World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Hands off the Socialist Equality Party in Germany!

ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி மீது கை வைக்காதீர்!

Peter Schwarz
26 April 2012

Back to screen version

குந்தர் கிராஸைப் பாதுகாப்பதற்கான ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei für Soziale Gleichheit—PSG) மூன்று கூட்டங்களில் நடந்த தாக்குதலானது, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் பாரியளவில் தீவிரப்பட்டுள்ளமையைக் குறிக்கின்றன. அவை எதிர்க்கப்பட்டு,  நிராகரிக்கப்பட வேண்டும்

நோபல் விருது பெற்ற 84 வயதான அந்த எழுத்தாளரின் மீது நடத்தப்பட்ட முன்னொருபோதும் நிகழ்ந்திராத தாக்குதல்களை எதிர்த்து சோசலிச சமத்துவக் கட்சியினால் அந்த கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஈரானுக்கு எதிரான ஒரு யுத்தத்திற்கு அணு ஆயுதமேந்திய இஸ்ரேல் தயாரிப்பு செய்து வருகிறது என்ற கேள்விக்கிடமில்லாத உண்மையை "என்ன கூற வேண்டும்" என்ற அவரது கவிதையில் அவர் குறிப்பிட்டு காட்டியதிலிருந்து, கிராஸ் ஒரு கீழ்தரமான பிரச்சாரத்தை முகங்கொடுத்து வருகிறார். அவருடைய அறிக்கைகள் தவறாக காட்டப்பட்டு, அவரது வாழ்க்கை சரிதம் திரிக்கப்பட்டது. எந்த கண்டனமும் இந்தளவிற்கு மூர்க்கமாக இருந்திருக்காது, அவருக்கு எதிராக பயன்படுத்தப்படுத்தப்படும் அவதூறை விட வேறெதுவும் இந்தளவிற்கு இழிவார்ந்து இருக்காது.

வலதுசாரி இஸ்ரேல்-ஆதரவு ஆத்திரமூட்டுவோர், அரசாங்கம் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் நெருக்கமாக சேர்ந்து கொண்டு, சோசலிச சமத்துவ கட்சியின் கூட்டங்கள் நடக்கவியலாதபடிக்கு அதை முடக்க முனைந்தனர். அவர்களின் தாக்குதல்கள் அதிகளவில் தீவிரமாகி உள்ளது.

கடந்த வெள்ளியன்று, ஆத்திரமூட்டுவோரின் ஒரு குழு பிராங்பேர்டில் நடந்த சோசலிச சமத்துவ கட்சியின் சோசலிச சமத்துவ கட்சியின் கூட்டத்தை குழப்பமுயன்று தோல்வியுற்றது. அவர்கள் கூட்டம் நடந்த அறையின் முன்னால் இருந்த வாசற்படியை ஆக்கிரமித்து கொண்டு, கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு இடைஞ்சல் உண்டாக்கியதோடு, அச்சுறுத்தவும் செய்தனர். அவர்கள் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க கொடிகளை விரித்திருந்தனர்

திங்களன்று பேர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம், கூட்டம் நடைபெறவிருந்த நாளுக்கு மிகக்குறுகிய காலத்தில் ஒரு தகவலை அளித்து கூட்டத்திற்கான அறையைப் பயன்படுத்துவதை இரத்து செய்தது. ஒரு பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினரின் தகவலின்படி, “இஸ்ரேல் அரசின் பிரதிநிதிகளோடு இருக்கும் உறவைக்" கணக்கில் கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. தவறுக்கிடமின்றி அது பல்கலைக்கழகம் அரசியல் அழுத்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதற்கான ஓர் அறிகுறியாகும். சோசலிச சமத்துவக் கட்சி வேறோர் இடத்திற்கு கூட்டத்தை ஏற்பாடு செய்ய முயற்சித்த போது, அதில் பொலிஸ் தலையீடு செய்து அந்த நிர்வாகியை அழுத்தத்திற்கு உட்படுத்தியது. அப்பெண்மணியும் கூட்டத்திற்கு அறையைப் பயன்படுத்த அளித்திருந்த அனுமதியைத் திரும்ப பெற்றார். அதன் விளைவாக அந்த கூட்டம் மீண்டும் அருகிலிருந்த ஒரு உணவு விடுதிக்கு மாற்றப்பட்டு நடத்தப்பட்டது.

