World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Aix-en-Provence students speak on French presidential elections

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் குறித்து Aix-en-Provence மாணவர்கள் பேசுகின்றனர்

By Alex Lantier and Johannes Stern in Marseille
17 April 2012
Back to screen version

பிரான்சின் மார்சைக்கு வடக்கே Aix-en-Provence பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பள்ளிக்கு வெளியே நேற்று உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் மாணவர்களை நேர்காணல் செய்தனர்.

உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய அநேக மாணவர்கள் தேர்தல் நிலவரங்களைப் பின் தொடர்ந்து கவனிப்பவர்களாய் இருந்தனர், அவர்கள் பிரான்சிலும் ஐரோப்பாவெங்கிலும் இளைஞர்களை எதிர்நோக்கி நிற்கும் வருங்காலம் குறித்து கவலை கொண்டவர்களாய் இருந்தனர். ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியால் இனவாதம் திட்டமிட்டுத் தூண்டப்படுவதானது - இதற்கு சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் வேட்பாளரான பிரான்சுவா ஹாலண்ட் தலைமையில் முதலாளித்துவஇடது கட்சிகள் உடந்தையாக இருக்கின்றன - எதிர்ப்பையும் கோபத்தையும் தூண்டியிருக்கிறது.

பிரதானமான வேட்பாளர்களுக்கு இடையில் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதை உணரும் பலரும் உத்தியோகபூர்வ அரசியல் விவாதத்தின் தன்மையிலும் வெறுப்படைந்துள்ளனர். அவர்கள் அரசியல் விவாதத்திற்கு ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

தேர்தல் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று அலினிடம் கேட்டபோது அவர் கூறினார்: “இது ஒரு பெரிய குழப்பம். ஏராளமான விபரங்கள் சொல்லப்படுகின்றன, ஆனால் இளைஞர்களுக்கு ஸ்தூலமாய் ஒன்றுமில்லை. மிக மிக இளையோருக்கு, பயிற்சியோ தகவல்களோ இல்லை. அரசியல் மீது உண்மையிலேயே நம்பிக்கை என்பதே இல்லை. ஏராளமான வேட்பாளர்கள் நிற்கின்றனர், அதனால் ஒருவரை விட்டு விட்டு இன்னொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தைத் தேட உங்களுக்குக் கணிசமான அரசியல் அறிவு தேவைப்படுகிறது.”

மானுடவியல் துறையில் முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவியாக, “உங்களுக்கெல்லாம் வேலை கிடைக்கப் போவதில்லை என்பது தான் எப்போதும் எங்களிடம் கூறப்படுகிறது என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

பிரான்சில் புலம்பெயர்ந்தவர்கள் முகம் கொடுக்கும் சூழ்நிலை, தேர்தலில் தான் கவலை கொள்ளும் பிரதான விடயங்களில் ஒன்று என்று அலின் கூறினார். “நிறைய பேர் வெளி நாடுகளில் இருந்து வந்து படிக்கிறார்கள். இந்த மக்கள் உண்மையான பிரச்சினைகளை முகம் கொடுக்கிறார்கள். ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் பலரை எனக்குத் தெரியும், அவர்களுக்கெல்லாம் பிரச்சினைகள் எழலாம்.”

வேலைவாய்ப்பின்மை, சமூக ஏற்றத்தாழ்வு அத்துடன் இனவாதம் மற்றும் போர் அச்சுறுத்தல் ஆகிய பிரச்சினைகளையே தேர்தலின் மையப் பிரச்சினைகளாக அநேக மாணவர்கள் கருதுகின்றனர். கிரீஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் உருவாக்கியிருக்கக் கூடிய ஊதியங்களிலான துயரகரமான வெட்டுக்களும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பும் பற்றி பல மாணவர்களும் குறிப்பிட்டனர். அதே போன்ற பிரச்சினைகள் பிரான்சிலும் எழக் கூடும் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

Djibouti ல் இருந்து வந்த ஒரு மாணவரான எனசே கூறினார்: “சார்க்கோசி போக வேண்டும்! அவர் போலியான வாக்குறுதிகளை அளித்தார். ஒட்டுமொத்த தேர்தல் பிரச்சாரமுமே இனவாத அடிப்படையிலும் கேலிக்குரியதாகவும் இருக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வு என்னும் பிரச்சினையை மறைக்க இனவாதம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக துலூஸ் சம்பவங்களுக்குப் பின் [அங்கு நடந்ததொரு துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர், அந்த துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த பிரான்சு குடிமகன் முகமது மேரா என்று கூறப்படுகிறது] சார்க்கோசி தனது இனவாத பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார். அவர் இஸ்லாமையும் ஹலால் உணவுகளையும் எல்லாவற்றையும் தாக்குகிறார்.” 

