World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

Turkey attacks Kurds, threatens military action against Syria

துருக்கி குர்திஸ்களை தாக்குவது, சிரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்துகிறது

By Chris Marsden
7 August 2012
Back to screen version

சிரியா அரசு அலெப்போவில் பெரும் தாக்குதலை நடத்தும் என்ற எதிர்பார்ப்பிற்கு முன்னதாக, துருக்கி சிரியா மீது படையெடுக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளது. இதற்கு வடக்கு எல்லைப் பகுதிகளில் குர்திஸ் குழுக்கள் கட்டுப்பாட்டை எடுக்கக்கூடும் என்னும் போலிக்காரணம் கூறப்படுகிறது.

நீண்ட காலமாக அது நிகழ்வுகளை, சிரிய தேசியக் காங்கிரஸ் மற்றும் சுதந்திர சிரிய இராணுவம் என்னும் எதிர்தரப்பு சக்திகளைக் கட்டுப்படுத்துவதின் மூலம் செயல்படுத்துவதால் இத்தகைய நடவடிக்கை அங்காராவை நேரடியாக சிரியப் போரில் ஈடுபடுத்தும்.

இது அமெரிக்காவின் முழு ஆதரவுடன் நடத்தப்படும்.

துருக்கிய செய்தி ஊடகத்தில் அங்காராவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் தென்கிழக்குத் துருக்கியில் அடனாவில் உள்ள இணைத்தூதரகம் ஆகியவை சிரியாவில் உள்ள பாத்திஸ்ட் ஆட்சிக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டுள்ளது. இது துருக்கிய அரசாங்கத்திற்கு முற்றிலும் தெரியும் என்ற தகவல்களை அல்-அஹ்ரம் மேற்கோளிட்டுள்ளது.

ஆயுதங்கள் ஏற்றப்பட்ட ஏராளமான வாகனங்கள் Incirlik  இல் இருக்கும் அமெரிக்க விமானத் தளத்தில் இருந்து சிரிய எதிர்த்தரப்பினருக்கு வழங்கப்படுவதற்காக வெளிவந்த வண்ணம் இருப்பது தெரியவந்துள்ளது.

துருக்கியின் வெளியுறவு மந்திரி அஹ்மத் டாவுடோக்லு  துருக்கிய எல்லைக்கு அருகே இருக்கும் அலெப்போவில் படுகொலைகள் நடைபெறவிருப்பதை பற்றி எச்சரித்து, நடவடிக்கை தேவை என முறையீடு செய்துள்ளார். இது குர்திஸ்களால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என்னும் பெருகிய வார்த்தையாடல்களுடன் இணைந்து வந்துள்ளது.

கடந்த 15 நாட்களில் கிட்டத்தட்ட 115 குர்திஸ் போராளிகள் தென்கிழக்கு துருக்கியில் பல இராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்டனர். இதில் செம்டின்லி சிறுநகரத்திற்கு அருகே நடந்த வான்தாக்குதல்களும் அடங்கும். ஞாயிற்றுக் கிழமை இதற்கு ஒரு எதிர்த்தாக்குதல் விளைந்தது. இதில் குர்திஸ் படைகள் ஈராக் எல்லைக்கு அருகே உள்ள மூன்று இராணுவச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் குறைந்தப்பட்சம் 5 படையினரும், 14 எழுச்சியாளர்களும் கொல்லப்பட்டனர். துருக்கிய அதிகாரிகள் 200 பேர் அடங்கிய PKK  எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியுடன் போரிடுவதாகக் கூறுகின்றனர்.

ஈராக்கின் 31 மில்லியன் மக்களில் குர்திஸ் மக்கள் 17% ஆக உள்ளனர். இதில் பகுதித் தன்னாட்சிப் பிராந்தியமான ஈராக்கிய குர்திஸ்தானும் உள்ளது. இதைத்தவிர சிரியாவின் 21 மில்லியன் மக்களில் 9% உம், மற்றும் ஈரானின் 75 மில்லியன் மக்களில் 7 முதல் 10% வரை குர்திஸ் மக்கள் உள்ளனர்.

