை. ஜேர்மனிய அரசாங்கத்தின் இழிந்த அரசியலையும் கிராஸ் குறைகூறுகிறார். இது இஸ்ரேலுக்கு மற்றொரு நீர்மூழ்கிக்கப்பலை வழங்கியுள்ளது; அதிலிருந்து அனைத்துவகை அழிவைத் தரும் ஆயுதமும் இயக்கப்பட முடியும். ஆயுத விநியோகத்தை நியாயப்படுத்தும் வகையில் இது  கடந்த காலத்தில் ஜேர்மனி இழைத்த குற்றங்களுக்கான பரிகாரம் என அரசாங்கம் கூறுகிறது.

இதன்பின் கிராஸ் அப்பட்டமாகக் கூறுகிறார்: இஸ்ரேலின் அணுச்சக்தி ஏற்கனவை பலவீனமான உலக சமாதானத்திற்கு இன்னும் ஆபத்தைக் கொடுக்கிறது; அதன் பின் இந்த வினாவை எழுப்புகிறார்: ஆனால் இதுவரை ஏன் நான் மௌனமாக இருந்துவிட்டேன்...ஏன் என் முதிர்ந்த வயதில், கடைசிச் சொட்டு பேனா மை இருக்கும் நேரத்தில் இப்பொழுது இதை ஏன் கூறுகிறேன்? எங்கும் காணப்படும் யூத எதிர்ப்பு என்னும் குற்றச்சாட்டுக்கள் இதுவரை அவரை மௌனப்படுத்தியிருந்தன என்று அவர் விடையிறுக்கிறார். இஸ்ரேல் நான் பிணைப்புக் கொண்டுள்ள நாடாகும், எப்பொழுதும் பிணைப்பைக் கொண்டிருப்பேன்.

இறுதியில் தான் மேற்கின் பாசாங்குத்தனத்தால் வெறுப்படைந்துவிட்டேன் என்று கிராஸ் கூறுகிறார். மற்றவர்களும் தங்கள் மௌனத்தைக் கலைத்து அவருடன் ஒன்றாகச் சேர்ந்து இஸ்ரேலின் அணுச்சக்தி திறன்மீது மற்றும் ஈரானிய அணுச்சக்தி நிலையங்களும் ஒரு சர்வதேச அமைப்பின் நிரந்தரக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் எழுதிய கவிதையில்  உள்ள மை உலருவதற்கு முன்பே, கிராஸ் ஒரு தீயச் செய்தி ஊடகப் பிரச்சாரத்தை எதிர்கொண்டார். இதில் அவர்மீது யூதஎதிர்ப்பு என்னும் பல குற்றச்சாட்டுக்களும் அடங்கியிருந்தன.

பழைமைவாத Die Welt  செய்தித்தாளில், செய்தியாளர் ஹென்ரிக் எம்.பிரோடெர் கிராஸை படித்த யூதஎதிர்ப்புவாதிகளுக்கு ஒரு முன்மாதிரி என்று அவதூறு கூறுகிறார். எப்பொழுதுமே யூதர்களுடன் கிராஸ் பிரச்சினைகளைக் கொண்டிருந்தார்; ஆனால் இந்தக் கவிதையில் உள்ளதைப் போல் தன் கருத்துக்களை அவர் வெளிப்படுத்தியதில்லை என்று பிரோடர் எழுதியுள்ளார். ஜேர்மனியில் உள்ள யூதர்களின் மத்திய குழுவின் தலைவரான டீட்டர் கிரவ்மான் இக்கவிதையை, பொறுப்பற்றது, ஆத்திரமூட்டும் ஆக்கிரோஷ பாதையில் செல்லுகிறது என்று குறிப்பிடுகிறார். கிராஸின் நன்கு அறியப்பட்டுள்ள நாவல் ஒன்றான தகர முரசு (The Tin Drum) ஐப் பற்றிக் குறிப்பிட்டு கிராஸ் தகரம்போல் (அபத்தமாக) பேசுகிறார் மற்றும் தவறான திசையில் அடிக்கின்றார்.”  என கிரவ்மான் எழுதுகிறார்.

