World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Behind the mounting conflicts in the EU

ஐரோப்பாவில் பெருகும் பூசல்களுக்கு பின்னணியில்

Peter Schwarz
2 August 2012
Back to screen version

பெரும்பாலான அரசாங்கங்களும் பாராளுமன்றங்களும் கோடை விடுமுறையில் இருந்தாலும், யூரோவின் எதிர்காலம் பற்றிய கடுமையான சர்ச்சை ஐரோப்பியத் தலைநகரங்களுக்கிடையே நிலவுகிறது.

இத்தாலிய பிரதம மந்திரி மரியோ மொன்டி ஓர் ஐரோப்பிய பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பிய ஸ்திரப்பாட்டு கருவி (ESM) யூரோ மீட்பு நிதியை வரம்பற்று விரிவாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார். அவருக்கு பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் ஆதரவு உள்ளது; ஆனால் அவர் ஜேர்மனியிடம் இருந்து வலுவான எதிர்ப்பை முகங்கொடுக்கிறார்.

ESM இன் மொத்த நிதி தற்பொழுது 500 பில்லியன் யூரோக்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது; இதற்கு யூரோப்பகுதியின் உறுப்பு நாடுகள் பொறுப்பாகும். ஜூன் 29ம் திகதி ஐரோப்பிய ஒன்றிய உச்சமாநாடு ESM இன் நிதிகளை நேரடியாக அரசாங்கங்களுக்கு என்று முன்பு இருந்தது போலன்றி வங்கிகளுக்கு அளிக்கிறது. இது ஸ்பெயினின் தனிப்பட்ட வங்கிகளுக்கு நேரடிப் பிணை எடுப்பை அனுமதிக்கிறது; ஸ்பெயின் அரசாங்கத்திற்குப் பிணை எடுப்பு கிடையாது; இது ESM நிதி வரம்பான 500 பில்லியன் யூரோக்களைப் பெரிதும் எடுத்துக் கொண்டுவிடும்.

ஆனால் உச்சிமாநாடு நலிந்திருக்கும் ஸ்பெயினின் வங்கிகளுக்கு 100 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியிருந்தாலும், நிதியச் சந்தைகளுக்கு இதில் திருப்தி இல்லை. ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய பத்திரங்களின் வட்டி விகிதங்கள் விரைவில் புதிய சாதனையாக அதிகபட்சம் உயர்ந்தது.

மொன்டியும் ஹாலண்டும் இப்பொழுது ESM ற்கு ஒரு வங்கி உரிமம் கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். அதையொட்டி ESM  ஒரு வணிக வங்கி போல் செயல்பட்டு, ஐரோப்பிய மத்திய வங்கியிடம் இருந்து கடன் வாங்கிச் சந்தையில் உள்ளஅரசாங்கப் பத்திரங்களை வாங்க முடியும். இப்பத்திரங்கள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் உத்தரவாதமாக வைக்கப்பட வேணடும். ESM இதையொட்டி வங்கிகள் அல்லது அரசாங்கங்களுக்கு ஐரோப்பிய மத்திய வங்கி பிணை கொடுக்கும் நிதியை, வரம்பற்ற தொகையை அதனால் அச்சிடப்படுவதை கொடுக்கும் வழிவகைக் கருவியாக செயல்படும்.

இத்தகைய நடவடிக்கை பெரும்பாலான கிரேக்க, ஸ்பெயின் மக்களை வறிய நிலையில் தள்ளிவிட்ட சிக்கன நடவடிக்கைகளைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவவோ போவதில்லை. ESM  ற்கு வங்கி உரிமம் தேவை என்ற கருத்தை முன்வைத்துள்ளவர்கள், ESM மூலம் அரசாங்கப் பத்திரங்கள் வாங்குவது புதிய கண்டிப்பான சிக்கன நடவடிக்கைகள் கோரப்படுவதுடன் பிணைந்து இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ESM ஈடுபடுத்தியுள்ளதற்கு இதுதான் உண்மையான காரணம். யூரோப்பகுதி நிதிமந்திரிகள் ஒருமனதாக உடன்பட்டால்தான் தனது நடவடிக்கைகளை கட்டாயமாக எடுக்க முடியும் என்ற ESM இன் நிலைமை போல் இல்லாமல், ஐரோப்பிய மத்திய வங்கி சம்பந்தப்பட்ட அரசாங்கங்களுக்கு சிக்கன நடவடிக்கைகள் குறித்து ஆணையிட முடியாது. ஹாலண்ட் மற்றும் மொன்டி கருத்திற்கொண்டுள்ள ESM வங்கிகளின் கருவூலங்களில் டிரில்லியன்களை செலுத்தும் நிறுவனமாக இருக்கும்; அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக டிரில்லியன் கணக்கில் வெட்டுக்களை சுமத்த ஆணையிடும் அமைப்பாகவும் இருக்கும்.