இங்கே ஏற்றத்தாழ்வு தான் பிரச்சினையாக இருப்பதால் குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்புக்காகவும், சுகாதார பராமரிப்பு செலவினத்திற்காகவும் குரல் கொடுக்கும் வேலைத்திட்டம் கொண்ட இடது முன்னணியின் வேட்பாளர் ஜோன்-லூக் மெலன்சோனை தனக்குப் பிடித்திருப்பதாக எனசே கூறினார். முன்னாள் PS அமைச்சரான மெலன்சோன் தனது வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவாரா என்று கேட்டபோது, “அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று பதிலளித்தார்.

அவர் தொடர்ந்து கூறினார்: “அரசியல்வாதிகள் நிதியச் சந்தைகளின் கருணையில் தான் வாழ்கின்றனர். இந்த நெருக்கடியும் )பூகோளமயமாக்கமும் நல்லதென்று நான் கருதவில்லை. இது மொத்தமாய் ஆண்டியாக்குகிறது. ஒவ்வொரு நாளும் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி விரிந்து கொண்டே செல்கிறது. [முன்னாள் கிரேக்க பிரதமர் ஜோர்ஜ்] பாப்பாண்ட்ரூ ஒரு சோசலிஸ்ட் கட்சிக்காரர் தான், ஆனால் சோசலிசத்துக்கு முதலாளித்துவத்துடன் செய்வதற்கு எதுவுமில்லையே.”

பாப்பாண்ட்ரூ ஒரு பெருவணிக, சமூக-ஜனநாயக அரசியல்வாதி தானே தவிர அவர் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு அரசியல் பிரதிநிதி அல்ல என்பதை WSWS செய்தியாளர்கள் சுட்டிக் காட்டினர். எனசே பதில் கூறினார்: “நான் ஆபிரிக்காவில் இருந்து வருபவன். நாங்கள் அங்கே பல புரட்சிகளைக் கண்டிருக்கிறோம். ஆனால் எதுவும் மாறியபாடில்லை. ஜனநாயகமும் இல்லை அல்லது சமூக சமத்துவமும் இல்லை. புரட்சிகளுக்குத் தலைமை நடத்திய அரசியல்வாதிகள் அமைப்புமுறைக்குள்ளாக வாங்கிக் கொள்ளப்பட்டது தான் எப்போதும் நடந்தது. அவர்கள் புரட்சிகளைக் காட்டிக் கொடுத்தனர்.”

ஆபிரிக்காவில் பிரெஞ்சுத் தலையீடுகளை தான் எதிர்ப்பதாய் எனசே சேர்த்துக் கொண்டார். வடக்கு மாலியில் சமீபத்தில் துரேக் பிரிவினைவாத இயக்கத்தின் விடயத்தில் பிரான்ஸ் இராணுவத் தலையீடு செய்ய அச்சுறுத்தி வருவதை அவர் உதாரணம் காட்டினார்: “மாலியில் துரேக் சூழலை எடுத்துக் கொள்ளுங்கள். இதுதான் நைஜரிலும் அல்ஜீரியாவிலும் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் விடயமும். அவர்கள் ஏழ்மையிலும் வெறுப்பிலும் உழல்கிறார்கள். அவர்களது இந்நிலைக்கான பொறுப்பு பிரான்சின் மீது கணிசமாய் இருக்கிறது. அது ஆபிரிக்காவில் அளவுக்கதிகமான சூழ்ச்சி ஒப்பந்தங்களை மேற்கொண்டு வந்திருக்கிறது.”