ஜேர்மனியில் இஸ்ரேலின் உத்தியோகபூர்வ பிரதிநிதியான எம்மானுவல் நாஷ்சோன் தன்னுடைய தூதரக வலைத் தளத்தில் எகிப்தில் அடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்டதை கொண்டாடும் Passover திருவிழாவின் போது யூதர்களை (Passover) நேர்த்திக்கடன் செய்யும் கொலைகாரர்கள் என்று குற்றம் சாட்டுவது ஐரோப்பிய மரபின் ஒரு பகுதியாகும். முன்பு யூதர்கள் ரொட்டியைத் தயாரிக்க கிறிஸ்துவக் குழந்தைகளின் இரத்தத்தை எடுத்தனர் என்று கூறுவது வழக்கம்; இப்பொழுது ஈரானிய நாட்டை யூத அரசாங்கம் அழிக்க முற்படுகிறது என்று கூறப்படுகிறது. என்று எழுதியுள்ளார்

ஜேர்மனியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் தீய உணர்வை வெளிப்படுத்தியுள்ளன. சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) அரசியல்வாதியும் ஜேர்மனிய-இஸ்ரேலிய சங்கத்தின் தலைவருமான ரெய்ன்ஹோல்ட் ரோப, கிராஸ் கூறும் குற்றச்சாட்டுக்கள் மேல்வாரியானதாகவும், தரம் குறைந்தவையாகவும் உள்ளன, எந்த விபரமுமற்ற அதிகப்பிரசங்கி தன்மையுடையதாகவும் எனத் தெரிவித்துள்ளார்.

சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளார் அந்திரேயா நாலஸ், கிராஸின் கவிதை நலிந்தது, தன்னையே மையமாகக் கொண்டது, வெற்றுத்தனமானது, மேம்போக்குத்தனமானது என்றார். மத்திய கிழக்கில் இருக்கும் நிலைமையில், இக்கவிதை குழப்பமுள்ளதானதாகவும், பொருத்தமற்றதாகவும் உள்ளது என்றும் இவர் கூறியுள்ளார். கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் பொதுச் செயலர் ஹெர்மான் குரோக்க  “இக்கவிதையில் ஒலிக்குறிப்பும் ஒருதலைப்பட்சக் கருத்தும் தனக்கு அதிர்ச்சியைத் தருகிறது என்றார்.

 ஒரு யூத-எதிர்ப்பின் வெடிப்பு என்ற தலைப்பில், Die Zeit  என்னும் வார ஏட்டின் ஆசிரியர் ஜோசப் ஜொவ்வ கோபத்துடன் கிராஸைத் தாக்கியுள்ளார். புதிய யூத எதிர்ப்பு சிக்கலானது, ஏனெனில் இது உணர்மையற்றதன்மையில் இருந்து ஊக்கம் பெறுகிறது, அதாவது வெட்கமும், குற்றஉணர்வும் நிறைந்த வகையில் பேசக்கூடாத கருத்துக்களால் வரம்பிற்கு உட்படுகிறது—” என்று அவர் எழுதியுள்ளார். ஆனால் பிராய்ட் கற்பித்துள்ளதுபோல் உணர்மையற்ற சிந்தனை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத்தான் பார்க்கும். இதுதான் பாசாங்குத்தனம் மற்றும் நேர்மையற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது, என்றார்.

இதன்பின், மிக இழிந்த வகையில் கிராஸிற்கும் நவ பாசிஸ்ட்டுக்களுக்கும் இடையே பிணைப்பு உள்ளதாக ஜோவ்வ இகழ்வுற்ற முறையில் கூறுகிறார். ஜேர்மன் தேசிய கட்சியின் –NPD- துண்டுப்பிரசுரங்கள் தன்மையைக் கொண்டிருந்ததைப் போலவே அவுஸ்விட்ஸ் குழுவை கிராஸ் சார்கின்றார் என்றும் அவர் கூறுகிறார். தீவிர வலதின் வாதங்கள் நன்கு அறியப்பெற்றவை, பரந்து காணப்படுபவை என்று ஜொவ்வ தொடர்கிறார்.  முதலில் யூதர்கள் ஜேர்மனியர்களை ஹோலோகாஸ்ட்டில் சென்று முடிவடையும் கட்டாயத்தை எற்படுத்தினர், பின்னர் ஜேர்மனியர்களின் குற்ற உணர்வைப் பயன்படுத்தி பிந்தைய ஜேர்மனிய அரசாங்கம் ஒவ்வொன்றையும் அடிபணிய அழுத்தம் கொடுக்கின்றனர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கிராஸிற்கு எதிரான தனது கேடுகெட்ட வார்த்தைஜாலங்களுடன் எப்போதும் குற்றம்சாட்டப்படுவோர் யூதராகவே இருப்பதாக ஜொவ்வ கூறுகின்றார்.

