World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: second Tamil political prisoner dies of injuries from police attack

இலங்கை :  பொலீஸ் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் இரண்டாவது தமிழ் அரசியல் கைதி மரணம்

By Sampath Perera and Subash Somachandran
22 August 2012
Back to screen version

ஆகஸ்ட் 8 அன்று, பொலிஸ் மற்றும் சிறைக் காவலர்களின் மிருகத்தனமான தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்த மரியதாஸ் டில்ருக்ஷனின் (36) மரணச் சடங்கு வட இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு அருகே பாசையூர் என்ற மீன்பிடிக் கிராமத்தில் நடைபெற்றது.

அவர் வவுனியா சிறையில் பொலிஸ் கமாண்டோக்களின் தாக்குதலுக்குள்ளான 30 அரசியல் கைதிகளில் ஒருவராவார். பின்னர் அனுராதபுரம் மற்றும் மஹர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட அவர்கள் மீண்டும் அங்கு சிறை காவலர்களால் தாக்கப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் கடுமையான காயங்களுடன் கொழும்புக்கு அருகில் உள்ள றாகமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு கைதிகளின் இரண்டு கால்களும் உடைக்கப்பட்டிருந்ததோடு இன்னொருவருக்கு ஒரு கால் உடைந்து போயிருந்தது.

டில்ருக்ஷன் காயமடைந்ததில் இருந்தே கோமா நிலையில் இருந்ததுடன் றாகமை வைத்தியசாலையில் மரணமடைந்தார். அவருக்கு முன்னதாக, ஜூலை 4 அன்று, கணேசன் நிமலரூபன் என்ற மற்றொரு கைதி (28) அதே தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் இறந்தார்.

பொலீஸ் மரணச் சடங்கை மட்டுப்படுத்த நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்த போதிலும், இந்த குற்றத்துக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த நூற்றுக்கணக்கான மக்கள் டில்ருக்ஷனின் மரணச் சடங்கில் கலந்து கொண்டனர். டில்ருக்ஷனின் வீட்டில் இருந்து மயானம் வரையான வீதி நெடுகிலும் ஆயுதம் ஏந்திய பல நூறு பொலிசார் நிலைகொண்டிருந்தனர். யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட, இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கில், இந்த மரணச் சடங்கு தமிழ் மக்களின் மத்தியில் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக வளரும் என்று பொலிஸ் அஞ்சியது.

இந்த கைதிகள் 2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் முடிவில் கைது செய்யப்பட்டனர். அகதி முகாம்களில் இருந்து "புலி சந்தேக நபர்களாக" 11,000 தமிழ் இளைஞர்களை கைது செய்த இராணுவம், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை தடுத்து வைத்தது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்ததன் காரணமாக, அவர்களில் ஒரு பகுதியினரை விடுதலை செய்த அரசாங்கம், ஏனையவர்களை தொடர்ந்தும் காவலில் வைத்தது.

ஜூன் 27 அன்று, மூன்று கைதிகள் வட மத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து வவுனியா சிறையில் உள்ள கைதிகள் ஒரு உண்ணாவிரதத்தை தொடங்கினர். எதிர்ப்பு நடவடிக்கையின் இரண்டாவது நாள், கைதிகள் மூன்று சிறைக் காவலர்களை பணையக் கைதிகளாக்கினர். அனுராதபுரம் சிறை, தமிழ் கைதிகள் மீதான சிங்கள காவலர்களின் இனவெறி தாக்குதல்களுக்கு இழிபுகழ்பெற்ற இடமாகும். அனுராதபுரத்தில் கடந்த ஆண்டு நவம்பரில், 65 தமிழ் கைதிகள் கொடூரமான சரீரத் தாக்குதலுக்கு உள்ளாகினர். தமது சக கைதிகளுக்கும் இதே போன்ற ஆபத்து ஏற்படும் என அவர்கள் அஞ்சினர்.