மாலியைச் சேர்ந்த ஒரு சமூகவியல் மாணவரான இப்ராஹிமும் பிரெஞ்சுத் தலையீட்டை எதிர்த்தார்: “ஆப்கானிஸ்தானில் நிலைமையைப் பார்த்தால் தெரியும். மேற்கு தலையீடு செய்தால் அதன்பின் நிலைமை பொதுவாக மோசமடையவே செய்கிறது.” வடக்கு மாலியில் இருக்கும் தனது உறவினர்கள் இப்போது நாட்டின் தெற்குப் பகுதிக்கு முன்பு போல் பயணிக்க முடிவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஹாலண்டை பாப்பாண்ட்ரூவுடன் ஒப்பிட்டு இப்ராஹிம் கூறினார்: “ஹாலண்ட் அவர் சொன்னதை எல்லாம் உண்மையிலேயே செய்வார் என்று நான் நினைக்கவில்லை. கிரீஸில் இருக்கும் அதே விடயம் தான் என்று கூற முடியும். இவர் அதனினும் மேம்பட்டவர் என்று நான் கருதவில்லை. அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்னால் ஒன்றைச் சொல்வதும் தேர்தலுக்குப் பின்னால் அதற்கு நேரெதிரானதைச் செய்வதும் ஏறக்குறைய வழக்கமான ஒன்றாகவே ஆகி விட்டதே.” 

வெளிநாட்டு மாணவர்கள் முகங்கொடுக்கும் சமூக நிலைமைகள் மிகக் கடினமானதாய் இருப்பதாக இப்ராஹிம் கூறினார்: ”வேலையைக் கண்டுபிடிப்பதே கடினமாய் இருக்கிறது. இண்டர்ன்ஷிப் கண்டுபிடிப்பது கடினம். போதுமான அளவு கல்வி உதவித் தொகைகள் இல்லை. இங்கே இருக்கும் நாங்கள் பெரும் அவதிப்படுகிறோம். வாடகைகள் எல்லாம் ரொம்ப அதிகமானவையாய் இருக்கின்றன.”

குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், அநேக மாணவர்கள் புதிய முதலாளித்துவக் கட்சி (NPA) மற்றும் தொழிலாளர் போராட்டம்(LO) போன்ற குட்டி முதலாளித்துவஇடது கட்சிகளுக்கு வாக்களிக்கும் திட்டம் கொண்டிருக்கவில்லை என்பது தான். ஆயினும் NPA வாக்குகள் அதிகம் பெற்றால் அது PS இன் கொள்கைகளை மாற்றும் என்று தான் நம்புவதாய் சில்வான் கூறினார். தேர்தல் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்னார்: “அவர்களைப் பற்றி நான் அதிகம் நினைப்பதில்லை. அவர்கள் என்னை கிஞ்சித்தும் மதிக்கப் போவதில்லை. அரசுத் தலைவராவதென்பது வெறும் நாடக-நடிப்பு என்றாகி விட்டது. மக்களின் மனோபாவத்தை மாற்றுவதற்கு நான் அதி இடதுக்குத் தான் வாக்களிக்க இருக்கிறேன்.”

இயல்பாகவே”PSக்கு அழுத்தமளிக்கும் பொருட்டு NPAக்கு வாக்களிக்கவே தான் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். “ஓய்வூதியங்கள், வேலைவாய்ப்பின்மை மற்றும் தற்காலிக வேலை ஆகிய விவகாரங்களில் மேம்பட்ட நிலைமையைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் ஹாலண்டிடம் இருந்து எடுக்கப்படுவதை தான் காண விரும்புவதாய் அவர் தெரிவித்தார். சார்க்கோசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் பிரான்சை விட்டு செல்லவேண்டியது தான் என்று அவர் கூறினார்.