வியாழன் அன்று தன்னை விமர்சித்தவர்களுக்கு கிராஸ் விடையிறுத்து, கருத்தின் ஒருமித்த தன்மை என்பது குறித்து வருந்தினார். Norddeutscher Rundfunk  வானொலிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், அரசியல் வட்டங்களிலும் செய்தி ஊடகத்திலும் எடுக்கப்பட்டுள்ள நிலைப்பாடு அநேகமாக எங்கும் படர்ந்துள்ளது என்றார். இது கவிதையில் இருக்கும் பொருளுரையைப் பற்றிப் பேசவில்லை, தனிப்பட்ட எதிர்ப்பிரச்சாரமாகிவிட்டது, எல்லா காலத்திற்கும் என் புகழ் சேதமுற்றுள்ளதாக கூறும்படி செய்துள்ளது.

குந்தர் கிராஸைக் பாதுகாத்தலும், அவருக்கு எதிரான இந்த இழிந்த பிரச்சாரத்தை நிராகரிப்பதும் முக்கியமாகும். ஈரானுக்கு எதிரான போர் குறித்த கிராஸின் எச்சரிக்கையும் அவருடைய இஸ்ரேலின் அணுவாயுதச் சக்தி ஏற்கனவே பலமிழந்துள்ள உலக சமாதாதனத்திற்கு ஆபத்தைக் கொடுக்கிறது என்னும் அறிக்கையும் முற்றிலும் சரியானதே. இது அங்கீகரமும், ஆதரவும் பெறத் தகுதியுடையது.

இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக மேற்கொண்டுள்ள போர்த்தயாரிப்புக்கள் மிக முன்னேற்றக் கட்டத்தில் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ஜனவரிக் கடைசியில், New York Times  இஸ்ரேல் ஈரானைத் தாக்குமா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கான தயாரிப்புக்கள் மிக விரைவாகவும், தீவிரமாகவும் நடைபெற்று வருகின்றன என்பதை அது உறுதிபடுத்தியது. அரசியல் பகுப்பாய்வாளராக இஸ்ரேலியச் செய்தித்தாள் Yedioth Ahronoth  ல் இருக்கும் அக்கட்டுரை ஆசிரியரான றோனன் பெர்க்மான், முடிவுரையாக பின்வருமாறு எழுதினார்:பல மூத்த இஸ்ரேலியத் தலைவர்கள் மற்றும் இராணுவ, உளவுத்துறைப்பிரிவுகளின் தலைவர்களுடன் பேசிய பின், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் 2012ல் தாக்குதல் நடத்தும் என்று நான் கருதுகிறேன்.

எகுட் பாரக் பாதுகாப்பு மந்திரி ஆனதில் இருந்து, இஸ்ரேலிய இராணுவம் முன்னொருபோதுமில்லாத வகையில் ஈரானுக்கு எதிரான தாக்குதலைத் தயாரித்துவருகிறது என்று பெர்க்மான் கூறினார். இஸ்ரேலிய விமானப்படை நீண்ட தூர பறக்கும் விமானத்தைக் கொண்டுள்ளது; அது ஈரான் மீது தாக்குதல் நடத்த முடியும். இதைத்தவிர ஆளில்லாத டிரோன்கள் இலக்குகள்மீது குண்டுகளைப் பொழிந்து வானிலேயே 48 மணி நேரம் வரை இருக்க முடியும். என்று அவர் கூறியுள்ளார். இஸ்ரேலியப் படைகள் ஈரானியப் பதிலடிகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளும் திட்டங்களையும் தயாரித்துள்ளனர்.