செவ்வாயன்று டஜன் கணக்கான வலதுசாரி ஆத்திரமூட்டுவோர் லைப்சிக் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த ஒரு சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். குந்தர் கிராஸிற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள் மேற்பார்வையாளரை தாக்கியதோடு, பனிக்கோடாரியைக் (இந்த படுகொலை கருவி தான் லியோன் டிரொட்ஸ்கியைக் கொல்ல பயன்படுத்தப்பட்டது) குறிப்பிட்டுக் காட்டி சோசலிச சமத்துவ கட்சியின் ஒரு முன்னணிப் பிரதிநிதியையும் அச்சுறுத்தினர். கூட்டத்தில் பங்கு பெறுவதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, அவர்கள் அறை வாசலை அடைத்து கொண்டு, வாசற்படியிலேயே அமர்ந்து ஒலிபெருக்கி மற்றும் இஸ்ரேலிய கொடிகளோடு அவர்களின் சொந்த கூட்டத்தை நடத்தி முடித்தனர்.

அப்போது அங்கே வந்திருந்த பல்கலைக்கழக மாணவர் குழுவின் இரண்டு பிரதிநிதிகள் அங்கீகாரமற்ற அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவோரை அகன்று செல்ல வலியுறுத்தாமல், மாறாக குந்தர் கிராஸிற்கு ஆதரவாக அங்கீகாரத்தோடு நடந்த கூட்டத்தை நிறுத்தும்படி தலையீடு செய்தனர். அதுவொரு பொதுக்கூட்டம் என்பதால் தலையீடு செய்பவர்களும் கூட உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். உடலியல்ரீதியான வன்முறை அச்சுறுத்தல்களோடும் மற்றும் நிகழ்வை இடைஞ்சலுக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு வரும் ஓர் திட்டமிட்டுவந்த குழுவிற்கு, ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும் எவரும் அனுமதி வழங்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான மாணவர் அமைப்பு-ISSE-ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நிகழ்வுகளிலும் நடத்தப்பட்ட அந்த திட்டமிட்ட தாக்குதல்களின் அரசியல் முக்கியத்துவம் ஐந்து நாட்களுக்குள் தெளிவாக தெரியவில்லை. ஆனால் இராணுவவாதத்தின் எழுச்சிக்கு எதிராக நிறுத்தப்படும் எவ்வித எதிர்ப்பையும் அச்சுறுத்தவும், மௌனமாக்கவும் ஊடகங்களாலும், அரசாங்கத்தின் உயர்மட்டத்திலும் கிராஸ் மீதான தாக்குதல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதை அவை உறுதிபடுத்துகின்றன.

ஜேர்மன் அரசு இராணுவவாதம் மற்றும் யுத்தத்திற்கு எதிரான பரந்த பொது எதிர்ப்பைக் கடந்து வர பல ஆண்டுகளாக பல்வேறு வழிகளைக் கண்டறிய முயன்று வருகிறது. லிபிய யுத்தத்தின் போதும் கூட, பேர்லின் நேரடியாக அதில் பங்கேற்க முடியாமல் இருந்ததை உணர்ந்தது. தற்போது அவர்கள் பாதையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ஒரு அருவருக்கத்தக்க  அழுக்குபடிந்த பிரச்சாரத்தைப் பயன்படுத்த முயல்கின்றனர். எதிர்காலத்தில் மத்திய கிழக்கில் ஏற்படவிருக்கும் எந்தவொரு யுத்தத்திலும் அவர்கள் ஒதுங்கியிருக்க விரும்பவில்லை.  