சாரா, சிண்டி மற்றும் ஜெசி ஆகிய மூன்று போர்ச்சுகீசிய மொழி மாணவிகளிடமும் WSWS செய்தியாளர்கள் பேசினர். தேர்தல் வேட்பாளர்கள் குறித்த அவர்களது கருத்து பற்றி கேட்டபோது அவர்கள் கூறினர்: “இது ட்வீட்லி-டி ட்வீட்லி-டம் ஜோடி மாதிரி தான். நெருக்கடியால் எங்களுக்கு வேலை கிடைக்காதோ என்று அஞ்சுகிறோம். வேட்பாளர்கள் எல்லாம் எங்களுக்கு பிரகாசமான வானத்தைக் காட்டுகின்றனர், மாதத்திற்கு 1600 யூரோ (2,100 அமெரிக்க டாலர்) ஊதியத்தில் எங்களுக்கு வேலை பெற்றுத் தருவதாய் சொல்கிறார்கள். அப்படி ஏற்பட்டால் அது எங்கள் பெற்றோர் சம்பாதித்ததை விட அதிகம் தான். உண்மையில் ஒரு முழுநேர குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட நாங்கள் சம்பாதிக்க மாட்டோம். அதிகப்பட்சம் எங்களுக்கு மாதத்திற்கு 1000 யூரோ வேண்டுமானால் கிடைக்கும்.” அநேகமாக சுற்றுலா அல்லது விமானநிலைய வேலைகள் தங்களுக்குக் கிடைக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு இலக்கியத் துறை மாணவரான மரியோன் கூறினார்: “இரண்டாவது தேர்தலாக எங்களுக்குக் குழப்பமான தேர்தலாய் இது இருக்கிறது. எக்கச்சக்கமான வேட்பாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் போக்கு மீது சிலருக்கு அனுதாபம் இருக்கிறதென்றால் கூட, அது கடைசியில் அந்த பிரதிநிதி அந்த சிந்தனைகளை சரியாய் பிரதிநிதித்துவப்படுத்துபவரில்லை என்று தெரிவதில் முடிகிறது. எல்லாக் கட்சிகளும் இப்போது தான் பரிணாம வளர்ச்சியுற்றுக் கொண்டிருக்கின்றன, LOவும் கூட. இப்போது அவர்கள் [நத்தலி] ஆர்தோட்டை தங்கள் வேட்பாளர் என்கின்றனர் [நெடுங்காலம் LOவின் ஜனாதிபதி வேட்பாளராய் இருந்த ஆர்லெட் லாகியேக்குப் பதிலாக]. சென்ற தேர்தலில் PS ராயலை நிறுத்தியது, இப்போது ஹாலண்ட் நிற்கிறார்.”

அவர் தொடர்ந்து கூறினார்: “எல்லோருக்குமே யார் ஜெயிக்கக் கூடாது என்பது மட்டுமே தெரிகிறது, அதனால் வெளியேற்றத்துக்கான வாக்களிப்பைத் தான் அவர்கள் செய்ய முற்படுகின்றனர். ஒரு சமயத்தில் நான் சரி, சூழலியல்வாதிகளுக்கு வாக்களிக்க முயலுவோம் என்று சொன்னேன். பூமியைப் பாதுகாப்பதென்பது நல்ல இலக்கு தான். ஆனாலும் ஒரு பசுமை ஜனாதிபதி என்பது சாத்தியமற்ற ஒன்றாகத் தோன்றுகிறது. சூழலியல் என்பது நல்ல விடயம் தான், ஆனால் முதலாளித்துவ உலகில் அவர்கள் சொல்வதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றவை. அது உண்மையில் கற்பனாவாதம் தான்.”

அவர் குறிப்பிட்ட PS மற்றும் LO வேட்பாளர்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று அவரிடம் கேட்டபோது மரியோன் கூறினார்: “அவர்கள் இடதுகள் தான், ஆனால் சோசலிஸ்டுகளும் கிடையாது, மனிதாபிமானிகளும் கிடையாது. ஒருவர் சோசலிசம் என்னவென்று புத்தகத்தில் படிப்பதை இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. சோசலிஸ்ட் என்றால் உண்மையான சோசலிஸ்டாக இருக்க வேண்டும், அது தொழிலாளர்களது நலனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் பிரான்ஸ் கட்சிகள் அப்படிச் செய்வதில்லை, அவர்கள் யாராவது ஒருவருக்கு ஆதரவாக அல்லது எதிராகப் பேசுவதை மட்டும் தான் செய்கிறார்கள். சும்மா பைக்குள்ளிருந்து கருத்துகளை இழுத்து வெளியில் விடுகிறார்கள். ஆனால் தொலைநோக்கில் என்ன செய்யப்பட முடியும் என்பதே நமக்குத் தெரிவதில்லை, நாம் இணைந்து நிற்பதற்கென்று ஒரு கட்சி நம்மிடம் இல்லை.”