மார்ச் மாத நடுவில், இஸ்ரேலிய அரசாங்கம் காசா மீது அதன் பேராபத்துத் தரும் வான்தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இஸ்ரேலிய டிரோன்கள் மக்கள் எதிர்ப்புக் குழுக்களின் செயலாளரான ஷொகாயிர் அல் குவாசியையும் அவருடைய இராணுவ உதவியாளர் முகமத் அல் ஹெனானியையும் கொன்றன. இக்கொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை. அவற்றின் நோக்கம் பாலஸ்தீனிய மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும், அது இன்னும் கூடுதலான போர்ச்செயல்களுக்குப் போலிக் காரணமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதுதான்.

நெத்தென்யாகுவும் அவருடைய இஸ்ரேலிய வலதுசாரி கூட்டணி அரசாங்கமும் பிளவுகளினாலும், இலஞ்ச ஊழல்களாலும் சூழப்பட்டு பெருகிய முறையில் மக்கள் எதிர்ப்பை முகங்கொடுக்கின்றனர். இஸ்ரேலிய ஆளும் உயரடுக்கு முறையாகப் போர்த்தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மக்களின் கவனத்தை ஆட்சியின் உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவது ஆகும்.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளை முற்றிலும் குறைகூறுகிறார் என்பதால் கிராஸ் ஒரு யூத எதிர்ப்பாளர் என்னும் குற்றச்சாட்டிற்குக் காரணம் ஆதாரமற்றது. யூத எதிர்ப்பு என்னும் சொற்றொடர் இனவழி வெறுப்புடன் யூதர்களை அடக்குதல், துன்புறுத்துதல் இவற்றை இலக்கு கொண்ட செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவது ஆகும். அதுவும் மூன்றாம் குடியரசு ஆட்சி யூதர்களை அழித்தது குறித்த சொல்லாகும். நெத்தென்யாகு அரசாங்கத்தின் போர்க் கொள்கை குறித்த கிராஸின் விமர்சனங்கள் யூதர்களுக்கு எதிராகவோ, இஸ்ரேலில் இருக்கும் யூதர்களுக்கு எதிராகவோ அல்ல. அவருடைய பெரும் கவலை இஸ்ரேலின் யூத மக்கள் மற்றும் ஈரானியர்கள் ஆகிய இருவருடைய நலன்களைப் பற்றியது ஆகும். இது இஸ்ரேலிய_அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது ஆகும்.

யூத மக்களின் நலன்களை இஸ்ரேலிய ஆட்சி பிரதிபலிக்கவில்லை. மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் ஒரு சிறு செல்வக் கொழிப்பு உடைய, ஊழல் மிகுந்த தன்னலக்குழுவைத்தான் பிரதிநித்துவவப்படுத்துகிறது. ஈரானின் அணுச்சக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் என்பதற்கு இஸ்ரேலிய மக்களின் ஆதரவு குறைந்துதான் வருகிறது. சமீபத்தியக் கருத்துக் கணிப்புக்கள் 19% த்தினர்தான் இஸ்ரேலிய அரசாங்கம் ஒரு சுயாதீன நடவடிக்கை எடுக்க ஆதரவு தருகிறது என்பதைக் காட்டுகிறது. வாஷிங்டன் ஆதரவுடன் போரை நடத்துவதற்கு 42% தான் ஆதரவைக் கொடுக்கிறது.

குந்தர் கிராஸின் போர் எச்சரிக்கைக்கு எதிராக செய்தி ஊடகத்திலும் ஆளும் தட்டினரிடமிருந்தும் வந்துள்ள கூக்கூரல் ஒரு எச்சரிக்கை அடையாளம் ஆகும். முழு மத்திய கிழக்கு மற்றும் அதன்பின் உலகத்தையும் ஒரு புதிய பேரழிவிற்கு இட்டுச் செல்லும் இராணுவச் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள போர் வெறி பிடித்த பிரச்சாரத்திற்கு இது முன்னுரை ஆகும்.