குர்திஸ் மக்கள் 25% ஐக் கொண்டுள்ள துருக்கி (20 மில்லியன் குர்திஸ்கள்) கடுமையாக ஒரு சுதந்திர நாடு தோற்றுவிப்பதை எதிர்க்கிறது. துருக்கிய இராணுவம் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி  படைகளை இலக்கு வைத்துள்ளது. அத்துடன் 1984இல் இருந்தான மோதலில் இதுவரை 40,000 பேர் முக்கியமாக குர்திஸ் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஆளும் AKP  எனப்படும் நீதி, மற்றும் அபிவிருத்திக்கான கட்சி அதன் இறுதி நோக்கம் சிரியாவில் நேரடியாகத் தலையிடுதல் என்பது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

எவர் பெயரையும் அறிவிக்காமல், பிரதம மந்திரி ரசிப் தயிப் எர்டோகன் வெளிநாடுகள் குர்திஸ் போராளிகளுக்கு ஆதரவு தருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் இழிந்ததாக்குதல்களைக் குறைந்தப்பட்சம் மூன்று இராணுவத் தளங்களில் நடத்தியுள்ளனர். துருக்கி பயங்கரவாத அமைப்புக்களை தூண்டிவிடும் எதிரிநாடுகள் மற்றும் வளையங்கள் ஆகியவற்றை அவர்களுக்கு உரிய இடத்தில் இருத்தும் வலிமை உண்டு என்று அவர் அச்சுறுத்தினார்.

AKP யின் துணைத்தலைவர் ஒமர் சீலிக் இன்னும் நேரடியாகக் கூறினார்: குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி  ஹக்காரியில் நடத்திய தயாரிப்புக்கள் மற்றும் பன்முகத் தாக்குதல்கள் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் தகமைகளை விஞ்சியுள்ளது. செம்டின்லி மற்றும் ஹக்காரியில் தாக்குதல்களை நடத்தியபோது குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் படைகளால் அலெப்போவில் கொலைகள் நடாத்தப்பட்ட அதே நேரத்தில் செயல்பட்டன.

அசாத்தை அகற்றும் இயக்கத்தின் தலைமையில் தன்னை AKP இருத்திக் கொண்டுள்ளது. முன்னாள் சிரியாவுடன் இது கொண்டிருந்த நட்பை முறித்துவிட்டது. இது சுன்னிச் சக்திகளின் நட்புக் கூட்டிற்கு தனக்கு தலைமை கிடைக்க உதவும் என்று அது கணக்கிட்டுள்ளது. அதில் சவுதி அரேபியா, கட்டார் ஆகியவை உள்ளன. அவற்றை அமெரிக்கா பினாமிகளாக சிரியாவில் ஆட்சி மாற்றத்தை நிறுவப் பயன்படுத்துகிறது. இது ஷியா ஈரானை அதன் முக்கிய பிராந்திய நட்பு நாட்டில் இருந்து பிரித்து, ரஷ்யா, சீனா ஆகியவற்றை மத்திய கிழக்கில் காலடி ஊன்றமுடியாமலும் செய்துவிடும்.

சிரியாவில் உள்ள குர்திஸ் குழுக்களின் ஆதரவைப் பெறுவதற்கும் இது முயல்கிறது. அத்துடன் அவற்றை சிரிய தேசிய இராணுவத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்றும் விரும்புகிறது; இது இப்பொழுது ஸ்வீடனில் வசிக்கும் குர்தியரான அடெல்பாசெட் சாய்டாவின் தலைமையில் உள்ளது. ஆனால் பெரும்பாலான குர்திஸ்கள் சிரிய தேசிய இராணுவத்தை ஆழ்ந்த சந்தேகத்துடன்தான் காண்கின்றனர். இதற்குக் காரணம் முஸ்லிம் சகோதரத்துவம் கொண்டுள்ள பங்கும், ரியத் மற்றும் கட்டார் ஆகியவை கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள், நிதிகள், பயிற்சிகள் ஆகியவற்றைக் கொடுத்தலும் ஆகும். குறுங்குழுவாதமற்ற வாடிக்கையான நடவடிக்கைகள் அசாத் எதிர்ப்பு முகாமில் உள்ள அல் குவேடா மற்றும் சலாபிஸ்ட் சக்திகளுக்கு எதிராக அதிகச் செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை

மிகப் பரந்த ஆதரவு பெற்றுள்ள குர்திஸ் குழுவான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK),   மற்றும் அதன் உள்ளூர் உத்தியோகபூர்வமற்ற நட்பு அமைப்பான ஜனநாயக ஒன்றியக் கட்சி (PYD),  ஆகியவை ஆரம்பத்தில் அசாத்துடன் இணைந்திருந்தன. அதற்குக் காரணம் சுன்னி எழுச்சிக்கு எதிர்ப்புத்தான். மேலும் ஒருவித தன்னாட்சி பரிசாகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

சமீபத்திய நாட்களில் சிரியப் பிரிவின் அலெப்போப் படையை 20,000 ஆக கட்டமைக்க செய்யப்பட்ட மாற்றங்கள் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை PYD இன்னும் பிற குழுக்கள் நிரப்புகின்றன. இவை இப்பொழுது வடக்கு சிரியாவில் நான்கு அல்லது ஐந்து முக்கிய சிறுநகரங்கள், நகரங்கள்மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த அச்சுறுத்தலை பொறுத்தவரை எர்டோகன், தலையிடுவது நம்முடைய மிக இயல்பான உரிமை ஆகும்; ஏனெனில் அந்தப் பயங்கரவாத அமைப்புக்கள் நம் தேசத்தின் அமைதியைக் கெடுக்கும்... வடக்கில், (அசாத்) ஏற்கனவே ஐந்து மாநிலங்களை பயங்கரவாதிகளுக்கு ஒதுக்கியுள்ளார். என்று கூறியுள்ளார்.

ஈராக்கின் தன்னாட்சிக் குர்திஸ் நிர்வாகத் தலைவர் ஜனாதிபதி மசூட் பர்ஜானியுடன் ஒருவகை இணக்கப்பாட்டை அடைவதற்குத் துருக்கி செயல்படுகிறது. அது சிரியா, ஈராக் மற்றும் துருக்கிச் செயற்பாடுகள் ஒன்று சேராமல் தடுக்கும். துருக்கி டவடோக்லுவைத் தலைநகரான எர்பில்லிற்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி பேச்சுக்களுக்கான அனுப்பியது. ஒரு கூட்டு அறிக்கை, சிரியாவில் உள்ள உறுதியற்ற தன்மை, பெரும் குழப்பம் குறித்து ஆழ்ந்த கவலையைதெரிவித்து, பிராந்தியப் பாதுகாப்பு, உறுதிப்பாட்டிற்கு ஒரு அச்சுறுத்தல் என்று கூறுவது, ஒரு ஜனநாயக, குறுங்குழுவாதமற்ற சிரியாவை நிறுவுவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டியதை முன்வைக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் முன்னதாக பர்ஜானி அல்ஜசீராவிடம் சிரியக் குர்திஸ்கள் ஈராக்கில் இராணுவப் பயிற்சி பெற்றுள்ளனர் என்று கூறப்பட்டதை தொடர்ந்து இது வந்துள்ளது.

குர்திஸ் தன்னாட்சி பிராந்தியம் என்பதற்கான ஒரு வருங்காலம், அசாத்தின்கீழ் அல்லது அசாத்திற்குப் பிந்தைய அரசாங்கத்தின் காலத்தில் என்பது அங்காராவிற்கு முற்றிலும் ஒவ்வாத பொருளாகும். ஆனால் குர்திஸ் பிரச்சினையை இது சிரியாவில் வேருன்றுவதற்கு ஒரு வழிவகையாகப் பயன்படுத்துகிறது.