இதற்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களின் ஆதரவு உள்ளது என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல; அவற்றின் நிதியத் துறைகள் யூரோப் பகுதி நாடு ஒன்று திவாலானால் கடுமையாகப் பாதிப்பிற்கு உட்படும்.

ஆனால், ஜேர்மனியில் இத்திட்டம் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்கிறது. அரசாங்கக் கூட்டணியில் இருக்கும் FDP  எனப்படும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவர் Rainer Brüderle இதை பணவீக்கத்தின் மூலம் தற்கொலை செய்து கொள்ள வகை செய்யும் பணி என விவரித்துள்ளார்.

ESM இன்னும் விரிவாக்கப்பட்டால் நிதிய நெருக்கடியின் உச்சியில் இன்னும் தீவிரமாக தள்ளப்படலாம் என்று பேர்லின் அஞ்சுகிறது. ஜேர்மனிய வணிகம் மற்ற நாடுகளைவிட யூரோவினால் அதிக நலன்களை அடைந்திருந்தாலும், அது மற்ற நாடுகளுக்கு நலனளிக்கும் அனைத்து நிதியச் செயல்களையும் எதிர்க்கிறது; மாறாக அவை கிரேக்கம் மற்றும் ஸ்பெயினில் தொடங்கி சமூக மற்றும் பொருளாதாரச் சரிவை ஐரோப்பாவில் ஏற்படுத்தினாலும் சரி கடுமையான சிக்கனத் திட்டங்கள் தேவை என வலியுறுத்துகிறது.

ஜேர்மனிய செய்தி ஊடகத்தில் தேசியவாதக் குரல்கள் கிரேக்கத்தையும் இன்னும் பிற அதிக கடன்பட்டுள்ள நாடுகளையும் யூரோப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கான அழைப்புக்களை கொடுக்கின்றன; அல்லது வடக்கு நாணய நிதிய முகாம் ஒன்று ஜேர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் அமைக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றன.

பெரும்பாலான ஜேர்மனிய பெரு வணிகம் அத்தகைய நடவடிக்கைகளில் இருந்து தயங்குகின்றது. குறிப்பாக ஏற்றுமதித் தொழில்களின் பிரதிநிதிகள் யூரோ முறியக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.

சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலும் நிதி மந்திரி வொல்ப்காங்  ஷொய்பிளவும் அமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்னர் ஐரோப்பாவிற்குப் பறந்து வந்து ஷொய்பிள மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ டிராகி ஆகியோருடன் பேச்சுக்கள் நடத்திய பின் மேலும் சலுகைகள் பற்றிய வாய்ப்பைக் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இது மேர்க்கெலின் கூட்டரசாங்கத்தின் தன்மையை முறித்துவிடக்கூடும்; பணவீக்கக் கொளைகைகளின் எதிரிகள் வெளிப்படாயாக அதற்காக வாதிடுவோருடன் மோதுகின்றனர்.

ESM பற்றிய பூசல் இன்னும் கொல்லப்படாத கரடியின் கம்பளித்தோல் எப்படிப் பிரித்துக் கொள்ளப்பட வேண்டும் என்னும் மரபார்ந்த பூசலைத்தான் நினைவுபடுத்துகிறது. ESM இந்த மாதம் நடைமுறைக்கு வரவிருந்தாலும், ஜேர்மனி அதற்கு இன்னமும் ஒப்புதல் கொடுக்கவில்லை. இது அந்நாட்டின் தலைமை நீதிமன்றத்தில் தடுப்பிற்கு உட்பட்டுள்ளது; அது செப்டம்பர் 12ம் திகதிதான் ஜேர்மனிய அரசியலமைப்பிற்கு இது உட்பட்டுள்ளதா என முடிவெடுக்கும்.

ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இடையேயான அழுத்தங்களின் தீவிரம் வார இறுதியில் மூத்த அரசியல் வாதிகள் கொடுத்த பல பேட்டிகளில் காணப்பட்டது; அனைத்து இராஜதந்திர கட்டுப்பாட்டு முறையையும் காற்றில் பறக்கவிட்டு அவர்கள் ஒருவரை ஒருவர் அவமதித்துப் பேசினர்.

திங்களன்று Suddeutsche Zeitung ல் லுக்சம்பேர்க்கின் பிரதம மந்திரி Jean-Claude Juncker ஜேர்மனி யூரோப்பகுதியை அதன் கிளை அலுவலகம் போல் நடத்துகிறது என்று குற்றம் சாட்டினார். ஐரோப்பிய ஒருங்கிணைப்பு மிகவும் மிருதுவான விடயம் என்று அவர் எச்சரித்தார். பின்னர் அவர் கூறியது: மறக்கப்பட்டுவிட்டன என்று கருதப்பட்ட எதிர்ப்புணர்வுகள் மேற்பரப்பிற்கு வெகு அருகே நீந்திக் கொண்டிருக்கின்றன. இரண்டாம் உலகப் போர் முடிந்து 60 ஆண்டுகள் ஆகியும், அவை பல மைல்கள் தொலைவில் இல்லை; மேற்பரப்பில் இருந்து ஒரு சில அங்கிலத்துக்குள்தான் உள்ளன.

ஜேர்மனிய அரசியல்வாதிகள் இதற்குப் பதில் அளிப்பதில் அதிக நேரத்தை வீணடிக்கவில்லை. கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் (CSU) தலைமைச் செயலர் Alexander Dobrindt யுங்கரின் கருத்துக்களை எல்லை கடந்த திமிர்த்தனப் பேச்சு என்று கூறி யுங்கர் இராஜிநாமா செய்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இடையேயான பூசல்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான புதிய தாக்குதல்களுடன் ஒருங்கிணைந்துதான் செல்லுகின்றன. இப்பிரச்சினையில் ஐரோப்பாவின ஆளும் வர்க்கம் ஒற்றுமையுடன் உள்ளது.

ஜூன் மாதம், யூரோப்பகுதியில் வேலையின்மை மிக அதிக 11.2% என்பதை எட்டியது; 17.8 மில்லியன் தொழிலாளர்கள் வேலையில் இல்லை; தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்கள் வேலையின்மை, சிக்கன நடவடிக்கை, உயரும் பணவீக்கம் ஆகியவற்றால் சரிந்து கொண்டிருக்கின்றன. ஸ்பெயின் நாட்டில் சில்லறை வணிகத்தின் மொத்த மதிப்பு ஓராண்டில் 5.2 சதவிகிதம் குறைந்துவிட்டது; கிரேக்கத்தில் இது 8.8% என்று பெரிதும் குறைந்துவிட்டது. ஜேர்மனியில்கூட, சில்லறை விற்பனைகள் கடந்த மூன்று மாதங்களில் தொடர்ந்து சரிந்துவிட்டன. ஆறு யூரோ நாடுகள் உத்தியோகப்பூர்வமாக மந்தநிலையில் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம், தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் தங்கள் வேறுபாடுகளை களைய விவாதிக்கும் ஒரு அரங்கமாக உதவுகிறது. நிதியச் சந்தைகளின் ஆணைகளுக்கு ஏற்ப ஐரோப்பாவைத் தாழ்த்தி நிறுத்துதவதில் இது முக்கிய கருவியாக உள்ளது. இது சீர்திருத்தப்பட முடியாதது; ஆனால் இது முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கம், ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்டால் மட்டுமே அது அதன் உரிமைகள் மற்றும் சமூக நலன்களை பாதுகாக்க முடியும். தொழிலாளர்கள் ஐரோப்பா முழுவதும் ஐக்கியப்பட்டு,  ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் அரசாங்கங்கள் அமைக்கப்படுவதற்கு போராடவேண்டும்; அது வங்கிகள் மற்றும் பெருநிறுவன நிதிகளை பறித்தெடுத்து பொருளாதாரத்தை நிதியப் பிரபுத்துவத்தின் தேவைகளுக்கு அல்லாமல் சமூகத் தேவைகளுக்காக அமைக்கும்.