கிராஸிற்கு எதிராக சுமத்தப்பட்ட யூத-எதிர்ப்புவாத குற்றச்சாட்டோடு சேர்ந்த வெறுப்பு மனப்பான்மை மூச்சுத்திணறச் செய்கிறது. “யூத-எதிர்ப்புவாதம் வெளியில் வர விரும்புகிறது" (“Anti-Semitism wants to get out,”) என்ற தலைப்பில் Die Zeit பத்திரிகையின் இதழாசிரியர் Josef Joffe, கிராஸை மிக மோசமான யூத வெறுப்பாளர்களோடு தொடர்புபடுத்தினார். இதே விசமப்பிரச்சாரம் ஏனைய பிரதான செய்தியிதழ்களிலும் காணப்பட்டது. பரபரப்பு பத்திரிகைகளைக் குறித்து கூற வேண்டியதே இல்லை. ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து ஜேர்மன் ஆளும் வர்க்கம் நூறு ஆயிரக்கணக்கான நாஜிகளைப் பாதுகாத்தது என்பதும், சான்சிலராக கூட நியமித்தது என்பதும் ஒவ்வொருவருக்கும் தெரியும்.

ஒரு இழிவார்ந்த பிரச்சாரத்திற்கு கிராஸ் இலக்கில் வைக்கப்பட்டிருப்பதொன்றும் ஒரு தற்செயலான விபத்தல்ல. அவர் உயிரோடிருக்கும் ஒரு சிறந்த ஜேர்மன் எழுத்தாளர். அவருடைய இலக்கியத்துறை வாழ்க்கை நாஜி சர்வாதிகாரத்தைக் குறித்து எழுதுவதில் அர்பணிக்கப்பட்டுள்ளது. அவரை அவமதித்து மௌனமாக்க முடியுமென்றால், வேறு எவரும் எதிர்க்க துணிய மாட்டார்கள் என்று அவர்கள் கணக்கிடுகிறார்கள். மிக பிரபலமான ஜேர்மன் எழுத்தாளரான கிராஸையே புழுதியில் இழுத்து வர முடியுமென்றால், குறைந்தளவே பிரசித்தி பெற்றவர்களால் அவர்கள் முகங்கொடுக்க வேண்டியதிருக்கும் அச்சுறுத்தல்களைக் கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும்

கிராஸ் மீதான அவதூறு சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டங்கள் மீதான தாக்குதல்களில் தொடர்ந்துள்ளது. கிராஸிற்கு பாதுகாப்பாக சோசலிச சமத்துவக் கட்சி ஒரு பொது பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ததால், அவர்களுக்கு அதுவும் மௌனமாக்கப்பட வேண்டியதாய் உள்ளது.

பிராங்பேர்ட், பேர்லின் மற்றும் லைப்சிக்கில் நடந்த தாக்குதல்களின் நெருங்கிய ஒருங்கிணைப்பு, அத்தோடு சேர்ந்து வலதுசாரி கலகக்காரர்கள், பொலிஸ் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளின் கூட்டுறவும் இதற்கான இழை உயர் அரசு மட்டத்திலிருந்து இழுக்கப்படுகிறது என்பதைத் தெளிவாக்குகிறது. அந்த தாக்குதல்கள் ஒரு பரிச்சயமான வடிவத்தைக் கொண்டிருந்தது: அதாவது, “ஓர் இடதுசாரி தொழிலாளர்களின் அமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு நிகழ்வை இழுத்துமூட பயன்படுத்தப்படும் ஒரு வலதுசாரி ஆத்திரமூட்டல் வடிவத்தைக் கொண்டிருந்தது. 1933க்கு முன்னரெல்லாம் ஜேர்மனியில் இது வழக்கமான ஒரு நடைமுறையாக இருந்தது.  