சிரிய தேசிய இராணுவம் (SNC) மற்றும் சிரிய குர்திஸ் தேசியக் குழு (KNC)  இரண்டும் ஒரு குழுவை அமைத்து டவுடோக்லுவுடனான பயங்கரவாதம் குறித்த  பேச்சுக்களை தொடர்ந்து துருக்கியின் கவலைகளை போக்க நிறுவ ஒப்புக் கொண்டுள்ளன. KNC யின் தலைவர் அப்துல்ஹகிம் பஷர், PYD ஐ அசாத்தின் நண்பு அமைப்பு என்று கண்டித்து, சிரிய குர்திஸ்களுக்கு சிறந்த விருப்புரிமை துருக்கியுடன் பிணைந்துள்ள ஒரு குர்திஸ் கூட்டமைப்பை ஏற்படுத்துவதுதான் என்று கூறியுள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக குர்திஸ் அச்சுறுத்தலை வலியுறுத்துவது துருக்கிக்கு சிரியா மீது போர் தொடுப்பதற்கு முக்கிய காரணத்தைக் கொடுக்கிறது. மேலும் வணிகத் தலைநகரான அலெப்போ மீது சிரிய சுதந்திர இராணுவம் மற்றும் ஜிகாத்துக்கள் படையெடுப்பிற்கு ஒரு இரண்டாம் முன்னணியை அமைப்பது போலவும் இது ஆகும்.  அங்காரா ஏற்கனவே சிரிய எல்லைக்கு 2,000 துருப்புக்களை அனுப்பியுள்ளது. அதைத்தவிர ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், டாங்கிகள் ஆகியவையும் சென்றுள்ளன.

குர்திஷ் மக்களை துருக்கி அடக்குவது என்பது வாஷிங்டனின் முழு ஆதரவுடன் நடைபெறுகிறது. அது துருக்கியைத்தான் சிரியாவில் பினாமிப் போரை முன்னின்று நடத்துவதற்கு உகந்தநாடு என்று காண்கிறது. அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலர்  ஹில்லாரி கிளின்டன், இந்த வாரம் துருக்கிக்குப் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பயணிக்கிறார். ஒபாமா நிர்வாகம் எதிர்த்தரப்பிற்கு அதன் பிராந்திய நட்பு நாடுகள் கொடுக்கும் ஆயுதங்கள், பயிற்சி ஆகியவற்றிற்கு தலைமை தாங்குவதுடன் அதன் CIA மற்றும் இராணுவ நடவடிக்கையாளர்களையும் களத்தில் கொண்டுள்ளது.

இந்த வாரம் டெய்லி டெலிகிராப் சிரிய ஆதரவுக்குழு SSG எதிர்த்தரப்பிற்கு நிதி அனுப்புவதற்கு அமெரிக்கக் கருவூலம் உரிமம் கொடுத்துள்ளது என்று தகவல் கொடுத்துள்ளது; இக்குழு, நிகழ்வை மாற்றும் அமைப்பு என விவரிக்கப்படுகிறது.

சிரியாவில் ஒரு குறுங்குழுவாத போரை வேண்டுமென்றே வாஷிங்டன் தூண்டிவிடும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது, இன்னும் பெரிய குற்றத்தின் மையத்தில்தான் உள்ளது. முக்கிய எண்ணெய் விநியோகங்கள் மீது சவாலற்ற மேலாதிக்கத்தை அடைவதற்காக அமெரிக்கா அல் குவேடா பிரிவுகள், முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் வளைகுடா சர்வாதிகாரிகளுடன் மத்திய கிழக்கின் வரைபடத்தை குருதியினால் மாற்றிக்கீற இணைந்துள்ளது.