கைதிகளை மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. மாறாக, சிறை காவலர்களை மீட்கும் நடவடிக்கை என்ற ஒன்றை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டது. கொழும்பில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு உயர் மட்ட பொலீஸ் கமாண்டோ பிரிவு, ஜூன் 29 அன்று கண்ணீர்ப்புகை வீசிய பின்னர் சிறைக்குள் குதித்தது. சிறை காவலர்கள் சேதமின்றி காப்பாற்றப்பட்ட அதே வேளை 30 கைதிகள் காயமடைந்ததுடன் அவர்களில் பாதி பேர் கடும் காயமடைந்தனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, அவர்கள் [கைதிகள்] பயங்கரவாதிகளே தவிர வேறு யாரும் அல்ல, அவர்கள் இன்னும் பயங்கரவாதத்தை கைவிடவில்லை," என அறிவித்தார்.

இந்த எதிர்ப்புக்குப் பின்னால் சர்வதேச புலிகளின் வலையமைப்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் அவர் வலியுறுத்தினார். பொலிஸ் கூறியவற்றை மீண்டும் கூறிய கஜதீர, "சர்வதேச நேரடி அழைப்பு வசதிகள் கொண்ட கையடக்கத் தொலைபேசிகளை கைதிகள் வைத்திருந்தனர்," என்றார். எதிர்ப்பில் ஈடுபடும் தமிழ் கைதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் போதெல்லாம் இது போன்ற குற்றச்சாட்டுகளை இலங்கை அதிகாரிகள் சுமத்திவருகின்றனர்.

கைதிகள் மீது எந்தக் குற்றத்தீர்ப்பும் இல்லாத நிலையிலும் அவர்களில் பலருக்கு குற்றப்பத்திரிகையே இல்லாத நிலையிலும் கஜதீர இந்தக் குற்றச்சாட்டை சுமத்துகிறார். தாக்குதலை மூடி மறைத்த அவர், பொலிஸ் நடவடிக்கையில் "ஒரு தடவை கூட துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்படவில்லை, குறைந்தபட்ச சக்தியே பயன்படுத்தப்பட்டது," என்று தெரிவித்தார்.

நிமலரூபன் இறந்த போது, முதலில் பொலிசார் அவரது பெற்றோரிடம் சடலத்தை ஒப்படைக்க மறுத்துவிட்டனர். நீதிமன்ற ஆணை ஒன்றின் மூலம் அவரது பூத உடலை கொழும்பில் அடக்கம் செய்ய பொலிஸ் ஏற்பாடு செய்தது. எனினும், அவரது பெற்றோர் வவுனியாவுக்கு அருகில் நெளுங்குளத்திற்கு அவரது பூதவுடலை கொண்டு செல்ல ஒரு நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டனர். ஆயினும் தாமதம் இன்றியும் மற்றும் அரசியல் பேச்சுக்கள் இல்லாமலும் மரணச் சடங்கைச் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

நிமலரூபனின் தாயார் வீரகேசரி பத்திரிகைக்குத் தெரிவித்ததாவது: "ஒரு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த போதே என் மகன் கைது செய்யப்பட்டார். அவர் பொலிசாரால் காரணம் இல்லாமல் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். "2009 நவம்பரில் முச்சக்கர வண்டியொன்றில் ஆயுதங்கள் மற்றும் கண்ணிவெடி குண்டுகளை கொண்டு சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டார் என பாதுகாப்பு படைகள் கூறின. ஆனால் அவர் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் பொலிசார் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தாமல் இருந்தமை அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதை காட்டுகிறது.

டில்ருக்ஷனின் தந்தை, போரின் கடைசி மாதங்களில் அவரது மகனுடன் தொடர்பை இழந்திருந்ததாக உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) கூறினார். "நாங்கள் போரின் பின்னர் மெணிக் பார்ம் [வவுனியா] அகதி முகாமில் இருந்தோம். பின்னர், அவர் சென் ஜோசப் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரிடம் இருந்து ஒரு கடிதம் கிடைத்தது. பின்னர் அவர் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். நாங்கள் அவரை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மனு அனுப்பி விடுதலை செய்துகொள்ள முயற்சித்தோம், ஆனால் முடியாமல் போனது.