பிராங்பேர்ட் மற்றும் லைப்சிக்கில் ஆத்திரமூட்டுவோரை அனுப்பி வைத்த அந்த "ஜேர்மன் விரோதிகள்" -“Anti-Germans”- ஒரு பிற்போக்கான அரசியல் சக்தியாகும். அது இஸ்ரேலிய மற்றும் ஜேர்மன் அரசியலமைப்பினோடு மிக சரியாக இணைந்துள்ளது. அவர்கள் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தைப் பிற்போக்குத்தனமானது எனக்கூறுகின்றனர். இரண்டாம் உலக யுத்தத்தில் டிரேஸ்டனில் நடத்தப்பட்ட குண்டுவீச்சை அவர்கள் பகிரங்கமாக ஆதரித்துள்ளனர். அந்த சம்பவத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். யூத-எதிர்ப்புவாதத்தின் மீது தவறான குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி மிக மோசமான ஏகாதிபத்திய குற்றங்களையும் நியாயப்படுத்துவதில் அவர்கள் சிறந்தவர்கள். "தற்போது நாசகார நோயால் பீடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்கள் என்றழைக்கப்படுபவர்களைப் போன்ற யூத-எதிர்பாளர்களின் ஒரு தேசியவாத-இஸ்லாமிய கூட்டத்திற்கு எந்தவித விட்டுகொடுப்புகளும் அளிக்க கூடாது" என்று நடந்துவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய அமைதி பேச்சுவார்த்தையும் கூட அவர்கள் நிராகரிக்கின்றனர்.

Die Zeitஇன் இதழாசிரியர் Joffe வும் ஏகாதிபத்திய பிரச்சாரத்தில் ஒரு சிறந்த நிபுணர் ஆவார். அமெரிக்க நவ-பொருளாதாரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருக்கும் அவர் ஈராக் யுத்தத்திற்காக 2003இல் பிரச்சாரம் செய்ததோடு, பாரிய நாசகரமான ஆயுதங்களை ஈராக் மறைத்து வைத்திருப்பது குறித்து பொய்யையும் பரப்பினார்.

குந்தர் கிராஸை மௌனமாக்கும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டங்களை நிறுத்தும் முயற்சியானது ஜேர்மன் வரலாற்றின் இருள் அடைந்த அத்தியாயத்தின் எச்சசொச்சங்களாக உள்ளது. வைய்மார் குடியரசில் யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீதான ஒடுக்குமுறை, ஹிட்லர் அதிகாரத்திற்கு வர பாதை அமைத்து கொடுத்தது. அவ்வாறே, அமைதிவாத Weltbühne பத்திரிகையின் பதிப்பாளர் கார்ல் வோன் ஓஸ்செட்ஜ்கி ரைஸ்வெஹ்ர் (அப்போது ஜேர்மன் இராணுவம் இவ்வாறு தான் அழைக்கப்பட்டது) சட்டவிரோதமாக மீண்டும் ஆயுதமேந்துவதை பகிரங்கமாக அம்பலப்படுத்தியமைக்காக வேவு பார்த்தார் என்று 1931இல் சிறையில் அடைக்கப்பட்டார். அதிகாரத்தைப் பிடித்ததும், நாஜிகள் அவரை சிறை முகாமில் அடைத்தனர். அங்கே அவர் சித்திரவதை, பட்டினி, பலவந்த வேலை ஆகியவற்றால் மரணமடைந்தார்

சோசலிச சமத்துவக் கட்சியின் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்! அவை அனைவருக்குமான அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதல் ஆகும். குந்தர் கிராஸைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தை நாங்கள் தொடர்ந்து தீவிரப்படுத்துவோம். சோசலிச சமத்துவ கட்சியின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அதனை ஆதரிக்குமாறு உலக சோசலிச வலைத்தளத்தின் அனைத்து வாசகர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.