World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP presidential candidate to tour Britain, Germany and Sri Lanka

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இலங்கைக்கும் விஜயம் செய்கின்றார்

8 August 2012
Back to screen version

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஜெரி வைட், பிரிட்டன், ஜேர்மனி, மற்றும் இலங்கையிலும் அடுத்து வரும் வாரங்களில் நடக்கவுள்ள தொடர் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்.  இந்த கூட்டங்கள், 2012 அமெரிக்க தேர்தல்களின் அரசியல் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடவும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதற்கும் இராணுவவாதத்துக்கும் மற்றும் யுத்தத்துக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்ய ஜெரி வைட்டுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல், பரந்த சர்வதேச உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. 1930களின் பெரும் பொருளாதார மந்த நிலைக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பூகோள பொருளாதார நெருக்கடி, 2008ல் வோல் ஸ்ட்ரீட் ஊகக் குமிழியின் பொறிவுடனேயே தொடங்கியது. அமெரிக்க ஆளும் வர்க்கம் உலகம் முழுவதுமான வங்கி பிணை எடுப்புக்கள் மற்றும் சிக்கன கோரிக்கைகளில் முன்னணி வகிப்பதோடு, அமெரிக்க இராணுவமானது உலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளமை ஒரு புதிய உலக போரைக் கட்டவிழ்ப்பதற்கு அச்சுறுத்துகின்றது.

இந்த தேர்தலில், பிரதானமாக ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பரக் ஒபாமா மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும் அனைத்து அத்தியாவசிய பிரச்சினைகளிலும் உடன்பாடுகொண்டுள்ளனர். 2008 தேர்தலில் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட போது, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள், அந்த தேர்தல் அமெரிக்க வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையை குறிக்கும் என்று நம்பினர். ஆயினும், ஒபாமா வெளிநாட்டில் போரை விரிவாக்கியதோடு ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை உக்கிரமாக்கியதுடன், அமெரிக்காவிலும் அனைத்துலகிலும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலில் முன்னிலை வகிக்கின்றார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எகிப்தில் இருந்து கிரேக்கம் மற்றும் அமெரிக்கா வரை உலகம் பூராவும் உள்ள நாடுகளில் சமூக போராட்டங்கள் வெடித்தன. இது ஆரம்பம் மட்டுமே. எனினும், இந்த போராட்டங்கள் அனைத்திலும், சுயாதீனமான புரட்சிகர தலைமையின் அவசியமே அடிப்படை பிரச்சினையாக இருந்தது.

"எங்கள் பிரச்சாரத்தின் ஆரம்பத்தில் இருந்தே சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டத்தை எங்கள் வேலைத்திட்டத்தின் மையமாக வைத்தது. அமெரிக்க தொழிலாளர்கள், ஐரோப்பா, ஆசியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ளாமல் மற்றும் அவர்களது போராட்டத்தில் ஒத்துழைக்காமல் தமது வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அடிப்படை சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களை தோற்கடிக்க முடியாது.

"தெற்காசிய முதலாளித்துவத்தின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக, சோசலிச அனைத்துலகவாதத்துக்காக ஒரு வீரம்மிக்க போராட்டத்தை முன்னெடுத்த, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஆழமாக வேரூன்றியிருந்த ஒரு நாடான இலங்கையில் நான் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசுவதற்கு எதிர்பார்க்கிறேன்," என ஜெரி வைட் தெரிவித்தார்.

இந்திய பெருங்கடலில் உள்ள அந்த சிறிய தீவு, சீனாவைக் கட்டுப்படுத்தவும் மற்றும் ஆசிய பசிபிக்கில் அதன் பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ளவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுக்கும் முயற்சிகளது பூகோள அரசியல் நீர் சுழியினுள் இழுத்துத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு புதிய உலகப் போர் அபாயத்துக்கு எதிராக அமெரிக்க மற்றும் ஆசிய தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த தேவையான அரசியல் வேலைத்திட்டம் பற்றி ஜெரி வைட் கலந்துரையாடுவார்.

ஐரோப்பாவில், சர்வதேச வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நிறுவனங்களின் வங்கி பிணை எடுப்புக்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க வைப்பதற்காக கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தி வருகின்றன. பேஜோ சித்ரோன், பிஃயட் மற்றும் போர்ட் (Peugeot Citroen, Fiat and Ford) போன்ற பெரிய நிறுவனங்கள், தொழிற்சங்கங்களின் முழு உதவியுடன் அமெரிக்க பாணியிலான ஆலை மூடல்கள், வெகுஜன வேலை நீக்கங்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களையும் முன்னெடுக்கின்றன. பேர்லின், லண்டன் மற்றும் மான்செஸ்டர் கூட்டங்களில், அமெரிக்க தேர்தலினதும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கினதும் முக்கியத்துவம் பற்றிய ஜெரி வைட் கலந்துரையாடுவார்.