 மரணச் சடங்கிற்கு வந்திருந்த ஒரு முன்னாள் ஆசிரியர், தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது பேரினவாத காட்டுமிராண்டித்தனத்தையே காட்டுகிறது, என்றார். "தமிழ் கட்சிகள், நாம் இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும்' என்று வாய்சவாடல் விடுக்கின்றன. ஆனால் அவர்களிடம் சரியான கொள்கைகள் இல்லை. அவர்கள் தங்கள் நலன்களை மேம்படுத்திக்கொள்ளவே இந்த சம்பவங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இந்தக் கைதிகள் தமது விடுதலையை கோரி பல முறை போராடினர். அவற்றை அரசாங்கம் அலட்சியம் செய்துவிட்டது. அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதானது தொழிலாள வர்க்கத்தை பிரித்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணி உட்பட ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மேற்கொள்ளும் பேரினவாத அடக்குமுறை மற்றும் இனவாத பிரச்சாரத்தின் பாகமாகும்.

நிமலரூபனின் துன்பகரமான மரணத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர் சம்பந்தன், "தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை என்றால், ஒரு பொதுமன்னிப்பின் கீழ் அவர்களை விடுதலை செய்யாதது ஏன்?" என கேட்டார்.

தமிழ் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற தமிழ் முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவர்களின் பங்காளிகளான போலி இடது நவசமசமாஜ கட்சி (ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிச மற்றும் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பீ.) இருந்து பிரிந்து சென்ற முன்னணி சோசலிச கட்சியும்  நிமலரூபன் மற்றும் டில்ருக்ஷனின் மரணச் சடங்களில் கலந்து கொண்டன.

இந்த குற்றங்களுக்கு இராஜபக்ஷ அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய பிறகு, "நாம் தொடர்ந்து எதிர்த்துப் போராடினால் மட்டுமே சர்வதேச சமூகம் மனித உரிமைகளை காக்க எங்களுக்கு உதவும்," என்பதே அவர்களின் உரைகளின் முக்கிய கருப்பொருளாக இருந்தது.

அவர்கள் வேண்டுகோள் விடுக்கும் சர்வதேச சமூகம் என்றழைக்கப்படுவது அமெரிக்கா, பிரதான ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா உட்பட பெரும் வல்லரசுகளே ஆகும். அவற்றுக்கு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக எந்த அக்கறையும் கிடையாது.

இந்த சக்திகள் இராஜபக்ஷவின் யுத்தம் உட்பட கொழும்பு அரசாங்கங்களின் இனவாத யுத்தத்தை மூன்று தசாப்தங்களாக ஆதரித்து வந்துள்ளன. அவர்கள் தமிழ் மக்களின் மீதான அடக்குமுறைக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தடுத்து வைக்கப்படுவதற்கும் நேரடிப் பொறுப்பாளிகளாவர். இந்த சக்திகள் தங்களது மூலோபாய நலன்களை மேம்படுத்துவதற்கு கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவே மனித உரிமை மீறல் பிரச்சினைகளை பயன்படுத்த முயற்சிக்கின்றன.

கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களுக்கு ஒரு செல்வாக்கான நிலையை தக்கவைத்துக்கொள்ள கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு கொடுக்கல் வாங்கலை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்து வருகின்றன. இந்த மாகாணங்களில் முதலாளித்துவ அரசுப் பகுதியை உருவாக்கும் புலிகளின் பிரிவினைவாத கொள்கையும் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையே பிரதிபலிக்கின்றது.

தமிழ் கைதிகள் மீதான நன்கு திட்டமிடப்பட்ட குருதி தோய்ந்த தாக்குதல், ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் மீது சுமத்துகின்ற நிலையில், தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகள் இப்போது பெருகிய முறையில் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.

தொழிலாள வர்க்கம் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோருவதோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து ஆக்கிரமிப்பு இராணுவத்தை திருப்பியழைக்குமாறும் கோர வேண்டும். தெற்காசியாவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவில், தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக, தமிழ் மற்றும் சிங்கள தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டு போராடுவதன் மூலம் மட்டுமே, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வெற்றிகொள்ள முடியும். தொழிலாளர்கள் பெரும் வல்லரசுகளின் நிகழ்ச்சி திட்டத்தை எதிர்க்க உதவி பெறுவதன் பேரில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும்.

சோசலிச சமத்துவ கட்சி, அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யும் அதன் கோரிக்கையில் இந்த போராட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது.