World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Workers must rally to the defense of Quebec’s striking students

கியூபெக்கில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை பாதுகாக்க தொழிலாளர்கள் முன்வரவேண்டும்

Keith Jones
27 April 2012

Back to screen version

கியூபெக்கின் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக கனடாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் ஆதரவளிக்க முன்வரவேண்டும். 11 வாரங்களாக பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக மற்றும் CEGEP (பல்கலைக் கழகத்திற்கு முந்தைய படிப்பு மற்றும் தொழிலநுட்பக் கல்லூரி) மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து பல்கலைக்கழகப் பயிற்சிக் கட்டணங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75% உயர்த்தும் மாநில லிபரல் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பெருவணிகம் மற்றும் பெருநிறுவனச் செய்தி ஊடகத்தின் முழு ஆதரவுடன் அரசாங்கமும் மாநிலமும் மாணவர் பகிஸ்கரிப்பை குற்றமாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளன.

மாணவர்கள் மறியல் போராட்டத்தை நேரடியாக தடைசெய்யாவிடினும் பல கட்டளைகள் மூலம் நீதிமன்றங்கள் பகிஸ்கரிப்பை வரம்பிற்கு உட்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் CEGEP க்கள் ஒரு மாணவர் வகுப்பில் இருந்தால்கூட இயல்பான கற்பித்தல், பரீட்சைகள் ஆகியவை தொடரப்பட வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளன.

கடந்த வாரம் மிகப்பெரிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தாம் மாணவர்களுக்கு பலமுறை பகிஸ்கரிப்பிற்கு ஆதரவுகொடுத்தும் கூட, அரசாங்கம் பகிஸ்கரிப்பை முறியடிக்கும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு ஆசிரியர்கள் வகுப்பு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். நிகழ்வுகள் ஒரு பொலிஸ் அரசாங்கத்தை நினைவுபடுத்துவதாக கூறிய கியூபெக் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர், பொலிசாரும் அண்மையில் விரிவாக்கப்பட்ட பல்கலைகழகப் பாதுகாப்புக் காவலர்களும் தன் அமைப்பின் உறுப்பினர்களை அச்சுறுத்துவதாக தெரிவித்தார். பல்கலைக்கழக வளாகங்களுள் பயமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது, இதுவரை இவ்வாறு கற்பனைகூட செய்து பார்க்க முடியாது; இது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல.

பகிஸ்கரிப்பை முறிக்கும் மற்றொரு முயற்சியில் லிபரல் அரசாங்கம் இந்த வாரம் போலியான பேச்சுவார்த்தைகளுக்குக் கூட்டம் நடத்தியது. பகிஸ்கரிப்பின் போது அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் தொனியில் கல்வி மந்திரி Line Beauchamp பல்கலைக்கழக கட்டணங்கள்  அதிகரிப்பை நீக்குவது அல்லது திருத்துவது பற்றிக் கூட விவாதிக்க இயலாது என்று உறுதியாக மறுத்துவிட்டார். இதற்கு பதிலாக மூன்று மாநிலம் அளவிலான மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளை நாட்டின் வங்கிகளுக்கு அதிக இலாபத்தை கொடுக்கும் அரசாங்கத்தின் ஆதரவுடைய மாணவர் கடன் திட்டத்தை அதிக அளவில் ஏற்குமாறு வலியுறுத்தினார்.

ஏற்கனவே ஒரு சராசரி கியூபெக் மாணவர் கல்லூரிப் பட்டத்தை முடிக்கும்போது $15,000 கடன்களுடன் வெளியேறுகிறார். மேலும் கியூபெக்கில் உள்ள மாணவர்கள் வட அமெரிக்காவில், குறிப்பாக பல்கலைக்கழக கட்டணங்கள் இன்னும் அதிகமான அமெரிக்காவில் இன்னும் அதிக கடன் சுமையைக் கொள்ளும் மாணவர்களைப் பற்றி நன்கு அறிவர்.

பேச்சுக்கள் மூன்றாம் நாள் தொடர்கையில், அரசாங்கம் மூன்று மாணவர் சங்கங்களில் தீவிரபோக்குடையதை பேச்சுக்களில் இருந்து ஒதுக்கிவிடுவதாக Beauchamp அறிவித்தார். அவர் இதற்குக் கொடுத்த பல போலிக்காரணங்களில் ஒன்று மொன்ட்ரீயலில் ஒரு மாணவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முந்தைய இரவு வன்முறையானதாக திரும்பிவிட்டது என்பதாகும். உண்மையில் பல கண்ணால் கண்ட சாட்சிகள், செய்தியாளர்கள் உட்பட,  பொலிஸ் அதை சட்ட விரோதக் கூட்டம் என்று அறிவித்து மாணவர்களைத் தாக்குவதில் ஈடுபடும் வரை, ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்றுவந்தது என்றுதான் கூறியுள்ளனர்.

கடந்த இரண்டரை மாதத்தில் எதிர்ப்புக்களை சட்டவிரோதம் என்றும் மாணவர்கள்மீது மிளகுப்பொடி தூவுதல், கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் நடத்துதல் மற்றும் தடியடி நடத்துதல் ஆகியவற்றின் மூலம் அவர்களை அச்சுறுத்துவது பொலிசிற்கு வாடிக்கையான பழக்கமாகிவிட்டது. இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளுக்குச் செய்தி ஊடகங்களில் ஆதரவு உள்ளது. இவை மாணவர் வன்முறைபற்றி இழிந்த வகையில் பல செய்திகளை வெளியிடுவதுடன், அதே நேரத்தில் பொலிஸ் வன்முறை என வரும்போது தணிக்கை செய்தே தகவல்களைக் கொடுக்கின்றன. சில வலதுசாரிச் செய்தியாளர்கள் மாணவர்களுடைய வேலைநிறுத்தம் பயங்கரவாதத்திற்கு ஒப்பானது எனக் கூறும் அளவிற்குச் சென்றுள்ளனர்.

பரந்துபட்ட எதிர்ப்பைக் குற்றமயமாக்குதல், அதிலும் குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை என்பது உலகில் மற்ற இடங்களைப் போலவே கனடாவிலும் வாடிக்கையாகி வருகிறது. கூட்டாட்சியின் கன்சர்வேடிவ் அரசாங்கம் பலமுறையும் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி வேலைநிறுத்தங்களை முறியடித்து வெட்டுக்களை சுமத்துகின்றன. இதில் அஞ்சல் துறை மற்றும் கனேடிய விமானத் துறை ஆகியவை அடங்கும். கடந்த இலையுதிர்காலத்தில் ரொரோன்டோ, வான்கூவர் மற்றும் பல முக்கிய நகரங்களில் நகரசபை ஆட்சிகள் நீதிமன்றத் தடைகள் மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு -“Occupy”- போராட்டங்களை கட்டாய முடிவிற்குக் கொண்டுவந்தன.

கியூபெக் அரசாங்கமும் முழுக் கனேடிய ஆளும்உயரடுக்கும் கியூபெக் மாணவர் வேலைநிறுத்தத்தில் தமது எதிர்ப்பை இவ்வளவிற்கும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அவை மாணவர்கள் கல்விக் கட்டண அதிகரிப்புத் தெரிவிக்கும் எதிர்ப்பு மற்றும் கல்வி ஒரு சமூக உரிமை என வலியுறுத்துவது தங்கள் முழு வர்க்க மூலோபாயத்திற்கு ஒரு சவால் என்பதை உணர்ந்திருப்பதனால்தான்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் உள்ள தங்கள் போட்டி முதலாளித்துவத்தினரைப் போலவே, கனடாவின் ஆளும் உயரடுக்கும் 2008 உலக நிதியக் கரைப்பை எதிர்கொள்ளும் வகையில், கடந்த நூற்றாண்டு முழுவதும் தொழிலாள வர்க்கம் விட்டுக்கொடுக்காது சமூக போராட்டங்களில் வெற்றி கொண்டதால் அடைந்த சமூக நலன்களில் எஞ்சியிருப்பதையும் தகர்க்கத்தான் முயல்கிறது. ஒவ்வொரு மட்டத்திலும் அரசாங்கங்கள் மிருகத்தனச் சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்துகின்றன. இவை அடிப்படைப் பொதுப் பணிகள் மற்றும் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள் ஆகியவை உள்ளடங்கிய சமூக நலன்கள் ஆகியவற்றையும் தாக்குகின்றன.

இந்த வர்க்கப் போர் நிகழ்ச்சிநிரலை முன்னேற்றுவிக்கும் வகையில் மாணவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் பெருவணிகம் பிடிவாதமாக உள்ளது. கியூபெக் அரசாங்கம் விட்டுக் கொடுக்கவோ, சமரசம் செய்துகொள்ளவோ கூடாது என்று மொன்ட்ரீயலின் வணிகக் குழுவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மைக்கேல் லெபாங்க் குறிப்பிட்டுள்ளார். ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் அபாயம் இன்னும்தெளிவாக மாநிலத்தின் மிகச் செல்வாக்கு வாய்ந்த பத்திரிக்கையான La Presse இல் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்பட வேண்டும், அதையொட்டி இருக்கும் நிலைப்பாட்டுடனான பிணைப்புக்கள் முறிக்கப்பட வேண்டும், பெறப்பட்டுள்ள உரிமைகளும் முறிக்கப்பட வேண்டும் என்று ஒரு முன்னாள் ஆசிரியர் எழுதியிருக்கையில், தற்போதைய ஆசிரியர் மாணவர்கள் முன்பு லிபரல் அரசாங்கம் பணிந்து போனால், க்யூபெக்கில் எத்தகையச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தவும் இயலாமற் போய்விடும் என்று எழுதியுள்ளார்.

மாணவர்களை பாதுகாக்க தொழிலாளர் வர்க்கத்தைத் திரட்டுவது என்பதற்கு முற்றிலும் மாறான முறையில், தொழிற்சங்கங்கள் மற்றும் இடது எனக் கூறிக் கொள்ளும் கட்சிகள் முறையாக மாணவர்கள் போராட்டங்களில் இருந்து தங்களை தனிமைப்படுத்துக்கொண்டுள்ளன. இதனால் மாநில லிபரல் மற்றும் கூட்டாட்சி கன்சர்வேடிவ் அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த இயக்கம் ஒரு ஊக்குவிக்கும் கருவியாக அமைந்துவிடுவதைத் தடுக்கும் நோக்கத்தைத்தான் இவை கொண்டுள்ளன.

உண்மையில், பகிஸ்கரிப்பு புலப்படுத்தியுள்ள ஆழ்ந்த வர்க்க துருவப்படுத்தல்கள் ஆழமடைவதன் பிரபலிப்பாக, தொழிற்சங்கங்கள் இப்பொழுது மாணவர்களை அரசாங்கம் பயிற்சிக் கட்டணத்தை அதிகரிப்பதை நிறுத்தவேண்டும் என்று கோருவதைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அதே நேரத்தில் மாணவர்கள் இயக்கத்தையும் தொழிலாளர் வர்க்கத்தையும் Parti Quebecois என்னும்பெருவணிகக் கட்சியுடன் பிணைக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்துகின்றன. இக்கட்சிதான் முன்னர் பதவியில் இருந்தபோது மிகப் பெரிய சமூகநலச் செலவு வெட்டுக்களைச் சுமத்தியது.

 அரையாண்டு வகுப்பையும், சமூக அமைதியைக் பாதுகாக்கவும் கியூபெக்கின் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை பல்கலைக்கழக கட்டணத்தை அதிகரிப்பதை ஓராண்டுகாலம் நிறுத்தி வைக்குமாறு அறிவிக்க வேண்டும் என்று கோருகின்றன. இதனால் பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்கல் குறித்து முழு அளவில் சிந்திப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தொழிற்சங்க அதிகாரி ஒருவர் கூறியதாக மேற்கோளிடப்பட்டுள்ளது.

கனடாவில் மற்ற தொழிற்சங்கங்களும், கனடாவின் சமூக ஜனநாயகக் கட்சியான NDP யும் கியூபெக் மாணவர்கள்மீது நடத்தப்படும் அடக்குமுறைபற்றி மௌனம் காக்கின்றன. உலகெங்கிலும் இருப்பதைப் போலவே, கனடாவின் தொழிற்சங்கங்களும் சமூக ஜனநாயக வாதிகளும் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பை நாசப்படுத்துவது மட்டும் இல்லாமல், முதலாளித்துவத்தின் சிக்கன நடவடிக்கைகளை நேரடியாகவும் சுமத்துகின்றன. செவ்வாயன்று NDP தொழிற்சங்கங்களின் முழு ஆதரவுடன் ஒன்டாரியோவில் ஒரு சிக்கன நடவடிக்கைகள் நிறைந்த வரவு-செலவுத் திட்டத்தை இயற்ற வசதியளித்தது; இதில் அடுத்த மூன்று ஆண்டுகளில் $17பில்லியன் வெட்டுக்கள் செலவுகளில் இருக்கும்.

கியூபெக் மாணவர்களைத் தனியே போராடவிட்டுவிடக்கூடாது.  முதலாளித்துவ நெருக்கடியின் சுமையைத் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் ஆளும்வர்க்கத்தின் முயற்சிக்கு எதிரான அவர்களின் மறைமுகமான எதிர்ப்பு  ஒரு வெளிப்படையான மூலோபாயமாக மாற வேண்டும். இதனால் கியூபெக் மற்றும் கனடா முழுவதும் தொழிலாள வர்க்கம் பொதுப் பணிகள், வேலைகள், சலுகைகள் ஆகியவை அகற்றப்படுவதற்கு எதிராகத் அணிதிரட்டப்பட வேண்டும்.

அடிப்படை சமூக உரிமைகளைப் பாதுகாத்து விரிவாக்க கூடிய சமூக சக்தியை தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் கொண்டுள்ளது. இதனால் அனைவருக்கும் கௌரவமான கல்வி, வாழ்க்கை ஆகியவை உறுதிப்படும். இதற்குத் தொழிலாள வர்க்கம் அரசியல் போராட்டம் ஒன்றை நடத்தி தொழிலாளர்களின் அரசாங்கங்களை பதவியில் இருந்தி சமூகப் பொருளாதார வாழ்வை சோசலிச வகையில் மறுசீரமைக்க வேண்டும். அதற்கு வங்கிகள் மற்றும் அடிப்படைத் தொழில்கள் பொது உடைமையின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். உற்பத்தி ஒரு சிலரின் செல்வக்கொழிப்பு என்று இல்லாமல் சமூகத் தேவைகளுக்காக ஒழுங்கமைக்கப்படும்.